மஹரிஷி – அஞ்சலி

நாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மஹரிஷியின் சீடர்களுள் ஒருவர் எங்கள் கல்லூரிக்கு வந்து எங்களுக்கு ஆன்மிகம் பற்றியும் அறிவுத் திருக்கோயில் பணிகள் பற்றியும் சொற்பொழிவாற்றினார். அவர் சொன்ன எளிய உவமைகள் இன்றும் மனதில் அப்படியே இருக்கின்றன. அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் செந்தில் பகவதி முருகன் மஹரிஷியின் தீவிரப் பக்தர்களில் ஒருவர். அவர் மஹரிஷியைப் பற்றி நிறைய விஷயங்கள் அடிக்கடிச் சொல்வார்.

Thanks:http://vethathiri.org

மஹரிஷியைப் பற்றி நான் அதிகம் யோசிக்கத் தொடங்கியது எனது 21 – ஆம் வயது வாக்கில். எங்களுக்கு மேலதிகாரியாக இருந்த தண்டவேல் மஹரிஷியின் தீவிர பக்தர். அவர் எங்களுக்கு மஹரிஷியைப் பற்றியும் அவரது ஆன்மிகக் கருத்துகள் பற்றியும் அவரது எளிய குண்டலினிப் பயிற்சி பற்றியும் விடாமல் தினமும் சொல்லி வந்தார். அவரது புத்தகங்கள் சிலவற்றைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவர் மேல் ஈர்ப்பு ஏற்பட்டிருந்த காலம் அது. வாழ்க்கைப் பயணம் விலகிப் போகவும் மஹரிஷியை மறந்துவிட்டேன். சில நாள்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தபோது வருத்தம் ஏற்பட்டது. எனது சில நண்பர்கள் அவரது தீவிரப் பக்தர்கள். அவர்களில் ஒரு நண்பர் யோகா மூலம் அடைய முடியாத சித்திகளே இல்லை என்று சொல்வார். ஏதோ ஒருநாள் அவர் கண்ணாடியில் உற்று நோக்கிக் கொண்டிருந்தாராம். கண்ணாடியில் அவரது முகம் மெல்ல மறைந்து வேறொரு முனிவரின் முகம் தெரிந்ததாம். அவருக்கே பயமாகிவிட்டதாம். பின்னொருநாள் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தான் கண்ணாடியில் கண்ட அதே முனிவரைக் கண்டதாகக் கூறினார் என் நண்பர். இது போன்ற விஷயங்களை நான் எப்போதும் நம்புவதில்லை. இந்த விஷயமும் அப்படியே. ஆனால் மஹரிஷியின் ஆன்மிகக் கருத்துகள் இதுபோன்றவை அல்ல என்று நான் திடமாக நம்புகிறேன். எனது வேறு சில நண்பர்கள் குண்டலினி சக்தியை நெற்றிக்கு ஏற்றிக்கொண்டு, நெற்றியில் நம் சக்தி துடிப்பதைக் காணலாம் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் அந்தப் பயிற்சிக்குச் செல்லவில்லை. நான் அதிகம் ஈர்க்கப்பட்டது அவரது எண்ணங்களினால்தான். ஆன்மிகத்திற்கும் நிகழ்முறை வாழ்வுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்க அவர் சொல்லும் எளிய உவமைகள், சிந்தனைகயைத் தூண்டும் கேள்விகள் பெரிதும் அர்த்தமுள்ளவை, அதிசயத்தில் ஆழ்த்துபவை.

வேதாத்ரி மஹரிஷி மரணமடைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

Share

Comments Closed