முறிந்து விழுந்த கிளை – கவிதை

முறிந்து விழுந்துவிட்ட
அந்தக் கிளையைப் பற்றிச் சொல்ல அதிகமில்லை
எல்லாக் கிளைகளுக்கும் போலவே
சில பொதுக்குணங்கள்
பருத்தி மொட்டு பூத்திருந்த காலத்தில்
பறவைகள் பிரசித்தம்
நீளமான காபி நிறக்காய்கள் தொங்கியபோது கல்லெறி
இரண்டாம் தளத்தில்
12 பி வகுப்பு வராந்தாவிலிருந்து
நீளும் கைகள்
கர்வத்தில் மிதந்த கிளை
எதிர்பாராத நிமிடத்தில் முறிந்து விழுந்தது
மரத்தைப் பார்த்தபடி
விடுமுறைக்குப் பின் பள்ளி திரும்பிய கைகள்
கிளையிழந்த மரத்தைப் பார்த்துக்கொண்டு நின்றன
மரம் வானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது
காற்றில் கலந்திருந்தது
முறிந்த கிளையின் ஏக்கமூச்சு.

Share

Comments Closed