சிவாஜி – A quick review

இன்னொரு முறை பார்த்துவிட்டுத்தான் விமர்சனம் எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். இணையத்தில் தேடிப்பார்த்த வரையில் தமிழ் விமர்சனங்கள் என் கண்ணில் படவில்லை. அதனால் சிவாஜி பற்றி சில வார்த்தைகள்.

காலை 4.30 மணிக்காட்சி. திருவிழா போல கூட்டம். சரியான மழை. தியேட்டரின் முன் முழங்கால் அளவு தண்ணீர். சிவாஜி படம் பார்க்க போனதே ஒரு சிறந்த அனுபவமாக அமைந்துவிட்டது.

Thanks:img.indiaglitz.com

மழையில் நனைந்துகொண்டு, மின்னல் இடிக்கிடையில், காலை 3.30 மணிக்கு தூறலில் பைக் ஓட்டிக்கொண்டு சென்றது மறக்கமுடியாத அனுபவமே.

ஜெண்டில்மேன், இந்தியன், அந்நியன் கதையின் இன்னொரு பதிப்பு. கருப்புப் பண விவகாரம் என்று லேபிள் ஒட்டிக்கொண்டுவிட்டார்கள். மற்றபடி அதே கதை. லஞ்சம், லாவண்யம், ஊழல். அதை இந்த முறை எதிர்ப்பவர் ரஜினி. அவ்வளவுதான். ஒரு பெரிய கோடீஸ்வரன் எல்லா சொத்தையும் இழந்து கையில் ஒரு ரூபாயுடன் நடுத்தெருவுக்கு வந்துவிட்டால் அவன் எப்படி மீள்வான் என்பது இரண்டாவது முடிச்சு. ஒரு நல்ல விஷயத்திற்காக எதையும் செய்யலாம் என்கிற உலக ஹீரோக்களின் ஃபார்முலா. இதுபோதாதா ஒரு ரஜினி படத்திற்கு. இடைவேளை வரை மிகவும் ஜாலியாக செல்கிறது படம். ஒரு காட்சி ரஜினியின் கனவு, இன்னொரு காட்சி ரஜினியின் காதல் என்று மாறி மாறிக் காட்டுகிறார்கள். இடைவேளையில் ரஜினி எல்லா சொத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வருகிறார். அராஜக வழியில் எப்படி வில்லன்களை சமாளிக்கிறார் என்பது மீதிக்கதை. அதற்காக ரஜினி செய்யும் வேலை லாஜிக்கே இல்லாதது. லாஜிக் இல்லாத ஒரு விஷயத்தை அடிப்படையாக வைத்துகொண்டு, அதன் மேலே லாஜிக்கான விஷயங்களாக அடுக்கிவிட்டார்கள். யார் யார் எவ்வளவு கருப்புப் பணம் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் கார் டிரைவர்கள், எதிரிகளிடமிருந்து பெற்றுக்கொள்கிறார். மறுப்பவர்கள் ஆபிஸ் ரூமில் வைத்து விசாரிக்கப்படுகிறார்கள். இரண்டாவது முறை, ஒத்துக்கொள்ள மறுப்பவர்களிடம் ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்ணுங்க என்று ரஜினி சொல்லும்போது தியேட்டர் கலகலக்கிறது. தாசில்தார் என்று ரஜினி சொன்னதும் ஆபிஸ் ரூமிலிருந்து தாசில்தார் பறந்துவந்து விழுகிறார். ரஜினி படம் என்று ரசிகர்கள் சந்தோஷப்பட்டுப் போகிறார்கள். ஆபிஸ் ரூம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று விவேக் சொல்லி படம் முழுதும் ரஜினிக்கு பின்னாலேயே வருகிறார்.

முதல் பாதியில் ரஜினியின் ஹேர் ஸ்டைல் அவருடைய வயதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. இரண்டாவது பாதியில் ரஜினியின் இளமை (மேக்கப்) ஆச்சரியப்பட வைக்கிறது. ஏன் முதல் பாதியில் அப்படி ஒரு ஹேர் ஸ்டைல் என்பதே புரியவில்லை. படத்தின் ஓப்பனிங் பாடல் பெரிய ட்ரா பேக். அதிரடிக்கார மச்சான் பாட்டும் ஒரு கூடை சன் லைட்டும் படத்தின் உச்சபட்சமான கைத்தட்டலைப் பெறுகின்றன. சஹானா பூக்கள் என்கிற நல்ல பாடல் செட்டிங் போட்டுப் படமாக்கப்பாட்டிருக்கிறது.

ரஜினி இறந்த போதே கதை முடிந்திருந்தால் இது பேசப்படும் படமாயிருக்கும். ஆனால் ஓடியிருக்காது. அதுவே க்ளைமாக்ஸ் என்கிற உணர்வைத் தந்துவிட்டதால், அதற்குப் பின் வரும் இரண்டாவது க்ளைமாக்ஸ் காட்சி போரடிக்க வைக்கிறது. அதிலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, மூன்று மிமிக்ரி கலைஞர்கள் வருகிறார்கள். நல்ல காமெடி. சாலமன் பாப்பையா, ராஜா, ரஜினி, ஷ்ரேயா, விவேக் வரும் காட்சிகள் லாஜிக் இல்லாமல் இருக்கின்றன என்றாலும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. முதல் பாதி முழுக்க ரஜினி பழக வாங்க என்று சொல்வது அசத்தல். சுஜாதாவின் வசனங்கள் (நீங்க ஆதி ஷேஷன்னா நான் அல்ஷேஷன்) ஒரு கமர்ஷியல் படத்திற்கு, அதுவும் ரஜினி படத்திற்கு எது தேவையோ அதைத் தருகிறது. சுமன் எடுபடவில்லை. ஏ.ஆர். ரகுமானின் பாடல்களின் தரம், குறிப்பாக ஒரு கோடி சன் லைட், அதிரடிக்கார மச்சான், உச்சம்.

கண்டிப்பாக கலெக்ஷனை அள்ளும். அதில் சந்தேகமே இல்லை.

Share

Comments Closed