இரு கவிதைகள்

புகைப்படம் எடுத்தல்

மிகுந்த களேரபத்திற்குப் பின்னரே
குடும்பத்தின் புகைப்படம் எடுத்தோம்
ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கும் பாட்டியை
ஐந்து நிமிடம் பேசாமல் இருக்க வைக்க பெரும்பாடு ஆகிவிட்டது
அண்ணியை முதலில் அழைக்கவில்லை என்று அண்ணனுக்கு கோபம்
நம்மை அழைக்கிறார்களா பார்க்கலாம் என்று சிலர்
அப்பா ஃபோட்டோவுக்கு மட்டும் எப்போதும் தயார்
அக்கா அத்தானை சீக்கிரம் வரச்சொல்லி ஃபோன் பேசிக்கொண்டிருந்தாள்
நான் என் மனைவியுடன் எப்போது தனியறைக்கு அனுப்புவார்கள் என காத்துக்கொண்டிருந்தேன்
ஃபோட்டோகிராஃபர் அழகான பெண்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்
ஒருவழியாக ஃபோட்டோவும் எடுத்தார்
படத்தில் அனைவரும் அழகாக, மிக அழகாக, குறிப்பாக இயல்பாக, சிரித்துக்கொண்டிருந்தோம்,
படத்தில் தோற்றம் மறைவு விடுத்து வாழும் நாளின் குறிப்பேற்ற முடியாதது போல.

பேரமைதி

ஒரு கண் விழிப்பில்
தங்கள் வாசல்களை இழந்தன
வீடுகள் அனைத்தும்
தெருக்கள் அனைத்தும் கலையிழந்துவிட்டிருக்க
எந்தக் கோலத்தை எங்கு பொருத்த என்றறியாமல்
சுற்றிக்கொண்டிருந்தன பூனைகள்
திறந்து கிடக்கும் வீடுகள் வெளியிட்ட சத்தங்களில்
பறவைகள் பதறிப் பறக்க
மனித சத்தத்தை அறிந்து
பயந்தன நாய்கள்
நடுங்கிப் போன கடவுள்
கடும் தலைவலியோடு
கதவுகளுக்கு ஆணையிட்டான்
வாசலைப் பொருத்திக் கொள்ள
அந்நொடியில் பேரமையிதில் ஆழ்ந்தது இவ்வுலகம்.

Share

Comments Closed