கவிதை

வெக்கை மிகுந்த
வியர்வை இரவொன்றில்தான் கண்டேன்
வீட்டுக்குள் வளர்ந்து கிடக்கும்
தனித்த மரமொன்றை.
கிளைகள் வீட்டு உத்தரத்தை உரசியிருக்க
வேர்கள் வீடெங்கும் பரவிக்கிடந்தன
கைக்கெட்டிய அரிவாளும் கோடாலியும்
உலோக ஒலியெழுப்பி
மரத்தின் கீழ் மண்டியிட்டன
தனியறைக்குள் உறங்கிக் கிடக்கும்
மெல்லிய சுவாசத்தை அடக்கி
அதிர்ந்தன மரத்தின் இலைகள்.
மரத்தின் கிளைகள் மேலும் நீண்டபோது
வெளியிருந்து ஒரு குருவி
சிறகடித்துப் பறந்து
உள்வந்து அமர்ந்தது.
மரத்தை சூழத் தொடங்கியது
குருவியின் இசை.

Share

Comments Closed