நான் நாகேஷ் – சிறிய குறிப்பு

நான் நாகேஷ் படித்தேன். சுவாரஸ்யமான புத்தகம்தான். கல்கியில் தொடராக வந்ததன் தொகுப்பு. பலப்பல சுவாரய்ஸ்மான சம்பவங்கள். நாகேஷ் உண்மையில் பெரிய குறும்புக்காரராகவே வாழ்ந்திருக்கவேண்டும். ஆனால் ‘நான் நாகேஷ்’ என்ற பெயரை இப்புத்தகம் நிறைவு செய்கிறதா என்று பார்த்தால் பெரிய ஏமாற்றுமே எஞ்சுகிறது. புத்தகம் வெறும் துணுக்குத் தோரணமாக மாறிவிட்டது. நாகேஷின் வாழ்க்கையில் நடந்த சிறிய சிறிய சம்பவங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அவரது வாழ்க்கையில் நடந்த பெரிய விஷயங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. ஒருவேளை நாகேஷ் அதனை விரும்பியிருக்காமல் இருக்கக்கூடும். இதனால் ஒரு கலைஞனின் வாழ்க்கைக்குக் கிடைத்திருக்கவேண்டிய முழுமை கிடைக்காமல் போய்விட்டது. நாகேஷ் பல படங்களில் நடித்தவர். பல அனுபவங்கள் பெற்றவர். இப்படியான ஒருவரின் எண்ண ஓட்டம் அறுந்து அறுந்து ஓடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று கால வரிசைப்படிப் பேசியிருக்கவேண்டும், அல்லது மனிதர்களை முன் வைத்துப் பேசியிருக்கவேண்டும். வைரமுத்துவின் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் போல. இரண்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டதில், யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்காமல் போய்விட்டது இப்புத்தகம். கமல் கமல்தான், ரஜினி ரஜினிதான் என்றெல்லாம் துணுக்குகளாகப் படிக்கும்போது ஆயாசமே மிஞ்சுகிறது. இவை எல்லாமே கல்கியில் வந்ததுதானா அல்லது புத்தகமாக்கப்படும்போது ஏதேனும் எழுதி சேர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை.

இதை மீறி நாகேஷ் விவரித்திருக்கும் பல சமபவங்கள் சுவாரயஸ்மாக உள்ளன. ஜெயகாந்தனுடன் பிச்சை எடுத்தது, திருவிளையாடல் படத்தில் தருமியாக நடித்தது, அப்படத்தின் வெற்றி விழாவுக்கு இவர் அழைக்கப்படாமல் போனது, கடன் வாங்க துண்டோடு நடந்து போனது, (கிருஷ்ணன்) பஞ்சுவிடம் சட்டை பொத்தான் எங்கே என்று தேடியது என பல சுவாரயஸ்மான துணுக்குகள். எல்லாவற்றிலும் நாகேஷ் ஏதோ ஒன்றை துடுக்குத்தனமாகச் செய்திருக்கிறார்.

 நாகேஷின் திரைப்பட வாழ்வை அழித்தது எம்ஜியார்தான் என்றொரு பேச்சு உண்டு. அதைப் பற்றியெல்லாம் இப்புத்தகத்தில் மூச்சே இல்லை. கன்னடம் பேசும் ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்து ஒரு கிறித்துவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டது பற்றியான சுவாரஸ்யமான தகவல்கள் எல்லாம் இல்லவே இல்லை. ஒரே ஒரு வரி வருகிறது, நான் காதலித்த ரெஜினாவைத் திருமணம் செய்துகொண்டேன் என்று. இவையெல்லாம் எதற்கு என்று நாகேஷ் நினைத்திருக்கக்கூடும். நாகேஷ் இன்று இல்லாத நிலையில் அவையெல்லாம் இருந்திருந்தால் ஒரு நல்ல கலைஞனின் ஒட்டுமொத்த வாழ்க்கைச் சித்திரத்தின் அருமை நமக்குப் புரிந்திருக்கும். அது கை கூடாமல் போனது துரதிர்ஷ்டமே.

 புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-562-2.html

Dial For Books: 94459 01234   |   9445 97 97 97

Share

Comments Closed