ஆரிய சமாஜம் நூல் மதிப்புரையும் மலர்மன்னன் பதிலும்

நான் 14- ஜூன்-2010ல் எழுதிய ‘ஆரிய சமாஜம்’ நூலின் மதிப்புரையும், அதற்கு 5-ஜூலை-2010ல் மலர்மன்னன் எழுதிய பதிலும் இங்கே – சேமிப்புக்காக.

மலர்மன்னன் முன்பு எழுதியிருந்த ‘திமுக தோன்றியது ஏன்?’ புத்தகத்தைப் படித்தபோது, அவ்ர் மேலிருந்த சில முன் அனுமானங்கள் உடைந்தன. என்றாலும், அவர் மேல் நான் கொண்டிருந்த முன் அனுமானங்களில் சிலவற்றை இன்னும் ஆழப்படுத்துவது போலவும் சில விஷயங்கள் அப்புத்தகத்தில் இருந்தன. குறிப்பாக பிராமண சார்புடைய பார்வை. எந்த ஒரு பார்வையும் நிச்சயம் தேவை என்னும் ஜனநாயக அடிப்படையிலும், பிராமணப் பார்வை என்பதே இன்று ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாகிவிட்ட நிலையில், அவர் எவ்வித சங்கடமும் இன்றி அதனை முன்வைப்பதும் அப்புத்தகத்தை முக்கியமானதாக்கியது என்று நினைத்தேன். (பிராமணச் சார்பு என்பதை அவர் மறுக்கக்கூடும்.)

மீதமிருந்த, ஆழமாகிப் போன, மலர்மன்னன் பற்றிய எனது முன் தீர்மானங்களை ‘ஆரியசமாஜம்’ புத்தகம் அடியோடு உடைத்துப் போட்டிருக்கிறது என்றால் மிகையில்லை. மலர்மன்னன் இப்புத்தகத்தை எப்படி எழுதினார் என்னும் கேள்வி என் மனத்துள் இன்னும் உழன்றபடியேதான் உள்ளது. தன் மனத்தில் இருந்த பிராமணச் சார்பை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, புதிய மனிதனாக, தயானந்தரின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொண்டு இப்புத்தகத்தை எழுதினாரா அல்லது பிராமணச் சார்பு ஒரு பக்கம் இருந்தாலும், புத்தகத்தை எழுதும்போது தன் சாயல் வரக்கூடாது என நினைத்து இப்படி எழுதினாரா எனத் தெரியவில்லை. எப்படி எழுதியிருந்தாலும் அது வரவேற்கத்தக்கதே, பாராட்டத்தக்கதே.

ஹிந்துத்துவம் எனப்து ஜாதியின் கைகளில் சிக்கி சீரழிந்துவிட்ட/கொண்டிருக்கும் நிலையில், தனிப்பட்ட முறையில் ஹிந்துத்துவம் என்பது ஜாதியில்லாமல் இயங்கமுடியாதோ என்கிற மிகப் பெரிய உள்மனச் சிக்கலில் நான் விழுந்த நிலையில், இப்புத்தகத்தைப் படித்தது எனக்கு மிகப்பெரிய ஆசுவாசமளித்தது என்றே சொல்லவேண்டும்.

ஜாதியின் அத்தனை காரண காரியங்களையும் உடைக்கிறது தயானந்தரின் முழக்கங்கள். 200 வருடங்களுக்கு முன்பாகவே, ஹிந்துத்துவம் என்பது எப்படி இருக்கலாம் என்று இன்று சிந்திப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் அன்றே சரியான தீர்க்கமான வழியைச் சொல்லிச் சென்றிருக்கிறார் தயானந்தர். அவர் அன்று அப்படிச் சொன்னதை, மேல் சாதியினரான பிராமணர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை, இன்றைய பிராமணர்களை வைத்தே அறிந்துகொண்டுவிட முடியும். ஆனால் அதனை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், வேத முறையிலான வாழ்க்கை முறையை முன்வைத்திருக்கிறார் தயானந்தர். அதோடு, வேதங்களில் ஜாதிய முறைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். வேதங்களில் ஜாதி இருப்பதாகச் சொல்லப்படும் ஆதாரங்களுக்கெல்லாம் சரியான பொருளைச் சொல்லி, ஜாதி என்பதை அடியோடு மறுத்திருக்கிறார் தயானந்தர்.

வருணம் பற்றிப் பேசும்போது, பிறப்பால் வருணம் நிர்ணயிக்கப்படுவதை அடியோடு எதிர்த்திருக்கிறார். ஒரு பிராமணன் பிறப்பால் பிராமணனாவதிலலை என்றும், தங்களுடைய செயலாலே ஆகிறார்கள் என்றும், அப்படி எந்த ஒரு வருணத்தவரும் பிராமணராக முடியும் என்று மிக ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார் தயானந்தர். 

பூணூல் அணிவது எல்லோருக்குமான சடங்கு என்றும், சந்தியாவந்தனம் என்பதும் தனிப்பட்ட சொத்தல்ல, அதுவும் பொதுவானது என்று எடுத்துரைத்திருக்கிறார் தயானந்தர்.

பிராமணன் சடங்குகள் செய்விப்பது கடமையல்ல, ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் தாங்களே சடங்குகளைச் செய்துகொள்ளலாம், வேத கால ஹிந்து முறையில் அப்படித்தான் இருந்திருக்க முடியும் என்கிறார் தயானந்தர்.

எத்தனையோ பிராமணரல்லாத ரிஷிகள் நல்வாழ்வு வந்து பிராமணரைப் போல் உயர்ந்ததையெல்லாம் இப்புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இப்படி ஒரு புத்தகத்தைப் படிப்பதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் இன்றைய நிலையில் இப்படி ஒரு நிலையை ஹிந்துமதம் கொண்டிருக்குமானால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை.

உயர் குணங்களோடு, ஜாதியற்ற சிந்தனையோடு உடல் ரீதியான பலமும் தேவை என்பதை தயானந்தர் சொல்லியிருக்கிறார். இதனைத்தான் பல ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தங்களுக்குத் தேவையான வகையில், சில சமயம் வன்முறை கூட சரி என்னும் அர்த்தத்தில் சொல்வதைக் கேட்கிறேன். 

தயானந்தர் உருவ வழிபாட்டை முற்றிலும் கைவிடச் சொல்லுகிறார். இந்த நிலைப்பாட்டில் ஆசிரியர் மலர்மன்னன் பிறழ்வது தெரிகிறது. தயானந்தரைப் பற்றி எழுதும்போது இதனைச் சொல்லியாக வேண்டிய ஆசிரியர், சில இடங்களில் உருவ வழிப்பாட்டைக் கைவிட்டால் என்னென்ன ஊறுகள் நேரும் என்பதைச் சொல்லிச் செல்கிறார். குறிப்பாக, ராம கிருஷ்ண பரம ஹம்சரும் தயானந்தரும் சந்தித்துக்கொண்டிருக்காத போது, இவர்கள் சந்தித்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்று அவர் சொல்வது ஒரு எடுத்துக்காட்டு. ராம கிருஷ்ண பரமஹம்ஸர் உருவ வழிபாட்டைக் கைவிட்டிருக்க மாட்டார் என்று சொல்லும் மலர்மன்னன், தயானந்தரும் தன் கருத்தில் உறுதியாக இருந்திருப்பார் என்று சொல்வதற்குப் பதிலாக, சில ஞானிகளுக்கு தயானந்தர் விலக்கு அளித்திருக்கக்கூடும் என்கிற யூகத்துக்குத் தாவி விடுகிறார். இது போன்ற மலர்மன்னன் கொஞ்சம் தத்தளிக்கும் இடம், 1857 குறித்து தயானந்தர் பேசாதது பற்றியும், மனு தர்மத்தை தயானந்தர் ஏற்றுக்கொள்வது பற்றியும் எழுதும்போதும்.

மனுதர்மம் பற்றிய தனியான ஒரு அத்தியாயம் கடைசியாக வருகிறது. புத்தகத்தின் பின்னட்டையில், மனுதர்மத்தில் காலத்துக்கு ஏற்றதை மட்டுமே ஏற்றார் என்று பொருள்பட வருகிறது. ஆனால் புத்தகத்தினுள்ளே, தயானந்தர் மனுதர்மத்தை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டார் என்ற பொருள்பட, மலர்மன்னன், கிட்டத்தட்ட வாதாடிச் செல்கிறார். 

மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கும் பிராமணர்களுக்கு எதிரான கருத்துகளை மட்டுமே முன்வைத்து இதனை மலர்மன்னன் அணுகியிருப்பது சரியானதல்ல. ஒரு பிராமணன் தவறு செய்தால் அவனுக்கு அதிகத் தண்டனையும், பிராமணரல்லாத மற்ற வருணத்தவர் தவறு செய்தால், பிராமணனுக்குத் தரப்படும் தண்டனையைக் காட்டிலும் குறைவான தண்டனையும் தரப்படுவதை சுட்டிக்காட்டும் மலர்மன்னன், பிராமணரல்லாத வருணத்தவர் பிராமணர்களைத் திருமணம் செய்துகொள்ளும்போது மனு தர்மம் சொல்லும் சட்டங்களைப் பற்றிப் பேசவே இல்லை. பிராமணனுக்கு அதிக தண்டனை தரும் சட்டங்களைவிட மிகவும் முக்கியமான்வையும், சர்ச்சைக்குரியவையும் எதுவென்றால், பிராமணனுக்கு அதிக சலுகைகள் தரும் சட்டங்களும், பிராமணனை ஒரு பீடத்தின் மேல் அமர்த்தி வைக்கும் சட்டங்களுமே ஆகும். அதைப் பற்றி தயானந்தரின் கருத்தென்ன என்பதை மலர்மன்னன் விளக்கவில்லை.

அதேபோல, தயானந்தர் பெண் விடுதலையைப் பற்றிப் பேசுவதைச் சிலாகிக்கிறார். ஆனால் மனு தர்மமோ என்றென்றும் பெண் ஆணைச் சார்ந்தே நடக்கவேண்டும் என்று சொல்கிறது. 

மேலும், மனு தர்மத்தில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்ட பாடல்கள் பாட பேதங்கள் என்கிறார் மலர்மன்னன். அதாவது, எவையெல்லாம் பிரச்சினைக்குரியவையோ அவையெல்லாமே பாட பேதங்கள் என்று சொல்லிக்கொண்டுவிட ஏதுவாக இப்படிச் சொல்கிறாரோ என்கிற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

தயானந்தர் சொல்லியிருக்கும் எல்லாக் கருத்துகளுக்கும் சரியான விளக்கம் அளித்துவிட வேண்டும் என்கிற மலர்மன்னனின் தவிப்பு, சில இடங்களில் யூகங்களுக்குத் தள்ளிவிடுகிறது. 1857 பற்றிய யூகம், ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்லியிருப்பார் என்கிற யூகம் போலவே, யாகங்களின் மூலம் காற்றில் புகையைக் கலப்பதால் நன்மை பயக்கலாம் என்னும் யூகம். இப்படி யூகங்களுக்குச் செல்வதை விட, இப்படித்தான் தயானந்தரின் வாழ்வில் நடந்தது, இப்ப்படித்தான் தயானந்தர் சொன்னார் என்று சொல்லி விட்டுவிடுவது நல்லது. (ஆனாலும் அதனை தன் வாதப்படி எடுத்துச் சொல்லும் எல்லா உரிமைகளும் மலர்மன்னனுக்கு உள்ளது. என்ன ஒன்று, அதனைப் படிக்கும்போது லேசான புன்னகை இதழோரத்தில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை!)

தயானந்தரின் இறப்புக்குக் காரணமாக அமைபவர் ஓர் இஸ்லாமியர். தயானந்தர், ஹிந்து மதத்தின் சடங்காச்சாரங்களைத் தீவிரமாக எதிர்த்தது போலவே, பிற மத ஆக்கிரமிப்பையும் எதிர்த்திருக்கிறார். எனவே ஒரு முஸ்லிம் அவரைக் கொல்ல எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அதே போலவே, தங்கள் ஆதாரங்களெல்லாம் பறிபோகிறதே என்று வேறு அதிகார வர்க்கத்தினர் சிலர் கூட, ஒரு முஸ்லிமின் தயவோடு தயானந்தரைக் கொல்ல முயன்றிருக்கக்கூடும் என்ற ஒரு தியரியும் உள்ளது. ராஜ புத்திர அரசர்கள் கூட அவரைக் கொல்ல முயன்றார்கள் என்று நிரூபிக்கப்படாத கூற்றும் உள்ளது. 

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது இன்னொரு எண்ணம் தோன்றியது. யூத் ஃபார் தர்மா என்ற தயானந்த சரஸ்வதியின் அமைப்பு (இந்த தயானந்தர் வேறு, ஆரிய சமாஜத்தின் தயானந்தர் வேறு) ஒன்றின் கூட்டத்தில் பேசிய அரவிந்தன் நீலகண்டன், கூட்டத்தினரின் கேள்வி ஒன்றுக்கு இப்படி பதில் சொன்னார். பிராமணரைத் தவிர எல்லா வருணங்களும் அழிந்துவிட்ட நிலையில், பிராமண வருணம் ஏன் அழியவில்லை என்றால், இன்று மற்ற எல்லா வருணத்தவரைப் போல எந்த ஒரு வருணத்தாரும் எந்த ஒரு வருணத்தாரின் வேலையையும் செய்ய முடியும் என்கிற நிலை உள்ளது. அதாவது ஒரு சூத்திர வருணத்தவன் வைசிய வருணத்தவனின் வேலையையும், வைசிய வருணத்தவன் மற்ற வருணத்தின் வேலையையும் செய்ய முடியும். பிராமண வருணத்தவன் கூட இதே போல் மற்ற வருணத்தின் வேலையைச் செய்ய இயலும். ஆனால் பிராமண வருணத்தாரின் தொழிலாகக் கருதப்படுவதை மற்ற வருணத்தாரால் செய்யமுடியாத நிலை உள்ளது. இந்த நிலை மாறி, மற்ற எந்த வருணமும் பிராமணனின் தொழிலாகக் கருதப்படுவதைச் செய்யலாம் என்னும் நிலை தோன்றினால், எல்லா வருணங்களும் தம்மளவில் ஒன்று கரையும் நிலை வரலாம் என்றார். இது தயானந்தர் அன்றே சொன்னதன் சாரம்தான் என்று தோன்றுகிறது.

இப்புத்தகத்தை மிகவும் சிறப்பாக, மிகவும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார் மலர்மன்னன். எங்கே எதனைச் சொல்கிறோம், எந்த விஷ்யத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அழுத்திச் சொல்கிறோம் என்பதிலெல்லாம் ஒரு தேர்ந்த எழுத்தாளராக வெளிப்பட்டிருக்கிறார் அவர். அதேபோல் ஒரு புத்தகமாக வருவதற்காக அவர் பல விஷயங்களைத் தேடியதோடு மட்டுமில்லாமல், அதனைச் சரியாகத் தொகுத்து அளித்திருக்கிறார். இன்னும் தொடர்ந்து மலர்மன்னன் பல்வேறு புத்தகங்களை தனது தனித்துவத்தோடு எழுதவேண்டும். அது தமிழ்ச்சூழலில் ஒரு புதிய திறப்பாக நிச்சயம் அமையும்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-419-9.html 

மலர்மன்னனின் பதில்:

அன்புள்ள ஸ்ரீ ஹரன் பிரஸன்னா,

ஆரிய சமாஜம் நூலுக்கு நீங்கள் எழுதியுள்ள விமர்சனத்தை நண்பர்கள் அனுப்பித் தந்தமையால் வாசிக்கக் கிடைத்தது.

நூலாசிரியன் விளக்கம் அளித்தாக வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கும்படியான விமர்சனம் எழுதும் உங்கள் சாமர்த்தியத்தை முதலில் மெச்சுகிறேன்.

1. நீங்கள் பிராமணச் சார்பாகப் பார்ப்பதை நான் நியாயத்தின் சார்பாகப் பார்க்கிறேன். ஆகையால் எனது பார்வையை பகிரங்கப்படுத்துவதில் எனக்குச் சங்கடம் ஏதும் ஏற்படுவதில்லை. 

2. 1857-ல் அது குறித்து சுவாமி தயானந்தரிடமிருந்து எதிர்ரவினை ஏதும் வராமை, ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரமஹம்ஸர்-தயானந்தர் நிலைப்பாடுகள், மனுஸ்மிருதி பற்றறிய அவரது கருத்து, முதலானவை குறித்துச் சரியான ஆதாரங்களின் அடிப்படையிலேயே எனது கருத்துகளை நிறுவியுள்ளேன். ஆகவே அவை யூகங்கள் என்கிற வட்டத்துக்குள் அடங்காது என நினைக்கிறேன். அதற்குப் பதிலாக வாதங்கள் எனக்கொள்வது சரியாக இருக்கலாம்.

3. ‘ம’ எனப் பிரபலமடைந்த மகேந்திரநாத் குப்தா, ‘Gospel of Sri Ramakrishna’ என்ற தலைப்பில் பரமஹம்சரின் சொற்ப கால அன்றாட நிககழ்வுகளைப் பதிவு செய்திருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது அமுத மொழிகள் என்கிற தலைப்பில் மூன்று தொகுதிகளாக சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் வெளியாகியுள்ளது. இதில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பார்த்ததாகவும் அவரது சமாதி நிலை கண்டு வியந்து போற்றிச் சென்றதாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் இருவருக்குமிடையே உருவ வழிபாடு குறித்து ஸம்வாதம் ஏதும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை. 

நான் பல்லாண்டுகளுக்கு முன் ‘ம’ வை ஆங்கிலத்தில் வாசித்திருந்தபோதிலும் ஆரிய சமாஜம்நூலை எழுதுகையில் இது எனது நினைவில் இல்லை. யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் எழுதிய தயானந்த ஜோதியிலிருந்து வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைப் பயன் படுத்தியதால் அவற்றின் அடிப்படையில் இருவரிடையே சந்திப்பு நிகழ வாய்ப்பின்றி தயானந்தர் வங்காளத்தைவிட்டுச் சென்றுவிட்டார் என எழுதிவிட்டேன்.. 

பின்னர் ‘அமுத மொழிகளை’ வாங்கிப் படித்தபொழுது ஸ்ரீ ராம கிருஷ்ணரை தயானந்தர் பார்த்த விவரம் கவனத்திற்கு வந்தது. உடனே ஸ்ரீ பத்ரியுடன் தொடர்பு கொண்டு, புத்தகத்தில் இத்தகவலைச் சேர்த்துவிட வேண்டுமென்று சொன்னேன். அதற்குள் புத்தகம் அச்சாகிவிட்டபடியால் கால கடந்துவிட்டது, அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.

உண்மையில் சுவாமி தயானந்தர்-ஸ்ரீ ராம கிருஷ்ணர் இடையே சந்திப்போ, வாதப் பிரதி வாதங்களோ நிகழவில்லைதானே. சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த பரமஹம்சரைக் கண்டு, இது ஓர் அசாதாரன நிலை என்று தயானந்தர் போற்றிச் சென்றதாக மட்டுமே தகவல் உள்ளது.. ஆகையால் ஒருவகையில் எனது பதிவில் பெரிய முரண் இல்லை. எனக் கொள்ளலாம். உருவ வழிபாட்டில் ஈடுபாடு இல்லாத சுவாமி விவேகானந்தரையே தம்மை குருவாக ஏற்குமாறு செய்தவராயிற்றே,, கடவுளைப் பல உருவங்களாகவே பார்த்துப் பரவசமடைந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர்! இந்த அடிப்படையில், ராமகிருஷ்ணர் விக்கிரகங்களை வெறும் விக்கிரகங்களாக அல்லாமல் கடவுள்களாகவே பார்த்து சல்லாபிப்பவர் எனபதைக் கண்டுகொண்ட தயானந்தருக்கு ராமகிருஷ்ணரின் உருவவழிபாட்டில் என்ன பிரச்சினை இருந்திருக்கக் கூடும்?

4. நமது கலாசாரம் கோயில் கலாசாரமாக ஆழ வேரோடிவிட்ட பிறகு, நம் கலைகள் யாவும் உருவ வழிபாட்டைச் சார்ந்தே உருவாகிவிட்டபிறகு (ராமாயணமும் பாரதமும் இல்லை யென்றால் நமக்கு ரசிக்கத் தெருக்கூத்தே இல்லை என்று தெருக்கூத்துப் பிரியரான அண்ணா ஒருமுறை என்னிடம் மனம் திறந்து சொன்னதுண்டு!), பல்வேறு தொழில்களும் கோயில் நடை முறைகளைச் சார்ந்து உருவாகிப் பல்லாயிரம் மக்களின் ஜீவாதாரமாகிவிட்ட பிறகு, மேலும் மிகவும் முக்கியமாக மிகப் பெரும்பாலான மக்ககளுக்கு உருவ வழிபாடுகளின் மூலமாகவே தெய்வ நம்பிக்கையும் அதன் பயனாக ஆறுதலும் திட சித்தமும் முற்றிலும் கிடைக்கிற சாத்தியக் கூறு உள்ளபோது, உருவ வழிபாட்டிற்கு முற்றிலுமாக முழுக்குப் போடுவது சரியல்ல என்பதே எனது கருத்து. ஆரிய சமாஜத்துடன் எனக்குப் பல் ஆண்டுகளாகத் தொடர்பு சென்னையில் மட்டுமல்ல, வேறு நகரங்களிலும் உள்ளது. இன்று அதில் உள்ள பலர் உருவ வழிபாட்டைக் கைவிட மனமின்றி இருப்பதை அறிவேன். மேலும் சுவாமி தயானந்தரே ஹிந்து சமயம் பல்வேறு கோட்பாடுகளைச் சேர்ந்த நம்பிக்கையாளர்களால் கட்ட மைக்கப்படுள்ளது என்று கூறியிருப்பதையும் பதிவு செய்துள்ளேன். எனவே, என் குல தெய்வமான கொல்லூர் மூகாம்பிகையை என் அன்னையாகவே அறிந்துள்ள எனக்கு இந்த விஷயத்தில் தவிப்போ தத்தளிப்போ இல்லை. உருவ வழிபாட்டில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு நடைபெறும் முறைகேடுகள், பல தெய்வ வழிபாடு மக்களிடையே ஏற்படுத்தும் பேத உணர்வு முதலான பிரத்தியட்ச நிலவரங்கள்தாம் தயானந்தரை உருவ வழிபாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கச் செய்திருக்க வேண்டும்.. மனோ ரீதியாக பல தெய்வ நம்பிக்கையிலும் வழிபாட்டிலும் உள்ள பிற நன்மைகளையும் அறிந்துள்ளேன். 

5. சாதாரண எழுத்தாளர்களே தங்கள் எழுத்தில் முன்னுக்குப் பின் முரணாக எதேனும் எழுதிவிடுவோமோ என்று முன்னெச்சரிக்கையுடன் இருக்கையில், மனுவைப் போன்ற பேரறிஞர் முன்னுக்குப் பின் முரணாக விதிமுறைகளை எழுதுவாரா என்று யோசிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இதன் அடிப்படையில்தான் உலகில் உள்ள அறிஞர்கள் பலரும் மனுஸ்மிருதியில் பல இடைச் செருகல்கள் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதில் உள்ள 2685 வாக்குகளில் 1214 வாக்குகளே அசலானவை என ஆய்வாளர்கள் தெளிவாகக் கூறியிருப்பதைப் பதிவு செய்துள்ள ளேன். பெண்கள் விஷயத்தில் மனுவில் முரண்பாடு ஏதும் இல்லை. ‘புத்ரேண துஹிதா ஸமா’ (மகன்-மகள் இருவரும் சரிசமானவர்களே) என்று சொல்லியிருக்கும் மனு, எல்லா நிலையிலும் ஆண்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற கருத்துப்பட அறிவுறுத்தியிருப்பதைப் பெண்கள் ஆண்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என அவர் சொல்வதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 

6. புரோகிதர்களாக இருந்து எல்லாச் சடங்குகளையும் செய்து வைக்க ஆரிய சமாஜத்தில் ஊழியர்கள் இருப்பதை எனது நூலில் பதிவு செய்துள்ளேன். இவர்கள் மந்திரங்களைச் சொல்வதோடு நின்றுவிடாமல் அவற்றின் பொருளையும் உடனுக்குடன் எடுத்துக் கூறுகிறார்கள். இந்த ஊழியர்கள் ஜாதியின் அடிப்படையில் பிராமணர்கள் அல்லவாயினும் வர்ண அடிப்படையில் பிராமணர்களாக உள்ளனர். எனவே பிராமண வர்ணத்தின் பணியை பிற வர்ணத்தவர் மேற்கொள்ள முன்வராததால் அதில் மட்டும் பிற வர்ண நுழைவு நிகழவில்லை எனக் கருதத் தேவையில்லை. 

7. கும்ப மேளா போன்ற பல லட்சம் மக்கள் கூடுவதால் வரும் கழிவுகளை அகற்ற சுகாதார அதிகாரிகள் ஆறுகளையே பயன்படுத்தி வந்ததால் திருவிழாக்களின் போதெல்லாம் கலாரா பரவுவது இயல்பாக இருந்தது. தயானந்தர் ஆங்கிலேயே அதிகாரிகளைச் சந்தித்துக் கழிவுகளை ஆற்றில் எறியாமல் எரித்துவிடுமாறு அறிவுரை கூறினார். அதனால் எழும் புகைமண்டலத்திற்கு மாற்றாக மூலிகைச் சுள்ளிகளைத் தீயில் இட்டால் காற்று தூய்மையடையும் என்றும் கூறினார். ஆங்கிலேய அதிகாரிகள் எளிதில் புரிந்துகொண்டு சம்மதிக்க வேண்டும் என்பதற்காகவே சமயச் சடங்கு போன்ற வேள்வியை நடத்தலாம் எனக் கூறுவதை அவர் தவிர்த்திருக்கக் கூடும்.. இந்த விளக்கத்தை நான் தெரிவிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் வேள்வித் தீயின் பயன் குறித்தும் ஓர் அனுமானம் போன்ற தொனி வந்துவிட்டிருக்கலாம். 

8. மனுஸ்மிருதியின் மூலப் பிரதியை எடுத்து வைத்துகொண்டு, வரிக்குவரி ஆராய்ந்து, எவையெல்லாம் அசல், எவையெல்லாம் இடைச் செருகல் என ஆதாரப் பூர்வமாக எழுத விருப்பம்தான். அதில் இறங்கிவிட்டால் பிறகு வேறு எந்த வேலையிலும்  ஈடுபட முடியாது. நானோ, இன்றளவும் முழுக்க முழுக்க எழுத்தின் மூலம் வரும் வருமானத்தையே நம்பியிருப்பவன். ஆகையால் யாராவது குறைந்த பட்சம் ஆறுமாத கால அவகாசம் தந்து ஸ்பான்ஸர் செய்தாலன்றி அந்த வேலையைக் கையில் எடுக்க இயலாது! நீங்கள் என்னிடம் மேலும் எதிர்பார்ப்பதாக எழுதியுள்ளமையால் இதனைக் குறிப்பிடுகிறேன்.

9. பண்டிதர்களும் புரோகிதர்களும் தங்கள் பிழைப்பைக் காத்துக் கொள்வதற்காக தயானந்தரைக் கொன்றுபோட முகமதிய நர்த்தகியையும் முகமதிய வைத்தியரையும் பயன்படுத்திக் கொண்டதை எனது நூலில் தெளிவாகவே பதிவு செய்துள்ளேன். எனவே முழுப்பழியையும் முகமதியர்மீது நான் சுமத்திவிடவில்லை!

இவ்வளவு விரிவான விளக்கம் தரக் காரணம், குறைகளுக்கு சமாதானம் சொல்லவேண்டும் என்கிற கவலை அல்ல. உங்களைப் போல் இந்த விஷயத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முடிந்தவரை மனநிறைவளிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனையும் எழுதலானேன்.

அன்புடன்,

மலர்மன்னன் 
ஜூலை 05, 2010 

 

Share

Comments Closed