சூது கவ்வும் விமர்சன அபத்தம்

அபிலாஷ் எழுதிய இந்த விமர்சனம் ஜூன் மாதம் உயிர்மையில் வந்தது. சூது கவ்வும் திரைப்படத்தைவிட அபத்த நகைச்சுவையாகப் பட்டது. ஒரு படத்தைப் புகழவேண்டும் என்று முடிவு கட்டி, அதில் வரும் சாதாரணக் காட்சிகளைக்கூடப் புகழ்ந்து தள்ளுவதும் (சாரு இப்ப்டித்தான் செய்வார், ஆனால் சாருவின் திரைப்பட விமர்சனம், நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதோ இல்லையோ, நிச்சயம் உருப்படியானதாக இருக்கும். வார்த்தைகளில் விளையாடும் ஏமாற்றெல்லாம் இருக்காது) எதாவது ஒன்றிரண்டு ஹங்கேரிய மங்கோலிய இயக்குநர்களின் பெயர்களை உள்ளே இழுத்துவிடுவதுமென இலக்கியப் பத்திரிகைக்கான சம்பிரதாயங்களில் இருந்து சிறிதும் விலகாத விமர்சனம் இது. 

இந்த மாத உயிர்மையில் வாசகர் கடிதம் பகுதியில் திருமாவளவன் என்பவர் சரியாக இவ்விமர்சனத்தைப் பற்றிக் கருத்துரைத்துள்ளார். திருமாளவன் இன்னும் கொஞ்சம் ஆழமாக இவ்விமர்சனத்தின் அலட்டல்களையும் செயற்கைத்தனத்தையும் சொல்லியிருக்கலாம்.

இவ்விமர்சனத்தைப் படித்த சூது கவ்வும் இயக்குநர் தனக்குத் தெரியாததெல்லாம் அபிலாஷுக்குத் தெரிந்திருப்பது பற்றி நிச்சயம் அதிர்ச்சியும் கவலையும் கொண்டிருக்கக்கூடும். ஏனென்றால் இந்த விமர்சகர்கள் ஒரு படத்தைப் பாராட்டினால் அடுத்த படத்தைக் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிட்டுவிடுவார்களே! பாவம் நலன். அதிலும் திடீரென்று அபிலாஷ் தத்துவ நோக்கில் அடித்துச் செல்லும் வரிகள் எல்லாம் – நெஜமாவே முடியலை! 

இன்னொரு முக்கியமான விஷயம், சூது கவ்வும் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த அபத்த விமர்சனத்தைப் படித்தபின்பும் எனக்கும் சூது கவ்வும் இன்னும் பிடித்தமானதாகவே இருக்கிறது என்றால், அப்படத்தின் சாதனையைப் புரிந்துகொள்ளுங்கள். சூது கவ்வும் அபத்த நகைச்சுவை என்றால், இவ்விமர்சனம் அபத்தம்.

Share

Comments Closed