திருமாவளவன் தந்தி பேட்டி

திருமாவளவனிடம் தந்தி டிவியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. கோவில்களில் தமிழ் என்று சிங்கத்தைப் போல முழங்கிய அவர், காலம் காலமாகக் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும் எதிர்க்கேள்வியான, ‘இதே கேள்வியை சர்ச்சுகளிலும் மசூதிகளிலும் கேட்பீர்களா’ என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் பூனை துரத்தும் எலி போல பம்மிவிட்டார். அவரால் சட்டென இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. உள்ளத்தில் நேர்மை இருந்தால்தானே வாக்கில் ஒளி உண்டாகும். இவர் வாக்கைத் தேடி ஓடி ஒளியத்தான் முற்பட்டார்.

thirumavalavan with sargunamசட்டென அவர் சொன்ன பதில் கொஞ்சம் அதிர்ச்சியானது. ‘சர்ச் என்னுடைய பாரம்பரியம் இல்லை, மசூதி என்னுடைய பாரம்பரியம் இல்லை. ஆனால் சைவத் தலங்களும் வைணவத் தலங்களும் என் பாரம்பரியம். நான் தமிழனாகவும் ஹிந்துவாகவும் சைவக் கோவில்களில் சென்று வழிபடும் ஹிந்துவாகவும்… ’ என்று சொல்லிவிட்டார். இதுவரை தன்னை ஹிந்து என்றெல்லாம் அவர் எப்போது இப்படி வெளிப்படையாக அறிவித்தார் என்று தெரியவில்லை. தேவ குமாரன் ஏசு என்றெல்லாம் அவர் புகழ்ந்து உருகி எழுதின கட்டுரைகளையெல்லாம் நான் தமிழ்மண் இதழில் பார்த்திருக்கிறேன். இஸ்லாம் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கொடுக்கவும் தவறமாட்டார். இப்தார் விருந்தில் குல்லா அணிந்து நிச்சயம் கஞ்சி குடித்திருப்பார். ஆனால் ஹிந்துவாகவோ சைவக் கோவில்களில் வழிபடுபவராகவோ அவர் என்று இப்படி உருகி பாராட்டிப் பேசினார் என்பதை அவர் சொன்னால் படித்துப் பார்க்கலாம்.

இவர் எப்போது கடைசியாக கோவிலுக்குக் கும்பிடச் சென்றார் என்றும் தெரியவில்லை. இவர் கோவிலுக்குச் சென்றாலும், ராமன்தான் நிஜ பயங்கரவாதி என்று சொன்னது  மறைந்துவிடுமா என்றும் தெரியவில்லை. ஆனால் இன்று ஒரு கேள்விக்கு பதில் சொல்லமுடியவில்லை என்றதும், தான் ஹிந்து என்று ஹிந்து மதத்தின் பின்னே ஓடி ஒளிய வருகிறார். இதுதான் இவர்களது லட்சணம்.

thirumalavan iftarஇதை பல ஹிந்துத்துவர்கள் இணையத்தில் வரவேற்றிருக்கிறார்கள். அப்படியாவது தன்னை ஹிந்து என்று சொல்லமாட்டாரா என்று அவர்கள் ஏங்குவது புரிகிறது. ஆனால் இந்த ஹிந்து அறிவிப்பு உண்மையைப் பேசவேண்டும் என்ற நோக்கில் வந்ததல்ல. ஓடி ஒளிய, அந்த நேரத்தில் எதையாவது சொல்லித் தப்பிக்கவே சொல்லப்பட்டது. இவ்விஷயம் இன்னும் பெரிதானால், தான் என்றும் ஹிந்துவல்ல என்று அவர் சொல்லக்கூடும். அல்லது தான் பிறப்பால் ஹிந்து, நடப்பால் அல்ல என்று ஜல்லி அடிக்கக்கூடும். அதுவரை ஹிந்துத்துவர்கள் மகிழ்ந்துகொள்ளட்டும். மகிழும்போது, அப்துல் மதானிக்கு திருமாவளவன் ’காயிதே மில்லத் பிறை விருது’ கொடுத்தார் என்பதையும் நினைவில் கொள்ளட்டும். 

(பின்குறிப்பு: திருமாவளவன் கோவிலில் சாமி கும்பிடுவது போலவோ, ஹிந்து சன்னியாசிகளிடம் பேசுவது போலவோ – மதுரை ஆதினத்துடன் போட்டோ இருந்தாலும் வேண்டாம் ப்ளீஸ் – படம் இருந்தால் சொல்லுங்கள், அதையும் இங்கே பதிந்து வைக்கிறேன்.)

Share

Comments Closed