Five poems

நண்பனுக்கு

நானறியா ஏதோவொன்று
என்னிடமே உள்ளதென்பதைப்போல
நீயறியாத ஏதோவொன்றும்
என்னிடம் இருக்கலாம்.
நம்மிடம் இருக்கட்டும்.
இவ்வுலகில் ரகசியங்களே இல்லை
என்பதற்கொப்பாகவே
இவ்வுலகில் ஒவ்வொன்றும் ரகசியமே.
திடீர் சப்தத்தில்
மரம்விட்டு
வான்வெடிக்கும்
பறவைகளை விலகி
மரத்தில்
விழி உயர்த்தாமல்
ஒரு பறவை அமர்ந்திருந்தால்
அது நானோவென
நீயுணரும் நேரத்தில்
நம்மிடை அமைகிறது நட்பு.

***

இன்மையொன்றில்

அநாதரவாக
அலைந்து கொண்டிருந்த
நெருப்புத்துளியொன்றைப் பிடித்து
வீட்டுக்குள் வைக்க
அனைத்தும் எரிந்து சாம்பலாகியென
ஒன்றும் நிகழவில்லை.
துளியைத் தூக்கிக்கொண்டோடி
மலைமேலிட்டேன்
சலனமற்றிருந்தது அவ்வுலகு.
குடத்துக்குள் இட்டபோதும்
துளியெனவே உயிரசைத்தபடி.
மென்காற்றொன்றில்
அத்துளி இறக்க
இருள் கவிகிறது சட்டென.

***

மலைப்பயணம்

மலையிலிருந்த இறங்கிய
குதிரையாகிய நான்
இளைப்பாறிக்கொண்டேன்
சிவந்திருந்த கண்கள்
தன்தோற்றம் கொண்டன
மூச்சு சீராகி
உதறலெடுத்த கால்கள் நின்றன
கைகளின் நடுக்கம் மறைந்தது
குதிரை விடைபெறும் தருணம்
புதிய கல்லொன்று வருமென்று
எதிர்பார்த்துக் காத்திருந்து
ஏமாந்து கழியும் பொழுதில்
மலையுச்சி நோக்கிக்கொண்டே
கல்லொன்றைத் தேடுகிறேன்
குதிரையாகும் நான்

***

இருளிரவு

நாளை காலை முதல்
எத்தீச் சொல்லும் காதில் விழப்போவதில்லை
பாலில் நீர் சேர்த்த புகார் வரப்போவதில்லை
இறைவனைப் பற்றிய ஐயங்களில்லை
நெருப்புப் பந்தம் சுற்றிலும் பூச்சிகள் இல்லை
குழந்தைகள் அழப்போவதில்லை
எங்கும் இனியன, எல்லாம் இனியது
சுற்றி வரும் சொற்கள் விலகி
வெற்றுக் கவிதைகள் இல்லை
சுற்றம் இனியது சூழல் இனியது
என்றேதான் கவிகிறது
இவ்விரவும்.

***

இன்னுமொரு இன்னுமொரு

சடக் சடக் ஒலியில்
கால் மாற்றி
கை விரையும் வேகத்தில்
புதிய புடைவையின்
வண்ண நெளிவுகளில்
உருவாகி வருகிறான்
இன்னுமொரு இறைவன்
உடுக்கையொலியும்
தாளலயமும்
தப்பாத ஆட்டத்தில்
கண்மயங்கிச் சரியும்
அந்திக்குப்பின்னே
காத்திருக்கிறது
இன்னுமொரு சூரியன்

Share

Comments Closed