பாகுபலி

நேற்று பாகுபலி (இரண்டாம் பாகம்) பார்த்தேன். 🙂
 
முதல் பதினைந்து நிமிடங்கள் பொறுமையைச் சோதித்துவிட்டார்கள். பாதி நேரடித் தமிழ்க் காட்சிகள், பாதி டப்பிங், எரிச்சலான நகைச்சுவைக் காட்சிகள் என்று நொந்து போயிருந்த சமயத்தில் சிவகாமி சத்தியம் செய்கிறார். அங்கே பிடித்துக்கொண்ட படம், இடைவேளை வரை நான் திறந்த வாயை மூடவில்லை. மிரட்டல். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் தொய்வு, ஆனாலும் பிரமாண்டத்துக்கும் அட்டகாசத்துக்கும் குறைவே இல்லை. உலகத் திரைப்பட பிரமாண்டங்களுக்கு இந்தியாவின் பதில் இது. இந்தியப் பெருமிதம். ராஜ மௌலியின் திறமை ஆச்சரியப்படுத்துகிறது. முதலில் வரும் யானை, பல்வாள்தேவனின் ரத காளைகள் போன்றவை கிராஃபிக்ஸில் சொதப்பினாலும், ஒட்டுமொத்த அளவில் கிராஃபிக்ஸின் பிரமாண்டம் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. இளையராஜா இல்லாத குறை தெரியாத அளவுக்குப் பின்னணி இசையிலும் பாடல்களிலும் மரகதமணி கலக்கல். பின்னணி இசையின் இனிமையும் அன்னப்பறவை போன்ற கப்பலில் வரும் பாடலும் இன்னும் காதில் மிச்சம் இருக்கிறது. வம்சம் மெகா தொடர் கண்ணில் பட்டு ஒட்டுமொத்தமாக வெறுத்துப் போயிருந்த ரம்யா கிருஷ்ணன், இப்படத்தில் அதகளப்படுத்துகிறார். வசனகர்த்தா மதன் கார்க்கிக்கு தனியே ஒரு பாராட்டு. ஒரு திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் ஒன்றை ஒன்று விஞ்சும் அளவுக்கு நன்றாக அசத்தலாக அமைவது என்பது சாதாரண விஷயமல்ல. ராஜமௌலி இதைச் சாதித்திருக்கிறார்.
 
தமிழில் நேரடியாக என்று சொல்லி எடுக்கப்படும் இருமொழிப் படங்கள் அத்தனையிலும் உள்ள பிரச்சினையே இப்படத்தின் பிரச்சினையும் கூட. தெலுங்கு பேசும் உதட்டசைவுக்கு தமிழில் பேசிப் பாடி வரும் காட்சிகள் துருத்திக்கொண்டு தெரிகின்றன. இதைக் கடந்துவிட்டால் போதும்.
 
தமிழர்கள் செய்திருக்கவேண்டிய இப்பெரும் சாதனையை தெலுங்குத் திரையுலகம் தட்டிக்கொண்டு போனதில் கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும் இது ஒரு இந்தியப் பெருமை என்ற வகையில் மறக்கமுடியாத திரைப்படமே.
Share

Comments Closed