ஒய் எம் சி ஏ – சென்னை புத்தகக் கண்காட்சி 2017

நேற்று ஒய் எம் சி ஏ வளாகத்தில் நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். கூட்டமே இல்லை. கடும் வெக்கை. ஜனவரியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிதான் சென்னைக்கானது என்ற எண்ணம் சென்னைவாசிகளுக்கு அழுத்தமாக உள்ளது போலும். உண்மையில் சென்னைக்கு ஒரு புத்தகக் கண்காட்சி எல்லாம் காணவே காணாது. இந்தப் புத்தகக் கண்காட்சி இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் வலுப்பெறும் என்று நம்பலாம். இந்தமுறையே இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு ஓரளவு வரவேற்பு உள்ளது. விளம்பரமும் நன்றாகவே செய்திருந்தார்கள்.
 
கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலில் பொன்னியின் செல்வன் செட் 55% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. கண்காட்சி முழுவதும் விதவிதமாகப் பொன்னியின் செல்வன்கள் கண்ணில்பட்டன. ஒரு கடையின் தனித்துவத்தைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு விற்பனையாளராக, வேறு வழியில்லை என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். புத்தக விற்பனை ஒட்டுமொத்தமாக உயராத வரை இந்நிலையே தொடரும்.
 
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கண்ணில் பட்டது. சடங்கு போல அவர்களிடம், டின்.என்.ஷேசனின் தன்வரலாறு இருக்கா என்று கேட்டேன். கிட்டத்தட்ட பல வருடங்களாக அவர்களிடம் இதைக் கேட்பது என் கடமை. அவர்களும், ஒண்ணே ஒண்ணு இருந்தது, இப்ப இல்லை என்பார்கள். இப்போதும் அதே பதிலைச் சொன்னார்கள். ஆனால் ஸ்டாலின் உள்ளே இருந்த ஒரு வாசகர், ஒண்ணு இங்க பார்த்தனே என்றார். வேறு யாரும் அதை எடுத்துவிடுவார்களோ என்ற பதற்றத்தில் அவரிடம், அதைக் கொஞ்சம் நீங்களே எடுங்களேன் என்றேன். அவரே தேடி எடுத்துத் தந்தார். பெரிய பொக்கிஷம் கிடைத்தது போல உணர்ந்தேன். சின்ன புத்தகக் கண்காட்சிகளில் இதைப் போன்ற பொக்கிஷங்கள் சிக்கும்.
 
நூல்வனம் ஸ்டாலில் பெரிய புத்தகம் ஒன்றை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். பல புத்தகஙக்ளின் அட்டைகளில் என்ன என்னவோ ஆட்டம் போட்டிருந்தார்கள். குழந்தைகளைக் கவரும் நூல் வடிவமைப்பு. மணிகண்டன் ஸ்டாலில் இல்லாததால், என் மகன் பல புத்தகங்களை லவட்டி… சே… வாங்கி வந்தான். அரங்கில் இருந்த முத்து கணேஷ் அவர் பங்குக்கு அவரது பதிப்பகத்தின் (ஆரம் வெளியீடு) புத்தகம் ஒன்றையும் தந்தார். அங்கே ராம்கி நின்றிருந்தார். ‘என்னங்க இது, கமல் அரசியலுக்கு வந்தா ஜெயலலிதா ஆகிடலாம்னு போட்டிருக்கீங்க. மனசாட்சியே இல்லையா?’ என்று கேட்டேன். என்னவோ சொன்னார். நான் பதிலுக்கு, ‘வரட்டும். வரணும்னுதான் பிரார்த்தனை. அப்பதானே தெரியும்’ என்றேன்.
 
விருட்சம் ஸ்டாலில் கே.என்.சிவராமனும் யுவ கிருஷ்ணாவும் இருந்தார்கள். ஹலோ சொன்னேன். ஹலோ சொன்னால் கவனம் இதழ்த் தொகுப்பை நமக்கு சிவராமன் வாங்கித் தருவார் என்று எனக்கு நிஜமாகவே தெரியாது. வாங்கித் தந்தார். 🙂 கவனம் என்ற இதழ் ஞானக்கூத்தனால் வெளியிடப்பட்டது. ஏழு இதழ் வெளி வந்திருக்கும் போல. ஏழு இதழ்களையும் அப்படியே ஸ்கேன் செய்து அச்சிட்டு நூலாக்கி இருக்கிறார்கள். ஸ்கேன் மூலம் அதே நூலை அப்படியே அச்சிடுவதில் உள்ள அனுகூலங்கள், மீண்டும் தட்டச்சு செய்யவேண்டியதில்லை, பிழைத் திருத்தம் செய்யவேண்டியதில்லை. பழைய நூல் என்றால் அதன் வாசிப்பு வாசனை அப்படியே கைக்கூடும். தடை செய்யப்பட்ட துக்ளக் இப்படி வந்திருந்தது. இப்போது கவனம். அதுபோக நகுலன் தொகுத்த குருக்ஷேத்திரம். அசோகமித்திரன் செய்த பிழைத் திருத்தங்களுடன் அப்படியே குருக்ஷேத்திரம் வெளிவந்துள்ளது சுவாரஸ்யம். இந்த இரண்டு நூல்களும் ஸ்கேனிங் செய்யப்பட்டு அப்படியே வந்திருக்கின்றன. கச்சிதமான ஸ்கேனிங்கும் கச்சிதமான லே அவுட்டும் இல்லையென்றால் இப்படிப்பட்ட நூல்கள் பல்லை இழித்துவிடும். கவனம் நன்றாகவே உள்ளது. கண்காட்சிக்குச் செல்பவர்கள் சிவராமனிடம் ஹாய் சொல்லி கவனம் பெற வாழ்த்துகள்.
 
வனவாசி என்ற நூலையும் பல வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். தன்னிடம் உள்ள நூலை அனுப்புவதாக பத்து முறை சொன்ன நண்பர் ஒருவர் (நண்பா!) பதினோராவது முறை, அனுப்பிட்டேனே இல்லையா என்றார். வேறு வழியின்றி ஆங்கிலத்திலேயே முக்கால்வாசி படித்து முடித்துவிட்டேன். சென்ற ஜனவரி புத்தகக் கண்காட்சியில் எத்தனை தேடியும் கிடைக்கவில்லை. புதினம் புக்ஸின் கதிரேசன் ஃபேஸ்புக்கில் முக்கியமான புத்தகங்களை தினமும் அட்டையுடன் போடுவார். நேற்று வனவாசி கண்ணில் கட்டது. உடனே அதை வாங்கவேண்டும் என்று அவர் கடைக்குச் சென்றேன். விடியல் பதிப்பகம் வெளியிட்டது. இருந்தாலும் புதினம் புக்ஸின் கதிரேசனிடம் வாங்கினேன். எத்தனையோ வருடங்கள் தேடிக்கொண்டிருந்த இரண்டு புத்தகங்கள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.
 
என் மகனும் மகளும் அந்தப் புத்தகம் இந்தப் புத்தகம் என்று என்னவெல்லாமோ வாங்கிக்கொண்டிருந்தார்கள். விக்ரமாதித்தன் கதைகள் முழுத் தொகுப்பு, 400 ரூ விலையுள்ள நூல் 200 ரூபாய்க்கு என்று சொல்லவும், அந்நூலைப் பார்த்தேன். மிக மோசமான தாளில் அச்சிடப்பட்ட நூல். 400 பக்கம் இருக்கலாம். 200 ரூ என்பதே அதிகம். அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நியூ புக் லேண்ட்ஸ் கடைக்குச் சென்று நர்மதா வெளியிட்ட விக்கிரமாதித்தன் கதைகள் நூலை வாங்கினேன். நல்ல தரமான தாளில் அச்சிடப்பட்ட அழகான நூல். அங்கே ஸ்ரீனிவாசனுடன் பேசிக்கொண்டிருந்தேன். பத்து நிமிடங்களில் இணைய வழி தமிழ்ப் புத்தகக் கடைகளின் வரலாற்றையே அவர் சொன்னார். இத்துறையில் அதிக அனுபவம் உள்ளவர். புத்தகம் பற்றித் தெரிந்தவர் ஸ்ரீனிவாசன். அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். நிறைய நாஸ்டால்ஜியா. புத்தகக் கடைகளின் விற்பனை தொடர்ந்து சரிந்துகொண்டே இருக்கிறது என்பது மறுக்கவே முடியாத உண்மை. அமேசான் போன்ற தளங்கள் வாசகர்களுக்குத் தரும் அனுபவம் வேறு, விற்பனையாளர்களுக்குத் தரும் அனுபவம் வேறு. அமேசான் மூலமும் விற்பதன் மூலம் இதைக் கொஞ்சம் சரிக்கட்டலாம் என்றாலும் முழுவதும் முடியாது. மேலும் நீண்டகால நோக்கில் அமேசான் செய்யப்போவது என்ன என்பதையும் யோசிக்கத்தான் வேண்டும். ஸ்ரீனிவாசன் இதைப் பற்றி சரியாகவே சொன்னார். யோசனையாகவே இருந்தது. நன்றாக விற்கும் ஒரு சந்தையில் அமேசானின் வரவு என்பது வேறு. புத்தக விற்பனையில் அமேசானின் வரவு என்பது வேறுதான்.
 
என்னுடன் வந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் பஜ்ஜி சாப்பிடுவது, கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பது என்ற கடமை ஆற்றச் சென்றார்கள். டயல் ஃபார் புக்ஸ் ஸ்டாலில் சிறிது நேரம் நின்றிருந்தேன். டி.கே. புக்ஸின் ரங்கநாதன் டில்லியில் இருந்து வந்திருந்தார். ஹாய் சொல்லிக்கொண்டோம். பிக் பாஸுக்கு நேரம் ஆகவும் ஓலா புக் செய்து குடும்பத்துடன் கிளம்பி வந்தோம். ஓவியாவைப் பார்க்க கமல் ஒரு சாக்கு என்ற என் மனைவியின் குரலை வழக்கம்போல் பொருட்படுத்தவில்லை. வீட்டுக்கு வந்து டிவியை உயிர்ப்பிக்கவும் பிக் பாஸ் தொடங்கவும் சரியாக இருந்தது.

Jpeg

Jpeg

Jpeg

Jpeg

Jpeg

Jpeg

Share

Comments Closed