வலம் ஜனவரி 2018 இதழில் வெளியாகிய கட்டுரை: ‘தொண்டன்’ – முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை

வலம் ஜனவரி 2018 இதழில் வெளியாகிய கட்டுரை: ‘தொண்டன்’ – முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை.

இந்தக் கட்டுரையில் அரவிந்தன் நீலகண்டன், தொண்டன் பத்திரிகையை சந்திரஹாஸ வாளுடன் ஒப்பிடுகிறார். பொதுவாகவே அரவிந்தனின் இது போன்ற ஒப்பீடுகள் மிக ஆழமான ஒன்றாக இருக்கும். வரலாற்றில், புராணத்தில், இந்திய/ஹிந்து மரபில் இருக்கும் ஒன்றுடன் வரலாற்றைப் பிணைப்பது அவரது பாணி. இதன் மூலம் அவர் வெளிக்கொண்டு வர நினைக்கும் வரலாற்றுடனான மரபில் உரையாடலை அவர் தொடர்ந்து தரப்போகும் உதாரணங்களில் நிலைநிறுத்துவார். எனவே இது வெறும் ஒப்பிடுதல் என்கிற வாள் சுழற்றலைத் தாண்டிச் சென்றுவிடும். இந்தக் கட்டுரையும் இப்படியே.

தொண்டன் இதழ் முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை என்பதுவே அரவிந்தன் சொல்லித்தான் நான் அறிந்துகொண்டேன். தொண்டனின் தேவையையும் அருமையையும் திருவிக போன்றவர்களின் கூற்று மூலம் முன்வைப்பதும் நல்ல சாதுர்யமான பாணி. தமிழர் மதம் வேறு ஹிந்து மதம் வேறு என்னும் சமீபக் கூச்சல்களுக்கெல்லாம் முன்பே பதில் சொல்லி வைத்தது போல் அமைகின்றன இக்குறிப்புகள்.

ஹிந்து மதமும் தமிழும் இப்போதுதான் முற்போக்காளர்களாலும் திராவிட அரசியல்காரர்களும் பிரிக்கப்படுகின்றன. சமீப பத்தாண்டுகளுக்கு முன்னர் கூட இரண்டும் ஒன்றாகக் கலந்தே கிடந்தன. கே ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாண நாவலர் அல்ல) நடத்தி இருக்கும் இப்பத்திரிகை இதை உரக்கச் சொல்லும் ஆவணமாகத் திகழ்கிறது.

நாம் இந்துக்கள் அல்ல, திராவிடர்கள் என்பவர்களுக்கு தொண்டன் பத்திரிகையில் வந்திருக்கும் ஒரு கட்டுரையை ஹிந்துத்துவத்தின் சாசனம் என்றே அரவிந்தன் நீலகண்டன் குறிக்கிறார். மிக முக்கியமான கட்டுரை அது.

உண்மையில் இன்று வலம் பத்திரிகை செய்ய நினைக்கும் ஒன்றை பல மடங்கு வீரியமாக அன்றே செய்திருக்கிறது தொண்டன் பத்திரிகை. இதனால்தான் வலம் இதழ் மிகவும் பேலன்ஸிங்காக இருப்பதாகப் பலர் சொல்கிறார்கள் போலும். திராவிடர்களே அன்றி ஹிந்துக்கள் அல்ல என்பவர்களை தொண்டன் இதழ் இப்படிச் சொல்கிறது – “இனவேற்றுமையைவிட இந்து மத அழிப்பே அவர்கள் ஆர்வம்”. ஆலயப் பிரவேச சட்டத்துக்கு இந்த இதழ் துணை நின்றிருக்கிறது. தலையங்கத்தில் ஆறுமுகநாவலர், ”ஆலயப் பிரவேசத்தைத் தடுக்க முற்படுவோரின் செயல், கொந்தளிப்போடு வரும் கடலை தன் கைத்துடப்பத்தால் பெருக்கித் தள்ளத் துணிந்த கிழவியில் செயலை ஒத்திருப்பதாக” எழுதுகிறார்.

அரவிந்தன் நீலகண்டனின் முக்கியமான கட்டுரை.

எனவே… இதுபோன்ற நல்ல கட்டுரைகளை வாசிக்க வலம் இதழுக்கு சந்தா செலுத்துங்கள். நல்ல இதழ்களை ஆதரியுங்கள்.

Share

Comments Closed