A day at IITM

நேற்று ஐ ஐ டி மெட்ராஸில் ஒருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். 6வது வருடமாக நடக்கும் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் நோக்கம் ஐ ஐ டி எப்படி இருக்கும், அங்கே என்ன நடக்கிறது என்பதை அங்கேயே சென்று அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை அளிப்பது. குறிப்பாகப் பெற்றோர்களுக்கு உதவும் நோக்கத்தில்.

ஐஐடியைச் சுற்றிக் காண்பித்தார்கள். தேர்ந்தெடுத்த சில இடங்களுக்குக் கூட்டிச் சென்றார்கள். ஒட்டுமொத்த நிகழ்வையும் மாணவர்களே ஒருங்கிணைத்தார்கள் என்பதுதான் பெரிய விஷயம். டீன் மிக முக்கியமான விஷயங்களைத் தொகுத்துப் பேசினார். ஐஐடி சென்னை எப்படி மற்ற ஐ ஐ டிக்களை விட முன்னணியில் இருக்கிறது என்பதையும், ஆசியாவில் 51வது இடத்தில் இருக்கிறது என்பதையும், மற்ற 50 முன்னணி ஐ ஐ டிக்களிடம் இருந்து சென்னை எப்படி ஏன் பின் தங்குகிறது என்பதை ஆராய்ந்து அதை நீக்கும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதாகவும் சொன்னார்.

ஐ ஐ டியில் முதல் வருடம் படிக்கும் மாணவன், ஐ ஐ டியில் இருந்து இந்த வருடம் டிகிரியுடன் வெளியேறும் மாணவன், ஐ ஐ டியில் படித்து முடித்து புதிய தொழில் தொடங்கி சி இ ஓவாக இருக்கும் மாணவன் என்று மூன்று பேர் பேசினார்கள். ஐ ஐ டியில் நடக்கும் சாரங் மற்றும் சாரல் விழா பற்றிய சிறிய அறிமுக வீடியோவைக் காட்டினார்கள்.

பின்னர் கேள்வி பதில்.

கேள்வி பதில் நிகழ்வு படு லைவாக இருந்தது. ஐ ஐ டியில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் மறக்காமல் சொன்னது, இப்போது உங்கள் குழந்தைகளை ஐ ஐ டி ஐஐடி என்று படுத்தாதீர்கள் என்பதைத்தான். சிபிஎஸ்இயில் படித்த பிள்ளைகள்தான் அதிகம் வெல்ல முடியுமாமே என்ற கேள்விக்கு பதில் சொன்ன பெண் சட்டென்று தான் ஒரு ஸ்டேட் போர்ட் மாணவி என்றார். கைத்தட்டுச் சத்தம் காதைப் பிளந்தது. சிபிஎஸ் இ மற்றும் ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தில் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதால், ஐஐடிக்குத் தனியே கோச்சிங் செய்தால் போதும் என்றார்கள் ஐஐடி மாணவர்கள். அதிலும் பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் கோச்சிங் எடுத்துக்கொண்டால் போதும் என்றார்கள். எல்லாவிதமான கோச்சிங் செண்டர்களும் ஒரே போன்றவைதான் என்றும் பாடங்களை ஒழுங்காகப் படித்து ஐஐடி கோச்சிங் மெட்டீரியலை ஒழுங்காகப் போட்டுப் பார்த்தாலே போதும் என்றும் சொன்னார்கள். இரண்டு வருடம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒழுங்காகப் படித்தால் ஐ ஐடியில் இடம் கிடைக்கும் என்றும் அப்படி இடம் கிடைத்தால் உங்கள் வாழ்க்கையே மாறும் என்றும் எனவே அந்த இரண்டு வருடம் அப்படிப் படிப்பது வொர்த் என்றும் சொன்னார் ஒரு மாணவி.

பல பெற்றோர்களின் கண்களில் தெரிந்த கனவு, எப்படியாவது தன் பிள்ளைகளை ஐஐடியில் சேர்த்துவிடவேண்டும் என்பதுதான். அதிலும் அங்கிருக்கும் சின்ன சின்ன மாணவர்கள் எல்லாம் மிக விவரமாகவும் தெளிவாகவும் பேசுவதைக் கேட்ட பெற்றோர்களுக்கு இந்தக் கனவு ஆயிரம் மடங்கு கூடியிருக்கும் என்றே நினைக்கிறேன். ஐஐடியன் என்று அவர்கள் பெருமிதத்தோடு முதல் வருடத்திலேயே சொல்லப் பழக்கப்பட்டுவிடுகிறார்கள். அலுமினி மற்றும் சூழல் அவர்களை ஐஐடியன் என்னும் சொல்லுக்குத் தகுதி உடையவர்களாகத் தயார்ப்படுத்திவிடுகிறது.

சிபிஎஸ் இ முறையில் படிப்பது நிச்சயம் ஐ ஐ டி நுழைவுத் தேர்வுக்குப் பெரிய அளவில் உதவலாம் என்றே நினைக்கிறேன்.

முக்கியமான விஷயம், ஐஐடியில் ஒருநாள் நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படவில்லை. ஜனகனமன மற்றும் ஓம் கணபதி சரஸ்வதி என எந்தப் பாடலும் பாடப்படவில்லை. 🙂 நான் தான் வாயில் வந்த எதோ ஒரு பாடலை முனகிக்கொண்டிருந்தேன் என்பதைத் தவிர வேறு எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை.

பின்குறிப்பு: அங்கேயும் ஒருவர் வந்து பத்ரியின் பதிவைத் தொடர்ந்து படிப்பதாகவும் அதைப் பார்த்துத்தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்ததாகவும் சொன்னார். 🙂

Share

Comments Closed