எஸ்ரா உரை – தி ஹிந்து லிட் ஃபார் லைஃப்

எஸ்.ராமகிருஷ்ணன் உரை – தி ஹிந்துவின் லிட் ஃபார் லைஃப் நிகழ்ச்சியில் பேசியதைக் கேட்டேன். எஸ்ரா ஒட்டுமொத்த பங்களிப்பைப் பற்றிய பேச்சில் வல்லவர். அவரது நினைவாற்றலும் பரந்த வாசிப்பும் அவற்றைப் பொருத்தமாகவும் கச்சிதமாகவும் வெளிப்படுத்துவதிலும் வல்லவர். எடுத்துக்கொண்ட தலைப்பில் இருந்து பெரும்பாலும் விலகாதவர். இப்பேச்சும் அப்படியே.
 
தமிழ்ச் சிறுகதைகளின் உன்னதத்தைப் பற்றியும் அச்சிறுகதைகளின் பரந்து பட்ட களம் பற்றியும் தெளிவாகப் பேசினார். கதையில் முதல் வரியிலேயே கதை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற பிரபலமான சிறுகதை விதி என்று நம்பப்படுவதை அறவே மறுத்தார். இக்கருத்து பிரஞ்சுக் கதைகளின் வழியே நம்மை வந்தடைந்தது என்றும், ரஷ்ய சிறுகதைகள் இப்படியானதொரு வரைவைக் கொண்டிருக்கவில்லை என்றும் சொன்னார். உலக, இந்தியச் சிறுகதைகளிலும் தமிழ்ச் சிறுகதைகளே பரந்துபட்டவை என்றும், அவற்றிலும் இன்னும் பரவலாக எழுதப்படாத களங்கள் உள்ளன என்று சொல்லி அவற்றில் ஒன்றிரண்டைக் குறிப்பிட்டுக் காட்டினார்.
 
ஆயிரம் சிறுகதைகளுக்கு மேல் வாசித்திருக்கிறார் என்பது பெரியதல்ல. அவற்றை நினைவில் வைத்திருக்கிறார் எஸ்ரா என்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு கதையின் பெயரைச் சொன்ன உடனேயே, அது முக்கியமான கதையாக இருந்தால், அவற்றை அப்படியே விவரிக்கும் திறமையும் நினைவாற்றலும் எஸ்ராவுக்கு உள்ளது. எனக்குள்ள பிரச்சினை, ஒரு கதை ஒரு காப்ஸ்யூலாகி எனக்குள் உறைந்துவிடும் என்பதுதான். அதை ஒரு உருவகமாகவும் ஒரு வரியாகவும் ஒரு கதையாகவும் மட்டுமே மீண்டும் என்னால் நினைவுக்குக் கொண்டு வரமுடியும். நான் எழுதிய கதைகள் உட்பட! ஆனால் எஸ்ராவுக்கு எல்லாமே நினைவுக்கு வருகிறது. இந்த நினைவாற்றல் மிக முக்கியமானது. ஒரு வழியான பயிற்சியும் கூட இது.
 
நினைவுக்கு வந்த சிறுகதையாளர்களின் பட்டியலை வாசித்தார். பெரும்பாலானவர்களை நானும் வாசித்திருக்கிறேன். இன்னும் வாசிக்கவேண்டியவை ஏகப்பட்டவை உள்ளன என்னும் எண்ணம் சோர்வையும் நம்பிக்கையையும் ஒருசேர அளித்தது.
 
கடைசியில் ஒரு கதையைச் சொன்னார் எஸ்ரா. (ரஷ்ய கதை என நினைக்கிறேன்.) அந்தக் கதையின் சர்வாதிகார ராணுவ அதிகாரி, எழுத்தாளர்களைத் தடை செய்ய முகாந்திரம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மனம் மாறுகிறார் – இலக்கியத்தை வாசித்து. இங்கேதான் நான் குழம்பிப் போன இடம். அல்லது என்னைக் குழப்பிக்கொண்ட இடம். இலக்கியத்துக்கென வாழ்வில் நிச்சயம் ஒரு இடம் உள்ளது என்பதை நம்புகிறேன். இலக்கியம் ஒருவனைத் தீவிரமாக்குகிறது என்பதாக மட்டுமே என் நம்பிக்கை இத்தனை காலங்களில் வந்து சேர்ந்திருக்கிறது. நல்லவனை மிகத் தீவிரமான நல்லவனாக, இலக்கிய ரீதியிலான ஆழ்மன தர்க்கங்களுடன் நல்லவனாக ஆக்குகிறது. கெட்டவனையும் அப்படியே. சூதுவாது கொண்டவர்களையும் அப்படியே. இலக்கியம் இவர்கள் எல்லாவருக்குமான இடத்தையும் தர்க்கங்களின் வழியே அமைத்துக் கொடுக்கிறது.
 
அப்படியானால் இலக்கியம் ஒருவனை நல்லவனாக்குவதில்லையா என்றால், என் பதில் – முன்பெல்லாம் திரையரங்குகளில் ‘மேற்படி’ படங்கள் திரையிடப்படும். அதில் இடைவேளைக்குப் பிறகு இருபது நிமிடங்கள் கழித்து, அறிவியல் ரீதியான உண்மைகளைச் சொல்லத் துவங்குவார்கள். இப்படங்களைப் பார்த்து ஒருவர் அறிவியல் ரீதீயான உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது தர்க்க ரீதியாகச் சரிதான். இதே தர்க்க ரீதியாக மட்டுமே இலக்கியம் ஒருவனை நல்லவனாக மாற்றமுடியும். என்னைப் பொருத்தவரை இலக்கியம் ஒருவனை தீவிரமாக சிந்திக்கச் செய்கிறது என்பதை மட்டும் ஏற்கிறேன். மற்றபடி அதன் விளைவு அந்தத் தனிமனிதனின் இயல்பு தொடர்பானதே. அவனுக்குள் இருக்கும் அந்த நல்லவனில் இலக்கியம் உரசினால் அதன் விளைவு நல்லதாக இருக்கும்.
 
இப்படிச் சொல்வதால் நான் இலக்கியத்தை நம்பவில்லை என்பதல்ல. நிச்சயம் நம்புகிறேன். எனக்கான ஒரே திறப்பு அதுதான் என்றும் உறுதியாக நம்புகிறேன். நிபந்தனைக்குட்பட்டு. இதனால் என்னை நம்பிக்கையின்மைவாதி எனலாம். அதுவும் உண்மைதான்.
 
அப்படியானால் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்துக்கும் வாழ்வில் என்ன பங்களிப்பு என யோசித்தேன். அவை சிறுவயது முதலே வாழ்க்கையில் நமக்கு ஊட்டப்படுகின்றன. அவையே நம் வாழ்வின் பற்றுக்கோல்கள் என்ற அளவிற்கோ, மாதிரி என்ற அளவுக்கோ சொல்லப்படுகின்றன. அவற்றைக் கேட்டவர்களும் இன்று வாழ்வில் அதன்படி உள்ளவர்களுக்குமான வேறுபாட்டைப் பார்த்தாலும் நான் சொல்வது பொருந்தித்தான் போகிறது. அதேசமயம் இதிகாசங்களால் வாழ்க்கையில் ஒரு முடிவை எடுத்து வாழ்பவர்களை நம் மரபும் கலாசாரமுமே அப்படி நடக்க வைக்கிறது என்று நம்புகிறேன். இந்த அட்வாண்டேஜ் நவீன இலக்கியங்களுக்கு இன்று இல்லை.
 
நேரம் கருதி எஸ்ரா சுருக்கமாகப் பேசி இருக்கிறார் என நினைக்கிறேன். இது தொடர்பாக எஸ்ரா நீண்ட உரை ஒன்றை விரிவாகப் பேசலாம். அது பெரிய ஆவணமாக இருக்கும்.
 
உரையைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=6huZMOzZGhE
Share

Comments Closed