போராட்டம் – சில விதிமுறைகள் – நீதிமன்றத்துக்குப் பரிந்துரைகள்

போராட்டம் – சில விதிமுறைகள் – நீதிமன்றத்துக்குப் பரிந்துரைகள்

* அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் உடைக்கப்படும் பஸ்கள் மற்றும் ரயில்களுக்கான சேதாரத்தை அந்தக் கட்சியிடமிருந்து வசூலிக்கவேண்டும். அப்படித் தராத பட்சத்தில் அந்தக் கட்சியைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. கடைக்காரரே உடைத்துக்கொண்டார் என்றால் அதை கட்சியே நிரூபிக்கவேண்டும். நிரூபிக்க முடியாதே என்றால் போராட்டம் நடத்தக்கூடாது. இது பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, அதிமுக, திமுக என எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானதென்பதறிக.

* அரசியல் கட்சிகள் அல்லாத அமைப்புகள் போராட்டம் நடத்தி அதனால் ஏற்படும் நஷ்டங்களை அந்த அமைப்பு தரவேண்டும். இல்லையென்றால் அந்த அமைப்பைத் தடை செய்யவேண்டும். இது ஆர் எஸ் எஸ் உட்பட்ட எல்லா அமைப்புக்கும் பொருந்துமென்பதறிக.

* பரிட்சை நடக்கும் நாளில் எவ்விதப் போராட்டமும் நடக்கக்கூடாது. அப்படி அல்லாமல் ஏதேனும் கட்சியோ அமைப்போ போராட்டத்தை அறிவிக்குமானால் அந்த அமைப்பின் தலைவர்களைக் கைது செய்யவேண்டும். போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால், அந்தக் கட்சி தேர்தலில் பங்கேற்பதை ஒரு தடவை தடை செய்யவேண்டும். அமைப்பை ஒரு வருடத்துக்குத் தடை செய்யவேண்டும்.

* உண்ணாவிரதம் என்பதே குறைந்தது மூன்று நாள் உண்ணாவிரதமாக இருக்கவேண்டும். காலை 9 மணி முதல் இரவு 6 மணி வரையிலான டுபாக்கூர் உண்ணாவிரதத்தை உடனே தடை செய்யவேண்டும். மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்து, முதல் ஒரு மணி நேரத்திலேயே உண்ணாவிரதத்தின் காரணம் சரியானால்கூட, மூன்று நாள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து நடத்தி முடிக்கவேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயவேண்டும். அப்படி ஒருவேளை, தெரியாத்தனமா இருந்துட்டேன் என்று உண்ணாவிரதம் இருப்பவர் கதறினால், பொதுவில் இனி ஒருநாளும் என் வாழ்நாளில் உண்ணாவிரதம் இருக்கமாட்டேன் என்று அவரைச் சொல்லச் சொல்லி அதை லைவ் வீடியோவாக ஒளிபரப்பவும் வேண்டும். பின்னர் மட்டுமே அவர் அந்த உண்ணாவிரதத்தைக் கைவிடலாம். கருணாநிதி தொடங்கி ஜீயர் வரை அனைவருக்கும் இவ்விதி பொருந்துமென்றறிக.

* வெள்ளிக் கிழமையோ திங்கள் கிழமையோ அல்லது இரண்டு விடுமுறைகள் வரும் நாளுக்கு முதல் நாளோ மறுநாளோ பந்தோ கடையடைப்போ நடத்தக்கூடாது.

* எந்தத் தொலைக்காட்சியும் பந்தை நேரடியாக அரை மணி நேரத்துக்கு மேல் ஒளிபரப்பக்கூடாது. கலவரம் என்றால் நிச்சயம் ஒளிபரப்பக்கூடாது. இரண்டு நாள் கழித்து கொஞ்சம் வேகம் அடங்கியதும் அந்தக் காட்சிகளை ஒளிபரப்பிக்கொள்ளலாம்.

நிபந்தனைக்குட்பட்டு நீங்க போராட்டம் நடத்தி எங்களுக்கு நல்லது செஞ்சா போதும்.

#மனம் நதிநீர் போல அமைதியாக இருக்கும்போது எழுதிய பதிவு இது.

Share

Comments Closed