ரஜினி கமல் அரசியல்

ரஜினி கட்சி ஆரம்பித்தபோது இருந்த நம்பிக்கையும் ஆர்வமும் எனக்கு பின்னர் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. சில சமயம் மீண்டும் ஒரு ஆர்வம் வரும். ரஜினி எதாவது என் கருத்துகளுக்கு எதிராக சொல்வார். அதுவும் அவர் இத்தனை நாள் தன்னை எப்படி முன்னிறுத்திக்கொண்டாரோ அதிலிருந்து முற்றிலும் விலகிப் போவதான கருத்தாகவும் இருக்கும். இப்போது அவர், தேவைப்பட்டால் கமலுடன் இணைந்து செயலாற்றுவேன் என்று சொல்லி இருக்கிறார். கொடுமை. (நான் வீடியோவைப் பார்க்கவில்லை, தமிழ் தி ஹிந்துவில் வந்திருக்கும் செய்தியைப் பார்த்தே சொல்கிறேன்.) ரஜினி அரசியலுக்கு வந்தால் வெல்வார் என்பதே என் கணிப்பு. ஆனால் இப்படி கமலுடன் எல்லாம் இணைந்து வந்தால் உள்ள ஓட்டும் போய்விடும். அதுமட்டுமல்ல. கமலின் அரசியலை ஏற்றுக்கொள்வது ரஜினி தனக்கும் தன் ரசிகர்களுக்கும் அவரை நம்பியவர்களுக்கும் செய்யும் துரோகம். நட்பு என்ற ஒரு வஸ்து எப்படி வேண்டுமானால் இருந்துத் தொலைக்கட்டும். ஆனால் இதெல்லாம் ஓவர். ஓவர் என்பதோடு, அவர் சொல்லி வந்த கருத்துகளுக்கும் நம்பிக்கைக்கும் செய்யும் துரோகம். தொடர்ந்து தவறுகளை மட்டுமே செய்வதில் ரஜினி ஏன் இப்படி மும்முரமாக இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கமலுடன் கூட்டணி என்றால், ‘மாநிலத்தில் ரஜினி மத்தியில் மோடி’ என்று, ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொன்ன நாளில் நான் சொன்ன கருத்தை பின் வாங்கிக்கொள்கிறேன். 🙂 ரஜினி மூலம் எப்படியோ ஐந்து வருடங்களுக்குப் பிறகாவது ஹிந்து உணர்வுடன் மக்கள் வாக்களித்து பாஜக 2ம் இடத்துக்காவது வரும் என்ற, மலையைக் கெல்லி எலியைப் பிடிக்கும் ஆசையும் இந்த அறிவிப்போடு நாசமாகப் போவதை நினைத்தால் வேதனையாகவே இருக்கிறது. எப்படியோ, நாரோ சேர்ந்த பூவும் நாறும் என்பதை ரஜினிக்குச் சொல்லுங்கள்.

பிகு: தரக்குறைவான விமர்சனங்கள் நீக்கப்படும்.

Share

Comments Closed