பத்தாம் வகுப்புத் தேர்வுகள் – கொரோனா காலம்

பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்தாமல் விட்டது சரியான முடிவல்ல. வேறு வகையான முடிவுகளை ஆராய்ந்திருக்கலாம்.

* ஐந்து கட்டங்களில் தேர்வுகளை நடத்தி இருக்கலாம். எந்த நாள் முடியுமோ அந்த நாளில் தேர்வுகளில் பங்கெடுக்க மாணவர்களுக்கு அனுமதி அளித்திருக்கலாம்.

* யாரேனும் இரண்டு முறை ஒரே தேர்வை எழுதினால் அதில் எந்த மதிப்பெண் அதிகமோ அதை எடுத்துக் கொள்ளலாம். ஒரு மாணவர் இரண்டு முறைக்கு மேல் எழுதக்கூடாது என்ற வரன்முறையையும் கொண்டு வரலாம்.

* இண்டர்னல் மதிப்பெண்களை முழுமையாக வழங்கலாம்.

* இண்டர்னல் போக 80 மதிப்பெண்களுக்குப் பதிலாக 40 மதிப்பெண்களுக்குத் தேர்வு வைக்கலாம். மிக எளிதாக மாணவர்கள் தேர்வு எழுதும்படியாக ஒரு வரி வினா விடையை அதிகமாகவும் மற்றவற்றைக் குறைவாகவும் வைக்கலாம். இதனால் தேர்வு நேரத்தை ஒரு மணி நேரமாகக் குறைக்கலாம்.

* ஒரு பள்ளி முழுக்க பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே எழுதப் போவதால் ஒரு வகுப்பில் ஒரு பென்ச்சில் ஒருவரை மட்டுமே அமரச் சொல்லி எழுதச் சொல்லலாம்.

* ஐந்து முறை தேர்வுகள் நடத்தப்படுவதால் நிச்சயம் மாணவர்கள் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

* ஐந்து வேறு வேறு வினாத்தாள்கள் என்றால் எப்படி பொதுவாகக் கருதமுடியும் என்ற கேள்வி எழும். எதோ ஒரு வகையில் அனைத்து வினாத்தாள்களையும் எளிமையாகவே கேட்கலாம். இதன்மூலம் சுற்றி வளைத்து ஒரு பொதுவான தேர்வுப் பட்டியலைக் குறைந்தபட்சம் அடையலாம்.

* பாடத்தின் பின் பக்க கேள்விகளில் இருந்து 80% கேள்விகளும், உள்ளே இருந்து 20% கேள்விகளும் வரும் என்று சொல்லலாம். இது ஆவரேஜ் மற்றும் பிலோ ஆவரேஜ் மாணவர்களுக்குப் பெரிய அளவில் உதவும்.

* ப்ளூ ப்ரிண்ட்டை மாற்றி அமைத்து எந்த எந்த பாடங்களை மாணவர்கள் படிக்காமல் விடலாம் என்று ஒரு சலுகை அளிக்கலாம்.

* அல்லது சில பாடங்களைக் குறைத்து அறிவிக்கலாம்.

* காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். வருகைப் பதிவேட்டின்படியும் கொஞ்சம் சலுகை மதிப்பெண் தரலாம். இதன்மூலம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினம் என்கிற நிலை மாறும். அதே சமயம் ஒட்டுமொத்தமாக எதோ ஒரு தரவரிசை கிடைக்கும். அதை வைத்து மேற்கொண்டு படிக்கப் போகும் துறையைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் உதவும்.

* பள்ளி ஆரம்பிப்பதற்கு பத்து நாள் முன்பாகக் கூட தேர்வுகளை நடத்தலாம். பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு போகும் மாணவர்களுக்குப் பாடச் சுமையைக் குறைத்து, பள்ளி நடக்காத இந்தக் காலத்தைச் சரி செய்யலாம். அதேபோல் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் செய்யவேண்டும்.

* எந்தப் பள்ளி மாணவரும் பக்கத்தில் இருக்கும் எந்தப் பள்ளியிலும் (தமிழகம் முழுக்க) தேர்வு எழுத அனுமதிக்கலாம். தேர்வு எழுத பள்ளியைத் தேர்ந்தெடுப்பது மாணவர்கள் உரிமை என்றாக்கலாம்.

* சான்றிதழில் கொரோனா காலம் என்று அச்சிட்டுத் தரலாம்.

* இந்த வருடம் படிக்கப் போகும் மாணவர்களுக்கான தேர்வு தொடர்பான அறிவிப்புகளையும் இப்போதே வெளியிடவேண்டும். பாடத்திட்டத்தை மறுவரையறை செய்யலாம்.

Share

Comments Closed