பிரியாணி – மலையாளத் திரைப்படம்

18+

பிரியாணி (ம) – இதைப் பற்றி எழுதாமல் கடப்பது நல்லது என்று நினைத்தேன். ஆனாலும் எழுதுகிறேன்.

21+ திரைப்படம் என்று சொல்லலாம். எனவே குடும்பத்துடன் பார்க்கவே பார்க்காதீர்கள். இனியும் இதைப் பற்றிப் படிக்கவேண்டுமா என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். 🙂

மலையாளத் திரைப்படங்களைப் பற்றி எழுதும்போது ஏன் அந்தத் திரைப்படங்களில் ஹிந்து மதம் சித்தரிக்கப்படும் விதம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்று முன்பே சொல்லி இருக்கிறேன். ஒரே ஒரு காரணம்தான், தமிழைப் போல அங்கே கிறித்துவ இஸ்லாமிய மதங்களை விமர்சிக்கும் படங்கள் வராமல் இருப்பதில்லை. இந்தப் படம் மிகவும் துணிச்சலாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் படத்தில் எனக்கு ஒத்துக்கொள்ள முடியாத விஷயங்களும் உண்டு.

ஒரு இஸ்லாமியக் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் கதை. ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்குப் போய்விட்ட ஒரு பையனின் குடும்பம் கேரளாவில் சந்திக்கும் பிரச்சினையே கதை. படம் அந்தப் பையனின் அக்காவின் பார்வையில் நகர்கிறது. அவளே கதாநாயகி. தன் மகன் வருவான் என்று காத்திருக்கும் பைத்தியக்கார அம்மா, தன் மகன் இந்தியாவின் தீவிரவாத வேட்டையில் இறந்துவிட்டான் என்று தெரிந்ததும் உயிரை விடுகிறாள். விவாகரத்து பெற்ற அக்கா பாலியல் தொழிலாளியாகிறாள். பின்பு தன் ஊர்க்காரர்களுக்கு பிரியாணி செய்து தருகிறாள். ஊரில் அனைவருக்கும் பிரியாணி செய்து போட வேண்டும் என்பது அம்மாவின் கனவு. ஆனால் இவள் செய்யும் பிரியாணி, ஐயோ, உவ்வேக் ரக கொடுமை.

படத்தின் கதைக்கும் நிகழும் சம்பவங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. வேண்டுமென்றே கதாநாயகியை உடலுறவில் முழுமை பெறாதவளாகக் காண்பிக்கிறார்கள். அவள் ஏன் பாலியல் தொழிலாளியாக வேண்டும் என்பதற்கு ஒரு காரணமும் இல்லை. அடங்காத உடல் வேட்கை என்றால் படத்தின் கதைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று குழப்புகிறது. பின்பு எல்லாம் விட்டு, குழந்தை உண்டாக, காவல்துறையின் பயங்கரத்தால் அந்த குழந்தையும் கருவிலேயே கலைகிறது.

இந்தக் கொடுமையை எல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால், பல முக்கியமான பதிவுகள் உள்ளன.

ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படும் ஏஜெண்ட், இந்தக் காலத்தில் சாதாரணமாக இருந்தாலே சந்தேகப்படுவார்கள் என்கிறான். ஆனால் அவனே ஐ எஸ் அமைப்புக்கு ஏஜெண்ட்டாக இருக்கிறான்.

ஐ எஸ் அமைப்புக்குப் பையன் சென்றுவிட்டான் என்று தெரிந்ததும் ஜமாத் அமைப்பு அவர்களது குடும்பத்தை தள்ளி வைக்கிறது. மறைமுகமாக உதவுவதெல்லாம் இல்லை.

ஐ எஸ் ஏஜெண்ட்டே அந்தப் பெண்ணுக்கு, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு ஜமாத் மூலம் உதவ ஏற்பாடு செய்துவிட்டு, தலைமறைவாகிறான்.

தன் மனைவி ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பெண் என்று தெரிந்ததும் கணவன் முத்தலாக் சொல்கிறான்.

இப்படிப் பல யதார்த்தமான பதிவுகள் உள்ளன.

ஆனால் விவாகரத்தான கணவனுடன் அவள் மீண்டும் உறவு கொள்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. அவனோ இவள் எதிர்பார்க்கும் அளவுக்கானவன் அல்ல. பின்னர் ஏன்? ஒரு பழிதீர்த்தல் என்றா புரிந்துகொள்வது? என்ன கொடுமை என்றால், நெளிய வைக்கும் பழி தீர்த்தலுக்குப் பிறகு இந்த உறவு வருகிறது!

பழிதீர்க்கும் பிரியாணிக்கு போலிஸை, தன்னை அவமானப்படுத்தியவர்களை அழைத்தது சரி. ஏன் தனக்கு உதவிய பத்திரிகையாளரையும் அழைக்கவேண்டும்? ஏன் தான் விரும்பியே உறவு கொண்ட ஒருவனை அழைக்கவேண்டும்? இப்படி பல கேள்விகள்.

ஆனாலும் ஏன் முக்கியமான படமாகிறது? ஒன்று, யாரும் தொடத் தயங்கும் விஷயத்தை தைரியமாக எடுத்திருப்பதால். உலகத் திரைப்படங்களுக்கு இணையான காட்சி அமைப்புகள் படம் தொடக்கம் முதல் இறுதி வரை தொய்வே இல்லாமல் வருவதால். கதாநாயகியாக நடிக்கும் நடிகையின் புதிர் நிறைந்த முகபாவத்தால். உலகத் திரைப்படங்களைப் போலவே எந்த நொடியிலும் எப்படியும் நகரும் தன்மை கொண்டிருப்பதால். எவ்விதக் கட்டுக்களுக்குள்ளும் சிக்காததால். இப்படிப் பல ஆச்சரியங்கள் படம் நெடுக.

சென்சார் கத்தரிகளுக்குத் தப்பித்த பிரதி ஓடிடியில் கிடைக்கிறது என்று பார்த்தேன். சென்சார் கத்தரிகளுக்குத் தப்பிக்காத பிரதியில் எந்தக் காட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. படம் பார்ப்பவர்கள், முதல் காட்சியிலேயே 21+ காட்சிகளுக்குத் தயாராகுங்கள். எல்லா வகையிலும் இப்படி அதிர வைக்கும் ஒரு திரைப்படம், இதே பிரிவில் இதே உருவாக்கத்தில் உலகத் திரைப்படத்துக்கு இணையான ஒரு திரைப்படம், மலையாளத்தில் இதற்கு முன்பு வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

(இதற்கு முன்பு இன்னொரு மலையாளப் படம் பார்த்தேன். மூன்று வருடங்கள் இருக்கலாம். கணவனுக்கு நான்கு மனைவி என்றால் ஏன் ஒரு பெண்ணுக்கு நான்கு கணவன் இருக்கக் கூடாது என்று ஒரு பெண் கேள்வி கேட்பாள். அந்தப் படத்தின் பெயர் மறந்துவிட்டது. தெரிந்தவர்கள் சொல்லவும்.)

Share

Comments Closed