Archive for ஃபேஸ் புக் குறிப்புகள்

கமல் திருப்பித் தர மறுத்த விருது

கமல்ஹாசன் விருதைத் திருப்பிக் கொடுக்காதது அவர் உரிமை. உண்மையில் தன் நடிப்புக்காக தன் திறமைக்காக விருதை வென்றவர் அவர். லாபி செய்து விருதை வாங்கியவர் அல்ல. எனவே தன் திறமைக்காகத் தரப்பட்ட விருதை ஏன் திருப்பித் தரவேண்டும் என்று நினைப்பது சரியான ஒன்றே. சந்து பொந்துகளிலெல்லாம் தேடித் தேடி இவர் கருத்துரிமை மறுக்கப்பட்டுவிட்டது அவர் கருத்துரிமை மறுக்கப்பட்டுவிட்டது அதாக்கும் இதாக்கும் என்று சொல்பவர்கள், கமல்ஹாசனின் கருத்துரிமையை அங்கீகரிக்கும் போர்வையைத் தெளிவாகப் போர்த்திக்கொண்டு அவரை வசைபாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகப் பேசினால் மட்டுமே இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். எதிராகப் பேசினால் இப்படித்தான். சமீபத்தில் கருத்துரிமையைப் பற்றிய விவாதங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பதால், இவர்களால் வெளிப்படையாக கமல்ஹாசனின் கருத்துரிமையை நிராகரிக்க முடியவில்லை. இல்லையென்றால் விருதைத் திருப்பித் தரும் கமலின் கருத்துரிமையை நிராகரிக்கவும் தயங்கமாட்டார்கள்.

கருத்துரிமையைத் திருப்பித் தந்தவர்களே மோதியின் எதிர்ப்பாளர்கள் என்று தேவையற்ற ஒரு பிம்பத்தை இந்த கம்யூனிஸ்ட் கூட்டம் கட்டமைத்தது. அதை மேற்கொண்டு கொண்டுசென்று அப்படி திருப்பித் தராதவர்களெல்லாம் மோதியின் ஆதரவாளர்கள் என்றோ, நிதர்சனத்தைக் கண்டு பொங்காதவர்கள் என்றோ சொல்லத் தொடங்கியிருக்கிறது. பரதநாட்டியம் குச்சுப்பிடி கதகளி ஆடுபவர்கள்கூட விருதைத் திருப்பித் தந்துவிடவேண்டும். இல்லையென்றால் மோதியின் ஆதரவாளர்கள். இந்த காமெடியர்களின் ஆட்டம் தாங்கமுடியாததாக இருக்கிறது.

இந்த எதைப் பற்றியும் கவலைப்படாமல், விருதைத் திருப்பித் தரமாட்டேன் என்று சொன்ன கமல் பாராட்டுக்குரியவர். அவர் நிச்சயம் மோதியின் ஆதரவாளராக இருக்கமாட்டார். அப்படி இருந்தும் அவர் சொல்கிறார் என்றால், தன் திறமைமேல் அவருக்கும் இருக்கும் நம்பிக்கை ஒன்றைத் தவிர வேறு காரணங்கள் தோன்றவில்லை. பொதுவாழ்வில் சகிப்புத்தன்மை நாகரிகம் பற்றி தினமும் பொங்குபவர்கள், கமல் ராஜ் தாக்கரேவை சந்தித்ததை அதே நாகரிகம் கருதி இருக்கலாம் என்றுகூட யோசிக்கமாட்டார்கள். என்ன நடந்தது என்று தெரியாமல் உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். இதை மற்றவர்கள் செய்யும்போது பக்கம் பக்கமாக எழுதுவார்கள் என்பதுதான் இதிலுள்ள முரண்.

விருதைத் திருப்பித் தர மறுத்த கமல் (நாளை மோதியைப் பற்றி இவர் எப்படி பேசுவார் என்று எனக்குத் தெரியும் என்றபோதிலும்) பாராட்டுக்குரியவர்.

Share

இளையராஜாவின் தேசபக்திப் பாடல்கள்

இளையராஜா தேசபக்திப் பாடல்களைப் போட்டதில்லை என்று ஃபேஸ்புக்கில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதையே நினைத்துக்கொண்டிருந்ததில் சிக்கிய பாடல்கள். இவை போக எனக்குத் தெரியாதவை, நான் மறந்தவை எத்தனையோ. இதற்குப் பின்னும் அது இந்தப் பாடல் போல இல்லை, அந்தப் பாடல் போல இல்லை என்றே சொல்லப் போகிறார்கள். பின்னால் பயன்படும் என்ற நோக்கில் அதை இங்கே சேமித்து வைக்கிறேன்.

என்னவோ தேடிப் போய் பல பாடல்களைக் கேட்டபோது உண்மையிலேயே அசந்து நின்றேன். இப்படிப்பட்ட ஒரு கலைஞனை போகிற போக்கில் அவமதித்துச் செல்வது வேறு எங்கேயும் நடக்காது என்றே நினைக்கிறேன்.

நான் பட்டியலிட்டிருக்கும் பாடல்களில் சில நேரடியாக தேசபக்திப் பாடல்கள் வகையில் வருபவை அல்ல. ஆனால் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் வரும் நல்லதோர் வீணை தேசபக்திப் பாடலென்றால் இவையும் அப்படியே.

சொர்க்கமே என்றாலும், உலகம் இப்போ எங்கோ போகுது (இரண்டுமே இளையராஜா இசை) – இவையும் ஒருவகையில் தேசபக்திப் பாடல்களே. அப்படியென்றால் கீழே உள்ளவையும்தான்.

காந்தி தேசமே காவல் இல்லையா – நான் சிவப்பு மனிதன்

 

மனதில் உறுதி வேண்டும் – சிந்துபைரவி

 

செந்தமிழ் நாடென்னும் போதினிலே – காமராஜர்

 

நண்பா நண்பா – தேசிய கீதம்

 

அண்ணல் காந்தி – தேசிய கீதம்

 

என் கனவினைக் கேள் நண்பா – தேசிய கீதம்

 

பாரத சமுதாயம் வாழ்கவே – பாரதி

 

 

கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் – பாரதி

 

வந்தே மாதம் ஜெய வந்தே மாதரம் – பாரதி

 

நல்லதோர் வீணை செய்தே அதை நலம்கெட – பாரதி

 

தம்பி நீ நிமிர்ந்து பாரடா – என் உயிர்த்தோழன்

இந்த நாடு இருக்கிற – மக்கள் ஆட்சி

மனிதா மனிதா இனி உன் விழிகள் – கண் சிவந்தால் மண் சிவக்கும்

 

போராடடா ஒரு வாளேந்தடா – அலை ஓசை

கத்துக்கணும் கத்துக்கணும் ஒண்ணாயிருக்க – ஒண்ணா இருக்க கத்துக்கணும்

காலமாற்றத்தைக் கணக்கில் கொண்டால், நாட்டுப்பற்று என்பது நம் நாட்டில் என்ன இல்லை என்ற விரக்தியாக வெளிப்படுவதைப் பார்க்கலாம். அந்த வகையில் ’ஏங்கிடும் ஏழையின் கூக்குரல்தான் இங்கு தேசியகீதமடா’ பாடலும் ‘நஞ்சையுண்டு புஞ்சையுண்டு’ பாடலும் ‘உன்னால் முடியும் தம்பி தம்பி’ பாடலும் கூட தேசபக்திப் பாடல்தான்!

கடைசியாக: இப்படியெல்லாம் ஒருவர் என்ன பாட்டு போட்டிருக்கிறார், என்ன போடவில்லை என்று பார்ப்பதெல்லாம் சரியான செயலில்லை. ஒரு கருத்தியல்வாதிக்கு இது பொருந்தி வரலாம். நிச்சயம் கலைஞனுக்குப் பொருந்தி வராது. ஒரு கலைஞன் வெளிப்படையாக மறுத்தவற்றையே நாம் பொருட்படுத்தவேண்டும்.

எத்தனையோ ராஜா ரசிகர்கள் இதைவிட அதிகமான பாடல்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களெல்லாம் என்னை மன்னிக்க. 🙂

Share

யாகூப் மேமன் – தூக்குத் தண்டனை

உண்மையில் யாகூப் மேமன், கஸாப் என்று யார் தூக்கில் தொங்கினாலும் உள்ளே சின்ன பதற்றமும் வருத்தமும் வரத்தான் செய்கிறது.அதிலும் அவர்களது கடைசி நிமிடங்களை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. அவர்களது உறவினர்கள் மனைவி மகன் மகள் என எல்லாரையும் நினைத்துப் பார்த்தால் ஏற்படும் சோகம் அளவில்லாததுதான்.

ஆனாலும் மிக அரிதான வழக்குகளில் தூக்கு என்னும் இந்திய நிலைப்பாட்டுக்கு என் ஆதரவு என்றும் உண்டு. அதிலும் இந்தியா போல தெருவுக்கு நூறு ‘முற்போக்காளர்கள்’ திரியும் நாட்டில், இந்த ஒரு சட்டம் இல்லாமல் போனால் இங்கே தீவிரவாதிகளெல்லாம் தியாகியாகிவிடுவார்கள்.

இந்திய மனசாட்சிக்காக (மனுசாட்சியாம்!) உச்சநீதி மன்றம் இவர்களைத் தூக்கிலிடுகிறது என்ற மொன்னை வாதத்தையெல்லாம் நான் நம்பவில்லை. கடைசி வரை இவர்களுக்கு வாய்ப்புத் தரப்பட்டது. மேலும் இந்திய மனசாட்சியை நிறைப்படுத்த சுப்ரீம் கோர்ட் செயல்பட எக்காரணமும் இல்லை. இப்படி பேசி பேசித்தான் எல்லாவற்றின் மேலும் இந்த முற்போக்காளர்கள் அவநம்பிக்கையையை விதைத்தவண்ணம் உள்ளார்கள். ஃபேஸ்புக்கில் மட்டும்தான் இது எடுபடுகிறது என்பது இப்போதைக்கான ஆறுதல். இத்தனைக்கும் யாகூப்மேமன் 23 வருடங்களுக்குப் பின்னர்தான் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். ஒருவகையில் இந்த அளவுக்கான காலம் கழிந்த தண்டனை ஒரு பின்னடைவுதான். இதைத்தான் நீதிமன்றங்கள் சரி செய்ய முயலவேண்டும்.

யார் தூக்கிலிடப்பட்டாலும் அதை ஏற்கவில்லை என்பவர்கள், எல் டி டி ஈ, மாவோயிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ வரலாற்றில் கொன்று குவிக்கப்பட்டவர்களைப் பற்றிக் கண்டனங்களைப் பதிவு செய்துவிட்டு, அவர்களை நிராகரித்துவிட்டு, பின்னர் கொள்கைகளைப் பேசவேண்டும்.

தூக்குத் தண்டனை தேவைதான், ஆனால் யாகூப் மேமன் நிரபராதி என்பவர்கள் நிச்சயம் ஜோக்கர்கள்தான். அவர்களை நாம் பார்த்து சிரித்துவிட்டு நகர்வதே சரியானது.

தூக்குத் தண்டனை தேவை, ஆனால் யாகூப் மேனனுக்கு தூக்கு அவசியமில்லை, இப்படிச் சொல்வதால் யாகூப் மேமன் நிரபராதி என்றோ அப்பாவி என்றோ அர்த்தமில்லை என்ற பி.ராமன் போன்ற கருத்து உடையவர்கள் மட்டுமே பொருட்படுத்தத் தக்கவர்கள். அவர்களுக்கு ஒரே பதில், நான் உச்ச நீதிமன்றத்தை நம்புகிறேன் என்பது மட்டுமே.

இந்திய வெகுஜன முஸ்லிம்கள், இந்திய வெகுஜன கிறித்துவ ஹிந்துக்களைப் போன்றவர்கள்தான். அவர்கள் என்றுமே இந்திய மனசாட்சியுடன் உள்ளவர்களே. ஆனால் யாகூப் மேமன் போன்றவர்கள் தீவிரவாதிகள். இந்த இரண்டு பிரிவுகளையும் ஒன்றாக்கி பேசுபவர்களே – அவர்கள் எத்தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் – கடும் கண்டனத்துக்குரியவர்கள். இவர்களைத்தான் முதலில் கண்டுகொள்ளவேண்டும்.

Share

ஈவெ ராமசாமி நாயக்கரும் ஆழம் இதழின் நட்டநடு செண்டர் நிலையும்

ஆழம் இதழ் ஈவெரா சிறப்பு இதழாக வெளிவந்திருக்கிறது (என்று நினைக்கிறேன்!). பெரியார் அன்றும் இன்றும் என்று அட்டையில் உள்ளது. 

ஈவெராவுக்கு ஆதரவாக (அல்லது எதிர்க்காமல் விமர்சனப் பார்வையுடன், செல்லமாகக் குட்டி தட்டி கட்டித் தழுவி!) எழுதியிருப்பவர்கள்:
 
அ.குமரேசன் – 12 பக்கங்கள்
வழக்கறிஞர் அருள்மொழி – 12 பக்கங்கள்
மருதன் – 12 பக்கங்கள்
ராமசந்திர குஹா – 2 பக்கங்கள்
 
மொத்தம்: 38 பக்கங்கள்
 
ஈவெராவுக்கு எதிராக, அதிலும் மயிலாப்பூர் பூணூல் அறுப்பை முன்வைத்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக எஸ் வி சேகர் சொன்னவை:
 
எஸ்.வி.சேகர் – 4 பக்கங்களில் உள்ளது.
 
மொத்தமே 4 பக்கங்கள்தான்!
 
ராமசந்திர குஹா எழுதியவற்றில் இருந்து 2 பக்கம் எடுத்து போட்டதுபோல, ஈவெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கத்தில் இருந்து ஒரு 12 பக்கம் எடுத்துப் போட்டிருக்கலாம். சார்பு இருக்கவேண்டியதுதான். அது எதிர்க்கருத்து என்ற ஒன்றே இல்லை என்ற பாவனையில் இருக்கக்கூடாது.
 
–பிரசன்னா
Share

WCC 2015

A world cup match for India without Sachin after 1987. 🙁 I miss #Sachin.

சச்சின் 16 வயதில் அப்துல் காதிர் பந்தை ஏறி அடித்தபோது எனக்கு 14 வயது. அன்றுமுதல் பெரும்பாலான சச்சின் ஆட்டங்களைப் பார்த்தேன். சச்சினுடனேயே வளர்ந்தேன். சச்சினின் முதல் நூறு ரன்களுக்காக சச்சினைவிட அதிகம் காத்திருந்தேன். சச்சின் அவுட் ஆனால் ஸ்கூல்/காலேஜ்/வேலைக்குப் போகலாம் என்று காத்திருப்பேன். நியூசிலாந்துக்கு எதிராக முதன் முதலில் முதல் ஆட்டக்காரராக களமிறங்கி பொளந்துகட்டியபோது சந்தேகமே இல்லாமல் ஒரு உலக வரலாறு எழுதப்படவிருக்கிறது என்று உணர்ந்தேன். கிரிக்கெட்டின் மையமே சச்சின்தான் என்பதில் எந்த ஐயமும் எனக்கு இருந்ததில்லை. 200 ரன்கள் எடுத்தபோது நாம் பார்த்தால் அவுட்டாகிவிடுவாரோ என்று பயந்து அலுவலகத்தில் நகம் கடித்துக் காத்திருந்தேன். உலகக் கோப்பையை சச்சின் தொடுவாரா என்றெல்லாம் கவலைப்பட்டதே இல்லை. ஏனென்றால் பெரும்பாலான உலகக் கோப்பை போட்டிகளில் சச்சினின் ஆட்டம் பிரமாதமாகவே இருக்கும். 

இன்று அந்த சச்சின் இல்லாமல் முதல் உலக்கோப்பை ஆட்டம் இந்தியாவுக்கு, 1987க்குப் பிறகு. என்னவோ அந்த ஆர்வமும் படபடப்பும் பயமும் வெறியும் வரமறுக்கிறது. அடுத்த தலைமுறைக்கும் இப்படித்தானா என்று தெரியவில்லை.

ஐ மிஸ் யூ சச்சின்.

Share

இந்திரா பார்த்தசாரதியின் பக்குவம் சிறுகதை குறித்து

இந்திரா பார்த்தசாரதியின் சமீபத்திய கல்கி சிறுகதையில் (பக்குவம்) வாசிக்க ஒன்றுமில்லை. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள்கூட இக்கதையைவிட மேம்பட்ட தரத்தில் இருக்கும். வெற்றுப் பேச்சு, மேம்போக்கான பார்வை, ஒற்றைப்படத்தன்மை, எதிலும் நுணுக்கமாக ஆழமாகச் செல்லாமல் ஒரு பிரச்சினையின் பல்வேறு முகங்களை ஆராயாமல் எழுதுவது போன்ற அவரது வழக்கமான நாவல்களும் சிறுகதைகளும் போல, அவற்றின் இன்னொரு வலுவற்ற நீட்சியே கல்கியில் வெளியாகியிருக்கும் அவரது சிறுகதை. படிக்காமல் இன்புறவும்.

கதையை வாசிக்க இங்கே செல்லவும்.

Share

மாதொரு பாகன் எரிப்பு – கண்டனம்

மாதொரு பாகனுக்கு தடை, புத்தக எரிப்பு எல்லாம் எரிச்சல் தரக்கூடியது. ஜனநாயகத்தன்மை அற்றது. ஆனால் இதை மைலேஜாக எடுத்துக்கொண்டு பலர் தங்களுக்கு புனிதர் இமேஜ் தேடிக்கொள்கிறார்கள். யாரோ 50 பேர் செய்த கலாட்டா ஒட்டுமொத்த ஹிந்துத்துவ இமேஜ் என்றாக்கப்படுகிறது. இதுதான் ஹிந்துத்துவம் என்ற கொள்கை இன்று இவர்களை வைத்திருக்கும் இடம். எங்கே ஹிந்துத்துவம் இன்னும் போய்ச் சேராத ஹிந்துக்களைக் கண்டடைந்துவிடுமோ என்னும் பதற்றம். மோடிக்கும் இப்படி பதறினார்கள். மோடி பிரதமரானார். ஹிந்துத்துவவாதிகள் அமைதியாக இருந்தால் எதிர்ப்பாளர்களே ஹிந்துத்துவத்தை வளர்த்துத் தருவார்கள் இவர்கள். அதில்லாமல் இப்படி புத்தக எரிப்பு, கோட்சே சிலை என்னும் பைத்தியக்காரத்தனத்தைச் செய்துகொண்டிருந்தால் அந்நியப்பட்டுப் போவார்கள். உண்மையில் ஹிந்துத்துவவாதிகளில் அட்ரஸ் இல்லாதவர்களே இதைச் சொல்கிறார்கள். இதை மீடியா பரப்பி ஒருவித மாயையை உருவாக்குகிறது. இதை ஹிந்துத்துவர்கள் உணர்ந்துகொண்டு செயல்படவேண்டும்.

ஔரங்கசீப் பற்றிய கண்காட்சி தடை செய்யப்பட்டபோது அமைதி காத்தவர்களே இன்று மாதொருபாகனுக்கு கொடி பிடிக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஜனநாயகம் வேண்டுபவர்கள் இரண்டையும் எதிர்ப்பவர்களாக இருக்கவேண்டும். மாதொரு பாகனை நான் ஆதரிக்கிறேன்.

Share

பதிப்புலகம் குறித்து (கிழக்கை முன்வைத்து) – பத்ரி சேஷாத்ரி எழுதியது

பத்ரி ஃபேஸ்புக்கில் எழுதியது இவை. ஒரு தேவை கருதி இங்கே சேமித்து வைக்கிறேன்.

 

(1) புத்தக விலையை, அதன் கட்டமைப்புக்கு ஆகும் செலவை வைத்தே தீர்மானிக்கிறேன். உலோகத்தை அடிப்படையாக வைத்து உதாரணம் சொல்கிறேன். முதலில் அந்தப் புத்தகத்தை 1,200 பிரதிகள் அச்சிட்டோம். அப்போது ஒரு புத்தகம் அடிக்க ஆன செலவு சுமார் 25 என்று ஞாபகம். அதைப்போல நான்கு மடங்கு எம்.ஆர்.பி. எனவே ரூ. 100/- எம்.ஆர்.பி. அந்தப் புத்தகத்தை விற்க ஆரம்பித்ததும், எதிர்பார்த்த வேகத்தைவிட அதிகமாக விற்றது. எனவே பேசாமல் 5,000 பிரதிகள் அச்சடித்துவிடலாமே என்று ஒரு ஐடியா தோன்றியது. அப்படி அடிக்கும்போது ஒரு பிரதிக்கு ஆகும் செலவு சுமார் ரூ. 15/- மட்டுமே. அதனை நான்கு மடங்காக்கி, ரூ. 60/- என்று வைக்காமல், ரூ. 50/- என்று வைத்து, ஊரெங்கும் பிளாஸ்டிக் பவுச்சில் தொங்கவிட்டு விற்க முயற்சி செய்தோம். கடைசியில் 4,500 விற்றுவிட்டது. கடைசி 500 விற்க வெகு தாமதமானது. அதன்பின் அந்தப் புத்தகத்தை அச்சிடவில்லை. இப்போது நான் அதனை அச்சிட நேர்ந்தால் மீண்டும் ரூ. 100/- அல்லது ரூ. 125/- என்று வைத்து விற்பேன். ஒரு லட்சம் பிரதிகள் சீராக மாதம் 10,000 என்று போகும் என்றால் ரூ. 40 அல்லது ரூ. 50 என்று வைத்து விற்பேன். இதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

(2) புத்தகக் கட்டுமான விலையைப் போல எவ்வளவு மடங்கு வைத்து புத்தகங்களை விற்பது? 3 மடங்கு, 4 மட்னக்கு, 5 மடங்கு? இந்த மூன்றையும் நான் பின்பற்றியுள்ளேன். ஏன் இந்தக் கணக்கு? நாங்கள் எங்கள் சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளுக்கு புத்தக விலையில் 40% டிஸ்கவுண்ட் தருகிறோம். அவர்கள் எங்கள் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு 35%-மும், கடைகளுக்கு 30 அல்லது 35%-மும் கொடுக்கிறார்கள். எங்களைப் பொருத்தமட்டில், எல்லாப் புத்தகத்துக்கும் 40% எங்கள் கையை விட்டுப் போய்விடுகிறது. அது டிஸ்ட்ரிபூஷன் சானலுக்குப் போகும் தொகை. அடுத்து, 10% எழுத்தாளர் ராயல்டி. தாமதமானாலும் இன்றுவரை மிகச் சரியாகக் கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறோம். ஆக எம்.ஆர்.பியில் 50% சானலுக்கும் ஆசிரியருக்கும். மீதமுள்ள 50%-த்தில், (நான்கு மடங்கு வைத்தால்) 25% கட்டுமானத்துக்கு, 25% நிறுவனத்துக்கு. இந்த 25%-ல் வாடகை, சம்பளம் (எங்களிடம் 70 பேர் வேலை செய்கிறார்கள் – 20 பேர் சேல்ஸ், 8 பேர் எடிட்டோரியல், அட்மின், மார்க்கெட்டிங், வேர்ஹவுஸ் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள் – இவர்கள் அனைவருக்கும் தலையே போனாலும் ஒன்றாம் தேதிக்கு முதல் தேதியிலேயே சம்பளம் கொடுத்துவிடுகிறேன், பி.எஃப், இ.எஸ்.ஐ, கிராஜுவிட்டி உண்டு), நிறுவனத்தை நடத்த வாங்கும் கடனுக்கான வட்டி, இதெல்லாம் போக கையில் ஒன்றும் எஞ்சுவதில்லை. இதில் முதலீட்டாளர்களுக்குக் கொடுக்க ஒன்றும் இல்லை.

இதனால்தான் ஐந்து மடங்கு விலை வைக்கலாம் என்று யோசித்தேன். அப்படிச் செய்தால் எங்கள் பங்காக 30% நிற்கும். ஆனால் அதற்கு சேல்ஸ் டீமிடமிருந்து எதிர்ப்பு. சில புத்தகங்கள் போகும் வேகத்தை வைத்து, மீண்டும் நான்கு மடங்கு என்று வந்துவிட்டோம்.

(3) எங்கள் தயாரிப்புச் செலவு அதிகம். எனவே எம்.ஆர்.பி அதனோடு சேர்த்து மடங்காக்குதலில் அதிகரிக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் பத்தாண்டுகளாக புத்தகத்தை உருவாக்கிவிட்டு, சொர்ந்துபோய் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் புத்தக உருவாக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். குவாலிட்டி கண்ட்ரோல் என்றால் என்னவென்றே தெரியாத நிலைதான் சென்னை குடிசைத் தொழில் அச்சகங்களில். நாங்களே பேப்பர் வாங்கி, நாங்களே பத்து பிரிண்டிங் பிரெஸ்ஸில் பிரிண்ட் செய்து, நாங்களே எட்டு பைண்டிங் இடங்களில் போய் பைண்டிங் செய்து எடுத்து வந்தால் ஒரே செட்டில் உள்ள பத்து புத்தகங்களும் பல்வேறு உயரங்களில் இருக்கும், அச்சு கோணல் மாணலாக இருக்கும்., பைண்டிங்கெல்லாம் அப்படித்தான் சார் வரும் என்று ஒரே போடாகப் போடுவார்கள்.

இப்போது ஒட்டுமொத்தமாக மும்பையில் ரெப்ரோ அல்லது மங்களூரில் மணிபாலில் கொடுத்துச் செய்கிறோம். அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுக்கிறோம்.

ஏன், மற்ற நிறுவனங்கள் மிக அற்புதமாகப் புத்தகங்களைக் கொண்டுவரவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஒருவேளை அவர்களிடம் இருக்கும் சீக்ரெட் சாஸ் என்னிடம் இல்லை. அவர்கள் மாதம் அச்சடிக்கும் புத்தக எண்ணிக்கைக்கும் நான் அச்சடித்து விற்கும் புத்தக எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்து ஃபேஸ்புக்கில் சண்டை போட நான் விரும்பவில்லை.

(4) இறுதியாக, நாங்கள் சானலுக்குத் தரும் டிஸ்கவுண்ட் அதிகம். வானதியெல்லாம் 25%-க்கு மேல் தரமாட்டார்கள். சிலர் 30, சிலர் 35. நாங்கள் 40 தரக் காரணம் உள்ளது. ஒரு வலைப்பின்னலை உருவாக்கியிருக்கிறோம். அனைவரும் பணம் சம்பாதித்தால்தான் இந்த நெட்வொர்க்கில் இருக்க விரும்புவார்கள். புஸ்தகத்தைப் பரவலாக விற்பனை செய்ய முயற்சி எடுப்பார்கள். அதனால்.

இப்போது எக்ஸைல் விலைக்கு வருவோம். நேரடியாக கஸ்டமருக்கு விற்பதால், 40% டிஸ்கவுண்ட் போகிறது. எனவே நேரடியாக எந்தப் புத்தகத்தை பதிப்பகத்திடம் சென்று வாங்கினாலும் டிஸ்கவுண்ட் கொடுக்க வேண்டியதுதானே என்று கேட்காதீர்கள். டிஸ்கவுண்ட் கொடுக்க மாட்டோம். ஏனெனில் அது விற்பனை சானலின் வெறுப்பைச் சம்பாதிக்கிறது. அங்குதான் எங்கள் புத்தகங்களின் பெரும்பகுதி விற்பனையாகிறது. இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை 50% டிஸ்கவுண்டில் விற்க ஒப்புக்கொண்ட ஒரே காரணம் இதில் லாபம் உள்ளது என்பதற்காக அல்ல. சாரு கேட்டுக்கொண்டதற்காக மட்டுமே. இப்படி எல்லா எழுத்தாளர்களும் கேட்டால் எனக்குக் கட்டுப்படியாகாது.

ப்ரீ-ஆர்டரில் இருக்கும் வசதி காரணமாகவே இந்த டிஸ்கவுண்ட். மொத்தம் எத்தனை புத்தகம் அச்சிட வேண்டும் என்பது தெரிந்துவிடும். கையில் காசு முதலிலேயே வந்துவிடும்.

ஆனால் இதனை எல்லாப் புத்தகங்களுக்கும் செய்ய முடியாது. ஒருசிலருடைய புத்தகங்களுக்குத்தான் கணிசமான ப்ரீ-ஆர்டர் வர வாய்ப்புள்ளது.

ஆனாலும் லாபம் உண்டு, லாபம் உண்டு என்று நீங்கள் சொல்வதை நான் ஏற்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் கிழக்கு பதிப்பகத்துக்குத் துளிக்கூட லாபம் இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக நான் இதுகுறித்துப் பேசுவதில்லை. புலம்புவதில்லை. இப்போதும் இது புலம்பல் இல்லை. அச்சுப் புத்தக பிஸினஸின்மீதான என் ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது. வேறு பிசினஸில் இறங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. நன்றி. இதுதொடர்பான கேள்விகளுக்கு இங்கு மேற்கொண்டு நான் பதில் ஏதும் எழுதப்போவதில்லை.

 

தனியாக நீங்கள் புத்தகம் போட்டாலும் அதில் எழுத்துக்கு மேற்பட்ட உழைப்பு இருக்கிறது. அதற்கு நீங்கள் ஒரு விலை போடவேண்டும். எழுத்துக்கு ராயல்டி. மற்ற உழைப்புக்கு ஒரு கூலி. பின் கடனுக்கு வட்டி. எல்லாம் சேர்த்தால் உபயோகப்படாது என்பதால்தான் 100 ரூ. வைக்கவேண்டும். மாற்றுவழி, புத்தகங்கள் பல ஆயிரக் கணக்கில் விற்கவேண்டும் என்பதுதான். அது நிகழும்வரை நாம் அபத்தமாக அடித்துக்கொண்டிருக்கிறோம். அதைப் பற்றி யாராவது பேச விரும்பினால் நான் பேசத் தயார். இன்னமும் 1000 பிரதிகள் விற்பதிலேயே ஆயிரத்தெட்டு அக்கப்போர். அங்கே சேத்தன் பகத் ‘அசால்டாய்’ லட்சத்தைத் தாண்டி, பத்து லட்சத்தைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறார். அது… பிசினஸ். மற்றபடி, கலை, இலக்கியம் வளர்ப்போர் மட்டுமே சொந்தக் காசை அழித்து போண்டியாக்கி 1000 பிரதியை விற்க அல்லாடிக்கொண்டிருப்பார்கள். எனக்கு அதையெல்லாம் தொழிலாகச் செய்ய நாட்டமில்லை.

 

 

-பத்ரி சேஷாத்ரி

https://www.facebook.com/rasanaikkaaran/posts/1542645925977441?comment_id=1542651565976877&notif_t=like

Share