Archive for அரசியல்

நம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்

இது அப்துல்லாவின் பதிவு. இதைப் படித்துவிடுங்கள். முக நூலில் இல்லாதவர்களுக்காகவும் சேமிப்புக்காகவும் அப்துல்லா எழுதியதை இங்கே பதிகிறேன்.

ஏதாவது நல்ல நாள், கெட்டநாள் வந்துட்டா போதும். உடனே இந்த ஆர்.எஸ்.எஸ்.காரனுங்க எதுனா “நம்மில் எத்னி பேருக்கு தெரியும்” டைப் கதையை தூக்கிகிட்டு கிளம்பிருவானுங்க. இன்றைக்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்சியின் தந்தை எனப்படும் டாக்டர்.விக்ரம் சாராபாயின் பிறந்தநாள். காலையில் எனது ஸ்கூல் வாட்ஸ் அப் குரூப்பில் கீழ் காணும் செய்தி வந்தது!

————————————-+———————-+—————

திமுக விட்ட ராக்கெட்

விண்வெளியில் ராக்கெட் ஏவ ஆகும் எரிபொருள் செலவு பூமத்திய ரேகை அருகில் செல்ல செல்ல குறையும். கிழக்கு கடற்கரையில் இருந்து ஏவப்படும் ராக்கெட் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் மேலும் நேரடியாக கடலின் மேல் பறக்கும். இந்த காரணங்கள் தவிர புயல் பாதிப்பு அதிகம் இல்லாத காரணத்தால் ஆந்திராவை விட தென் தமிழ் நாடு ராக்கெட் ஏவுவதற்கு இந்தியாவில் சிறந்த இடம்.

பின் ஏன் இஸ்ரோ ஆந்திராவில் அமைக்கப்பட்டது? இது தமிழ் நாட்டிற்கு எதிராக சதியா?

விக்ரம் சாராபாய் மேல் சொன்ன காரணங்களுக்காக கன்யாகுமரி அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரும்புகிறார். தமிழக முதலமைச்சரைச் சந்திக்கக் காத்திருக்கிறார். முதல்வருக்கு முதுகுவலி. எனவே தனது அமைச்சரை அனுப்புகிறார். மப்பில் இருந்த அமைச்சர் ‘கைத்தாங்கலாக’ எடுத்து வரப்படுகிறார். (தாமதமாக) வந்தவர் வாய்குழறல் + ஒப்புக்கொள்ள முடியாத கடுமையான ‘எதிர்பார்ப்பு’களை முன்வைக்கிறார். சாராபாய் வெறுத்துத் திரும்புகிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்தில் உள்ள 23,000 ஏக்கர் தீவை இஸ்ரோவிற்கு அளிக்கிறது. விண்வெளித் தளம் அங்கு அமைகிறது.

அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை. ‘தூக்கி’ வரப்பட்ட தண்ணி பார்ட்டி அமைச்சர் மதியழகன்.

கண்டு கொள்ளுவோம் கழகங்களை

இன்று விக்ரம் சாராபாயின் நூறாவது பிறந்த நாள்.

————————————–+———————+—————-

இதுல காமெடி என்னன்னா ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 1971 இல் செப்டம்பர் மாதம்.

ஆனால் அறிஞர் அண்ணாவோ 1969 இலேயே இறந்து போனார். செத்து போன அண்ணாவை விக்ரம் சாராபாய் போயி சொர்கத்துல பார்க்க நினைச்சாரோ என்னவோ!!!

இதுல இன்னொரு காமெடி என்னன்னா.. கதை சொல்லப்பட்ட அன்றைய காலகட்டத்தில் மதியழகன் சபாநாயகராக இருந்தார். அமைச்சராக அல்ல! எந்தத் திட்டத்திற்கும் எவரும் சபாநாயகரைச் சந்திக்கவே மாட்டார்கள்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பி.ஜே.பி பாய்ஸ். அடுத்தவாட்டி கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாங்க 🙂

#நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்?

என்னவோ காலையில் கண்ணில் படவும் இது பொய்யாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுடனேயே அப்துல்லா இணையத்தில் தேடி இருக்கவேண்டும். 1971 என்ற வருடம் கண்ணில் பட்டதும், அண்ணாதுரை இறந்தது 1969 என்பது இவருக்கு மனப்பாடமாகத் தெரியும் என்பதாலும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

பொதுவாக அப்துல்லா இப்படி எழுதுபவர் அல்ல. நல்லவர். நண்பர். ஆனாலும் சரியான தகவலைச் சொல்லவேண்டும் என்பதற்காக இப்பதிவு.

அவர் ஷேர் செய்திருக்கும் கட்டுரை வலம் இதழில் வெளியானது.

ஆமருவி தேவநாதன் எதையும் வம்படியாகப் பரப்புபவர் அல்ல. அதோடு வலம் இதழ் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதாது. முடிந்த வரை இதில் கவனம் எடுத்தே செய்கிறோம். அப்படியும் சில பிழைகள் வருவதுண்டு என்றாலும், இதைப் போன்ற , இல்லாத ஒன்றை கட்டி எழுப்பும் வேலைகள் வரவே வராது.

இன்று மதியமே இதைப் போட நினைத்தேன். சரியான ஆதாரத்தோடு போடுவோம் என்பதற்காக இப்போது.

இவர் சொல்லி இருக்கும் கருத்து, நம்பி நாராயணன் எழுதிய நூலில் உள்ளது. நூலின் பெயர்: அவர் எழுதப் புகுந்தது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி. எனவே இந்த சின்ன விஷயத்தில் அவர் பொய் சொல்ல முகாந்திரமே இல்லை. அப்படியே அவர் சொன்னதில் ஏதேனும் தகவல் பிழைகள் இருப்பதாக திமுக நிரூபித்தால், அது தகவல் பிழை மட்டுமே ஒழிய, ஆர் எஸ் எஸ் புரட்டு அல்ல! நம்பி நாராயண் புத்தகத்தில் உள்ள அந்தப் பக்கங்களை ஸ்க்ரீன் ஷாட்டாக இணைத்திருக்கிறேன்.

அப்துல்லாவின் இடுகைக்கு 400+ லைக்குகள், 50+ ஷேர்கள். எனவே இப்பதிவையும் அதற்கு இணையாக வைரலாக்குங்கள். இல்லையென்றால் வழக்கம்போல திமுகவின் பொய்களே வரலாறாகும். அவர்கள் சொன்னதை கம்யூனிஸ்ட்டுகள் பரப்புவார்கள். அதை திகவினர் பரப்புவார்கள். பின்பு அதையே திமுகவினர் ஆதாரமாகக் காட்டுவார்கள். நான்கு சோனகிரிகள் தொலைக்காட்சிகளில் பேசித் திரிவார்கள். இப்படித்தான் வரலாற்றில் அவர்கள் நிற்கிறார்கள்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அப்துல்லா. 🙂

பின்குறிப்பு: பல நாள்களாகப் படிக்க நினைத்த புத்தகம். இதற்காகப் படிக்க ஆரம்பித்து நெருப்புப் போலப் பறக்கிறது. இதைத் தமிழில் கொண்டு வருபவர்கள் அழியாப் புகழ் பெறுவார்கள். அப்துல்லாக்கு நன்றி. 🙂

Share

காவிக் கொடியும் அம்பேத்கரும்

பாரதியாருக்கு இந்தியக் கொடியின் நிறங்களைப் பொருத்தியபோது தலைப்பாகைக்குக் காவி நிறம் வந்துவிட்டதாம். பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூல் அட்டையில் ஒரு பிரச்சினை! பாரதியாரின் குங்குமப் பொட்டை அழித்து படம் வரைந்தவர்கள்தான் வெட்கப்படவேண்டுமே ஒழிய, காவியை பாரதிக்குத் தந்தவர்கள் அல்ல. பாரதி சந்தேகமே இல்லாமல் காவிக்காரர்தான். காவி என்பது பாரதத்தின் நிறம். பாரதப் பண்பாட்டின் நிறம். வீரத்தின் நிறம். அர்ப்பணிப்பின் நிறம். சேவையின் நிறம். காவிக்கொடியே இந்தியாவின் கொடியாக இருக்கவேண்டும் என்ற ஹிந்து மகா சபையின் கோரிக்கையை அம்பேத்கர் ஆதரிப்பதாக உறுதி கூறினார் என்பது வரலாறு. பாரதியின் தலைப்பாகைக்குக் காவி நிறம் வந்தது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம். ஆனால் சரியாகவே நிகழ்ந்திருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே இப்படித் தற்செயலாக நிகழ்வது நல்ல அறிகுறி. 🙂

படம்: அம்பேத்கரை எஸ்.கே. போலே தலைமையில் சந்தித்து காவிக்கொடிக்கு ஆதரவு கேட்ட ஹிந்து மகா சபையினர்.

கட்டுரை: அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை, ஸ்வராஜ்யா இதழில். https://swarajyamag.com/politics/guha-is-wrong-rss-never-had-any-shade-of-doubt-in-hoisting-the-tricolour

Share

யாருக்கு வாக்களிப்பது – 2019 நாடாளுமன்றத் தேர்தல்

* சந்தேகமே இன்றி பாஜக கூட்டணிக்கே. இதில் எந்த மாற்றமும் தயக்கமும் தேவையில்லை. ஹிந்து ஆதரவாளர்களுக்கு, பாஜக ஆதரவாளர்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இது. இதில் மோடி மீது விமர்சனம், பாஜக மீது அதிருப்தி என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிச்சயம் பாஜக கூட்டணிக்கே வாக்களியுங்கள். அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என்று யார் நின்றாலும் அவர்களுக்கே வாக்களிக்கவேண்டியது ஹிந்துக்களின் கடமை.

* ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதா என்று பேசுபவர்கள் போலிகள். இதே போலிகள், இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் மத ரீதியாகப் பேசும்போது, வாக்களிக்கும்போது, அதை நடுநிலை என்று சொன்னவர்கள் என்பதை மறக்காதீர்கள். தங்கள் வேட்பாளரையே ஜாதி, மதம் பார்த்து நிற்க வைப்பவர்கள், ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள்.

* ஜாதிக் கட்சி இருக்கிறது, ஊழல் கட்சி இருக்கிறது என்றெல்லாம் யோசிக்காதீர்கள். இது கூட்டணிதான். சமரசம்தான். ஒரு சமரசத்தின் வழியாகவே இலக்கை அடைய முடியும் என்பதே அரசியல். சமரசம் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதும் வேறு வேறு. இப்போதைக்கு சமரசம். அதேசமயம் ஊழலுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை. இதைச் சாத்தியப்படுத்தினால் போதும்.

* எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது. ஹிந்து வாக்கு வங்கியாக ஒருமுகப்பட இன்னும் அதிக காலம் தேவைப்படும். அதன் முதல் படி இது. ஹிந்து வெறுப்பாளர்கள் இதை உணர்ந்துகொண்டுவிட்டார்கள். எனவேதான் ஹிந்துக்களின் மீது என்றுமில்லாத கரிசனத்தைக் காட்டுகிறார்கள். ஒரே ஒரு தடவை அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு வாக்களித்து ஹிந்து ஒற்றுமையைக் காண்பித்தால் போதும். எப்படி மற்ற மதங்களுக்கு தாஜா அரசியல் செய்கிறார்களோ அதை ஹிந்துக்களுக்கும் செய்வார்கள். தவற விடாதீர்கள் இந்த வாய்ப்பை.

* நம் எதிர்ப்பு இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மீதல்ல. அவர்களை மட்டும் தாஜா செய்யும் போலி மதச்சார்பின்மையின் மீதுதான். மூன்று மதங்களையும் ஒரே போல் ஆதரிக்கும், எதிர்க்கும் அரசியல் கட்சிகளிடம் நமக்குப் பிரச்சினையில்லை.

* சில ஹிந்துத்துவ ஆதரவாளர்கள், கொள்கை என்ற ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு, யதார்த்தத்தைக் கைவிட்டு, பாஜகவுக்கு வாக்களிக்காமல் நோட்டாவுக்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள். ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதற்கு வெட்கப்படவேண்டும். மோடியையும் பாஜகவையும் ஆட்சியில் அமர்த்துவதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது. அதேசமயம் ஆட்சியில் பாஜக இருக்கும்போது ஹிந்துத்துவர்கள் விமர்சனங்களைச் செய்யலாம். செய்யவேண்டும். பாஜக மீதான ஹிந்துத்துவர்களின் விமர்சனம் என்பது, மோடிக்கோ பாஜகவுக்கோ வாக்களிக்கக்கூடாது என்ற வகையில் இருக்கவே கூடாது. இத்தனை நாள் பட்ட கஷ்டத்தை ஒரே நொடியில் அர்த்தமற்றதாக்குவது இச்செயல்.

* ஒருவேளை நீங்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, எக்காரணம் கொண்டும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள். திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது. எனவே எக்காரணம் கொண்டும் திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்.

* அதிமுகவும் திமுகவும் வேறுபடும் முக்கியமான புள்ளி, திமுக என்பது கொள்கை ரீதியாகவே ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி. அக்கட்சியின் கூட்டணி (பாஜகவுடன் கூட்டணி வைத்த காலம் தவிர) எப்போதுமே ஹிந்துக்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறது. ஸ்டாலின் தனக்குத் தரப்பட்ட பொன்னான வாய்ப்பைப் புரிந்துகொள்ளாமல், கருணாநிதியைவிடக் கூடுதலாக ஹிந்துக்களை எதிர்க்கிறார். ஹிந்துக்கள் மீதான கொள்கை ரீதியான வெறுப்பைக் கொண்டிருக்கும் திமுக கூட்டணிக்குப் பாடம் புகட்ட நல்ல தருணம் இது.

* சுருக்கமாக, நிச்சயம் பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள் அல்லது எக்காரணம் கொண்டும் திமுக கூட்டணிக்குக் வாக்களிக்காதீர்கள். 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியை வெல்ல வைத்தால் தமிழகத்தைப் பீடித்திருக்கும் பல முன்முடிவுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கலாம்.

Share

கள நிலவரம் என்னும் கலவரம்

1996 தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மிகப்பெரிய தோல்வி கண்டது. வரலாறு காணாத தோல்வி அது. எதிர்பார்க்கப்பட்ட தோல்வியும் கூட. 1998ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்றே கருதினார்கள். ஒட்டுமொத்த தேர்தல் கணிப்புகளும் அதிமுகவுக்கு எதிராகவே இருந்தன. பல ஊடகங்கள் அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்லாது என்றே எழுதின. அதிமுகவுக்கு வாக்களிப்போம் என்று கூட மக்கள் சொல்ல கூச்சப்பட்ட நேரம் அது. ஆனால் அந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றியே ஜெயலலிதாவுக்கு மீட்சியாக அமைந்தது என்று சொன்னாலும் மிகையில்லை.

2006 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி வெல்லும் என்றே நான் கருதினேன். ஆனால் சிலர் நிச்சயம் அக்கூட்டணி தோற்கும் என்று சொன்னார்கள். நான் எப்படி பாஜக ஆதரவாளனோ, அப்படியே அந்தச் சிலர் திமுக ஆதரவாளர்கள். எனவே நான் அவர்கள் சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. அப்போதுதான் அந்த வார்த்தையை அவர்கள் சொன்னார்கள். கள நிலவரம்! எனக்குக் கள நிலவரம் எதுவும் தெரியவில்லை என்று அவர்கள் சொன்னதில் தவறேதுமில்லை. அதேசமயம் தங்களுக்குக் கள நிலவரத்தின் நாடி கச்சிதமாகத் தெரியும் என்றார்கள். தேர்தல் முடிவு நான் சொன்னபடி இருக்கவில்லை. அவர்கள் ஆரூடம் சொன்னபடித்தான் அமைந்தது.

2011 தேர்தலில் அதே சிலர் கள நிலவரத்தின்படி மீண்டும் திமுகவே வெல்லும் என்றார்கள். நான் நிச்சயம் அதிமுக வெல்லும் என்றேன். எனக்குக் கள நிலவரம் தெரியவில்லை என்று மீண்டும் சொன்னார்கள். கள நிலவரம் என்ற அந்த வார்த்தை எனக்குள் பெரிய கலவரத்தைக் கொண்டு வந்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டேன். தேர்தல் முடிவில் அதிமுக பெரும்பான்மை பெற்றது. 2006ல் கள நிலவரத்தைச் சொன்ன திமுக ஆதரவாளர்களின் கூற்றுப்படி அது தனிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை என்பது தனிக்கதை. திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றாலும், திமுக தனிப் பெரும்பான்மை பெறாத சிறுபான்மை அரசாகவே அமைந்தது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி நிச்சயம் வெல்ல வாய்ப்பில்லை என்று களநிலவரக்காரர்கள் சொன்னார்கள். நிச்சயம் மோடி வெல்வார் என்று நான் சொன்னேன். குறைந்தது 250 சீட்டுகள் வெல்லும் என்றும், கூடவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொன்னேன். ஆனால் கள நிலவரப்படி அப்படி இல்லை என்றார்கள். எல்லாக் கள நிலவரத்தையும் தவிடுபொடியாக்கி தேசிய ஜனநாயக் கூட்டணி 330 இடங்களுக்கு மேல் வென்று சாதனை படைத்தது.

2016ல் மீண்டும் அதிமுக கூட்டணி வெல்லும் என்று நான் சொன்னேன். மக்கள் நலக்கூட்டணி 7%க்கு மேல் வாக்குகளைப் பெறாது என்றும், அது ஒரு இடத்தில்கூட ஜெயிக்காது என்றும் சொன்னேன். ஆனால் கள நிலவரக்காரர்கள் அடித்துச் சொன்னார்கள். திமுகவே நிச்சயம் வெல்லும் என்றார்கள். என் மேல் மீண்டும் அதே கள நிலவரப் புகார். ஆனால் தொடர்ச்சியாக இரண்டு முறை வென்று, எம்ஜியாருக்குப் பின்னர் ஜெயலலிதா புதிய வரலாற்றைப் படைத்தார்.

இப்போது நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று நான் நம்புகிறேன். இப்போதும் அதே நண்பர்கள் கையில் களநிலவரக் குண்டாந்தடியுடன் வருகிறார்கள். தங்களது முந்தைய கள நிலவரங்கள் பிசுபிசுத்துப் போனதில் அவர்களுக்கு எந்தக் கேள்வியும் இல்லை. இந்தியாவெங்கும் கள நிலவரம் நிச்சயம் பாஜகவுக்கு எதிராக இருக்கிறது என்று கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்கிறார்கள். தேர்தல் முடிவின்போது களநிலவரம் புரிந்துவிடும்.

கள நிலவரம் என்பது ஒரு மாயை. அது யாருக்கு எப்படிப் பார்க்கப் பிடிக்கிறதோ அப்படி முகம் காட்டும். முடிவில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் நாங்கள் அன்றே கள நிலவரத்தைச் சொன்னோம் என்று பெருமை பட்டுக் கொள்வார்கள். தோற்றவர்களோ, ஒரு மாய அலை இருந்ததைக் கணிக்கமுடியவில்லை என்பார்கள்.

ஒவ்வொரு தேர்தல் கணிப்பிலும் இந்த கிரண்வுட் ரியாலிட்டி என்னும் கள நிலவரம் என்ற வார்த்தையை நீங்கள் காணலாம். அறிவியல் ரீதியாக நடத்தப்படுவதாகச் சொல்லிக்கொள்ளும் கணிப்புகள் தோற்கக் காரணம் என்ன? கள நிலவரம் என்ற சொல் பொய்த்துப் போவது ஏன்? இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் கணிப்புகளை ஓரளவுக்குத்தான் சொல்லமுடியும். அவை நிச்சயம் வெல்லும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தக் கணிப்புகள் ஏன் குறைபாடுள்ளது என்பதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு. இவர்கள் குறைபாடுகளை மறந்துவிட்டு, கணிப்புகளை மட்டும் நம்புவார்கள்.

உண்மையில் வாக்காளர்கள் தாங்கள் அளிக்கும் வாக்கின் உண்மைத்தன்மையை அப்படியே வெளிப்படையாகக் கணிப்புகளில் சொல்வதில்லை. முன்பெல்லாம் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குச்சாவடிக் கணிப்புகள் வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது இவையும் சரியாகக் கணிப்புகளைச் சொல்வதில்லை. காரணம், மக்கள் தங்கள் வாக்கைப் பற்றிய ரகசியத்தை வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை. காரணங்கள் பல இருக்கலாம். அதிமுகவுக்கு வாக்களித்தோம் என்று சொல்லக் கூச்சப்படலாம். பாஜகவுக்கு வாக்களித்ததைச் சொன்னால் மதவாதி என்ற முத்திரை கிடைக்கலாம் என நினைக்கலாம். ஜாதிக்கட்சிக்கு வாக்களித்ததைச் சொல்ல அஞ்சலாம். இப்படிப் பல காரணங்கள். எனவே கள நிலவரத்தை நம்பி மட்டுமே நாம் முடிவைக் கணித்துவிடமுடியாது. 1998ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் தமிழ்நாட்டு முடிவுகளே இதற்குச் சரியான உதாரணம்.

அதேசமயம் இந்தக் கணிப்புகள் சுவாரஸ்யமான விளையாட்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. இரண்டு மாதங்கள் ஊடகங்களுக்கு இவை பெரிய உற்சாகத்தையும் செய்திகளையும் தருகின்றன. மற்ற பொருளற்ற பயனற்ற விளையாட்டைப் போல இது இல்லாமல், பயனுள்ளதாக இருக்கிறது என்பதாலேயே, கள நிலவரத்தை ஒரு பொருட்படுத்தத்தக்க விளையாட்டாகக் கருதி விளையாடலாம்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 330 இடங்களை வெல்லும் என்று நினைக்கிறேன். அல்லது விரும்புகிறேன்! தமிழ்நாட்டில் என்ன ஆகும்?
அதிமுக கூட்டணி 15 இடங்கள் வரை வெல்லலாம். திமுக ஹிந்துக்களை மட்டுமே சீண்டுகிறது என்ற எண்ணம் இன்று பெரிய அளவில் பரவி இருக்கிறது. அது இன்னும் பொதுமக்கள் மத்தியில் கூடுதலாகப்‌ பரவி, ஹிந்து வாக்கு வங்கி என்பதன் முதற்படியை ஒருவேளை அடைந்தால் தேர்தல் முடிவின்போது திமுகவுக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கும்.

Share

செண்பகப் பெருமாளின் நேர்காணல் – யூதர்களின் ஏசுவும் பவுலின் கிறிஸ்துவும்

செண்பகப் பெருமாள் எழுதிய ‘யூதர்களின் ஏசுவும் பவுலின் கிறிஸ்துவம்’ புத்தகம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சனத்தையும் பெற்றது. என்னளவில் இந்தப் புத்தகம் கிறித்துவம் தொடர்பான பல விஷயங்களை மிகவும் எளிதாகவும் புரிந்துகொள்ளும்படியும் சொன்னது. கிறித்துவம் பற்றி அதிகம் தெரியாதவர்கள்கூட இந்தப் புத்தகத்தைப் புரிந்துகொண்டு, செண்பகப் பெருமாள் என்ன குற்றச்சாட்டை வைக்க வருகிறார் என்பதை உணரமுடியும். இதுவே புத்தகத்தின் பலம். ஒரு ஆசிரியர் கையைப் பிடித்து எழுதச் சொல்லிக் கொடுப்பது போல இப்புத்தகம் மெல்ல மெல்லப் படிப்படியாக பவுலின் கிறித்துவம் தொடர்பான கேள்விகளை முன்வைக்கிறது. புறஜாதியாருக்குமான கிறிஸ்துவாக ஏசு எப்போது மாற்றப்பட்டார் என்பதை செண்பகப் பெருமாள் மிகத் தெளிவாகச் சொல்கிறார்.

இப்புத்தகம் வந்தபோது யார் இதைப் படிக்கப் போகிறார்கள் என்பதே என் எண்ணமாக இருந்தது. ஆனால் புத்தகத்துக்கு இருந்த வரவேற்பு ஆச்சரியமானது.


மேலே உள்ள நேர்காணலில், இப்புத்தகத்தில் உள்ள விஷயங்களைத் தொட்டுப் பேசுகிறார் செண்பகப் பெருமாள். இப்புத்தகத்தை மேலும் புரிந்துகொள்ள இந்தப் பேட்டி உதவும். பத்ரி சேஷாத்ரியின் கேள்விகளுக்கு எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் செண்பகப் பெருமாள் பதில் சொல்லும் விதம், இத்துறையில் அவருக்குள்ள ஞானத்தையும் ஆர்வத்தையும் காட்டுகிறது.

செண்பகப் பெருமாள் ஹிந்துத்துவ ஆதரவாளர். ஒரு ஹிந்துத்துவ ஆதரவாளர் தனது எதிர்த்தரப்பை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தப் பேட்டி ஒரு முன்மாதிரி. ஹிந்துத்துவத் தரப்பு மட்டுமல்ல, தன் எதிர்த்தரப்பை எதிர்கொள்ளும் யாருக்குமேதான்.

Share

தினமலர் தேர்தல் களம்

தினமலர் தேர்தல் களத்தில் வெளியான கட்டுரைகள்:

நிரம்பாத வெற்றிடம் (கட்டுரை 1)

2019க்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்ட நிலையில் ஒட்டுமொத்த களமும் பரபரப்படைந்துள்ளது. முன்பெல்லாம் தேர்தல் நடக்கும் காலத்தில் மட்டுமே ஒருவிதப் படபடப்பு நிலவும். ஆனால், சமூக ஊடகங்கள் கோலோச்சும் காலம் இது. செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் முன்னெப்போதையுவிட மிகத் துரிதமாகச் செய்திகளைக் கொண்டு போகவேண்டிய கட்டாயத்தில் நிலவும் சூழல் இது. அதனால், தேர்தல் நடக்காதபோதும்கூட, எல்லா நாளுமே பரபரப்பாகவே கழிகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால் அது ஒரு திருவிழா மனப்பான்மையைக் கொண்டு வந்துவிடுகிறது. இப்போக்கினால் பலமும் உள்ளது, பலவீனமும் உள்ளது. பரபரப்பையும் கண்ணை மறைக்கும் செய்திக் குவியல்களையும் வெறுப்புச் செய்திகளையும் புறம் தள்ளிவைத்துவிட்டே தேர்தல் செய்திகளை அணுகவேண்டி உள்ளது. அதீதச் செய்திகளே சாபமாகிவிட்ட ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம்.

தமிழகத் தேர்தல் வரலாற்றில் இத்தேர்தல் மிகப் வித்தியாசமானது. கடந்த 30 வருடங்களாக தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானித்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் இத்தேர்தல் நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மௌனமானது ஆகப்பெரிய ஆச்சரியமே. இதனாலேயே மிகப்பெரிய ஒரு வெற்றிடம் நிலவியது. தமிழகத்தின் அரசியல் போக்கை மிக மோசமாக்கியவை இந்த இருபெரும் கட்சிகளே என்று நினைப்பவர்கள், இந்த வெற்றிடம் ஒரு ஆக்கபூர்வமான அரசியலைக் கொண்டு வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே வெற்றிடம் இப்போதும் நிலவுகிறது.

வெற்றிடத்தைப் போக்க, உறுதியான தலைவருடன் கூடிய வலுவான கட்சி ஒன்று வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தமிழகமெங்கும் நிறைந்துள்ளது. பழைய கட்சிகளின் புதிய பதிப்புகளை மக்கள் ஏற்கவில்லை. ஒரே கட்சி இரண்டாக நான்காக உடைந்து புதிய கட்சியாக மலரும்போது மக்கள் சலிப்பில் அவற்றை நிராகரிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அனைத்துப் பழைய கட்சிகளையும் உறுதியோடு எதிர்க்கும் வலிமையான கட்சி இன்று வரை முகிழவில்லை. இதனால் இத்தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் எப்படிச் சிதறும் என்பதைத் துல்லியமாகக் கணிக்கமுடியவில்லை.

இதுவரை தமிழகத் தேர்தல்களில் கட்சிகள் வாங்கிய வாக்குகளின் அடிப்படையில் ஓர் ஆய்வைச் செய்து எத்தனை இடங்களில் எந்த எந்தக் கட்சிகள் வெல்லக்கூடும் என்று சொல்வதே பொதுவான நடைமுறை. இதை ஒட்டியே வெற்றி தோல்வி அமையும் என்பது நம்பிக்கை. ஆனால் இத்தேர்தலில் அந்தக் கணக்குகள் எடுபட வாய்ப்பில்லை.

ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுகவின் உண்மையான பலம் என்ன என்று தெரியாது. அக்கட்சியின் மரபான வாக்குகளில் எத்தனை சதவீதத்தை தினகரன் பிரிப்பார் என்பதைக் கணிக்கமுடியாது. ஆர்.கே நகர் தேர்தலைப் போலவே தமிழகம் முழுக்க நடக்க வாய்ப்பே இல்லை. அதேசமயம் ஆர்.கே நகர் தேர்தல் தந்த அதிர்ச்சியையும் மொத்தமாகப் புறக்கணிக்க முடியாது. ஜெயலலிதாவின் ஒன்றிணைந்த அதிமுக பெற்ற வாக்குகளை, இன்றைய அதிமுகவும் தினகரனின் அமமுகவும் எப்படிப் பிரிக்கும் என்பதே இந்த இரண்டு கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது. இடையில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்த தீபாவை மக்கள் மறந்துவிட்டார்கள் என்பதால் அவரை விட்டுவிடலாம்.

அதிமுக இப்படி இருக்கும்போது, திமுக மிகவும் பலமாக இருந்திருந்தால் தேர்தலில் அக்கட்சி பெரிய வெற்றியைச் சுலபமாகப் பெற்றிருக்கும். தொடக்கத்தில் அப்படி ஒரு நிலை இருக்கத்தான் செய்தது. ஆனால் ரஜினியின் வரவு அதைக் கொஞ்சம் முதலில் அசைத்துப் பார்த்தது. ஸ்டாலினிக்கு நிம்மதி தரும்படியாக, ரஜினி எப்போது தேர்தலில் பங்கெடுக்கப் போகிறார் என்பது ரஜினிகே கூட தெரியாத நிலையில், திமுக வெல்லும் வாய்ப்பு அப்படியே தொடர்ந்தது. தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளே ஸ்டாலினிக்குப் பெரிய பின்னடைவைத் தருகின்றன. ஒருவகையில் திமுகவினர் பிறருக்குச் செய்தவை அவர்களுக்கே திரும்ப வருகின்றன என்றே சொல்லவேண்டும். எப்படியோ ஸ்டாலின் வலிமையற்ற ஒரு தலைவர் என்ற கருத்து திமுக அல்லாதவர்களிடம் வெற்றிகரமாகப் பரப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில் கருணாநிதி இருந்தபோது திமுக பெற்ற வாக்குகளைத் திரும்பப் பெற்றாலே பெரிய விஷயம். அப்படிக் கிடைக்கும் வாய்ப்பு ஓரளவுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது போதாது. கூடுதல் வாக்குகளை அதிமுகவிடம் இருந்து பிரிக்காமல் வெல்லமுடியாது. திமுகவின் வாக்குகள் குறைந்தாலும் குறையலாம் என்ற கணிப்பையும் ஒதுக்கிவிடமுடியாது. இப்படியான சிக்கலில் உள்ளது திமுக.

கூட்டணி மூலம் இப்பிரச்சினையைச் சமாளிக்கமுடியும் என்று இரண்டு கட்சிகளுமே புரிந்துகொண்டுள்ளன. அதனால்தான் கூட்டணிக்கு இத்தனை முயற்சி. இதுவரை கருணாநிதியும் ஜெயலலிதாவும் இறங்காத அளவுக்குக் கூட்டணிக்காக இரண்டு கட்சிகளும் இறங்கிப் போய்ப் பேசின. அதிலும் அதிமுக இனி இழக்க ஒன்றுமில்லை என்ற முடிவோடு விடாமல் சென்று கூட்டணிக்காகப் பேசியது. எப்போதும் கூட்டணிப் பேரத்தை முதலில் துவங்கும் திமுக, அதைச் சரியாகக் கோட்டை விட்டுவிடும். இம்முறையும் அதுவே நடந்தது. பழம் நழுவிப் பக்கத்து டம்ளர் பாலில் விழுந்துவிட்டது. இந்த ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தாங்கிக்கொள்ள முடியாத ஸ்டாலின், அதுவரை பாமகவிடம் திமுகவும் கூட்டணி பேசியது என்பதையெல்லாம் மறந்து, மிகக் கடுமையாக ராமதாஸைத் தாக்கிப் பேசினார். ஒரு அரசியல் தலைமை செய்யக்கூடாத தவறு இது. இதையே ஒரு படி மேலே போய், தேமுதிகவுக்கு துரைமுருகன் செய்ய, பிரேமலதா இன்னும் ஒரு பங்கு மேலே போய் தவறு செய்தார். கூட்டணித் தலைவர்களை எந்த எல்லையில் நிறுத்தவேண்டும் என்பதை ஜெயலலிதாவிடமிருந்து ஒவ்வொரு கட்சித் தலைமையும் பாடம் கற்றுக்கொள்வது நல்லது. கூட்டணிக்காக அதீதமாக ஒட்டிக்கொள்வது பிறகு வெட்டிக்கொள்வதும் எல்லாம் பழைய காலத்து வழி. கூட்டணி என்பதுகூட தன் கட்சியை வளர்க்கத்தான் என்ற நிதர்சனத்தை வெளிப்படையாகவே சொல்வதுதான் இன்றைய வழி. ஜெயலலிதா கூட்டணித் தலைவர்களை முடிந்தவரை அலட்சியம் செய்தார். அலட்சியம் செய்வதே ஜெயலலிதாவின் அணுகுமுறை. ஆனால் அவர்களோ மீண்டும் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்கள். ஜெயலலிதா அளவுக்கு அலட்சியமும் இன்றி, கருணாநிதி போல அளவுக்கு மீறிய நட்பாகவும் இன்றி, இரண்டுக்கும் இடையில் இருக்கமுடியும் என்பதை உணர்வது அனைத்துக் கட்சிகளுக்கும் நல்லது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருணாநிதிக்குச் செய்தது என்ன என்பதை நினைத்துப் பார்த்தால் இதை உணரலாம்.

விஜய்காந்த்தின் உடல்நிலை இன்றிருக்கும் நிலையில் அக்கட்சியின் செல்வாக்கு, முன்பு அக்கட்சி பெற்ற வாக்குகளுக்கு இணையாக இருக்கமுடியும் என்று சொல்லமுடியாது. குறைந்துவரும் தன் கட்சியின் செல்வாக்கை அக்கட்சி புரிந்துகொண்டாலும், விட்டுக்கொடுத்துப் போக அக்கட்சியின் செயல்தலைமையால் முடியவில்லை. இதனால் அக்கட்சிக்குப் பின்னடைவுதான் ஏற்படும். ஜெயலலிதா போல இருக்க நீங்கள் ஜெயலலிதாவாக இருக்கவேண்டும் என்பதை பிரேமலதா புரிந்துகொள்வது அக்கட்சியின் எதிர்காலத்துக்கு, அப்படி ஒன்று இருந்தால், நல்லது.

கமல்ஹாசன் கட்சி யாருக்கான மாற்று என்பது இதுவரை யாருக்கும் புரியவில்லை. அவரது நடவடிக்கைகளைப் பார்த்தால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 1% வாங்கு வாங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சியை நடத்துவதே அவரது நோக்கம் என்று தெரிகிறது. நல்லது செய்வதே நோக்கம், அதுவே கொள்கை என்பதையெல்லாம் திரைப்படங்களில் பார்த்துக் கை தட்டலாம். பொதுவில் அவை ஆழமற்ற பேச்சாகவே பார்க்கப்படும்.

அதிமுக கூட்டணியும் திமுக கூட்டணியும் ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், இத்தேர்தல், ஒட்டுமொத்த இந்தியத் தேர்தலைப் போலவே, இந்திய ஆதரவுக்கும் இந்திய எதிர்ப்புக்கும் இடையே நிகழ்வதாகவே நான் பார்க்கிறேன். திமுக நேரடியான இந்திய எதிர்ப்புக் கட்சி அல்ல. அதேசமயம் அக்கட்சியின் ஒட்டுமொத்த கூட்டணியின் தோற்றம், அது ஒரு இந்திய எதிர்ப்புக் கூட்டணி என்பதாகவே அர்த்தம் தருகிறது. வெகு நீண்ட காலமாகவே திமுக தேசிய நீரோட்டத்தில்தான் இருக்கிறது. என்றாலும், தொடர்ச்சியாக அது இந்திய எதிர்ப்பு மனோபாவமுள்ள கட்சிகளுடனேயே தன் தோழமையை அமைத்தும் வந்திருக்கிறது. இன்றைய நிலையில், காங்கிரஸ் கட்சிகூட, பாஜகவை எதிர்க்கும் வேகத்தில், இந்திய எதிர்ப்புக் கருத்துகளுக்கு ஆதரவு தருவது போலப் பேசுகிறது. இதனால், இக்கூட்டணியின் இந்த நிறத்தைத் தவிர்க்க முடியாது. உண்மையில் இகட்சிகள் இந்திய எதிர்ப்பில் நம்பிக்கை இல்லாதவையாக இருக்கலாம். ஆனால் மக்களின் பார்வை இருமைக்குள் சிக்கும்போது, ஒரு பக்கம் தேசிய நோக்கத்தை ஆதரிக்கும் கூட்டணியாக பாஜக கூட்டணியையும், அதை எதிர்க்கும் கூட்டணியாக காங்கிரஸ் கூட்டணியையும் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது.

தமிழ்நாட்டுத் தேர்தலைப் பொருத்தவரை, இதுவரை நடந்த விஷயங்கள் எல்லாம், தமிழ்நாட்டின் அரசியல் வெற்றிடம் இன்னும் அப்படியே உள்ளது என்பதையே காட்டுகிறது. இருபெரும் திராவிடக் கட்சிகளின் அதீத ஆதிக்கம் குறைவதும் ஒருவகையில் நல்லதுதான். ஏதேனும் ஒரு தேசியக் கட்சி இங்கே பலம் பெறவேண்டியதும் முக்கியம். அது பாஜகவாக இருப்பது நல்லது என்பது என் பார்வை. இத்தேர்தலின் முடிவு தெரிந்த பின்னர்தான், எதிர்காலத்திலாவது இது சாத்தியப்படுமா என்பது தெரியும்.

கூட்டணியை ஏற்பது (கட்டுரை 2)

ஜெயலலிதாவின் காலத்துக்கு முன்புவரை கூட்டணி என்பது, கூட்டணித் தலைவர்களுடனான நட்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி முதலில் ஏற்பட்டபோது, பிறகு ஏற்பட்டபோதும்கூட, அது பொருந்தக் கூட்டணி என்றே சொல்லப்பட்டது. அதிமுக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தபோது அது இயல்பான கூட்டணி என்று நம்பப்பட்டது. இன்று நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது.

கூட்டணிகள் மாறுவதும், கூட்டணி குறித்த கருத்துகள் மாறுவதும், மாநில சிறு கட்சிகள் ஓரளவுக்கு வாக்குகள் வாங்கத் தொடங்கியதில் இருந்து இயல்பாகிப் போகின. பாட்டாளி மக்கள் கட்சி ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு பிரதான கட்சியுடன் மாறி மாறி கூட்டணி வைத்தது. தொடர்ந்து வெற்றி முகத்திலும் இருந்தது. கூட்டணி மாறும்போது ஏற்படும் குரல் மாறுபாடுகளை மிக எளிதில் பாமக கடந்தது. என்ன காரணம்? வெற்றிக் கூட்டணியாக அவை அமைந்ததுதான்.

தோல்விக் கூட்டணியாக அமைந்தபோதெல்லாம், கூட்டணி மாறும்போது, மிகக் கடுமையான காரணங்களைத் தேடி தேடி பாமக சொல்ல வேண்டி வந்தது. மீண்டும் அடுத்த கூட்டணியின்போது அதைவிடக் கடுமையான சாடல்களை, காரணங்களைக் கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனாலேயே பதில் சொல்லமுடியாத சிக்கலிலும் மாட்டிக்கொண்டது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இதனை வேறு வகையில் கையாண்டார்கள்.

கருணாநிதி இதயத்தைப் பிழியும் வண்ணம் கட்டுரை எழுதுவார். கூட்டணி முறிந்தாலும், கொள்கை ரீதியாக அவர்களது நட்பு தேவை என்பதை கவனத்தில் வைத்திருப்பார். மீண்டும் தேர்தலில் அவர்களுடன் கூட்டணி எந்நேரத்திலும் ஏற்படக்கூடும் என்பது குறித்து அவருக்குச் சந்தேகமே இருந்தது இல்லை.

ஜெயலலிதா கையாண்டது இதற்கு முற்றிலும் எதிரான வகையில். கூட்டணிக்கும் முன்பும் பின்பும் கூட்டணியின் போதும் கூட்டணிக் கட்சிகளைப் பற்றி எதுவும் பேசமாட்டார். பாராட்டியோ திட்டியோ எதுவும் செய்யமாட்டார். அப்படி அவர் பாராட்டினால் அது கூட்டணிக் கட்சிகளுக்கு இனிய அதிர்ச்சி என்ற வகையில் மிக அபூர்வமாகவே இருக்கும். அதேபோல் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நட்பு என்ற ஒன்றே கிடையாது. கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டுமே என்பதை ஒவ்வொரு நொடியிலும் நிரூபித்தவண்ணம் இருப்பார். கூட்டணிக்கு வரும் கட்சிகளைப் பொதுவில் துதிபாடுவது, புகழுரைப்பது என்ற எதுவும் இருக்காது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின்போதே அதிமுகவின் தொகுதிப் பட்டியலை வெளியிடுவார். இதற்குப் பின்னும் கூட்டணிக் கட்சிகள் அவரிடம் கூட்டணி வைத்ததன் காரணம், வெற்றி என்ற ஒற்றைச் சொல்லுக்காத்தான்.

வெற்றி கிடைக்காத சமயத்தில் கூட்டணிக் கட்சிகள் விலகும்போது ஜெயலலிதாவிடம் இருந்து அது குறித்த, மனதைப் பிசையும் அறிக்கைகள் எதுவும் இருக்காது. மறந்தும் கூட்டணித் தலைவர்களின் பெயரைக்கூட உச்சரித்துவிடமாட்டார். இந்த வகையில், மாநில சிறு கட்சிகளின் இடத்தை அவர்களுக்குக் காண்பித்தது ஜெயலலிதான். இது திமுகவுக்கும் சேர்ந்தே உதவியது என்றே சொல்லவேண்டும். அப்படிக் கூட்டணி இல்லாமலும் அதிமுக வென்றதில், ஜெயலலிதாவின் அதிர்ஷ்டத்துக்கும் ஒரு பங்கு இருந்தது.

முன்பெல்லாம் கூட்டணி என்ற ஒன்று அமைந்தால், அனைத்துக் கூட்டணித் தலைவர்களும் ஒரே மேடையில் பேசுவது முக்கியமான ஒன்றாக அமையும். ஜெயலலிதா இதையும் புறக்கணித்தார். வெற்றிக் கூட்டணியாக அமைந்துவிடும்போது, இதெல்லாம் மறக்கப்பட்டுவிடும். தோல்விக் கூட்டணியாக அமைந்தால், இது முக்கியக் காரணமாக இருக்கும்.

கூட்டணி அமைப்பது போலவே முக்கியமானது அதனை எடுத்துச் செல்வது. ஆதரவு தருவதைப் போலவே முக்கியமானது அதனை ஏற்றுக்கொள்வது. 2004ல் ரஜினி, அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்தார். எந்த ஒரு இடத்திலும் ஜெயலலிதா இதைக் குறிப்பிடவே இல்லை. அதிமுகவினரும் அதிகம் இதைப் பற்றிப் பேசவில்லை. ரஜினியும் ஆதரவுக்குப் பின்பு அமைதியானார். அந்தத் தேர்தலில் இக்கூட்டணி தோல்வியுற்றது.

அப்போது சோ சொன்ன கருத்து முக்கியமானது. ஆதரவைப் பெற்றுக்கொள்வதும், அதனைப் பரப்புவதும், ஆதரவு தருவதைப் போலவே முக்கியமானது என்றார். இது நடக்காமல் ஆதரவின் அடுத்த கட்டம் நடக்காது. ரஜினியைக் காப்பாற்ற சோ இக்கருத்தைச் சொல்லி இருக்கலாம். ஆனாலும் அதனளவில் இக்கருத்து முக்கியமானது.

இன்று திமுக எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை. பாமக, தேமுதிக அதிமுக கூட்டணி அமைந்துவிட்டது. திமுக கூட்டணி கொள்கை ரீதியாக, ஹிந்து மதத்தை எதிர்க்கும் கூட்டணி என்றாகிவிட்டது. திருமாவளவன் தெளிவாகவே சனாதனத்தை எதிர்க்கும் கூட்டணி என்று சொல்லிவிட்டார். சனாதனம் என்பது ஹிந்து தர்மம்தான். எனவே இவர்களுக்குக் கூட்டணித் தலைவர்களுடன் பேசுவதில் சிக்கல் இல்லை.

அதிமுக கூட்டணிக்கு அந்தச் சிக்கல் இருக்கிறது. ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்தச் சிக்கலை இவர்கள் எளிதாகக் கடந்துவிடமுடியும். அனைத்துத் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றி, எவ்வித ஈகோவும் இன்றிப் பேசுவதால், கூட்டணி மாயம் நிகழும் வாய்ப்பு உண்டு. அதிமுக கூட்டணியின் தலைவர்கள் மாநில அளவில் முக்கியத்துவம் பெற்றவர்கள் என்பது, திமுகவுக்கு இல்லாத ஒரு வாய்ப்பு. இதனை அதிமுக பயன்படுத்திக்கொள்ள, கூட்டணியைப் பெற்றுக்கொள்வதில், பரப்புவதில் முனையவேண்டும். அதுதான் முக்கியமானது. முதல் ஒன்றிரண்டு கூட்டங்களில் இந்த மாயம் நிகழத் துவங்கிவிடும். பழைய சாடல்கள் மறக்கப்பட்டுவிடும். தொடர்ந்து ஒரே மேடையில் கூட்டணித் தலைவர்கள் பேசும்போது, அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும். இல்லையென்றால் பெரிய அபாயத்தையே சந்திக்கும்.

நன்றி: தினமலர்

Share

ஏன் திமுக ஒழிக்கப்படவேண்டும் – மாரிதாஸ்

கீழே உள்ளவை மாரிதாஸ் சொல்பவை. நான் சொல்பவையல்ல. நான் அப்பாவி. அனைத்துத் திட்டுகளும் அவருக்கே செல்லட்டும் என்று நியாயமாக ஒதுங்கிக்கொள்கிறேன். மாரிதாஸ் பொரிந்து தள்ளும் வீடியோவைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=-hH4qcsIO4E&feature=youtu.be

திமுக ஏன் அழிக்கப்படவேண்டும் என்பதற்கு மாரிதாஸ் சொல்லும் காரணங்கள்:

  • அரசு ஊழியர்களுக்கு அநியாயத்துக்கு சம்பள உயர்வு தருவதால்.
  • தாசில்தார்கள், வி ஏ ஓ உடன் இணைந்து அரசு மற்றும் கோவில் நிலங்களை அபகரித்ததற்காக.
  • திமுக ஒரு ரௌடி கட்சி. நில அபகரிப்பு செய்பவர்களுக்கு, நில மாஃபியாக்களுக்குப் பிடித்த கட்சி திமுக.
  • சபரிமலை விவகாரத்தில் பெண்கள் நுழையலாம் என்ற தீர்ப்பை வரவேற்றது திமுக. ஹிந்துக்கள் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம், ஹிந்துக்களை திமுக அசிங்கப்படுத்துகிறது. டாவின்சி கோட் படத்தைத் தடை செய்யும் திமுக, உண்மையான தீர்ப்பை ஆதரிக்கிறது!
  • ஹிந்து மதத்தின் திருமண மந்திரங்களை அசிங்கமானவை அருவருப்பானவை என்று சொன்னவர் ஸ்டாலின். ஆனால் இதே வார்த்தைகளை இஸ்லாமியர் மற்றும் கிறித்துவ சடங்குகளைக் குறித்து அவரால் சொல்லமுடியுமா?
  • மின் தடை. 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் மின் தடை இருந்தது திமுகவின் ஆட்சிக்காலத்தில்தான்!
  • திமுகவுக்குக் கொள்ளை அடிக்கத் தெரியுமே ஒழிய, நிர்வாகத் திறமை கிடையாது.
  • திமுக ஒரு குடும்பத்தின் கட்சியாகிவிட்டது.
  • சமச்சீர்க் கல்வியைப் புகுத்தியது. இதனால் கல்வியே நாசமாகிவிட்டது.
  • அரசுக் கல்லூரிகளில் துணைவேந்தர் துவங்கி அனைத்துப் பணிகளிலும் அரசியலை நுழைத்தது திமுகதான்.
  • கச்சத்தீவு, காவிரி வாரியம், ஈழத் தமிழர் படுகொலை விவகாரங்களில் தமிழர்களுக்குத் தீங்கிழைத்தது திமுக. கச்சத்தீவு விவகாரத்தில் திமுக எம்பிக்கள் எதுவுமே பேசவில்லை. இதை எதிர்த்துப் பேசியவர்கள் ஃபார்வர்ட் ப்ளாக்கின் மூக்கையா தேவர் மற்றும் யூனியன் முஸ்லிம் லீக்கின் முஹம்மது ஷரீஃப் மட்டுமே. இவர்களது எதிர்ப்பை ஆதரித்த ஒரே தேசியத் தலைவர் வாஜ்பாய். கச்சத்தீவை இழந்ததற்கு காரணம், திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்.
  • பொறுப்பற்ற கவர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது திமுக.
  • திமுக ஒரு கட்சியல்ல, கார்ப்பரேட் நிறுவனம். இவர்களது நோக்கம் கூட்டமாகச் சேர்ந்து கொள்ளையடிப்பதும் அதைப் பிரிப்பதும்தான்.
  • திமுகவைப் போல யாராலும் வசனம் பேசி ஏமாற்றமுடியாது. பொய் பொய் பொய் மட்டுமே இவர்களது கொள்கை. திராவிடம் 2.0 என்பதே பொய்ப் பிரசாரம்.
  • பட்டியல் இனத்தவரின் ஜாதியை ஒழிக்கப் பயன்பட்டது அண்ணல் அம்பேத்கரின் சட்டமே ஒழிய, ஈவெரா அல்ல. திமுக ஜாதியை ஒழித்தோம் என்று சொன்னது பொய். அது பட்டியல் இனத்தவரை ஏமாற்றச் சொல்வதுதான்.
  • கடைசியாக: நான்கு முறை முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கரின் அண்ணன் மளிகைக்கடை வைத்திருக்கிறார். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் உறவினர்கள் முதல் கொள்ளுப்பேரன் வரை பல கோடி சொத்து உள்ளது.
  • நேர்மையானவர்களுக்கு வாக்களிப்போம். திமுகவுக்கு வாக்களித்துவிட்டு தமிழ்நாடு சிங்கப்பூராகும் என்று கனவு காண்பதற்கு உரிமையே கிடையாது. டாட்.
Share

முகிலனைக் காணவில்லை

முகிலன் என்பவரைக் காணவில்லை என்ற விஷயத்தை அரசு இத்தனை மெத்தனமாகக் கையாள்கிறதா அல்லது நமக்கு எதுவும் விஷயங்கள் சொல்லப்படுவதில்லையா என்று தெரியவில்லை. ஸ்டெரிலைட் கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடரபான விவகாரத்தில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இவரைக் காணவில்லை. பிப்ரவரி 15ம் தேதி சென்னையில் ஒரு பிரஸ் மீட் நடத்தி சில காவலர்களின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார் என்றும் அதன்பிறகு எக்மோர் ரயில்வே நிலையத்தில் வண்டி ஏறியவரைக் காணவில்லை என்றும் டைம்ஸ் ஆஃப் இண்டியா தெரிவிக்கிறது.

முகிலன் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்/ஆதரிப்பவர் என்பதெல்லாம் தேவையற்ற விஷயம். அவரை யார் கடத்தியது, அதன் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்கவேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. உண்மையிலேயே அவர் ஸ்டெரிலைட் தரப்பால் அலல்து அரசுத் தரப்பால் அல்லது அதிகாரிகள் தரப்பால்தான் அபாயத்துக்குள்ளானாரா என்பதை அரசுதான் தெளிவுபடுத்தவேண்டும்.

ஒருவரைக் காணவில்லை என்னும் போக்கை, அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாம் ஆதரிக்கவோ கண்டும் காணாமல் போகவோ கூடாது. இதன் பின்னான உண்மையைத் தெரிந்துகொள்வது அவசியம். அதேசமயம் ஹிந்து அமைப்பினர் கொல்லப்பட்டாலும்கூட மிக அமைதியாகக் கடந்து செல்பவர்களையும் நாம் இந்நேரத்தில் நினைவுகொள்ளுதல் வேண்டும்.

Share