Archive for கவிதை

Five poems

நண்பனுக்கு

நானறியா ஏதோவொன்று
என்னிடமே உள்ளதென்பதைப்போல
நீயறியாத ஏதோவொன்றும்
என்னிடம் இருக்கலாம்.
நம்மிடம் இருக்கட்டும்.
இவ்வுலகில் ரகசியங்களே இல்லை
என்பதற்கொப்பாகவே
இவ்வுலகில் ஒவ்வொன்றும் ரகசியமே.
திடீர் சப்தத்தில்
மரம்விட்டு
வான்வெடிக்கும்
பறவைகளை விலகி
மரத்தில்
விழி உயர்த்தாமல்
ஒரு பறவை அமர்ந்திருந்தால்
அது நானோவென
நீயுணரும் நேரத்தில்
நம்மிடை அமைகிறது நட்பு.

***

இன்மையொன்றில்

அநாதரவாக
அலைந்து கொண்டிருந்த
நெருப்புத்துளியொன்றைப் பிடித்து
வீட்டுக்குள் வைக்க
அனைத்தும் எரிந்து சாம்பலாகியென
ஒன்றும் நிகழவில்லை.
துளியைத் தூக்கிக்கொண்டோடி
மலைமேலிட்டேன்
சலனமற்றிருந்தது அவ்வுலகு.
குடத்துக்குள் இட்டபோதும்
துளியெனவே உயிரசைத்தபடி.
மென்காற்றொன்றில்
அத்துளி இறக்க
இருள் கவிகிறது சட்டென.

***

மலைப்பயணம்

மலையிலிருந்த இறங்கிய
குதிரையாகிய நான்
இளைப்பாறிக்கொண்டேன்
சிவந்திருந்த கண்கள்
தன்தோற்றம் கொண்டன
மூச்சு சீராகி
உதறலெடுத்த கால்கள் நின்றன
கைகளின் நடுக்கம் மறைந்தது
குதிரை விடைபெறும் தருணம்
புதிய கல்லொன்று வருமென்று
எதிர்பார்த்துக் காத்திருந்து
ஏமாந்து கழியும் பொழுதில்
மலையுச்சி நோக்கிக்கொண்டே
கல்லொன்றைத் தேடுகிறேன்
குதிரையாகும் நான்

***

இருளிரவு

நாளை காலை முதல்
எத்தீச் சொல்லும் காதில் விழப்போவதில்லை
பாலில் நீர் சேர்த்த புகார் வரப்போவதில்லை
இறைவனைப் பற்றிய ஐயங்களில்லை
நெருப்புப் பந்தம் சுற்றிலும் பூச்சிகள் இல்லை
குழந்தைகள் அழப்போவதில்லை
எங்கும் இனியன, எல்லாம் இனியது
சுற்றி வரும் சொற்கள் விலகி
வெற்றுக் கவிதைகள் இல்லை
சுற்றம் இனியது சூழல் இனியது
என்றேதான் கவிகிறது
இவ்விரவும்.

***

இன்னுமொரு இன்னுமொரு

சடக் சடக் ஒலியில்
கால் மாற்றி
கை விரையும் வேகத்தில்
புதிய புடைவையின்
வண்ண நெளிவுகளில்
உருவாகி வருகிறான்
இன்னுமொரு இறைவன்
உடுக்கையொலியும்
தாளலயமும்
தப்பாத ஆட்டத்தில்
கண்மயங்கிச் சரியும்
அந்திக்குப்பின்னே
காத்திருக்கிறது
இன்னுமொரு சூரியன்

Share

கவிதை

முதலில் அணிந்திருந்தது
மிக மெல்லிய கண்ணாடி
உருவத்தின் பேதங்களை
நான் கண்டதே இல்லை
ஆனாலும் அணிந்திருந்தேன்
அது இல்லாத நாள்களில்
கண்ணில் பட்டவரெல்லாம்
கொஞ்சம் புன்னகையுடன்
அதையே கேட்டவாறிருப்பார்கள்
பின்னர் கொஞ்சம் தடித்தது
சில வேறுபாடுகள்
கண்ணில் அது இல்லாத நேரத்தில்
நிம்மதியாகவும் பாதுகாப்பற்றும்
ஒரே நேரத்தில் தோன்ற
தலைதெறிக்க மனசுக்குள்ளே ஓடி
மெல்ல அதை அணிவேன்
கண்முன்னே மனிதர்கள்
சிரித்தவண்ணம் கடந்தவாறிருப்பார்கள்
பின்னர் இன்னும் தடித்தது
மனிதர்களின் சிரிப்புக்குள்ளே இருக்கும்
மனத்தை மிகத் துல்லியமாகக் காட்டியது
அஞ்சி அதை வீசி எறிந்தேன்
சில நாள்கள் கண்ணாடி இல்லாமல்.
நகரும் பிம்பங்களுக்குள்ளே
இருந்த வண்ண வேறுபாடுகள்
கண்ணாடி இல்லாமலே துலக்கம் பெற்றன.
மனக்குகை எரிந்து
கருஞ்சாம்பல் எஞ்சுமோ என்றஞ்சி
இமைகளை மூடினேன்
என்றாலும்
நின்றபாடில்லை உருவங்களின் நடனம்.

Share

பதாகை வலைத்தளத்தில் வெளிவந்த கவிதைகள்

பாதை 

 

மிக நீண்ட தூரம் அழைத்துச் சென்று
நரகம் விட்டொழிந்தோம் என்றார்கள்
வழியெங்கும்
கூடவே நதியோட
இருபுறமும் மரங்கள்
எங்கள் பயணம்

எல்லாம் இன்றோடொழிந்தது
இனி கவலையில்லை
அன்றாடச் சுகதுக்கங்களில் உழலவேண்டாம்
எல்லாம் இன்பமயம்
எங்கும் எல்லாரும் சமம்
இனி சொர்க்கம்தான்
போகலாம் என்றார்கள்
நான் ஆவலுடன் இருந்தேன்
இப்படி அல்ல என்றார்கள்
என் அடையாளங்களை துறக்கச் சொன்னார்கள்
என் ஆடைகளைக் களையச் சொன்னார்கள்
சொர்க்கத்தில் எதுவுமே தேவையில்லை

என் நினைவுகளை அழித்துவிட்டு
அடுத்த எட்டு நான் வைக்கலாம்
எல்லாவற்றையும் துறப்பதே
ஒரு நரகம்தானே என்றேன்
கேள்விகள் பதில்கள் எல்லாம்
சொர்க்கத்தில் சொல்லப்பட்டாகிவிட்டது
சொர்க்கத்தில் எல்லாமே புதியது
ஒருவகையில் எதுவுமே புதியதல்லவாம்

குழப்பமாக இருந்தது
அங்கு இனி குழப்பமுமில்லை என்றார்கள்

என் நினைவுகளை அழிக்க முற்பட்டேன்
அழிக்க அழிக்க
அவை என்னை
அமிழ்த்த அமிழ்த்த

சுயம் அழித்து
சொர்க்கத்தில்
என்ன இருந்துவிடமுடியும் எனக்கென்றேன்
நீண்ட பதில் சொன்னார்கள்
எல்லாவற்றுக்கும்
பதில் இருந்தது
நினைவுகளை அழித்து
புதியன அடைதல்
சொர்க்கத்தின் பாதை

அமைதியாக
வந்தவழி திரும்பினேன்
ஏனென்றார்கள்
நரகமே சொர்க்கம் என்றேன்
ஆழ்கடலின் மௌனத்தில்
அவர்கள் ஆழ்ந்திருக்க
நதியின் அமைதியில்
நான் திரும்பினேன்

 

அப்படியே ஆகுக

காற்றில் இலை பரப்பி 
குலை தள்ளி
வேரில் செழித்திருந்த 
வாழை மரமொன்றை
வெட்டித் தள்ளினேன்
இலை கிழித்து 
குலை சிதைத்து
தோல் உரித்து 
வெண்தண்டு கடித்துக் குதறி 
வேர் வெட்டி
வெற்றியுடன் மீண்டபோது
நானறியாது 
அனைத்தையும் பார்த்திருந்த 
புதுக்கன்று 
மெல்ல தலைதூக்கி 
உலகுக்கு வந்தது,
ஆம், அப்படிதான் ஆகும்

 

ஆதிகுரல்

அவர்கள் போர் என்று சொல்லிக்கொண்டார்கள்
ஒட்டுமொத்த உலகமும் வெருண்டிருந்தது
கருப்பு நிறத்துக்காரர்கள் தங்கள் கடவுளை துணைக்கழைத்திருந்தார்கள்
வெண்ணிறத் தோலுடையோர் ஒளிபொருந்திய ஆண்டவனை நம்பியிருந்தார்கள்
நெருப்பு நிலத்துக்காரர்கள் அருவம் கொண்டு மீண்டெழுந்தார்கள்
எஞ்சியவர்கள் என்னவோ பேசிக்கொண்டார்கள்
யாரும் யாரையும் கேட்கவில்லை
எல்லோருக்குமே வெற்றி என்றார்கள்
பின் ஒரு திடீர் நொடியில்
எல்லாருமே தோல்வியை உணர்ந்தார்கள்
பூமியின் நிறம் சிவப்பாக மாறி இருந்தது
தோல்வியில்
புனித நதியில் குதித்தார்கள்
கைகளையும் காலையும் மரத்தில் அறைந்து ஆண்டவனை அடைந்தார்கள்
மண் புதைந்தார்கள்
கடைசி மனிதனின்
கடைசிக் குரலின்போது
மெல்லிய உதட்டிலிருந்து
ஆதிகுரல் ஒன்று மெல்ல எழுந்துவந்து
உலகை நிறைத்தது
அக்குரல்
ஓம் என்ற வடிவத்தை ஒத்ததாய் இருந்தது
ஆண்டவனின் குரலகாக ஒலித்தது
அருவத்தின் குரலாக மீண்டது
அக்குரல்
ஆதிகுரல்
ஒரு குழந்தையின் முதல் அழுகையாக இருந்தது

 

செக்மேட்

அவனை இறைவன் என்றனர்
அவன் சொர்க்கம் ஒன்றை உருவாக்கினான
இவனை மனிதன் என்றனர்
இவன் நரகத்தை அமைத்தான்
அவன் நல்லது செய்தான்
இவன் தீயன பழக்கினான்
தெளிந்தது அவன் செய்ய
குழப்பத்தை இவன் செய்தான்
காதல் செய்தான்
காமம் செய்தான்
சிரிப்பு
அழுகை
மகிழ்ச்சி
சோகம்
சாந்தம்
கோபம்
அன்பு
வெறுப்பு
கரு
கொலை
சலித்துப் போன கடவுள்
மனம் மயங்கிய ஒரு தருணத்தில் சாத்தானாக
நான் என்னைக் கடவுள் என்றேன்.

பாம்பு புகுந்த வீடு

தன் வீட்டிலிருந்து
என் வீட்டுக்கு
ஜன்னல் வழியே
பாம்பு புகுந்துவிட்டதென
கூவிக்கொண்டே வந்தார்
பக்கத்து வீட்டுக்காரர்
அலறல் கேட்டு
வீட்டிலிருந்து வெளியே ஓடினேன்
அவரைப் பார்க்க அச்சமாக இருந்தது
அவர் கால்கள் சூம்பிக் கிடந்தன
என் நினைவில் அவர் அப்படி இருந்திருக்கவில்லை
என்ன அரவமென வீட்டிலிருந்து
மனைவி ஓடி வெளியே வந்தாள்
என்னைக் கண்டு மிரண்டு நின்றபோது
அவளைக் கண்டு நான் பயந்து நின்றேன்
அவள் கழுத்து நீண்டு கிடந்தது
இதுவரை இப்படி அவளைக் கண்டதில்ல
மீண்டும் வீட்டுக்குள் அவள் ஓடி
மகனைத் தூக்கிக் கொண்டு வந்தாள்
மகன் எல்லாரையும் பார்த்து வீறிட்டு அழுதான்
மகனின் கண்ணில்
நேற்றுவரையிருந்த புருவங்களில்லை
பலர் வந்தார்கள்
ஒருவரை ஒருவர் அஞ்சினோம்
வீடெங்கும் சல்லடையிட்டுத் தேடினார்கள்
பாம்பைக் காணாமல்
அவரவர் வீடு சென்றார்கள்
நாங்கள் எங்கள் வீட்டுக்குச் சென்றோம்
ஆளுக்கொரு பாம்புடன்.

பெரியப்பாவின் வருகை

பெரியப்பா வந்திருந்தார்
கையில் குடையுடன்
நீண்ட தாடியுடன்
ஒரு யோகியின் நடையுடன்
ஏற்கெனவே சொல்லி வைக்கப்பட்டிருந்தது போல
வீட்டைத் தேடி
வீடுகளைத் தேடி
பெரியப்பா வந்திருந்தார்
எல்லாக் கேள்விகளுக்கும் அவரிடம் விடையிருந்தது
அன்பில் பூத்த தாமரை மலர் ஒன்றை
எப்போதும் அவர் முகத்தில் சுமந்திருந்தார்
மெல்ல விரியும் உதடுகளின் வழியே
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கான
ஏக்கங்களின் விடையை
தெளித்தவண்ணம் சிரித்திருந்தார்
கைக்குட்டையில் இருந்த ரத்தக் கறையை
திட்டமிட்டு அவர் மறைக்கவில்லை என்றாலும்
யாருமே அவரிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை
கயிறின்றி கன்றின் பின்னே ஓடும்
தாய்ப்பசுவைப் போல
நினைவுகள் கட்டுண்டு அவர் பின்னே செல்ல
அவர் திடீரென்று பதற்றமானார்
குடை கீழே விழுந்த நினைவின்றி ஓடினார்
யாரோ ஒருவன்
வடிவுப்பெரியம்மையைப் பற்றிக்
கேட்டதுதான் காரணம் என்றார்கள்
இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
வடிவுப் பெரியம்மை எப்போதும் அப்படித்தான்

 

அஞ்சலி

ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
வழித்தடம் அழுத்தமாகப் பதித்த காலங்களில்
அவரை நான் சபித்திருந்தேன்
கருத்துக் கலவரங்களில் அவர் எப்போதும் வாளேந்தி வருவார்
நான் நேர்மை மட்டும் தாங்கித் தோற்றிருக்கிறேன்
நியாயங்களில் அவருக்கு அதிகம் நம்பிக்கை இருந்ததில்லை
தன் நோக்கொன்றே சரியானது என்று உறுதியாக நம்பினார்
ரத்தம் கண்டு நான் மிரண்ட சமயங்களில்
புத்தனின் புன்னகையுடன் அவர் மேலேறிப் போனார்
எங்கோ உயர்ந்த புள்ளியில்
சூரியனுக்கு அருகில்
வெற்றிச் செருக்கில் என்னைத் திரும்பிப் பார்த்தபடி
சட்டென ஒருநாள்
ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
அவருக்கும் எனக்குமான நினைவுகளில் உழன்றபடி
சுண்டிப் போன ரத்த விரல்களில்
அவர் விட்டுச் சென்ற அநீதிகளின் மேல் அமர்ந்து
இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்
மிகக் கவனமான
ஒரு அஞ்சலி

Share

கவிதை

கையிலிருந்து நழுவிக்கொண்டிருக்கும்
காலம்
காதல்
காமம்
உயிர்
பாதச் சத்தமற்ற ஒரு பூனையின் நடையைப் போல
நுழைந்தது தெரியாத ஒளியைப் போல
முகிழ்ந்தது அறியா மலர் போல
கையிடுக்கிலிருந்து
நெருக்க நெருக்க
வழிந்துகொண்டிருக்கும் நீர் போல
கனன்றுகொண்டே
கரியாகிக் கொண்டிருக்கும்
கங்கு

Share

two poems

முதலில் அணிந்திருந்தது
மிக மெல்லிய மூக்குக் கண்ணாடி
உருவத்தின் பேதங்களை
நான் கண்டதே இல்லை
ஆனாலும் அணிந்திருந்தேன்
அது இல்லாத நாள்களில்
கண்ணில் பட்டவரெல்லாம்
கொஞ்சம் புன்னகையுடன்
அதையே கேட்டவாறிருப்பார்கள்
பின்னர் கொஞ்சம் தடித்தது
சில வேறுபாடுகள்
கண்ணில் அது இல்லாத நேரத்தில்
நிம்மதியாகவும் பாதுகாப்பற்றும்
ஒரே நேரத்தில் தோன்ற
தலைதெறிக்க மனசுக்குள்ளே ஓடி
மெல்ல அதை அணிவேன்
கண்முன்னே மனிதர்கள்
சிரித்தவண்ணம் கடந்தவாறிருப்பார்கள்
பின்னர் இன்னும் தடித்தது
மனிதர்களின் சிரிப்புக்குள்ளே இருக்கும்
மனத்தை மிகத் துல்லியமாகக் காட்டியது
அஞ்சி அதை வீசி எறிந்தேன்
சில நாள்கள் கண்ணாடி இல்லாமல்.
நகரும் பிம்பங்களுக்குள்ளே
இருந்த வண்ண வேறுபாடுகள்
கண்ணாடி இல்லாமலே துலக்கம் பெற்றன.
மனக்குகை எரிந்து
கருஞ்சாம்பல் எஞ்சுமோ என்றஞ்சி
இமைகளை மூடினேன்
என்றாலும்
நின்றபாடில்லை உருவங்களின் நடனம்.

(25-1-2015)

கையிலிருந்து நழுவிக்கொண்டிருக்கும்
காலம்
காதல்
காமம்
உயிர்
பாதச் சத்தமற்ற ஒரு பூனையின் நடையைப் போல
நுழைந்தது தெரியாத ஒளியைப் போல
முகிழ்ந்தது அறியா மலர் போல
கையிடுக்கிலிருந்து
நெருக்க நெருக்க
வழிந்துகொண்டிருக்கும் நீர் போல
கனன்றுகொண்டே
கரியாகிக் கொண்டிருக்கும்
கங்கு

(26-1-2015)

Share

உயிர்க்கத் துலங்கும் உலகு

யாருமே என்னை அழைக்கவில்லை
என் குரலும் யாருக்கும் கேட்கவுமில்லை
மழையோ வெயிலோ காற்றோ பனியோ
சத்தமோ நிசப்தமோ எதுவுமே இல்லை
சூன்யமும் இல்லை
ஆனாலும் எல்லாமும் நிறைந்திருந்தது எப்படி
மனதின் கண்கள் திறக்க
முகத்தின் கண்கள் மறைய
அகத்தின் செவி கேட்க
புறச்செவி ஒடுங்க
உள்ளே உள்ளே இன்னும் உள்ளே
மெல்லப் பரவுகிறது
அன்று பிறந்த மாசற்ற சிசு ஒன்றின் வாசம்
உயிர்க்கத் துலங்கும் உலகு.
 

Share

எதுவுமே நிகழவில்லை

எவ்விதப் பதட்டமும்
இல்லை என்ற பாவனையில்
புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டேன்
இரண்டு வரிகளுக்குள்ள
வெற்றிடத்தில் நிலைகுத்தி நின்ற பார்வையில்
ஓர் புதிய உலகம் விரிந்தது
மாயக் கண்ணன்
தன் வாய் திறந்தபோது
உள்ளே உருண்ட உலகத்தைக் காட்டிலும்
விரிந்ததொரு பிரபஞ்சம்
எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி
நான் வெளியே
தனியொரு பிரபஞ்சமாக
புத்தகத்தை பட்டென்று மூடி வைக்க
பறந்து சென்ற எல்லாம்
அதனதன் இடத்தில் வந்து அமர்ந்துகொண்டது
ஒன்றுமே நிகழாதது போல

Share

ஓம் சாந்தி ஓம்

சுருக்கமாகப் படிக்க விரும்புகிறவர்கள் மஞ்சளடிக்கப்பட்ட பகுதிகளைப் படித்தால் போதும்.

இப்படி ஒரு தளம் இருக்கிறது என்பதே இப்போதுதான் நினைவுக்கு வந்தது. கொஞ்ச நாள் எழுதாமல் இருக்கலாம் என்று முடிவெடுத்துப் படிக்க ஆரம்பித்ததில், எழுதவே எரிச்சல் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் தந்த பழக்கத்தில் யாராவது மூன்றாவது வரியை எழுதினாலே ஏன் இத்தனை இழுவையாக நீளமாக எழுதுகிறார்கள் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதுவே புத்தகமாகப் படிக்கும்போது ஒன்றும் தோன்றுவதில்லை. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் செய்துவைத்த இன்னொரு விஷயம் உடனடி அறச்சீற்றம். இப்போது நினைத்துப் பார்த்தால் இந்த அறச்சீற்றங்களுக்கெல்லாம் எதாவது பொருளிருக்கிறதா என்றே தெரியவில்லை. நாமும் அரசியல் சமுதாயம் தொடர்பான ஒரு நிகழ்வுக்கு நம் உடனடி அறச்சீற்றத்தைப் பதிந்து வைத்தோம் என்பதைத் தவிர வேறு என்ன வகையிலும் இது எதையும் சாதிக்கப்போவதில்லை என்னும் கருத்து உறுதிப்படுகிறது. பதினைந்து நிமிடப் புகழ் என்று சுஜாதா சொன்னபோது அன்று சுருக்கென்றிருந்தது. இப்போது சுஜாதா மீது கடுப்பாக இருக்கிறது, 15 நிமிடம் அதிகம் சார்.

தொடர்ந்து சில வருடங்களாக அவ்வப்போது சில குழுக்களில் இருந்திருக்கிறேன். அங்கே எழுதுவதும் படிப்பதும் இன்னொரு அடிக்டானது. நான் இருந்தவை எல்லாமே ஹிந்துத்துவம் தொடர்பான சிறிய அரட்டைக் குழுக்கள். என் வாழ்க்கையில் இது போன்ற ஆக்கபூர்வமான குழுமங்களை நான் படித்ததே இல்லை. எத்தனை எத்தனை கருத்துகள். எல்லாக் குழுமங்களுக்கும் போல இக்குழுமங்களுக்கும் வீழ்ச்சி வந்தது. தொடக்கத்தில் கருத்தை அறிதல் என்பது தொடங்கி பின்பு அது நட்பாகி பின்பு நீ அப்படிப் பேசலாமா என்றும் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை என்பதிலும் முடிந்தது. என்னதான் குழும நட்பென்றாலும் எல்லாமே முடிவில் முகமிலி நட்பே என்பதை இக்குழுமங்களும் உறுதி செய்தன. ஆனாலும் இக்குழுமங்கள் எனக்குத் தனிப்பட்ட அளவில் செய்த சாதனைகள் அதிகம். அதற்காக மரத்தடி போல ராகாகி போல அங்கிருக்கும் நண்பர்கள் மெல்ல மறைந்து குழுமப் பெயர் மட்டும் முன்வருவதுபோல இக்குழுமப் பெயர்களும் முன்வந்துவிட்டன.

ஏப்ரல் முதல் நெருக்கத் தொடங்கிய வேலைகளுக்கு மத்தியில் நான் உருப்படியாகச் செய்தது புத்தகங்கள் படிப்பதையே. டயல் ஃபார் புக்ஸ் எனக்குப் படிக்க புத்தகங்களை அள்ளித் தந்தது. 🙂 படிக்கும் புத்தகங்களைப் பற்றி எழுதக்கூடாது என்றும் ஒரு முடிவெடுத்தேன். படிக்கும்போதே இதைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்ன எழுதப்போகிறோம் என்னும் டிவிட்டர் ஃபேஸ்புக் ப்ளாக்கிய வியாதியில் இருந்து மீள்வது முக்கியமானதாகப் பட்டதால் இம்முடிவு. நல்ல பலன் தந்தது. புத்தக ரசனை என்பதே முக்கியம் என்ற உள்ளுணர்வு மீண்டு வந்தது. இப்படி எத்தனையோ மாற்றங்கள்.

மீண்டும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். இன்னும் எழுதுவேன் போல. எதையும் இன்னும் வெளியிடவில்லை. இந்த தளத்தில் வாரம் ஒன்றாவது எதாவது எழுதலாம் என்ற நினைவு. இப்படி ஒரு தளம் வைத்துக்கொண்டு எதுவும் எழுதாமல் இருப்பதும் குற்ற உணர்ச்சியாக உள்ளது. ஒவ்வொன்றிலிருந்தும் வெளிவருதல் முக்கியமாகப் பட்டுவிடுகிறது. ராஜாவின் பாடல்கள் சிடியை தேடித் தேடி வாங்கியதிலிருந்து வெளிவந்ததுதான் தொடக்கம். உலகத் திரைப்படங்களுக்கு அடிக்ட் ஆனபோது அவற்றைப் பார்ப்பதையே 2 வருடங்களுக்கு முன்னால் நிப்பாட்டினேன். பெரிய அளவில் பர்ஸ் தப்பித்தது. பின்பு மலையாளப் படங்கள் வெறி. வெறி என்றாலும் நல்ல மலையாளப் படங்களே. இதில் கொஞ்சம் அடக்கி வாசித்ததால் பர்ஸ் ஓரளவு தப்பித்தது. யூ டியூபின் இலவசப் பணியும் மகத்தானதே. நேர்மை அறச்சீற்ற கனவாண்கள் என்னை மன்னிக்க.

சொல்வனத்தில் என் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த கவிஞானசூனியங்களின் புலம்பல்கள் இணையம் முழுக்க பிரசித்தமாக இருப்பதால் இது பற்றி நான் தனியே சொல்லவேண்டியதில்லை. சொல்லவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுமட்டுமே, கவிஞானசூனியங்கள் ஒருவேளை சரியாகவும் இருக்கலாம்.

புலம்பல்கள் தொடரும்.

கடவுளின் உரையாடல்

பனி விழும் இரவல்ல
வேர்வையின் துளிகள்
உடலெங்கும் பூத்திருக்க
அறையெங்கும் வீசிக்கிடக்கும்
நாற்றத்துக்குள்ளிருந்து
கடவுள் என்பவன் பேசிய குரலது
எப்போதோ அறிந்திருந்த மொழியென
ஒரு யோசனை
எப்போதும் புரிந்திராத மொழியென
ஒரு திடுக்கிடல்
சிதறி விழும்
எவர்சில்வர் டம்ப்ளர்கள்
எழுப்பும் ஒலியென ஒரு மயக்கம்
குழந்தையின் வீறிடல் என்ற உறுதி
இரண்டாம் சாமத்தில்
விடாது குரலெழுப்பும் சேவலும் சேர்ந்தபோது
வேலுடன் சேவலுடன் கொடியுடன்
ஆழ்நிலை மயக்க உலகில்
கடவுள் தெளிவாகப் பேசினான்
என் குற்றங்களைப் பட்டியலிட்டான்
நான் புரண்டு புரண்டு படுத்தேன்
காதுக்கருகில் வந்து அவன் சொல்லிக்கொண்டே போன
முடிவற்ற பட்டியலில்
அச்ச வேர்வைகள் பெருக பெருக
அவனுக்குக் களியாட்டம்
சைகையில் அவனை அடக்கமுடியவில்லை
மிரட்டலுக்கும் மசியவில்லை
மெல்ல விசும்பலும்
பிறகு கதறலுமென
காற்றில் வீசப்பட்ட என்னுடலில்
ஊழித் தாண்டவம்
காறித் துப்பினேன்
அதையும் குற்றப் பட்டியலாக்கினான் அவன்
ஒரே ஒரு கேள்வி கேட்க மன்றாடினேன்
காலில் விழுந்து புரண்டழுததும்
மெல்லப் புன்னகைத்தான்
நீயெல்லாம் கடவுளா என்றேன்
விடியத் தொடங்கியது வானம்.

தனிமையின் மொழி

ஓவியம் என்றேன்
காற்றில் எழுதுகிறாயா என்றான்
நிழல்!
நீரின் பரப்பிலா?
தேவதை வருவாள்!
வேசியைச் சொல்கிறாயா?
நற்சொல் சொல் என்றால்
கெட்ட வார்த்தை வருமோ என்றொரு அச்சம்
கேள்வி ஏதுமின்றி
மௌனம் காத்தேன்
எதாவது பேசேன் என்றான்
மீண்டும் எதாவது பேசேன்
மீண்டும் மீண்டும்
காமம் பின்காத்திருக்க
காதலொடு பெண்ணிடம்
ஓர் ஆண் கொள்ளும் அதே கெஞ்சல்
நானேதான் எனச் சொல்லிவிடுவானோ என்று
நீ யார் எனக் கேட்கவே இல்லை.

உலகம் அமிழும் ஓவியம்

புறாக்கூண்டுக்குள் இருந்து
புறாவை விரட்டிவிட்டு
கழுகை அடைத்து வைக்கும்
மனநிலையை எப்படி எதிர்கொள்வது
மண்ணுள்ளிப் பாம்புக்காக
கோடாரியைத் தேடியலையும்
ஒரு சித்திரத்தை
காகிதத்தில் வரைந்து
மெல்ல மெல்ல உயிர் பெருக்க
காகிதம் அமிழ்ந்து
அறை மூழ்கி
ஊர் தாண்டி
உலகம் அடங்காமல்
வெளியில் திமிறியபோது
தன்னை அவ்வோவியம்
தழுவிக்கொள்ள
சிறகை அடித்தபடி
பறக்காமல் நிலைபெற்றுவிட்ட
இன்னொரு ஓவியமாகக்
காத்துக் கிடக்கிறது
விரட்டிவிடப்பட்ட புறா.

ஹரன்பிரசன்னா

Share