Archive for திரை

பிரியாணி – மலையாளத் திரைப்படம்

18+

பிரியாணி (ம) – இதைப் பற்றி எழுதாமல் கடப்பது நல்லது என்று நினைத்தேன். ஆனாலும் எழுதுகிறேன்.

21+ திரைப்படம் என்று சொல்லலாம். எனவே குடும்பத்துடன் பார்க்கவே பார்க்காதீர்கள். இனியும் இதைப் பற்றிப் படிக்கவேண்டுமா என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். 🙂

மலையாளத் திரைப்படங்களைப் பற்றி எழுதும்போது ஏன் அந்தத் திரைப்படங்களில் ஹிந்து மதம் சித்தரிக்கப்படும் விதம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்று முன்பே சொல்லி இருக்கிறேன். ஒரே ஒரு காரணம்தான், தமிழைப் போல அங்கே கிறித்துவ இஸ்லாமிய மதங்களை விமர்சிக்கும் படங்கள் வராமல் இருப்பதில்லை. இந்தப் படம் மிகவும் துணிச்சலாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் படத்தில் எனக்கு ஒத்துக்கொள்ள முடியாத விஷயங்களும் உண்டு.

ஒரு இஸ்லாமியக் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் கதை. ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்குப் போய்விட்ட ஒரு பையனின் குடும்பம் கேரளாவில் சந்திக்கும் பிரச்சினையே கதை. படம் அந்தப் பையனின் அக்காவின் பார்வையில் நகர்கிறது. அவளே கதாநாயகி. தன் மகன் வருவான் என்று காத்திருக்கும் பைத்தியக்கார அம்மா, தன் மகன் இந்தியாவின் தீவிரவாத வேட்டையில் இறந்துவிட்டான் என்று தெரிந்ததும் உயிரை விடுகிறாள். விவாகரத்து பெற்ற அக்கா பாலியல் தொழிலாளியாகிறாள். பின்பு தன் ஊர்க்காரர்களுக்கு பிரியாணி செய்து தருகிறாள். ஊரில் அனைவருக்கும் பிரியாணி செய்து போட வேண்டும் என்பது அம்மாவின் கனவு. ஆனால் இவள் செய்யும் பிரியாணி, ஐயோ, உவ்வேக் ரக கொடுமை.

படத்தின் கதைக்கும் நிகழும் சம்பவங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. வேண்டுமென்றே கதாநாயகியை உடலுறவில் முழுமை பெறாதவளாகக் காண்பிக்கிறார்கள். அவள் ஏன் பாலியல் தொழிலாளியாக வேண்டும் என்பதற்கு ஒரு காரணமும் இல்லை. அடங்காத உடல் வேட்கை என்றால் படத்தின் கதைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று குழப்புகிறது. பின்பு எல்லாம் விட்டு, குழந்தை உண்டாக, காவல்துறையின் பயங்கரத்தால் அந்த குழந்தையும் கருவிலேயே கலைகிறது.

இந்தக் கொடுமையை எல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால், பல முக்கியமான பதிவுகள் உள்ளன.

ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படும் ஏஜெண்ட், இந்தக் காலத்தில் சாதாரணமாக இருந்தாலே சந்தேகப்படுவார்கள் என்கிறான். ஆனால் அவனே ஐ எஸ் அமைப்புக்கு ஏஜெண்ட்டாக இருக்கிறான்.

ஐ எஸ் அமைப்புக்குப் பையன் சென்றுவிட்டான் என்று தெரிந்ததும் ஜமாத் அமைப்பு அவர்களது குடும்பத்தை தள்ளி வைக்கிறது. மறைமுகமாக உதவுவதெல்லாம் இல்லை.

ஐ எஸ் ஏஜெண்ட்டே அந்தப் பெண்ணுக்கு, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு ஜமாத் மூலம் உதவ ஏற்பாடு செய்துவிட்டு, தலைமறைவாகிறான்.

தன் மனைவி ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பெண் என்று தெரிந்ததும் கணவன் முத்தலாக் சொல்கிறான்.

இப்படிப் பல யதார்த்தமான பதிவுகள் உள்ளன.

ஆனால் விவாகரத்தான கணவனுடன் அவள் மீண்டும் உறவு கொள்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. அவனோ இவள் எதிர்பார்க்கும் அளவுக்கானவன் அல்ல. பின்னர் ஏன்? ஒரு பழிதீர்த்தல் என்றா புரிந்துகொள்வது? என்ன கொடுமை என்றால், நெளிய வைக்கும் பழி தீர்த்தலுக்குப் பிறகு இந்த உறவு வருகிறது!

பழிதீர்க்கும் பிரியாணிக்கு போலிஸை, தன்னை அவமானப்படுத்தியவர்களை அழைத்தது சரி. ஏன் தனக்கு உதவிய பத்திரிகையாளரையும் அழைக்கவேண்டும்? ஏன் தான் விரும்பியே உறவு கொண்ட ஒருவனை அழைக்கவேண்டும்? இப்படி பல கேள்விகள்.

ஆனாலும் ஏன் முக்கியமான படமாகிறது? ஒன்று, யாரும் தொடத் தயங்கும் விஷயத்தை தைரியமாக எடுத்திருப்பதால். உலகத் திரைப்படங்களுக்கு இணையான காட்சி அமைப்புகள் படம் தொடக்கம் முதல் இறுதி வரை தொய்வே இல்லாமல் வருவதால். கதாநாயகியாக நடிக்கும் நடிகையின் புதிர் நிறைந்த முகபாவத்தால். உலகத் திரைப்படங்களைப் போலவே எந்த நொடியிலும் எப்படியும் நகரும் தன்மை கொண்டிருப்பதால். எவ்விதக் கட்டுக்களுக்குள்ளும் சிக்காததால். இப்படிப் பல ஆச்சரியங்கள் படம் நெடுக.

சென்சார் கத்தரிகளுக்குத் தப்பித்த பிரதி ஓடிடியில் கிடைக்கிறது என்று பார்த்தேன். சென்சார் கத்தரிகளுக்குத் தப்பிக்காத பிரதியில் எந்தக் காட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. படம் பார்ப்பவர்கள், முதல் காட்சியிலேயே 21+ காட்சிகளுக்குத் தயாராகுங்கள். எல்லா வகையிலும் இப்படி அதிர வைக்கும் ஒரு திரைப்படம், இதே பிரிவில் இதே உருவாக்கத்தில் உலகத் திரைப்படத்துக்கு இணையான ஒரு திரைப்படம், மலையாளத்தில் இதற்கு முன்பு வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

(இதற்கு முன்பு இன்னொரு மலையாளப் படம் பார்த்தேன். மூன்று வருடங்கள் இருக்கலாம். கணவனுக்கு நான்கு மனைவி என்றால் ஏன் ஒரு பெண்ணுக்கு நான்கு கணவன் இருக்கக் கூடாது என்று ஒரு பெண் கேள்வி கேட்பாள். அந்தப் படத்தின் பெயர் மறந்துவிட்டது. தெரிந்தவர்கள் சொல்லவும்.)

Share

தி இண்டியன் கிச்சன் – வெற்றுச் சமையல்

MMM (Malayala Movie Mafia)க்களும் பெண்ணியவாதிகளும் இந்த அற்பனை மன்னித்துவிடுங்கள்.

தி இண்டியன் கிச்சன் படம் பார்த்தேன். இருபது நிமிடத்தில் எடுத்திருக்கவேண்டிய அசல் முற்போக்கு பெண்ணிய குடும்ப எதிர்ப்பு குறும்படம். அதை இரண்டு மணி நேரமாக எடுத்திருக்கிறார்கள். தினமும் சமையல் செய்வது, பாத்திரம் கழுவது, வீடு துடைப்பது என எல்லாவற்றையும் இன்ச் இன்சாகக் காட்டுகிறார்கள். பொதுவாக மலையாளப் படத்தில் ஒரு முதியவர் மெல்ல நடந்து போய் ஒரு மரத்துக்கு அருகே நின்று சிறுநீர் கழித்துவிட்டு (அதன் சத்தம் காதை அடைக்கும்) மீண்டும் நடந்து வருவதைக் காண்பிப்பார்கள். நல்லவேளை அப்படியெல்லாம் இல்லை. ஒரு கட்டத்தில் என்னல்லாம் சமைக்கிறாங்க, எப்படில்லாம் சமைக்கிறாங்க என்று பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அந்தப் பெண் கஷ்டப்படுவது போய் அடுத்து அவள் என்ன சமைப்பாள் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. பூரி மட்டும் வரவில்லை. மற்ற எல்லாம் வந்துவிட்டது.

இப்படியே போகும் படத்தில் சட்டென இல்லறத்தில் பெண்ணுக்கு திருப்தி இல்லாதது மற்றும் ஐயப்பன் பூஜையை சாமர்த்தியமாகச் செருகிறார் இயக்குநர். இந்த இரண்டும் இல்லாவிட்டாலும், இன்னும் சொல்லப் போனால், இல்லாமல் இருந்திருந்தால்தான் சரியான படமாக இருந்திருக்கும். ஆனால் இயக்குநர் முற்போக்காளர். இந்த பெண்ணிய முற்போக்காளர்களுக்கு குடும்பம் என்கிற அமைப்பில் இருக்கும் போதாமைகளைக் களைவதை விட, குடும்பம் என்கிற அமைப்பைச் சிதைப்பதிலேயே ஆர்வம் அதிகம் இருக்கிறது. இது தற்செயல் அல்ல. குடும்ப அமைப்பே இந்தியாவின் ஆதார சுருதி. அதனால்தான் இதில் கவனம் கொள்கிறார்கள்.

குடும்ப அமைப்பில் பெண்கள் சர்வ சுதந்திரத்துடன் இருக்கிறார்கள் என்று நான் உளறமாட்டேன். நிச்சயம் அவர்களுக்கே பெரும் சுமை இருக்கிறது. ஆண்கள் வீட்டு வேலை செய்வதையே பெரும் அவமானமாக நினைக்கிறார்கள். இவை எல்லாமே மாற வேண்டும். ஆனால் அதை ஐயப்ப பூஜையோடு முடிச்சி போட்டிருப்பதெல்லாம் பயங்கர ஐடியா. எந்த ஒரு முஸ்லிம் வீட்டிலும், இந்த ஒரு கிறித்துவ வீட்டிலும் அடுப்பாங்கரை இப்படித்தான் இருக்கும். ஒரு சந்தேகமும் வேண்டாம்.

படத்தில் என்ன காட்டுகிறார்களோ அதை வைத்துப் பார்த்தாலும் கூட, அந்தப் பெண் மூன்று நாள் ஒதுங்கி இருக்கும்போது உதவ ஒருவர் வருகிறார். அதாவது ஐயப்பனுக்கு மாலை போடுவதற்கு முன்பாகவே இது நடக்கிறது. மூன்று நாள் தீட்டு என்பது நிறைய சமூகத்தில் உள்ளதுதான். படித்த ஒரு பெண்ணுக்கு இந்த அறிவு கூடவா இருக்காது? ஐயப்ப சாமிமார் டீ கேட்டால் பாத்திரம் கழுவிய நீரைத் தருவது அந்தப் பெண்ணின் திமிரையும் கிறுக்குத்தனத்தையும்தான் காட்டுகிறது. கேட்டால், அவள் அடக்கி வைத்திருந்த கோபம் அப்படி வெளிப்படுகிறது என்று சொல்வார்கள். அறிவு இருப்பவள் அன்று அமைதியாக டீ போட்டுக் கொடுத்துவிட்டு மறுநாள் வெடித்திருப்பாள். ஆனால் இந்தக் கதாபாத்திரம் ஒரு அறிவற்ற கதாபாத்திரம்.

கதாநாயகன் தெளிவாக கதாநாயகியிடம் சொல்கிறான். இப்போதைக்கு வேலை வேண்டாம், கொஞ்சம் பொறுத்துக்கொள் என்று. இதில் ஒரு தவறும் இல்லை. அவள் வேண்டுமென்றே அப்போதே வேலைக்கு மனு போடுகிறாள். தூரமாக இருக்கும்போது துளசி மாடத்தில் இருக்கும் துளசியைப் பறித்து உண்ணுகிறாள். இப்படிப்பட்ட பெண் திருமணத்துக்கு முன்பே தன் தேவை என்ன என்று பேசி இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் பேசவில்லை. அதைவிட ஆச்சரியம் என்ன என்றால், திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகக் கூடாது என்பதை கதாநாயகன் முதலிலேயே பெண் வீட்டில் சொல்லிவிடுவதாகவும் ஒரு வசனம் வருகிறது. அப்படியானால் அந்தப் பெண் பாத்திரம் கழுவிய நீரை யார் முகத்தில் கொட்ட வேண்டும்? அவளது அப்பா அம்மா முகத்தில்தானே? ஆனால் ஐயப்ப சாமிமார் முகத்தில் கொட்டுகிறாள். ஏனென்றால் அப்போதுதான் முற்போக்குப் பெண்ணியப் படம் எடுக்கமுடியும்.

இறுதிக் காட்சிகள்தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. திருமண அமைப்பில் இருந்து கதாநாயகி விலகி தனக்குப் பிடித்த துறைக்குப் போகிறாள். இந்தக் கருமத்தை அவள் திருமணத்துக்கு முன்பே சொல்லித் தொலைத்திருக்கலாம். ஆனால் ஐயப்பன் தன் பக்தர்களைக் கைவிடவில்லை. கதாநாயகனுக்கு ஏற்ற, அவன் குடும்பத்துக்கு ஏற்ற பெண் அமைகிறாள். வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் பெண்ணுக்கு மரியாதை என்பது மேற்கத்திய கலாசாரம் கற்றுத் தரும் பொய். அதற்கு இணையான மேம்பட்ட ஒன்று, குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்ணின் நிலை. கூடவே, பெண் வேலைக்குப் போய் ஆண் குடும்பத்தை நிர்வகித்துக் கொண்டால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டுமே இழிவில்லை. யார் யாருக்கு எது சரியாக வருமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் ஒரு தவறுமில்லை.

திருமணத்துக்கு முன்பு பெண்களுக்குத் தன் கருத்தைச் சொல்ல என்ன உரிமை இருக்கிறது என்பது முக்கியமான கேள்வி. அப்படி உரிமை இல்லாத பெண்ணாக இந்தக் கதாநாயகி படைக்கப்படவில்லை. எனவே முற்றிலும் கிறுக்குத்தனமாகவே இப்படம் எடுக்கபட்டிருக்கிறது.

தன் வீட்டில் தன் தம்பி அம்மாவை தண்ணீர் எடுத்துத் தரச் சொல்லிக் கேட்கும்போது கதாநாயகி எரிந்து விழுகிறாள். இதுதான் ஒரே உருப்படியான காட்சி. இதையே நாம் நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்கும் செய்யவேண்டியது. மற்றபடி எல்லாமே இப்படத்தில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன. என்ன பிரச்சினை என்றால், அத்தனை இயற்கையாக நடிக்கிறார்கள் அனைவரும். ஒரு வீட்டுக்குள் சென்று யாருக்கும் தெரியாமல் கேமராவை வைத்துவிட்டு வந்துவிட்டது போல. அத்தனை இயல்பு. இப்படித்தான் ஒரு படைப்பு அதன் ஆதார நோக்கத்தையும் தாண்டி சாமானியர்களின் மனதுக்குள் அவர்கள் அறியாமலேயே இதுதான் சரி என்று நுழைந்துவிடுகிறது.

Share

மண்டேலா – அதீதம்

மண்டேலா – எதையுமே நமக்கு உரக்கச் சொல்லித்தான் பழக்கம். அதிலும் எதாவது ஒரு நாடகத்தை நுழைக்காவிட்டால் தூக்கம் வராது. ஒவ்வொரு கதை விவாதத்திலும் யாரேனும் ஒருவர் நிச்சயம் ‘இது தமிழ் ஆடியன்ஸுக்கு செட் ஆகாது சார்..’ என்று சொல்வார்கள் என நினைத்துக்கொள்வேன். ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லும் அலுக்க வைக்கும் திரைக்கதை. எளிதாக யூகிக்கக் கூடிய நிகழ்வுகள். ஒரு ஓட்டு என்னும் செயற்கைத்தனத்தின் மேல் நம் இயக்குநர்களுக்கு இருக்கும் வெறித்தனமான ஆர்வம் ஆச்சரியமளிக்கிறது. அதுவும் உள்ளாட்சித் தேர்தலுக்கு என்பதெல்லாம் ஓவர். நாமாகவே இது தேர்தலுக்கும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். வெளிப்படையாகச் சொன்னால் திராவிட இயக்கம் தோலை உரித்தாலும் உரித்துவிடும். ஆனால் மோடி பிரச்சினையில்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஒருத்தருக்கு 15,000 ரூபாய் என்று சொல்லலாம். பாரதம் தூய்மைத் திட்டம் என்றும் சொல்லலாம். ஒரே விதிவிலக்காக இருபது ரூபாய் டோக்கன் என்ற ஒன்றைக் காண்பிக்கிறார்கள்.

நம் இயக்குநர்களுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சினை வினோதமானது. அவர்கள் எடுக்க நினைப்பது 80 அல்லது 90களின் கதையை. அப்படியே எடுத்தால் எப்படி இன்றைய இந்திய அரசைக் கிண்டல் செய்வது என்று நினைப்பார்களோ அல்லது ஒரு பீரியட் படமாகச் செய்வது தேவையற்ற வேலை என்று நினைப்பார்களோ தெரியாது. அவர்களது கனவை இன்றைய நிலையில் கொண்டு வந்து பொருத்தி வைக்கிறார்கள். அது அழகான கழுதையாகவும் இல்லாமல் அசிங்கமான கழுதையாகவும் இல்லாமல் எதோ ஒன்றாகப் பிறக்கிறது. (கழுதைப் புலி உவமானத்தைச் சொல்ல விரும்பவில்லை, காரணம் இதில் ஒரு புலி கூட இல்லை!) எந்த கிராமத்தில் இத்தனை பேர் இன்னும் வீட்டில் கழிப்பறை வசதி கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்கிற பூதாகரமான கேள்வி எழுகிறது. நிச்சயம் வாய்ப்பில்லை. உடனே முற்போக்காளர்கள், அதெல்லாம் இருக்கிறது என்றால், இத்தனை ஆண்டுகள் திராவிட இயக்கங்கள் செய்ததுதான் என்ன என்ற கேள்வியும் சேர்ந்து எழவே செய்யும். இதையே 90கள் என்று வைத்துவிட்டால், கொஞ்சம் சமாளித்திருக்கலாம். ஆனால் இன்று நிகழ்வது போல வைக்கிறார்கள். அப்போதுதானே டிஜிடல் இந்தியா என்று சொல்லமுடியும். நான் இப்படிச் சொல்வதால், என்னவோ இந்தப் படத்தில் பூதாகரமாக அரசைக் கிண்டல் செய்திருக்கிறார்கள் என நினைக்கவேண்டாம். போகிற போக்கில் சொல்லப்படும் கிண்டல்களே. எனக்கு இருக்கும் வருத்தம், தெளிவாக அதிமுகவையோ திமுகவையோ தொடாமல் விட்டு விலகும் அந்த சாமர்த்தியத்தின் மேல் மட்டும்தான். இந்த தெளிவு இருக்கும் வரை தமிழ்நாட்டில் உருப்படியான அரசியல் பகடி படங்கள் வர வாய்ப்பில்லை.

நோட்டா, ஒரு ஓட்டில் வெற்றி என்று குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான். மண்டேலா குண்டுச் சட்டிக்குள் கழுதையை ஓட்டும் ஒரு முயற்சி. முதல் இருபது நிமிடத்தில் படத்தைப் பார்க்கவே வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எப்படியோ முழுமையாகப் பார்த்துவிட்டேன். அப்படி முழுமையாகப் பார்க்க முடிந்தது ஒன்று மட்டுமே படத்தின் வெற்றி.

2021ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தாலும் அது வாக்கு இயந்திரத்தில் நடக்காது என்று இயக்குநர் நம்புகிறார் போல! இத்தனைக்கும் அந்த ஊரில் போட்டி இடுபவர்கள் இரண்டு பேர் மட்டுமே.

Share

மீனாட்சி தியேட்டர் பேட்டை

ஒருவர் போய்ச் சேர்ந்துவிட்டால் அவரைப் பற்றிய நினைவுக் குறிப்புகளை எழுதுவது மரபு. 80களின் குழந்தைகளுக்கு தியேட்டர்களும் இப்படியே. கூடவே பழகிய மனிதர்களைவிட ஒரு படி ஒட்டுதல் கூடுதலாக இருக்கும். ஒரு படம் பெயர் வந்ததும் சட்டென எந்த தியேட்டரில் பார்த்தோம் என்பதுதான் நினைவுக்கு வரும். இன்றும் சிவாஜி கணேசனின் எந்தப் படம் எந்த தியேட்டரில் வந்தது என்பதைத் தூக்கத்தில் கூடச் சரியாகச் சொல்பவர்கள் உண்டு.

பேட்டையில் இருக்கும் மீனாட்சி தியேட்டர் – நான் இதில் படமே பார்த்ததில்லை என்றாலும் ஒரு ஒட்டுதல். இரண்டு காரணங்கள். ஒன்று, இந்த தியேட்டரின் சொந்தக்காரரான செட்டியார் வீட்டில்தான் என் அப்பா கணக்கு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது நான் பிறந்திருக்கவே இல்லை, அல்லது ரொம்பவும் குழந்தை. ஆனால் மீனாட்சி தியேட்டரின் செட்டியார் பெயர் என் வீட்டில் அடிபடாத நாளே இல்லை. இந்தத் தியேட்டரில் படம் பார்க்க இலவசம் என்றொரு வாய்ப்பும் முன்பு இருந்ததாக அம்மா சொல்லும்போது பொறாமையாக இருக்கும்.

திருநெல்வேலியில் நாங்கள் இருந்த வீட்டின் முன்னே ஒரு தட்டியில் விளம்பரம் வைப்பார்கள். திரைப்பட விளம்பரம். அப்படி விளம்பரம் வைக்கப்படும் வீட்டுக்கும் இலவச பாஸ் உண்டு. நான் விவரம் தெரிந்து படம் பார்க்க ஆரம்பிப்பதற்குள் இந்த பாஸும் இல்லாமல் போய்விட்டது. மொத்தத்தில் இலவச சினிமா பார்க்கவே முடியவில்லை.

இருந்தாலும் இந்த மீனாட்சி தியேட்டர் பெயர் மட்டும் செட்டியாரின் பெயருடன் சேர்ந்து என் மனதில் ஒட்டிக்கொண்டது. எங்கயோ பேட்டைல இருக்காம் என்று நினைத்துக்கொள்வேன். மதிதா ஹிந்துக் கல்லூரியில் வேதியியல் இளங்கலையில் சேர்ந்தேன். மூன்று வருடம் தினமும் இந்த தியேட்டரைப் பார்த்துக்கொண்டேதான் சைக்கிளை மிதிப்பேன். எல்லாம் இழந்து நிற்கும் ஒரு வெற்றுத் தேர் போல தியேட்டர் மெல்ல என்னைக் கடந்து போகும். அப்பா வேலை செய்த செட்டியாரின் தியேட்டர் என்ற எண்ணம், அந்த தியேட்டர் வருவதற்கு முன்பே என்னுள் அனிச்சையாக எட்டிப் பார்க்கத் துவங்கிவிடும்.

கல்லூரியில் ஸ்ட்ரைக் அடித்துவிட்டுப் படம் பார்க்க டவுன் அல்லது ஜங்ஷனுக்கு ஓடுவோம். இதைக் கூடச் செய்யாமல் கல்லூரி எதற்கு? ஆனால் ஸ்ட்ரைக் முடிந்து தியேட்டருக்குள் போவதற்குள் நேரமாகிவிடும். மீனாட்சி தியேட்டரிலோ மாலை மற்றும் இரவுக் காட்சிகள் மட்டுமே. அப்போதே, அதாவது நான் கல்லூரி படிக்கும்போதே தியேட்டர் நலிந்துவிட்டது. செட்டியார் வீட்டில் நடந்த ஒரு வழக்கில் இந்த தியேட்டர் யாருக்கு என்பதில் நிலவிய சட்ட ரீதியான சிக்கலே காரணம் என்று சொல்லிக்கொண்டார்கள். உண்மையா என்று தெரியாது.

மதிதா ஹிந்துக் கல்லூரியில் வேறு ஊர்களில் இருந்து படிக்க வருபவர்கள் அதிகம். பல நாள்களில் கல்லூரி மதியம் 1 மணிக்கே முடிந்துவிடும். ஆனால் அவர்களது ரயில் மாலைதான் இருக்கும். அந்த நேரம் வரை இருக்கும் ஒரே பொழுதுபோக்கு, திரைப்படம். ஆனால் படம் பார்க்க டவுனுக்கோ ஜங்ஷனுக்கோ போகவேண்டும். மீண்டும் தன் சொந்த ஊருக்குச் செல்ல, இந்த மீனாட்சி தியேட்டரைக் கடந்து, கல்லூரியைக் கடந்துதான் வரவேண்டி இருக்கும். ஏன் இந்த இரட்டை அலைச்சல்?

எங்கள் நண்பர்களுடன் பேசி ஒரு முடிவெடுத்து, சிலர் மீனாட்சி தியேட்டருக்குப் போய் பேசினார்கள். நாங்கள் சொல்லும் நாள்களில் படம் போட முடியுமா என்று கேட்டார்கள். மாலைக் காட்சி என்ன படம் ஓடுகிறதோ அதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்டார்கள். போய்விட்டு வந்த மாணவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று ஆர்வமாகக் காத்திருந்தேன். ‘தாயளி, காலேஜுக்கு வந்தா படிங்கல, படமா கேக்கு’ என்று சொன்னதாகச் சொன்னார்கள். அங்க ப்ரொஜெக்டர் ஓட்றவன் கூட காரி துப்புதாம்ல என்று அனைவரும் சிரித்துவிட்டு மீண்டும் டவுனுக்கும் ஜங்க்‌ஷனுக்கும் படம் பார்க்கப் போகத் துவங்கினோம். கடைசி வரை மீனாட்சி தியேட்டரில் படமே பார்க்கவில்லை.

கல்லூரியில் ஃபேர்வெல் தினத்துக்கு முதல் நாள் இரவெல்லாம் நாங்கள் ஆறு பேர் பேட்டையில் கல்லூரியில் தொடங்கி டவுன் வரை எங்கள் வேதியியல் பிரிவுக்கான சுவரொட்டியை ஒட்டினோம். அப்போது மீனாட்சி தியேட்டர் முன்பாக நின்றுகொண்டு நடு இரவில் அதைப் பார்த்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. எத்தனையோ தியேட்டர்கள், திருநெல்வேலிக்காரர்கள் கொண்டாடிய தியேட்டர்கள் மறைந்து கொண்டே இருக்கின்றன. இதோ இன்னும் ஒன்று. மனம் வலித்துப் பழகியும் விட்டது. எந்த ஒரு கஷ்டத்தையும் சமூகம் ஊடகம் ஒரு நொடியில் மாற்றிக் கொள்ளவும் பழக்கிவிட்டுவிட்டது.

மீனாட்சிக்கு அஞ்சலி. ஓம் ஷாந்தி. 🙂

Share

களத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்

  • படத்தில் தொடர்பே இல்லாமல் ஒரு காமெடி காட்சி. ஜீவா கதாபாத்திரமும் காமெடி நடிகரும் பைக்கில் வருகிறார்கள். அப்போது ஒருவன் எதிரே ஓடி வருகிறான். அவன் காவி வேட்டி, பட்டை அணிந்திருக்கிறான். அவன் ஜீவாவிடம், ஒரு பிரச்சினை உடனே வாருங்கள் என்று அழைக்கிறான். என்ன பிரச்சினை என்று சொல்லாமல், பிரச்சினை பிரச்சினை என்று இழுக்க, காமெடி நடிகர் காவி வேட்டி கட்டியவனைப் பார்த்துச் சொல்கிறார், ‘ஊர்ல மீத்தேன் பிரச்சினை அது இதுன்னு ஆயிரம் பிரச்சினை இருக்கு, இதுதான் ஒனக்கு பிரச்சினையா, ஓட்றா’ என்று சொல்லிவிட்டு, ‘இப்ப பிரச்சினை சரியாய்ட்டா என்ன பண்ணுவ’ என்று கேட்க, காவி வேட்டிக்காரர் சொல்கிறார், ‘ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுவேன்’ என்று. காவி வேட்டிக்காரனை ஜீவாவும் காமெடி நடிகரும் விரட்டும்போது காமெடி நடிகர் சொல்லும் வசனம், ‘அஞ்சறிவு உள்ள இவனையெல்லாம் விரட்டணும்.’ (வசனங்களை நினைவில் இருந்து எழுது இருக்கிறேன். அஞ்சறிவு என்னும் வார்த்தை காதில் விழுந்தது போலத்தான் இருந்தது. இன்னொரு முறை பார்க்கும் பொறுமை இல்லை என்பதால் அதை உறுதி செய்யாமல் எழுதி இருக்கிறேன்.)
  • கிறித்துவப் பெண்ணை ஹிந்துப் பையன் காதலிக்கிறான். கிறித்துவப் பெண் சொல்கிறாள், ‘எங்கப்பாகிட்ட நீ பொண்ணு கேட்டு வரும்போது எங்கப்பா ஒன்னை அசிங்கமா திட்டுவாரு. மதம் மாறச் சொல்வாரு..’ எல்லாவற்றுக்கும் சரி என்று சொல்லும் ஹீரோ (அருள்நிதி), எல்லாவற்றுக்கும் சரி என்று சொல்லிவிட்டு, மதம் மாற பிரச்சினையே இல்லை என்று சொல்கிறார்.
  • கிறித்துவப் பெண் தன் காதலை ஏற்றுக் கொள்ள அருள்நிதி கதாபாத்திரம், சர்ச்சில் ஹீரோயின் பின்னாலேயே தவம் கிடைக்கிறது. இரண்டு முறை இந்தக் காட்சி வருகிறது. ஆனால் ஒரு தடவை கூட கிறித்துவப் பெண் தன் காதலனுக்காக கோவிலுக்குள் காலை வைக்கும் காட்சி என்றில்லை, கோவில் இருக்கும் தெருவில் காலை வைக்கும் காட்சி கூட இல்லை!
  • ஜீவா கதாபாத்திரம் ஒரு வசனம் சொல்கிறது. ‘அரேஞ்ச்ட் மேரேஜ் சிஸ்டத்தை மொதல்ல ஒழிக்கணும்!’

முக்கியமான பின்குறிப்பு: தொடர்பே இல்லாமல் ஒரு காட்சியை சொன்னதற்காக, மற்ற காட்சிகள் எல்லாம் தொடர்போடு இருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள். எல்லாக் காட்சிகளுமே தொடர்பே இல்லாமல்தான் நகர்கின்றன.

Share

அந்தகாரம்: ஒரு வெளிச்சம்

அந்தகாரம் – தமிழின் மிக முக்கியமான படம். நல்ல படம், மோசமான படம் என்ற இரு வகைகளைத் தாண்டி புத்திசாலித்தனமான படம் என்றொரு வகையை புதிய அலை திரைப்படங்கள் தோற்றுவித்திருக்கின்றன. பீட்ஸா, ஜிகர்தண்டா, சூது கவ்வும் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். அந்தகாரம் இந்தவகைத் திரைப்படம்.

சில இயக்குநர்கள் தங்கள் வருகையின்போதே தாங்கள் மிக முக்கியமான இயக்குநர்களின் வரிசையில் வரப் போகிறவர்கள் என்று அறுதியிட்டுச் சொல்லும் படங்களோடு வருவார்கள். பாரதிராஜா, மணிரத்னம், நலன் குமாரசாமி, கார்த்தி சுப்புராஜ், மணிகண்டன் போல. விக்னராஜனும் அப்படி ஒரு படத்துடன் வந்திருக்கிறார். அரசியல் செருகல்களால் திசை மாறாமல் இருக்கவேண்டும்!

தமிழில் வந்த திரைப்படங்களில் இது போல, கிட்டத்தட்ட கடைசி வரை என்னதான் நடக்கிறது என்று புரியாமல் இருக்கும் ஒரு படம் இருக்குமா எனத் தெரியவில்லை. படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது என்றால் இரண்டரை மணி நேரத்தில்தான் இத்திரைப்படத்தின் முழு விஷயமும் பிடிபடுகிறது. காலக் கோட்டைக் கலைத்துப் போட்டு ஆடும் விளையாட்டை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். லூஸியா (தமிழில் என்னைப் போல் ஒருவன்) திரைப்படத்தை மட்டுமே இப்படத்துடன் ஒப்பிட முடியும். படமாக்கலும் கிட்டத்தட்ட லூஸியா போலவே உள்ளது.

படமாக்கலைப் பொருத்தவரை, இயக்குநர் மற்றும் எடிட்டரின் அசாதாரண உழைப்பு நன்றாகத் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு யோசித்துச் செய்திருக்கிறார்கள். தமிழில் இது மிகவும் அரிது. சின்ன சின்ன விஷயங்களைக் கூட இத்தனை யோசித்துச் செய்வார்களா என்று சந்தோஷம் கொள்ள வைக்கிறது இப்படம். அதிலும் அந்த விஷயங்கள் துருத்திக் கொண்டிருக்காமல் சரியாக அமைந்திருப்பது பாராட்டப்படவேண்டியது. கதையும் அது நகரும் விதமும் எந்த அளவுக்கு இருந்தது என்றால், தமிழில் இப்படி யோசிக்க யார் இருக்கிறார்கள், நிச்சயம் இது எதாவது ஒரு உலகப் படத்தின் தழுவலாகத்தான் இருக்கும் என்று நான் கூகிளில் தேடும் அளவுக்கு இருந்தது! இயக்குநரைப் பாராட்டும் நோக்கில்தான் இதைச் சொல்கிறேன்.

நடிகர்கள் பெரும்பாலும் புதுமுக நடிகர்கள் என்பதால் படத்துடன் சட்டென ஒன்றிக்கொள்ள முடிகிறது. அத்தனை நடிகர்களும் மிக யதார்த்தமாக நடிக்கிறார்கள். தமிழின் புதிய அலைத் திரைப்படங்கள் நமக்குத் தந்திருக்கும் ஒரு கொடை இந்த யதார்த்த நடிப்பு.

இந்தப் படத்தின் முக்கியமான பலம் வசனம். மிகக் கூர்மையான வசனங்கள். மிகக் குறைந்த அளவிலான வசனங்கள்.

எல்லா வகையிலும் முக்கியமான திரைப்படம் இது. பேய்ப்படம் என்றும் சொல்லலாம். இல்லாவிட்டாலும் கூட இது முக்கியமான திரைப்படமே. பேய் என்றால் திடும் திடுமென இசையைக் கூட்டி அலற வைக்கவேண்டும் என்கிற க்ளிஷேவை எல்லாம் உடைத்து, பேய்ப்படத்தை ஒரு த்ரில்லர் போலக் காட்டி இருக்கிறார்கள். தமிழில் பேய்ப்படங்கள் என்றாலே எதோ ஒரு ஆங்கிலப் படத்தை உல்ட்டா செய்து எடுத்திருப்பார்கள். அப்படி இல்லாமல் இத்திரைப்படம் வித்தியாசமாக இருக்கிறது. அதனால்தான் பேயைக் குறைவாகவும் த்ரில்லர் களத்தை அதிகமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் போல.

படத்தின் குறை என்று பார்த்தால், இரண்டரை மணி நேரத்துக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் எப்படிப் பார்ப்பது என்கிற ஒரு அலுப்பு பார்வையாளர்களுக்கு வரலாம். பொதுப் பார்வையாளர்களுக்கு இப்படி ஒரு அலுப்பு வரவே செய்யும். அதேபோல் நொடிக்கு நொடி மாறும் காட்சிகள், அந்த ஒரு நொடிக் காட்சியைக் கூட மனத்தில் இருத்திக் கொள்ளவேண்டிய அவசியம் – இவற்றையெல்லாம் எல்லாரும் புரிந்துகொள்வார்களா எனத் தெரியவில்லை. நான் சொல்லும் குறைகள் கூட பார்வையாளர்கள் பார்வையில்தானே தவிர, திரைப்படத்தின் குறைகளாக இல்லை.

தொடர்ச்சியாகப் பேய்ப் படங்கள் என்கிற பெயரில் வரும் ஆபாசப் படங்களுக்கு மத்தியில் இத்திரைப்படம் வித்தியாசமான, முக்கியமான திரைப்படம்.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

ஒரு பக்கக் கதை – அறிவியல் ஆன்மிகக் குழப்பம்

பாலாஜி தரணீதரனின் ஒரு பக்கக் கதை. தமிழின் புதிய அலைப் படங்களில் தலையாயதான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தின் இயக்குநரின் அடுத்த திரைப்படம் ஒரு பக்கக் கதையாக இருந்திருக்கவேண்டும். இப்படம் அறிவிக்கப்பட்டு பல வருடங்கள் கிடப்பில் கிடந்து, அதற்கிடையில் ’சீதக்காதி’ அறிவிக்கப்பட்டு, அது வருவதிலும் சிக்கலாகி, ஒருவழியாக சீதக்காதி வெளிவந்தது. முதல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றும், தமிழின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்பட்டும், இரண்டாம் படத்துக்கு ஒரு இயக்குநருக்கு இந்த நிலைமை.

சீதக்காதி திரைப்படம் பாலாஜி தரணீதரனின் முதல் படம் தந்த அதிசயத்தைத் தகர்த்தது. சீதக்காதியைவிட ஒரு பக்கக் கதை கொஞ்சம் உருப்படியான படம்தான் என்றாலும், ‘ஒரு பக்கக் கதை’ பாலாஜி தரணீதரன் மீதான நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. ஒன் முவீ ஒண்டராக அவர் தேங்கிப் போகாமல் இருக்கவேண்டும்.

‘ஒரு பக்கக் கதை’யின் நோக்கத்திலேயே தெளிவில்லை. முழுமையான ஒரு அறிவியல் புனைகதையாக எடுக்கும் அளவுக்கு கதையில் வலுவில்லை. எனவே அதை மூட நம்பிக்கையுடன் பிணைக்கப் பார்த்திருக்கிறார்கள். அதிலும் பெரிய பயணத்தைச் செய்யமுடியவில்லை. இரண்டும் இல்லாமல், எதற்காக யாருக்காக இந்தப் படம் என்ற தெளிவின்றி படம் முடிவடைகிறது.

ஆணுடன் எவ்வித உடலுறவும் கொள்ளாமல் ஒரு பெண் தாயாகிறாள். உலகின் முதல் ‘தந்தையில்லாக் குழந்தை’யை உலகமே ஆச்சரியத்துடன் வரவேற்கிறது. இப்பெண்ணின் காதலன் தன் காதலியுடன் கடைசிவரை துணை நிற்கிறான். பிறந்த குழந்தை ஒரு தெய்வக் குழந்தை என்று மடம் பிடுங்கிக் கொள்கிறது. மடத்தில் இருந்து குழந்தை எவ்வாறு மீட்கப்படுகிறது என்பதே கதை!

மடத்தின் மூடநம்பிக்கைதான் முக்கியக் கதை என்றால், படத்தின் முக்கால் மணி நேரக் கதையை அறிவியலிலும் சஸ்பென்ஸிலும் நகர்த்தி இருக்கக் கூடாது. ஓரளவுக்காகவது நன்றாக வந்திருக்கவேண்டிய படத்தை இந்த வகையில் கொஞ்சம் கொல்கிறார் இயக்குநர்.

அடுத்து, படம் அநியாயத்துக்கு மெல்ல போகிறது. கதாநாயகன் நடந்தால் மெல்ல நடக்கிறான். அடுத்து கதாநாயகி ஃபீல் செய்தபடியே மெல்ல நடக்கிறாள். அடுத்து கதாநாயகியின் அம்மா. அவளை ஃபீலுடன் அப்பா பார்க்கிறார். கதாநாயகி தாயானதை மூன்று டாக்டர்கள் நான்கு தடவை உறுதி செய்கிறார்கள். ஒரு குழந்தை தானே தெய்வம் என்று நான்கு தடவை உறுதி செய்கிறது. இது போதாது என்று, மெகா சீரியல்களில் வருவது போல, ஒவ்வொருவரின் எக்ஸ்பிரஷனையும் பத்து பத்து நொடிகள் காட்டி, பின்பு அதையே மொத்தமாகக் காட்டி சாவடித்துவிட்டார் இயக்குநர். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் இது நன்றாக இருந்ததன் காரணம், அதில் இழையோடிய நகைச்சுவை. இந்தப் படமோ மிக சீரியஸான படம். அதில் நகைச்சுவையை இழையோட வைக்க இயக்குநர் முயன்றிருப்பது புரிகிறது. ஆனால் அது எரிச்சலைத்தான் கொண்டு வருகிறது.

மடம் தொடர்பான காட்சிகள் வந்த பிறகு இந்த நகைச்சுவையை எல்லாம் ஏறக்கட்டிவிட்டு இயக்குநர் கொஞ்சம் சீரியஸாகிறார். படமும் அந்தக் குழந்தையும் ஒரு பரிதாபத்தைக் கொண்டு வருகிறது. மடம் மிகவும் பெரிய மடம் என்று சொல்வதற்காக, மடத்துக்கு இன்று பிரதமர் வருகிறார் என்றெல்லாம் செய்திகள் காண்பிக்கப்படுகின்றன. செய்திகள் என்றும் நினைவுக்கு வருகிறது. ஒரு விஷயம் நடந்துவிட்டால் உடனே பத்து செய்தி சானல்கள் இதே செய்தியைச் சொல்கின்றன. பத்தையும் காண்பிக்கிறார் இயக்குநர். செய்தித் தாள்களில் ஒரு செய்தி வந்தால், அதை எல்லாரும் படிக்கிறார்கள் என்று காட்ட இருபது பேர் படிப்பதை இருபது காட்சிகளாகக் காட்டுகிறார் இயக்குநர்!

மடம் தொடர்பான காட்சிகளில் நம்பகத்தன்மையின்மை தலைவிரித்தாடுகிறது. ஒரு பாரம்பரிய மடம் இப்படி ஒரு குழந்தையை தெய்வக் குழந்தை என்பதற்காகத் தூக்கிக் கொண்டு போகாது. பெற்றோரின் சம்மதமின்றி எந்தக் குழந்தையையும் ஒரு மடம் கொண்டு போகாது. குறைந்த பட்சம் இந்த மடம் கிராமப் புறத்தில் இருக்கும் ஒரு சின்ன கோவில் சார்ந்த மடம் என்றாவது காட்டி இருக்கலாம். ஆனால் பிரம்மாண்டத்துக்காக பெரிய மடம் என்றும், பாரம்பரிய மடம் என்றும், பிரதமரே வருவார் என்றும், மடத்தின் சாமியாரிடம் ஆசி வாங்க அமைச்சரே வந்து போவார் என்றெல்லாம் வேறு காட்டிவிட்டார்கள். எனவே லாஜிக் பொருந்தவில்லை.

பெற்றோரின் சம்மதத்துடன் குழந்தைகள் துறவிகளாகி மடத்துக்குத் தலைமை ஏற்பார்கள். அப்படி பூர்வாச்ரமத்தில் தன் மகனாக இருந்த ஒரு பையனைப் பெற்றோர்கள் பார்த்த புகைப்படம் இரண்டு நாள்கள் என்னை அலைக்கழித்தது. இப்படத்தில் வரும் அந்தச் சிறுமியின் முகமும் நம்மை அப்படி அலைக்கழிக்கும். இந்த அலைக்கழிப்பை இயக்குநர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இன்னொரு கோணத்தில், கொஞ்சம் புத்திசாலித்தனமாக இதை அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றும் சொல்லலாம்.

இப்படி சிக்கலான ஒரு கதையை எடுத்துக் கொண்டும், வேண்டுமென்றே மதத்தைச் சீண்டும் வேலையைச் செய்யவில்லை. இப்படி ஒரு மூட நம்பிக்கை இருக்கிறது என்பதை மட்டும் சொல்லும் நோக்கம் மட்டுமே இயக்குநருக்கு இருந்திருக்கிறது. அதில் கூட மூடநம்பிக்கை வேறு, கடவுள் நம்பிக்கை வேறு என்றொரு வசனமும் வருகிறது. எல்லா இடங்களில் எல்லா மதத்தையும் சேர்த்துக் கொள்கிறார் இயக்குநர். இதற்காகப் பாராட்டலாம்.

படத்தில் வசனங்கள் மிகக் கூர்மையாக உள்ளன. இசையும் நன்றாக இருக்கிறது. நடிகர்களின் தேர்வும் நடிப்பும் அபாரம். இத்தனை பிரச்சினைக்குரிய கதையை எடுத்துக்கொண்டாலும் துளி ஆபாசம் கூட இல்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதே நேரம், தன் மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தந்தை சொல்லவும், கதாநாயகன் உடனே அந்தச் சின்ன பெண்ணைப் பார்ப்பது, என்னதான் நகைச்சுவை என்றாலும், என்னதான் கதையோடு நேரடியாக சம்பந்தப்பட்டது என்றாலும், எனக்கு மிகவும் நெருடியது. அதைக் கடக்கவே ஒரு நிமிடம் ஆனது. மற்றபடி, நேரம் இருப்பவர்கள் இப்படத்தை ஒரு தடவை பார்க்கலாம். இந்தக் கதையின் மூலம் சொல்லப்  போவது என்ன என்ற தெளிவுடன், மெல்ல நகரும் காட்சிகளைக் கட்டுப் படுத்தி எடுத்திருந்தால், ஒரு பக்கக் கதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

இந்தப் படம் ஸீ5ல் வெளியாகி இருக்கிறது. திரையரங்குக்கு வரவில்லை. இப்படி படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஓடிடி சானல்களில் வெளியாவதால் அதை பலராலும் பார்க்க முடியாமல் போகிறது. சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்றில்லாமல், நூறு ரூபாய் கொடுத்து ஒரு திரைப்படத்தைப் பார்க்க முடியும் என்ற நிலை வராவிட்டால், இப்படிப் பல படங்கள் கண்டுகொள்ள ஆளில்லாமல் போய்விடும். தமிழ்த் திரை உலகம் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சினை இது.

Thanks: OreIndiaNews

Share

2020

2020ல் என்ன என்ன செய்தேன்?

கொரோனா என்ற ஒரு பெரிய அச்சுறுத்தல் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதனால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் ஒன்றுமே செய்யவில்லை. தினம் தினம் படம், தாய விளையாட்டு, சீட்டாட்டம், நல்ல உணவு இப்படியே போயின நாள்கள். ஒரு வரி கூட படிக்க மனம் வரவில்லை. இழுத்துப் பிடித்து வைத்து ஒரு நாவல் எழுதினேன். நான் எதிர்பாராத அளவுக்கு அது பேசப்பட்டது. மாயப் பெரு நதி மறக்க முடியாத நாவல்.

சில குறுங்கதைகளையும் மூன்று சிறுகதைகளையும் எழுதினேன். பன்னிரண்டு வலம் இதழ்கள் வெளியாகின. தடம் பதிப்பகம் சார்பாக சில புத்தகங்களைக் கொண்டு வர முடிந்தது. நரசிம்மனின் சிறகு முளைத்தது, நெல்லை கணேஷின் பாரதி என் காதலன், எஸ்.ஜி.சூர்யாவின் பாஜக வடகிழக்கை வென்றது எப்படி, எனது மாயப் பெரு நதி மற்றும் நடுநிலைமை அற்றவனின் சில தமிழ்சினிமா குறிப்புகள்.

வேலை சார்ந்து ஏப்ரல் முதல் ஜுன் மாதங்களில் கிழக்கில் என்ன செய்யப் போகிறோம், கிழக்கு என்ன செய்யப் போகிறது என்ற குழப்பமே எஞ்சி இருந்தது. ஜூலையில் மீண்டும் வேலைக்கு வந்து, எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து ஓரளவுக்கு விற்பனையைத் தொடங்க முடிந்தது. இந்த டிசம்பரில் ஏதோ கொஞ்சம் விற்பனை பரவாயில்லை என்ற இடத்துக்கு வந்திருக்கிறோம்.

ஜனவரியில் புத்தகக் கண்காட்சி இருக்காது என்பதே என் எண்ணம். ஆனால் புத்தகக் கண்காட்சியை நடத்திவிட பெரிய முயற்சிகள் நடக்கின்றன. நல்லதுதான், நடக்கட்டும். எல்லாப் பதிப்பாளர்களுமே விற்பனைச் சிக்கலில் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒரு மெகா சீரியலுக்கு வசனம் எழுதத் தொடங்கினேன். மெகா சீரியலைக் குறித்து செய்த கிண்டல்கள், நக்கல்கள் எல்லாம் என் அம்மா உருவில் எனக்கெதிராகவே நின்று என்னை கேலி செய்கின்றன.

மகா நடிகன் என்றொரு சத்யராஜ் படம். அதில் சத்யராஜ் பெரிய நடிகர். ஏகப்பட்ட பந்தா செய்வார். ஒரு துணை நடிகை நடிக்க வருவார். சத்யராஜ் அந்த நடிகையை, டிவி நடிகைதான என்று கிண்டலாகப் பேசுவார். எரிச்சலாகும் அந்த நடிகை சத்யராஜைப் பார்த்துச் சொல்வார், ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க, நீங்களும் ஒருநாள் டிவிக்குத்தான் வரணும் என்று. இதை இப்போதெல்லாம் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.

கொரோனா தந்த பயத்தையும் எதிர்கால வாழ்க்கைக் குழப்பத்தையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 2020 ஓரளவுக்கு நல்ல வருடமே. ஆனால் கொரோனா இந்த 2020 நினைவுகளே வேண்டாம் என்றே சொல்கிறது. 2021 வளமான ஆண்டாக இருக்கட்டும். அனுபவத்திலும் செழிப்பிலும்.

சென்ற மார்கழியில் பெருமாள் கோவிலுக்குச் சென்ற வண்ணம் இருந்தேன். இந்த மார்கழியில் கோவில் பக்கம் கூடப் போகவில்லை. வைகுண்ட ஏகாதஸிக்குக் கூட. 🙁 இப்படி ஒரு ஆண்டு இனி வேண்டாம்.மாயப் பெரு நதி நாவலும், சூரரைப் போற்று மற்றும் கணவர் பெயர் ரணசிங்கம் திரைப்பட விமர்சனங்களும் அதிக அளவில் பேசப்பட்டதில் 2020க்கு நன்றி.

இன்னும் நிறைய படித்திருக்கலாம். எழுதி இருக்கலாம். ஆனால் ஜூலை வரை கொரோனா மன நெருக்கடி. பின்பு நேரமில்லை. எப்போதும் இப்படி நேரமில்லை என்று சொல்லும்படியே இறைவன் வைத்திருக்கட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

படித்த புத்தகங்கள்:

புகார் நகரத்துப் பெருவணிகன், பிரபாரகன்

ராமோஜியம், இரா. முருகன்

வீரப்பன் வேட்டை, விஜய்குமார்

நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன் (கிழக்கு, ம.வெங்கடேசன், விரைவில் வெளியாகும்)

ஒரு இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து, வேலூர் இப்ராஹிம்

புதிய கல்விக் கொள்கை – ரங்கராஜ் பாண்டே

கடலுக்கு அப்பால், ப.சிங்காரம்

Alchemist (Tamil)

Who killed Sastri – Vivek Agnihotri

1984 – India’s guilty secret – Pav Singh

RSS 360 – Ratan Sharda

Our Moon has blood clots – Rahul Pandita

பார்த்த திரைப்படங்கள்:

சூரரைப் போற்று

கணவர் பெயர் ரணசிங்கம்

Samskara (Ka)

Kaanoru Heggadati (Ka)

Hamsa Geete (Ka)

Kaadu (Ka)

Phaniyamma (Ka)

Face to Face (Ka)

Neuron (Ka)

Geetha (Ka)

Sankashtakara Ganapathi (Ka)

Pathinettam padi (Ma)

Love Mocktail (Ka)

D/O Parvathamma

வானம் கொட்டட்டும்

Section 375 (Hi)

Law (Ka)

Striker (Ka)

Ottam (Ma)

Jack & Daniel (Ma)

Mundina Nildana (Ka)

Ayushmanbhava (Ka)

C U Soon (Ma)

Kannad Kothilla (Ka)

Paapam Cheyyadavar Kalleriyatte (Ma)

Sufiyum Sujathayum (Ma)

Alidu Uluduvaru (Ka)

பெண் க்வின்

Aakala Ratri (Ka)

Eeda (Ma)

Nalpathiyonnu (Ma)

Anjaam Pathira (Ma)

Forensic (Ma)

Kappela (Ma)

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு

சுட்டுப் பிடிக்க உத்தரவு

ஆர்.கே.நகர்

செத்தும் ஆயிரம் பொன்

சைக்கோ

Chola (Ma)

பொன்மகள் வந்தாள்

99 (Ka)

Kapata Nataka Patradari (Ka)

Parasite

Android Kunjappan 5.25

தாராள பிரபு

வி1 மர்டர் கேஸ்

Kettiyolanu ente Malaka (Ma)

Shikara (Hi)

Trance (Ma)

பாரம்

திரௌபதி

Nanna prakara (Ka)

Knock Knock

Vettah (Ma)

Ayyappanum Koshiyum (Ma)

Avane Sriman Narayana (Ka)

Virus (Ma)

Thallana (Ka)

Before the Rains

Hero

Driving Lisence (Ma)

Puss in the Boots

Dia (Ka)

Porinji Mariyam Jose (Ma)

Helen (Ma)

Padmavat

பக்ரீத்

Jallikkattu (Ma)

Ea.Ma.Yu (Ma)

Gantumoote (Ka)

அருவம்

தர்பார்

Share