Archive for விழா

பபாஸி தேர்தல் – இது எங்க ஏரியா!








================




================



Share

கொலு

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின்பு இன்றுதான் கொலு பார்ப்பதற்காக என்னுடைய உறவினர் வீட்டுக்குப் போனேன். நான் கல்லுப்பட்டியில் இருந்தபோது பல வீடுகளுக்குக் கொலு பார்க்கப்போவோம். அந்த நினைவு வந்தது. கல்லுப்பட்டியில் கொலுவிற்கு வீடே அமர்க்களப்படும். கடும் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் என் அம்மா வழிப் பாட்டிவீடு அது. சிரத்தையாக கொலு வைத்து, கலசம் வைத்து வழிபட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு சுண்டல் செய்து வரும் எல்லாருக்கும் விநியோகிப்பார்கள். கொலு வைப்பதற்கு முன்பும், கொலு முடிந்த பின்னர் பொம்மைகளை எடுத்து வைப்பதற்குள்ளும் வீடு ரணகளமாகியதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

கொலுவை வீட்டின் முக்கிய அறையில் வைப்பார்கள். அடுத்த ஆண்டில் திடீரென பாட்டி கொலுவை தனியறையில் வைக்கச் சொல்லிவிட்டார். அது மாமாவும் அத்தையும் உறங்கும் இடம். ரணகளத்திற்கான காட்சிகள் தொடங்கிவிட்டன. என்ன வெட்டுக்குத்து நடந்தாலும் பாட்டியை யாரும் ஜெயித்ததில்லை. சாகும்போதுகூட இரண்டு தடவை டாக்டர் தோற்றுவிட்டார். மதுரை மருத்துவமனையில், இந்தக் கிழவி பிழைக்காது என்று வீட்டுக்கொண்டு போகச் சொல்லி, வரும் வழியில் திருமங்கலத்தில் இறுதிச் சடங்கிற்கு ஆச்சார்களைச் சொல்லி வீட்டிற்கு வந்தால், கிழவி எழுந்து உட்கார்ந்துகொண்டுவிட்டது. மீண்டும் மதுரை டாக்டர்க்கு ஃபோன், ஆச்சார்களுக்கு ஃபோன் என எல்லாரையும் தோற்கடித்தது பாட்டி. அடுத்தமுறை மீண்டும் டாக்டரைத் தோற்கடித்தது பாட்டி. இன்னும் ஒரு வருஷம் இருக்கும் என்று சொன்ன பத்தாவது நாளில் அந்த வருடக் கொலுவைப் பார்க்காமலேயே போய்ச் சேர்ந்தது பாட்டி. சாகும்வரை ஜெயித்துக்கொண்டே இருந்த பாட்டி, தன் வீட்டிற்கு வந்த மாட்டுப்பெண்களிடமா தோற்கும்? தனியறையில்தான் கொலு வைத்தார்கள். இடம் தீர்மானித்தாகிவிட்டது. எத்தனை படி வைக்கலாம் என்பதில் அடுத்த பிரச்சினை தொடங்கும். படிகள் தீர்மானிக்கப்பட்டால் எப்படி லைட் செட் போடலாம் என்பதில் பிரச்சினை வரும். எல்லாவற்றையும் தீர்த்து முதல் நாள் கொலுவைக் கண்ணில் பார்த்து, வருபவர்களுக்கெல்லாம் சுண்டல் கொடுத்ததும்தான் பெருமூச்சு விடும் பாட்டி. மற்ற வீடுகளுக்குக் கொலு பார்க்கப் போகும். வரும்போது ஒரு பெரிய சண்டைக்கான முகாந்திரத்துடன் கிழவி வரும். நான் சொன்னமாதிரி வெச்சிருந்தா அவ வீட்ட விட நம்ம வீட்டுல நல்லா இருக்கும் என்று ஆரம்பித்து, வீட்டிலிருக்கும் எல்லாரையும் ஒரு வாங்கு வாங்கிவிடும். இதில் ஏடாகூடமாக எதாவது ஒரு பெண் வீட்டிற்கு விலக்கு என்றால் கேட்கவே வேண்டாம்.

நவராத்திரி நாள்களில் ஒரு பட்டாளமாக கொலு பார்க்கப்போவார்கள். நான் என் அம்மாவுடன் ஒட்டிக்கொள்வேன். ஒவ்வொரு வீடாக தினமும் அசராமல் கொலு பார்க்கப்போவார்கள். எல்லார் வீட்டிலும் ஏதேனும் சுண்டல் இருக்கும். எல்லார் வீட்டிலும் சுண்டல் அருமை என்று சொல்லிவிட்டு வருவார்கள். கடைசி நாள் கொலு பார்க்கச் செல்லும்போதுக்கூட, ஏற்கெனவே எட்டு நாள் அந்த பொம்மைகளைப் பார்த்தே இருக்காதது மாதிரி, புதுக்கருத்து சொல்வார்கள். அந்த வீட்டு அம்மா முகம் மலர்ந்து அதைக் கேட்டுக்கொள்ளும்.

மாமி ஒரு பாட்டு பாடலாமே என்று ஒவ்வொருமுறையும் கேட்டபின்புதான் மாமி பாடத் துவங்குவார். ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி பாட்டைக் கேட்டாலே பிச்சி பிடுங்கி ஓடலாமா என்றிருக்கும். ஆனால் மாமியோ சுசிலாவின் குரலில்கூட லேசாக பிசிறு இருந்தது என்கிற பாவத்தில் பாடிக்கொண்டிருப்பார். முடித்தவுடன் வெற்றியும் நாணமும் கலந்த சிரிப்பில் தலைமுடியைக் கோதிக்கொண்டு ‘எப்படி இருந்ததிடீ’ என்பார். அதற்குள் திடீரென ஒரு அக்கா கேட்காமலேயே நவராத்திரி நாயகியே என்று ஏதேனும் ஆரம்பிப்பாள்.

என் அம்மாவும் பாடுவாள்.

‘கற்பகவள்ளி நின் பொற்பதங்கள் பிடித்தே… மின்ன மாதிரி இல்லை. வயசாயிடுத்து. பொற்பதங்கள் பிடித்தே நற்கதி அருள்வாயம்மா… வயசுல அப்படி பாடுவேன். பற்பலரும் போற்றும் பனிமதுராபுரியில்.. லலலலா லலலா… ஆஸ்துமா வந்து முடியல… வரியும் மறந்துடுச்சு… நீ பாடுவியேடி…’

நான் அம்மாவிடம் இன்று சொன்னேன் இதைப் பற்றி. ‘இவன் எல்லாம் கண்டான்’ என்றாள். அவள் வயசுக் காலத்திலே இருந்து இப்படித்தான் ‘வயசுக்காலத்துல நல்லாப்பாடுவேன்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள் – என்று சொன்னேன். சிரித்துக்கொண்டாள்.

நாங்கள் இன்று கொலு பார்க்க வந்தது குறித்து என் உறவினருக்கு மிகவும் மகிழ்ச்சி. என் மனைவி வந்திருக்கிறாள் என்று தெரிந்தவுடன் பக்கத்துவீட்டு, எதிர்வீட்டுப் பெண்கள் வந்து என் மனைவியை அழைத்துச் சென்றார்கள். இதற்கு முன்பு பார்த்ததில்லை என்கிற எவ்வித தடங்கல்களும் இல்லை. உடனடி நட்பு. நவராத்திரி நட்புக்கான பண்டிகை. கடந்த நான்குவருடங்களில் என் மனைவியும் இதுபோலப் போனதில்லை என்பதால் அவளுக்கு இது புதிய அனுபவமாக இருந்தது. நவராத்திரி பெண்கள் பண்டிகை. அதுவும் வீட்டில் கன்னிப் பெண்கள் இருந்தால் அந்த வீடே களைகொண்டுவிடுகிறது என்பதை கண்கூடாகப் பார்க்கமுடிந்தது.

முன்பு அக்கிரஹாரத்தில் இருந்தபோது அக்கிரஹாரமே தாவணி உடுத்திகொள்ளும். தெருவெங்கும் வண்ணங்கள் இழைந்தோட பையன்கள் வாய் பார்த்திருப்பார்கள். இழந்த வயது திரும்ப வருவதில்லை. நவராத்திரி வருகிறது.

ஒரு காலத்தில் யாருக்கும் அலுவலக வேலை என்பது இல்லாதிருந்த காலத்தில், பணத்திற்காக அதிகம் உழைக்கவேண்டிய கட்டாயம் இல்லாதிருந்த காலத்தில், தேவை குறைவாகவும் அதை அடைவது எளிதாகவும் இருந்த மகிழ்ச்சி நிறைந்த காலத்தில், பண்டிகைகளே மக்களை உற்சாகமாக வைத்திருந்திருக்கிறது. ஒன்பது நாள்களும் ஒரு ஊரே கொண்டாட்டத்தில் இருந்திருக்கும். கோயில்களில் கொலு வைக்கும் வழக்கம் உண்டு. நவராத்திரி பெண்களுக்கான விழாவாதலால், வீட்டிலும் கோயிலிலும் கூடும் பெண்களைக் கண்டு பழம்கால மன்னர்களும் தளபதிகளும் காதல் கொண்டு கல்யாணம் செய்திருக்கக்கூடும். ஒருவகையில் நவராத்திரி என்பதே வயசுப்பெண்களுக்காக விழாவாக இருந்திருக்கலாம் – இப்படி யோசித்துக் கொண்டே போனபோது நவராத்திரியை மிகவும் பிடித்துவிட்டது.

மீனாட்சி அம்மன் கோவில் கொலு வைப்பார்கள். கொலுவைப் பார்த்துமுடிக்கும்போது கால் வலி வந்துவிடும். அத்தனை பொம்மைகள் வைப்பார்கள். எங்கள் வீட்டில் கொலு கிடையாது. முன்பு ஒருமுறை பல வருடங்களுக்குமுன்பு எங்கள் வீட்டில் கொலு வைத்தபோது எங்கள் முக்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டாராம். அதிலிருந்து கொலு வைக்காமல் இருந்திருக்கிறார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து, இன்னொரு தடவை கொலு வைத்துப் பார்க்கலாம் என்று வைத்தபோது, தீபம் கீழே விழுந்து கொலு மண்டபம் எரிந்துவிட்டதாம். இப்படி தடங்கல் வந்ததால் என் தாத்தா இனிமேல் கொலு வைக்கவேண்டாம் என்று முடிவெடுத்து, எல்லா பொம்மைகளையும் கோவிலுக்குக் கொடுத்துவிட்டாராம். மீனாட்சி அம்மன் கோவிலில் கொலுபார்க்கும்போதெல்லாம் இந்த நினைவு எனக்கு வரும். இப்போது எத்தனை பொம்மைகளைக் கொலுவில் வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நெல்லையப்பரின் தேர்த்தட்டுகளின் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்துவருவது பற்றி ஊர் பெருசுகள் புலம்புவதுபோல, மீனாட்சி அம்மன் கோவிலில் குறைந்துவரும் பொம்மைகளின் எண்ணிக்கையைப் பற்றியும் மதுரை புலம்புவதுண்டு.

இந்த பரபரப்பான காலத்திலும் மக்கள் விடாமல் கொலு வைப்பது சந்தோஷமாக இருக்கிறது. குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், எந்த வீட்டில் எந்தப் பெண் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்துகொள்ளவும், குறிப்பிட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கான ஒரு தொடர்பு வெளியாகவும் இப்பண்டிகை விளங்குகிறது என்பதை இன்று நேரில் பார்த்தேன்.

என் மனைவி ஐந்தாறு வீடுகளுக்குச் சென்றுவிட்டு, கை நிறைய பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், ஐந்தாறு வகை சுண்டலகள், ஒரு சிறிய எவர்சில்வர் தட்டு என சுமந்துகொண்டு வந்தாள். அந்த வீட்டுல அப்படி இருந்தது, இந்த வீட்டுல இப்படி இருந்தது, நம்ம வீட்டுலதான் இதெல்லாம் ஒண்ணுமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாள். கல்லுப்பட்டியில் என் அம்மா வழிப்பாட்டி இப்படித்தான் சொல்லுவாள். ‘ஒரு ஏரி கட்டி நாலஞ்சு படகை மிதக்க விட்டு, சுத்திலும் பார்க் போட்டு, மண்ணு ரொப்பி, லைட் செட் போட்டுட்டா, நம்ம வீட்டு கொலுதான் இருக்கிறதுக்குள்ள நல்லா இருக்கும்…’

Share

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

(இது அரசுக்கெதிரான நடவடிக்கை அல்ல.)

Share

தேவதேவனுக்கு விளக்கு விருது (2007) விழா அழைப்பிதழ்

Share

உயிர்மை ஏழு நாவல்கள் வெளியீட்டமர்வு – டிசம்பர் 2007

* மனுஷய புத்திரன் வரவேற்புரை கூற விழா தொடங்கியது.

* இந்திரா பார்த்தசாரதி தலைமையேற்றார். தமிழனவனின் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ புத்தகத்தை வெளியிட்டு, அதைப் பற்றிப் பேசினார். தான் வார்ஸாவில் வாழ்ந்த காலத்தில் பார்த்த மனிதர்களுக்கும் தற்போது தமிழவன் தன் நாவல் வழியாகக் கண்டடைந்த மனிதர்களுக்குமிடையே உள்ள வேறுபாட்டை விளக்கினார். தான் வாழ்ந்த காலத்தில் ராணுவத்தின் தீவிரக் கட்டுப்பாட்டில் இருந்த நிலம், தற்போது சுதந்திரத்திற்குப் பின்னான மனநிலையை எப்படி எதிர்கொள்கிறது என்பதையும் தொட்டுப் பேசினார்.

* ஜீ.முருகனின் மரம் என்கிற நாவலை வெளியிட்டு திலீப்குமார் பேசினார். இயல்பாகவே திலீப்குமாரின் குரல் மிக மென்மையானது. அதனால் அவர் பேசியது பலருக்கும் கேட்கவில்லை. மரம் நாவலில் வரும் மனிதர்கள் எப்படி பாலிச்சை மிகுந்தவர்களாக தீவிரமாக உள்ளார்கள் என்பதைப் பற்றிப் பேசினார் திலீப்.

* புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ‘கண்யாவனங்கள்’ என்கிற மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டு பேசினார் யுவன் சந்திரசேகர். எப்போதும் சிரிப்பும் நட்புமாக இருக்கும் யுவன் மேடையை பேச ஆரம்பித்த ஐந்தே நிமிடங்கள் வளைத்துக்கொண்டார். நாவல் பற்றிப் பேசப்போவதில்லை என்று சொன்ன யுவன் தமிழின் மொழிபெயர்ப்பு சார்ந்த கருத்துகளைப் பற்றிப் பேசினார். அழகான இயல்பான தமிழில் அவரது பேச்சு மிகச்சிறப்பாக இருந்தது. மொழிபெயர்ப்பை இரண்டாகப் பிரித்துக்கொண்டு (பொதுநீரோட்ட மொழிபெயர்ப்பு, சிற்றிதழ் சார்ந்த மொழிபெயர்ப்பு) அதன் சாதக பாதக அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தார். இந்நாவல் எப்படி சிறப்பாக, மூல நூல் சொல்ல நினைக்கும் கருத்துகளைச் சிதைக்காமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் வலியுறுத்தினார். புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் நாவலை வாசிக்க விரும்புவர்கள் கன்யாவனத்தில் தொடங்கி, அதன் வழியாக மீஸான் கற்கள், அதன் பின்னர் மஹ்சர் பெருவெளி எனச் செல்லலாம் என்றும் ஆலோசனை சொன்னார். வெளிநாட்டில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பதில் ஆபிதினின் இடம் ஒரு முக்கிய நாவல் என்றும் அது கீழ்த்தட்டு மக்களைப் பேசுகிறது என்றும் சொல்லிய யுவன், இந்நாவல் அதற்கு மாறாக ஒரு அராபிய முதலாளி பற்றிப் பேசுகிறது என்றும் சொன்னார். நாவலில் வெக்கையும் தகிப்பும் எப்படி உள்ளும் புறமும் மையச்சரடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

* சி.வி.பாலகிருஷ்ணனின் ‘திசை’ மொழிபெயர்ப்பு நாவலை வெளியிட்டு தமிழவன் பேசினார். 1995க்குப் பின் வந்த தமிழ் நாவலைப் படிக்க வாய்ப்பிருக்கவில்லை என்று ஆரம்பித்த தமிழவன், நாவலின் கட்டுமானம் பற்றிப் பேசினார். கடந்த பத்து வருடங்களில் தமிழர்களின் சிந்தனை, வெளிப்பாடு வரைபடம் நேர் குத்துக்கோடுகளாக ஆகிவிட்டது என்றும் அதற்கு முன்னர் கிடைமட்டமாக இருந்தது என்றும் சொன்னார். கைகளால் காற்றில் வரைந்து காட்டினார்! இந்நாவலில் வரும் திடீர் திடீர் பாத்திரங்கள் அதே மாதிரி காணாமல் போகின்றன, ஆனால் இவையே ஒரு சுவையான விஷயமாக நாவல் நெடுகிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் சொன்னார். மொழிபெயர்ப்பின் கச்சிதம் பற்றியும் பேசினார்.


* எஸ். செந்தில்குமாரின் ஜீ.சௌந்தர ராஜனின் கதை என்னும் நூலைப் பற்றிப் பேசினார் நாஞ்சில் நாடன். நூலில் தெற்றுப் பார்க்கப் போவதில்லை என்று தொடங்கிய அவர், இந்நூல் இன்னும் பெரியதாக எழுதப்பட்டிருக்கலாம் என்றும் அதற்கான தேவையும் அவகாசமும் இருக்கிறது என்றும் சொன்னார். செந்தில் குமார் புதிய எழுத்தாளர் என்ற போதிலும் அவர் எடுத்துக்கொண்டிருக்கும் பிரச்சினை இன்றைய நிலையில் கண்டிப்பாக விவாதிக்கப்படவேண்டியது என்பதால் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் சொன்னார்.

* வாமு.கோமுவின் கள்ளி நாவலை வெளியிட்டுப் பேச வந்தார் சாரு நிவேதிதா. ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கடைசி பத்து ஓவர்கள் இங்கிருந்துதான் தொடங்கியது! தமிழவனுடன் 1978 முதல் 1985 வரை தனக்கிருந்த ஆழமான நட்பு, தினம் தினம் கடிதம் என்று தொடங்கிய சாரு, அதை இப்படி முடித்தார். தமிழவன் எழுதிய நாவல் (பெயர் மறந்துவிட்டது, சாவு என்று எதோ வரும்!) ஒன்றைப் பற்றி சாரு கடுமையாக விமர்சிக்க அன்றோடு முடிவுக்கு வந்ததாம் தமிழவனுடனான நட்பு. இதேபோல் யுவன் சந்திரசேகரைப் பற்றியும் பேசினார். ய்வனுடன் மிக ஆழமான நட்பு இருந்ததாகவும் ஒரு நாள் பார்க்காவிட்டால் கூட தலை வெடித்துவிடும் என்கிற அளவிற்கு நட்பு இருந்ததாகவும் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் நடைபாதையின் படிகளில் அமர்ந்து இலக்கியம் பற்றிப் பேசியதாகவும் சொன்ன சாரு, அன்றைக்கு யுவனின் சிறுகதைகளின் கையெழுத்துப் பிரதியைப் படித்துவிட்டு யுவனை கொண்டாடுவாராம். இந்நிலையில் யுவன் இன்னொரு கையெழுத்துப் பிரதியைத் தந்தாராம். ‘குள்ளச் சித்தன் சரித்திரம்.’ அதைப் படித்துவிட்டு மறுநாள் 15 நிமிடம் காரசாரமாக சாரு யுவனை விமர்சிக்க, அன்றோடு முடிவுக்கு வந்ததாம் யுவனின் நட்பு! அதன் பின்பு டிசம்பருக்கு டிசம்பர் உயிர்மை விழாவில்தான் பார்க்கமுடிகிறதாம். அதேபோல் வாமு கோமுவின் அறிமுகத்தையும் அவரது சிறுகதைகளை தான் கொண்டாடியதையும் சொன்ன சாரு, இந்நாவல் மீண்டும் இயல்புவாதம் என்கிற மூடப்பட்ட பிரதிக்குள் விழுந்துவிட்டது என்றும் சொன்னார். பின் நவீனத்துவமே திறந்த எழுத்து என்றும் அதுவே இன்றைக்குத் தேவை என்றும் பின்நவீனத்துவ மாணவன் என்கிற முறையில் தன்னால் இதுபோன்ற எழுத்துகளைப் படிக்கமுடிவதில்லை என்றும் சொன்ன சாரு, பின் நவீனத்துவத்தைப் பற்றியும் கொஞ்சம் விளக்கினார். கடைசியில், வாமு. கோமு இன்றோடு பேச்சை நிறுத்திவிடக்கூடாது என்றும் சொல்லி, let us be friends என்று சொல்லி உரையை நிறைவு செய்தார்.

* எஸ். ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலை வெளியிட்டு பேசினார் ஜெயமோகன். தொடங்கும்போதே சாருவிற்கான பதிலாகத் தொடங்கினார். சாருவின் எழுத்தை தான் பொருட்படுத்தியது கிடையாது என்றும் எல்லாரும் எழுதுகிறார்கள், சாருவும் எழுதுகிறார் என்ற அளவில் மட்டுமே நினைத்திருந்ததாகவும் சொன்ன ஜெயமோகன், ‘ஸீரோ டிகிரி’ நாவலைப் படித்த பின்புதான் அதில் ஒரு நாவல் இருக்கிறது என்று அறிந்து, அதை சாருவிற்குக் கடிதமாகவும் அனுப்பியதாகச் சொன்னார். அதன்பின்புதான் சாரு தன்னை நண்பன்¡க நினைத்தார் என்று சொன்னார்! அதேபோல் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தில், நடையில் தனக்கு கடுமையான விமர்சனம் இருந்தது என்றும் அதை சொல்லியும் இருக்கிறேன் என்றும் சொன்ன ஜெயமோகன், உப பாண்டவம் படித்தபோது, எஸ். ராமகிருஷ்ணனில் சிறந்த நாவலாசிரியர் இருப்பதை அறிந்தேன் என்றும் சொன்னார். உப பாண்டவம் முக்கியமான நாவல் என்றும் நெடுங்குருதி தமிழின் நல்ல படைப்புகளுள் ஒன்று என்று நம்புவதாகவும் சொன்னார் ஜெயமோகன். அதன்பின் எஸ்.ராமகிருஷ்ணனின் நட்பும் கிடைத்தது என்றும் சொல்லி, இது இயல்பானது என்றார். ஒரு சமயம் ஜெயமோகனை யுவன் சந்திரசேகர் தொலைபேசியில் அழைத்து, அவருடன் சாரு பேசுவதே இல்லை என்றும் ஜெயமோகன் சாருவை அழைத்து இது பற்றிச் சொல்லவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாராம். ஜெயமோகன் என்ன நடந்தது என்று கேட்டதற்கு, சாரு கோணல் பக்கங்கள் புத்தகத்தைத் தந்தார், அதைப் படித்துவிட்டு கருத்து சொன்னேன், அன்றிலிருந்து சாரு பேசுவதில்லை என்றாராம் யுவன் சந்திரசேகர்! பின்பு எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் நாவல் பற்றிப் பேசினார் ஜெயமோகன். யாமம் நாவல் அத்தர் தயாரிக்கும் இஸ்லாமிய குடும்பத்தின் கதை என்றும் அது ஷாஜஹானின் அரண்மனையில் தொடங்கி, கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள், அதன் பின்பு வந்த சென்னை பட்டினம், அது சந்தித்த போர்கள் வழி நீள்கிறது என்றார். Metaphor மூலம் கட்டமைக்கப்படும் metaphysics எனப்படும் மீப்பொருண்மை வாதம் பற்றிய விளக்கிய ஜெயமோகன், அதை இந்நாவல் எப்படி வெற்றிகரமாக கையாண்டிருக்கிறது என்றும் விளக்கினார். இப்பிரபஞ்சத்திற்கு இணையான இன்னொரு பிரபஞ்சத்தை முன்வைக்கிறது இந்நாவல் என்றார். போர்ஹேயின் எழுத்தைப் பின்பற்றியிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன், அவரது நடையை அப்படியே பின்பற்றாமல் எழுதியிருப்பது தனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப்படுகிறது என்று சொன்ன ஜெயமோகன், இந்நாவலைப் படிக்க சிறந்த வழி, வாசனை மூலம் கண்டடைவது என்றார்.

* விழா இனிதே முடிவடைந்தது.

(குறிப்பு 1: இதிலிருக்கும் விஷயங்கள் அத்தனையும் என் நினைவிலிருந்து எழுதியது. குறிப்புகளும் எடுக்கவில்லை. அதனால் எந்த எழுத்தாளர்களாவது இப்படி பேசவில்லை என்றோ, இந்த வார்த்தையைச் சொல்லவில்லை என்றோ சொல்வார்களானால், அதுவே சரி.

குறிப்பு 2: விழாவில் பார்த்த வலைப்பதிவுலக, இணைய நண்பர்கள் – மதுமிதா, சாபு, அப்துல் ஜப்பார், நிர்மலா. எல்லாருடனும் ஹாய் சொல்ல மட்டுமே நேரம் இருந்தது.)

வெளியீட்டமர்வு நடந்த நாள்: 15.12.007 மாலை 6 மணி
இடம்: புக் பாயிண்ட், (ஸ்பென்ஸர் பிளாசா எதிரில்),சென்னை.

Share

கருட பஞ்சமி

இன்று கருட பஞ்சமி.

இதன் ஐதீகக் கதை:

முன்னொரு காலத்தில் ஏழு அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டிப் பிழைக்கிறவர்கள். அப்படி ஒருநாள் அந்தத் தங்கை தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒரு நாகத்தைக் கௌவிக்கொண்டு சென்றது. அந்த நாகம் தங்கை கொண்டு செல்லும் கஞ்சியில் விஷம் கக்கிவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அதே கஞ்சியை வழங்கினாள். அதை உண்ட அண்ணன்கள் அனைவரும் இறந்துவிட்டனர். தினமும் செய்வதுபோலத்தானே செய்தோம், இன்று என்ன இப்படி ஆகிவிட்டது என்று வருத்தப்பட்ட அந்தத் தங்கை தெய்வத்தை நினைத்து அழுது தொழுதாள். அந்த வழியாக வந்த பார்வதியும் பரமேஸ்வரனும் அவளைப் பார்த்து, நடுக்காடில் இருந்துகொண்டு ஏன் அழுகிறாய் என்று கேட்டார்கள். அவள் நடந்ததைக் கூறினாள். ‘இன்று கருடபஞ்சமி. அதை மறந்துவிட்டு பூஜை செய்யாமல் நீ வந்துவிட்டாய். அதுதான் இதற்குக் காரணம். இங்கேயே இப்போது நாகருக்குப் பூஜை செய். கங்கணக் கயிறில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண் எடுத்து, அட்சதை சேர்த்து இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்தவும். அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்” என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை உணர்த்தினர். அவளும் அதே போல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.

இப்போதும் கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப் பெற்றுக்கொள்கிறார்கள். கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.

Share

நாக சதுர்த்தி

இன்று நாக சதுர்த்தி.


தன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் நோன்பு செய்து வேண்டிக்கொள்ளும் நாள்.. இந்த நாளில் தாய்மார்கள் உபவாசம் இருக்கவேண்டுமென்பது ஐதீகம். எங்கள் வீட்டில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களுள் ஒன்று.

இதற்கான ஐதீகக் கதை:

முன்பொரு காலத்தில் ஒருவனுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவன் முதல் பெண்ணை நல்ல ஒருவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். இரண்டாவது பெண்ணை, கைகால்கள் செயலிழந்து கிட்டத்தட்ட நடைபிணம் போலிருக்கும் ஒருவனுக்குத் திருமணம் செய்துவைத்தான். அவனது சூழ்நிலை அப்படி இருந்தது. அப்படி நடைபிணம் போலிருந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்ட பெண் தனக்கும் நல்ல வாழ்வு வேண்டும் என்றும் குழந்தைச் செல்வங்கள் வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொண்டாள். பார்வதியும் பரமேஸ்வரனும் நேரில் தோன்றி, நாகரை வழிபடுமாறு அவளுக்கு அருளிச் சென்றார்கள். பார்வதியும் பரமேஸ்வரனும் சொன்னது போலவே, அவளும் விரளி மஞ்சளைத் தேய்த்து, அதில் கஜபத்ர இழை (திரி) தோய்த்து, நாகரை வைத்து வழிபட்டாள். அப்படி வழிபடும்போது இருக்கவேண்டிய நோன்பு முறைகளும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. (அப்புத்தகம் என்னிடமில்லை. இக்கதை கூட வாய்வழியாகக் கேட்டு எழுதுவதே. தவறுகள் இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தவும். நன்றி.) பார்வதியும் பரமேஸ்வரனும் சொன்னபடியே நாகபூஜையால் அப்பெண்ணின் கணவன் நலம்பெற்று அவ்விரு தம்பதியரும் சந்தோஷமாய் வாழ்ந்தார்கள்.

எனவே நாகசதுர்த்தி அன்று செய்யப்படும் நாகபூஜை குழந்தைகளின் நல்வாழ்விற்கானது.

நாளை கருட பஞ்சமி.

Share