படிக்க வேண்டியவை

<< >>

Sirdar Udham – Hindi Movie

சர்தார் உதம் (H) – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படம். இப்போதுதான் பார்த்தேன். ஹிந்தித் திரைப்படம் என்றாலும், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான மேக்கிங். மே அடல் ஹூம், சாவர்க்கர் திரைப்படங்களில் அந்தக் காலத்தைக் கண்முன்னே கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தவில்லை. காரணம், அப்படி படம் எடுப்பது அதிக செலவையும் கற்பனையையும் கோரும் ஒன்று. காலாபாணி திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம்.

Share

Vinayak Damodar Savakar (Hindi Movie)

விநாயக் தாமோதர் சாவர்க்கர் (H) – சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். சாவர்க்கரின் அரசியல் வாழ்க்கை மூன்று கட்டங்கள் கொண்டது. ஒன்று, அவரது ஆரம்ப காலப் போராட்டங்கள், ஆயுதம் மூலம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டது. இரண்டாவது, அந்தமான் சிறையில் அவர் கழித்த கொடூரமான சித்திரவதைக் காலங்கள். அங்கேயும் சாவர்க்கர் செய்த அரசியல், சமூகப் போராட்டங்கள். மூன்றாவது, அவரது விடுதலைக்குப் பின்னரான இந்திய

Share

Attam (M)

ஆட்டம் (M) – இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக இது இருக்கக் கூடும். சிறந்த திரைக்கதை, சரியாகச் சொல்லவேண்டுமென்றால் நுணுக்கமான திரைக்கதை. அபாரமான அனுபவம். முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ச்சியான வசனங்கள். ஆனால் ஆழமான வசனங்கள். ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஆழமாக்குகிறது. ஒட்டுமொத்தமாக ஆண்களின் உலகத்தை உருவாக்கிக் காட்டுகிறது. மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதையும்,

Share

OTT வழியாக வரும் திரைப்படங்கள்

கணவர் பெயர் ரணசிங்கம் படத்தின்போதே எழுத நினைத்தேன். படத்தின் விமர்சனம் தடம் மாறிப் போய்விடுமோ என்று எழுதாமல் விட்டேன். இந்தத் திரைப்படம் பார்க்க ஒரு காட்சிக்கு 199 ரூ. சென்னையில் தியேட்டருக்குப் போய் ஒரு படம் பார்த்துவிட்டு வர எல்லாச் செலவுகளும் சேர்த்து குறைந்தது 500 ரூபாய் வரை ஆகும். நேரமும் கணிசமாகவே ஆகும். வீட்டில் அமர்ந்து பார்த்தால் 199 ரூபாய் மட்டுமே. ஆனால் திரையரங்கு தரும் பிரமாண்டம் நிச்சயம் தவறிப் போகும். பெரிய தொலைக்காட்சி, 5.1 என்று இந்த அனுபவத்தைக் கொஞ்சம் நெருங்கலாம் என்றாலும், திரையரங்கு தரும் அனுபவம் அலாதிதான். அதேசமயம், பணமும் நேரமும் எத்தனை மிச்சம் என்பதையும் கணக்கில் எடுக்கவேண்டும்.

விஸ்வரூபம் திரைப்படம் வந்தபோது கமல் இதைச் செய்ய நினைத்தார். அன்று நடந்த தவறு என்ன? சுருக்கமாகச் சொன்னால், பேராசை. ஒரு காட்சிக்கு ஆயிரம் ரூபாய்! இது கமலின் முடிவா, டிஷ் நிறுவனத்தின் முடிவா என்பதெல்லாம் தெரியாது. ஒரு குடும்பத்துக்கே ஆயிரம் ரூபாய்தான் என்று யோசித்து அவர்களே சமாதானம் ஆகி இருப்பார்கள் போல. பொருட்படுத்தத் தக்க அளவுக்குக் கூட முன்பதிவு இல்லை. அத்திட்டம் கைவிடப்பட்டு, திரைப்படம் வழக்கம்போல் திரையரங்கிலேயே வெளியானது. இன்று க/பெ 199 ரூபாய்க்கு வந்திருக்கிறது.

அமேஸான் ப்ரைம் ஒரு மாதத்துக்கு 160 ரூபாய் வரை வாங்கிக்கொண்டு பல திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கிறது. எப்படியும் புதுத் திரைப்படம் ஒன்றாவது பார்த்துவிட முடிகிறது. வேற்று மொழிப் படங்களையும் பார்க்க முடிகிறது. அதை ஒப்பிட்டால் இந்த 199 ரூபாயே அதிகம் என்கிற தோற்றம் உருவாகி வந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.

டிஷ் வழியாகப் பார்க்கப்படும் படங்களில் பிரச்சினைகள் என்ன? டாடா ஸ்கையின் ஆன் டிமாண்ட் மூலம் படம் பார்த்தால், அப்படத்தை அந்தத் தினம் முழுக்கப் பார்க்கலாம். ஆனால் க/பெ அப்படிப் பார்க்க முடியவில்லை. ஒரு காட்சி மட்டுமே. அதாவது திரையரங்கில் பார்ப்பதைப் போலவே. அன்று திடீரென மழை பெய்து படம் தெரியாமல் போனால்? மின்சாரம் தடைபட்டால்? வீட்டுக்கு யாராவது வந்துவிட்டால்? பணம் போனது போனதுதான். திரையரங்கில் இப்பிரச்சினைகள் எல்லாம் இல்லை. வீட்டில் இந்த அத்தனை பிரச்சினைகளும் உண்டு. எனவே ஒரு நாளைக்கு ஒரு காட்சி என்பதை மாற்றவேண்டும்.

அதேபோல் எதாவது ஒரு சானலில் என்பதைக் கைவிட வேண்டும். ஏன் எக்ஸ்க்ளூசிவிட்டிக்குப் (தனியுரிமை) போகிறார்கள் என்றே தெரியவில்லை. அமேஸான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு சானலின் வழியாகவும் படம் பார்க்க முடியும் என்கிற வசதி வரவேண்டும். ஒரு படம் பார்க்க கட்டணம் இவ்வளவு என்று மட்டுமே நிர்ணயிக்கவேண்டும். அதாவது இந்த ஓடிடி சானல்கள் திரையரங்குகளின் இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். யாராவது 10% தள்ளுபடி கொடுத்து கூடுதல் பார்வையாளர்களைப் பெற முடிந்தால் அது அவர்கள் இஷ்டம். இப்படிச் செய்தால், டிஷ், அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு தளத்தின் வழியாகவும் பார்க்க முடியும் என்பதால், நிச்சயம் பார்வையாளர்கள் கூடுவார்கள்.

ப்ரைமில் கூட, இப்படி தனியுரிமை இல்லாமல் வெளியாகும் படங்களுக்குப் பணம் வசூலிக்கலாம். ப்ரைமில் இல்லாதவர்கள் ஒரு படத்துக்கு மட்டும் பணம் செலுத்திப் பார்க்க முடியும் என்ற வசதியைக் கொண்டு வரலாம். நெட்ஃப்ளிக்ஸிலும். ப்ரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸில் சந்தாதாரர்களாக இருப்பவர்களுக்கு 50% தள்ளுபடி தரலாம். இப்படியெல்லாம் செய்தால் திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு கூட்ட முடியும்.

எந்த ஒரு சானலில் படம் ஒளிபரப்பானாலும் மறுநாளே திருட்டுத்தனமாகப் படத்தைத் தரவிறக்கிக் கொள்ள முடியும் என்றாகிவிட்டது. அப்படி இருக்கும்போது, படத்துக்குக் குறைவான கட்டணத்தை வைத்துக் கூடுதல் பார்வையாளர்களைக் கொண்டு வர முயலவேண்டும். விஸ்வரூபம் பார்க்க 1000 ரூபாய் என்ற தப்பை, எதோ ஒரு சாதாரணப் படத்துக்கு 200 ரூபாய் என்று வைத்து, இன்னொரு வகையில் தவறு செய்யக் கூடாது. தேவை என்றால் முதல் நாள் மட்டும் 200 ரூபாய், மறுநாள் 100 ரூபாய் என்று கூட யோசிக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்வையாளர்களைக் கூட்டுவது எப்படி என்று யோசிப்பது நல்லது. அதற்கு இந்தத் தனியுரிமை என்னும் எக்ஸ்க்ளூசிவிட்டி ஒழியவேண்டும். அதற்கு அனைத்துத் தயாரிப்பாளர்களும் ஒரே அணியில் வரவேண்டும். இதெல்லாம் நடக்குமா எனத் தெரியாது. நடக்காமல் இருக்கவே வாய்ப்பதிகம். அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற வணிக நிறுவனங்களும் இப்படி நடப்பதை விரும்பாது, அனுமதிக்காது. ஆனால், எந்தத் திரையரங்கில் எந்தப் படம் வரவேண்டும் என்ற கட்டுப்பாடு எப்படி இல்லையோ அது போல இந்த ஓடிடி உலகம் மாறாதவரை, திரைப்படங்கள் தங்களுக்கான நியாயமான சந்தையை முழுமையாகப் பெறப் போவதில்லை.

Share

கணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு

Spoilers ahead. கதையைத் தெரிந்துகொள்ளவேண்டாம் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் படிக்கவேண்டாம். நீண்ட பதிவு.

நல்ல ஒரு கதையை வைத்துக்கொண்டு, அதில் தேவையே இல்லாமல் அரசியல் கலப்பதால் எத்தனையோ படங்கள் தங்கள் இலக்கைத் தொடாமலேயே தேங்கிப் போய்விடுகின்றன. அதிலும் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலானவை இப்படித்தான். மீண்டும் மீண்டும் ஒரே அரசியல்தான் இதிலும் சொல்லப்படுகிறது. இந்தியா வாழ லாயக்கற்ற தேசம், இந்தியாவில் தனிமனிதனால் வாழவே முடியாது என்ற செய்திகள்தான். இந்திய அரசு (இந்தப் படத்தில் மாநில அரசையும் கொஞ்சமே கொஞ்சம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்) எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையும் கண்டுகொள்வதே இல்லை. நீங்கள் இருந்தாலும் செத்தாலும் அரசுக்குக் கவலை இல்லை. இதைத்தான் இந்தப் படமும் சொல்கிறது. கவலைக்குரிய ஒரு பெண்ணின் வலியோடு. இந்த அரசியலில் கவனிக்கப்படவேண்டிய இந்தப் பெண்ணின் வலியும் அது சார்ந்த பிரச்சினைகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.

ரணசிங்கம் வீரன், தீரன், முற்போக்காளன், எக்ஸட்ரா எக்ஸட்ரா. ராமநாதபுரத்தில் தன் கிராமத்தில் குடிநீருக்காகப் போராடுகிறான். கிராமத்தின் ஒற்றுமைக்காகப் போராடுகிறான். அவனை அத்தனை காதலித்து ஒரு பெண் திருமணம் செய்துகொள்கிறாள். அரியநாச்சி (ஐஸ்வர்யா ராஜேஷ்). படம் தொடங்கிய பத்து நிமிடத்துக்குள்ளாகவே அவனது மரணச் செய்தி வந்து சேர்கிறது. ரணசிங்கத்தின் வீர தீர காதல் எல்லாம் அவ்வப்போது நினைவலையாகச் சொல்லப்படுகிறது. இன்னும் எதாவது ஒரு நினைவு வந்து அங்கேயும் விஜய் சேதுபதி வந்துவிடுவாரோ என்ற அச்சம் வரும் அளவுக்கு அதீதமாக ரணசிங்கத்தின் காட்சிகள் வருகின்றன. பத்தாம் நிமிடத்திலேயே அவன் செத்துப் போய்விடுவதால், கதை எதைப் பற்றியது என்ற ஆர்வம் நமக்கு வருகிறது. ஆனால் படமோ ரணசிங்கத்தை விவரிப்பதிலேயே சுற்றுகிறது.

பின்னர் ஒரு வழியாகக் கதை என்பது ரணசிங்கத்தின் உடலை துபாயில் இருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவதுதான் என்பது தெரிகிறது. ஏன் துபாய் அரசும், அங்கே ரணசிங்கம் வேலை பார்த்த பன்னாட்டு நிறுவனமும் அவன் உடலைத் தரவில்லை? அதற்குச் சொல்லப்படும் காரணம் நம்பும்படியாக இல்லை. நம்புவோம். ஏனென்றால் கதை அந்தக் காரணம் பற்றியது அல்ல. அப்படிச் செத்துப் போகும் இந்தியர்களின் உடல் இந்தியாவுக்கு வருவதைப் பற்றியது. இதிலுள்ள சிக்கலில் இந்தியாவின் அரசு நிர்வாகம் எத்தனை மெத்தனமாகச் செயல்படுகிறது என்பதைச் சொல்வதுதான் இப்படம் பற்றிய நோக்கம்.

ரணசிங்கத்தின் திருமணம் இரவோடு இரவாக நடக்கிறது. என்ன காரணம் என்றெல்லாம் படத்தைப் பார்த்து நொந்துகொள்ளுங்கள். அவர்களுக்குத் திருமணம் ஆனதற்கு ஆதாரமே இல்லை. அதாவது ஊரில் எல்லாருக்கும் தெரியும். ஆதாரம் மட்டும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக ரண சிங்கம் செத்துப் போனதோ துபாயில். அவன் உடலை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று மனுச் செய்ய அவரது மனைவிக்குத்தான் உரிமை இருக்கிறது. ஆனால் அவர்தான் மனைவி என்பதற்கு ஆதாரம் இல்லை. அதை அரசு கேட்கிறது. இதில் என்ன தவறு? இத்தனைக்கும் அரசு அதிகாரியாக வரும் பிராமணர், தங்கை மூலம் உடலைக் கோரலாம் என்று நியாயமான, நடக்கக்கூடிய ஒரு வாய்ப்பையும் சொல்கிறார். வசனம் எழுதியவர் அவரை அறியாமலேயே இந்த உண்மையை எழுதி இருக்கவேண்டும். இங்கே மட்டும் அல்ல, அரசின் குரலாகப் பல இடங்களில் உண்மையை எழுதி இருக்கிறார். இதற்காக இவரையும் இயக்குநரையும் பாராட்டவேண்டும். ஆனால் ரணசிங்கத்தின் மனைவி அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல், தான் தான் ரணசிங்கத்தின் மனைவி என்று நிரூபிக்கும் போராட்த்துக்குள் போகிறாள். ரணசிங்கம் எத்தகையவன் என்று சொல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்ட படம், இங்கே ரணசிங்கத்தின் மனைவி அரியநாச்சியே என்று நிரூபிக்கப் போராடும் பெண்ணின் படமாக மாறுகிறது.

ரணசிங்கத்துக்கு ஆதரவாகவே நல்லவராக வரும் கலெக்டர் (ரங்கராஜ் பாண்டே) தன்னளவுக்கு இயன்றவரை உதவி செய்கிறார். முதலில் ரணசிங்கத்துக்கும், பின்னர் அவனது மனைவிக்கும். ஆனால் பல மாதங்கள் ஆகியும் ரணசிங்கத்தின் உடல் இந்தியாவுக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. காரணம், பன்னாட்டு நிறுவனத்தில் நடந்த ஒரு விபத்தில் ரணசிங்கம் இறந்துவிட்டதால், அந்த விபத்தை மறைக்க நினைக்கும் நிறுவனம், ஏதேதோ பொய் சொல்கிறது. செட்டில்மெண்ட்டுக்கெல்லாம் வருகிறது. ஆனால் உடலைத் தர மறுக்கிறது. ஏனென்றால் உடலே அவர்களிடம் இல்லை. இது இறுதிக்காட்சியில்தான் நமக்குத் தெரிகிறது.

இதற்கிடையில் துபாயில் ஸ்ரீதேவி இறந்து போக, அதற்கு பிரதமர் இரங்கல் செய்தி போட்டு ட்வீட் போடுகிறார். அவரது உடல் மூன்றே நாளில் இந்தியா வருகிறது. இந்த ஒப்பீடு ஒரு நல்ல கற்பனைதான். ஆனால் யதார்த்தமும் இதுதான். ஒரு நடிகையின் மறைவுக்குப் பிரதமர் ட்வீட் போடுகிறார், ஆனால் ஒருத்தன் துபாயில் செத்துப் போய் பத்து மாதங்கள் ஆகின்றன, அவன் உடல் வரவில்லை என்பதுதான் யதார்த்தம். கம்யூனிஸ்ட் கட்சியிலும் இப்படித்தான். பாஜகவிலும் இப்படித்தான். ஊரிலும் வீட்டிலும் இப்படித்தான். ஆனால் இயக்குநர் இதைத் தெளிவாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

ரணசிங்கத்தின் மனைவி சென்னைக்கு வந்து, மத்திய அமைச்சர் வரும் காரில் போய் விழுந்து நீதி கேட்கிறாள். மத்திய அமைச்சர் ஒரு பெண். பாதுகாப்பு அமைச்சர். ஆனால் நிர்மலா சீதாராமன் அல்ல! அவர் பரிவுடன் விசாரித்து, ரணசிங்கத்தின் மனைவி அரியநாச்சியுடன் ஒரு செல்ஃபியும் போட்டு, சக அமைச்சருக்கு டேக்-க்கும் செய்கிறார். விஷயம் இந்தியா முழுக்கவும் பரவுகிறது. ஆனால் பிரயோஜனமில்லை.

அரியநாச்சி தமிழ்நாட்டு முதல்வரைப் பார்க்க முயல்கிறாள். ஆனால் போலிஸ் தரப்பு அவளை முதல்வர் அருகில் கூட வரவிடுவதில்லை. இப்படியே வெளியுறவுத் துறை அதிகாரிகளும் செய்கிறார்கள். வேறு வழியே இன்று டெல்லி போகிறாள். அணையைத் திறந்துவிட வரும் பிரதமர் வரும் இடத்துக்குப் போய், அணையில் விழுந்து தற்கொலை செய்யப் போவதாகச் சொல்லிப் போராட்டம் நடத்துகிறாள். கையில் குழந்தையுடன். அதை லைவாகவும் ஒளிபரப்பாகிறது. பிரதமர் மோதி வருகிறார். அதாவது மோதியைப் போல ஒருவர் வருகிறார். அவருக்கு அப்போதுதான் அந்த விஷயம் தெரிகிறது. பரிவுடன் பரிசிலீக்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்தில் உடல் இந்தியா வரவேண்டும், அதுவரை நான் இந்த இடத்தை விட்டுப் போகப் போவதில்லை என்று அங்கேயே உட்கார்ந்து கொள்கிறார். இந்தியாவே பரபரக்கிறது. அடுத்த மூன்று மணி நேரத்தில் ரணசிங்கத்தின் உடல் இந்தியா வருகிறது. அரியநாச்சியே அணையைத் திறந்துவிடட்டும் என்று பரிவுடன் பிரதமர் சொல்ல, அரியநாச்சியே திறந்து வைத்துவிட்டுப் போகிறாள். இந்த அரசு சாமானிய மக்களுக்கானது என்று சொல்கிறார் பிரதமர்.

ரணசிங்கத்தின் உடல் வீட்டுக்கு வருகிறது. எரிக்கும்போது அரியநாச்சி கண்டுகொள்கிறாள், அது ரணசிங்கத்தின் உடல் இல்லை என. ஆனாலும் அது ரணசிங்கத்தின் உடல்தான் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறாள். இரவில் தனிமையில் ‘வேற எவனோ ஒருத்தன் உடம்பை கொடுத்து ஏமாத்திட்டாங்க தேவடியா பசங்க’ என்று சொல்கிறாள். தேவடியா பசங்க என்பது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் உருப்படியான படமாகவே எடுத்திருக்கலாம். தமிழில் அதிகம் விவாதிக்கப்படாத கதை இது. ஒரே கதையிலேயே கிராமத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் காட்ட நினைத்தது முதல் தவறு. விஜய் சேதுபதிக்காக கதையை அவரைச் சுற்றிப் பின்னிவிட்டது இரண்டாவது தவறு. அவனது உடலைக் கொண்டு வருவதற்கு ஏதேனும் காரணங்களைச் சொல்லவேண்டும் என்பதற்காக, கோர்ட்டில் அவன் மீது இருக்கும் வழக்குக்களை எல்லாம் சேர்த்து என்னவெல்லாமோ வசனங்களைச் சொல்லவிட்டது அடுத்த குழப்பம். பன்னாட்டு நிறுவனமும் துபாய் அரசும் சேர்ந்துகொண்டு செய்யும் பிரச்சினைக்கு இந்திய அரசும் தமிழக அரசும் என்ன செய்யமுடியும் என்ற பூதாகரமான கேள்விக்கு பதிலே சொல்லாமல் விட்டது பெரிய சறுக்கல். இதில் ஸ்ரீதேவியின் உடல் மட்டும் மூன்றே நாளில் வருகிறது என்பதை இத்துடன் எப்படித் தொடர்பு படுத்த முடியும்?

பன்னாட்டு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் நடக்கும் ஒரு விபத்தை மூடி மறைத்தால், அதுவும் அது வேறொரு நாட்டில் நடந்தால், அதை இங்கிருந்தபடியே ஒரு கிராமத்துப் பெண் எதிர்கொள்வது உள்ளபடியே கஷ்டம்தான். இதன் பொருள் இந்திய அரசு அவளைக் கைவிட்டுவிட்டது என்பதல்ல. வேண்டுமென்றே இந்தியாவைத் திட்டவேண்டும் என்று நினைத்தால்தான் இப்படி யோசிக்கமுடியும். ரேஷன் அரிசியில் பெயர் சேர்க்க வரும் ஒரு அதிகாரியிடம் நாங்க இந்தியாவுலயே இல்லைன்னு எழுதிக்கோ என்று அரியநாச்சி சீறுகிறாள். ஆனால் வந்த அதிகாரி கேட்கும் கேள்வி நியாயமானது. அந்த நியாயத்தை மறைக்க அவர்கள் கேட்ட விதத்தை வேண்டுமென்றே மோசமாக்கி எடுத்திருக்கிறார் இயக்குநர். இப்படித்தான் அந்த பிராமண அதிகாரி விஷயத்திலும் நடக்கிறது.

பிராமண அதிகாரியின் விஷயத்தில் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லவேண்டி இருக்கிறது. படத்தில் வரும் எந்த ஒருவரின் சாதியும் மதமும் தெரிவதில்லை. இரண்டு பேரைத் தவிர. ஒருவர் பிராமணர். இவர் கலெக்டரின் உதவியாள். அதிகாரி. அரசுக்கு விழுந்து விழுந்து வேலை செய்யும் ஆள். கலெக்டரையும் மீறி, அரியநாச்சியுடம், வந்த பிணம் ரணசிங்கம்தான் என்று கையெழுத்து வாங்க அலைகிறார். அரியநாச்சியைப் பற்றி அலட்சியமாகப் பேசுகிறார். அவரை இப்படிக் காண்பிக்கிறார்கள். இன்னொருவர் முஸ்லீம். அவர்தான் ரணசிங்கத்தை, பணம் வாங்கிக்கொண்டு துபாய்க்கு வேலைக்கு அனுப்புகிறார். துபாய் பன்னாட்டு கம்பெனி இவர் மூலமாகத்தான் பண பேரம் பேசுகிறது. ஆனால் இவர் பேசும் வசனத்தில் ஒன்றில்கூட வெறுப்பு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். தன் கையறு நிலையைப் பேசுகிறார் இந்த ஏஜெண்ட். மிகத் தெளிவாக இரண்டு கதாபாத்திரங்களையும் அமைத்திருக்கிறார்கள். முஸ்லீம் ஒருவரை நல்லவராகக் காண்பிப்பது, சூழ்நிலைக் கைதியாகக் காண்பிப்பதெல்லாம் இயக்குநரின் உரிமை. அதில் நமக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால் அதற்கு இணையாக இன்னொரு கதாபாத்திரம் வரும்போது எப்படி யோசிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டி இருக்கிறது.

ஸ்ரீதேவி இறந்தபோது இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். அவருக்கு ஒரு ட்வீட் செய்தாலே போதும் எப்படி உதவுவார் என்று உலகமே வியந்தது. அவர் இறந்தபோது காங்கிரஸ் அமைச்சர்களே அதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஆனால் இயக்குநருக்கு அது மட்டும் நினைவில்லை போல.

பிரதமரே வந்திருந்து ஒரு பெண்ணுக்கு உதவுகிறார். ஆனாலும் அந்தப் பெண் அரியநாச்சி தேவடியா பசங்க என்று யாரைத் திட்டுகிறாள்? அவளுக்கே அதில் தெளிவில்லை. இயக்குநருக்கும் தெளிவில்லை. யார் மீது கோபத்தைச் சொல்வது என்று தெரியவில்லை. திருமணத்தைப் பதிவு செய்யவில்லை. புகைப்படமும் இல்லை. பத்திரிகையும் இல்லை. அப்படியானால் அதிகாரிகளால் எப்படி உதவமுடியும்? அதற்கான வழிகளையும் ஒரு அதிகாரி சொல்கிறார். எல்லா இடங்களிலும், அரசு அலுவலர்களின் மெத்தனத்தோடும் அலட்சியத்தோடும், வேலை நடக்கத்தான் செய்கிறது.

வெளிநாட்டில் இறந்து போன ஒருவரின் உடலைக் கொண்டு வருவது என்பது நிச்சயம் சிக்கல் நிறைந்த ஒன்றுதான். அதற்கு இந்தியாவின் மீது கோபப்பட்டு, வெறுப்புடன் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. அரியநாச்சியாக அட்டகாசமாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அற்புதமான நடிப்பு, இந்த அரசியலில் பின்னுக்குப் போய்விடுகிறது.

எப்படியாவது இந்திய, ஹிந்து, பாஜக வெறுப்பைக் காண்பித்தால்தான் ஆதரவு கிடைக்கும் என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இந்தப் படத்தை அதன் ஆதாரக் கருத்தை மட்டுமே சுற்றி எடுத்திருந்தால், முக்கியமான படமாக இருந்திருக்கும். ஆரம்பக் காட்சிகளில் வரும் கிராமம் மற்றும் குடும்பம் சார்ந்த காட்சிகள் மிக இயல்பாகவும் இயற்கையாகவும் இருந்தன. அதைவிட்டுவிட்டுப் படம் எப்போது புரட்சி வசனங்களை நோக்கிப் போகிறதோ அங்கேயே தன் பிடியை இழக்கத் துவங்குகிறது. அதிலும் உன் பேர் என்னப்பா என்ற கேள்விக்குக் கூட, ஊர் நியாயம் உலக நியாயம் சாதி மத இன வேறுபாடு என்று பக்கம் பக்கமாக விஜய் சேதுபதி பேசத் துவங்கும்போது கொட்டாவிதான் வருகிறது. அவர் செத்துப் போனாலும் மீண்டும் மீண்டும் வந்து கொல்கிறாரே என்று தோன்றுகிறது. இந்தக் குழப்பத்தையெல்லாம் விட்டுவிட்டு, அரசுடன் போராடும் ஒரு பெண்ணின் கதையை மட்டும் சொல்லி இருந்தால், அரசின் மெத்தனமும் அலட்சியப் போகும் பின்னணியில் அதுவாகவே வெளிப்படுவதாகக் காட்டி இருந்தால், இந்தப் படம் வேறு தளத்துக்குப் போயிருக்கும். அதைத் தவறவிட்டுவிட்டார் இயக்குநர்.

பின்குறிப்பு: சென்னைக்கு வந்து இறங்கிய உடனேயே தெரிந்த ஒருவர் உதவுவது, ஒரு கதாபாத்திரம் தலையை ஆட்டிக்கொண்டே வருவது (சோ-வின் சரஸ்வதி சபதம் நினைவுக்கு வந்தது) என்பதையெல்லாம் சினிமா உலகம் தாண்டி எத்தனையோ வருடங்கள் ஆகின்றன. இயக்குநர் கொஞ்சம் மனம் வைக்கவேண்டும்.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

மாலைமுரசு விவாதம் – பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அத்வானி உள்ளிட்டோடு விடுவிப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டது தொடர்பாக மாலைமுரசு டிவியி நடந்த விவாதத்தைப் பார்த்தேன். நியூஸ் 18ல் இருந்த செந்தில் இப்போது இங்கே இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். செந்திலும் அரசியல் சார்பு அனைவரும் அறிந்ததே. அந்த விவாதத்தில் பாஜக சார்பாக இரண்டு பேர் பேசினார்கள். கனிமொழி பாஜக சார்பாக. இன்னொருவர் ஸ்ரீராம் பார்த்தசாரதி. செந்தில் கனிமொழியைப் பேசவே விடவில்லை. மீண்டும் மீண்டும் அரசியல் சார்பான கேள்விகளைக் கேட்டு அவரைப் பேசவிடாமல் தடுமாற வைத்தார். கனிமொழியும் அரசியல் சரியாக பேசவேண்டிய நிர்பந்தம் இருந்ததால் மிகவுமே தடுமாறினார். அவர் சொல்ல வந்த சில சரியான கருத்துகளையும் செந்தில் பேசவிடவில்லை. இரண்டாம் சுற்றில் இரண்டு நிமிடமாவது பேச விடுங்கள் என்று கனிமொழி கேட்டும் கூட, செந்திலால் அவரைப் பேசவிட முடியவில்லை. மீண்டும் மீண்டும் குறுக்கிட்டுப் பேசினார்.

ஆனால் ஸ்ரீராம் மிகச் சரியாகப் பேசினார். எந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது என்பதை மட்டும் சரியாக எடுத்துக்கொண்டு பேசினார். மற்றவர்கள் சட்ட ரீதியாகச் சொன்ன தவறை எல்லாம் குறிப்பிட்டுச் சொன்னார். செந்தில் இவரிடம் இடைமறித்து முதலில் பேச முயன்றார். ஆனால் ஸ்ரீராமின் பொட்டு தெறித்தாற் போன்ற பதிலில், நீங்கள் சொல்வது சரிதான் என்று விட்டுவிட்டார். ஆனால் இவருக்கும் நேரமே செந்தில் தரவில்லை.

செந்தில் ஒரு நெறியாளராக இருந்தாலும், ஹிந்து எதிர்ப்புக் குழுவின் ஒரு பேச்சாளர் போலவே பேசினார். பாபர் மசூதி தானாக இடிந்துகொண்டதோ என்பதை கிண்டலும் கேலியுமாகச் சொன்னார். கனிமொழியை கத்தி முனையில் மிரட்டுவது போல மிரட்டி தான் நினைப்பதைச் சொல்ல வைக்கப் பார்த்தார். அதே நேரம் வன்னி அரசுவோ தமிழ் மணியோ எதாவது தவறாகப் பேசினாலும் அதைக் கண்டுகொள்ளாமல் போனார். அதை ஸ்ரீராம் எடுத்துச் சொல்லும்போதுதான் ஒப்புக்கொண்டார். இதுவே பாஜக ஆதரவாளர்கள் தவறாகப் பேசினால் உடனே அதைப் பிடித்துக்கொண்டு மடக்கு மடக்கு என்று மடக்க மட்டும் செந்தில் யோசிப்பதே இல்லை. எங்கேயும் தெய்வம் இருந்தே தீரும் என்பதைப் போல ஸ்ரீராமின் பேச்சு மிகச் சரியாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக ஸ்ரீராமால் ஐந்து நிமிடம் கூடப் பேச முடியவில்லை. கனிமொழி வரலாற்றைச் சொல்லப் போனால், அதெல்லாம் வேண்டாம், இந்த விஷயத்தை மட்டும் பேசுங்கள் என்று சொன்ன செந்தில், மற்றவர்கள் வரலாற்றை இஷ்டத்துக்குப் பேசும்போது அதை தன் சார்பாக எடுத்தும் கொடுத்தார். எல்லாம் போகட்டும், ஆனால் பாஜக தரப்பின் வாதங்களை வைக்கும்போது அதை எதிர்த்து செந்தில் சொன்ன விதம், அந்தக் கிண்டல், மிகவும் ஆபாசமாக இருந்தது. ஒரு நெறியாளராக இது ரொம்ப அசிங்கம். அதை ஸ்ரீராம் சரியாகச் சுட்டிக் காட்டினார். அப்போது செந்தில் அதை தான் சீரியஸாகச் சொன்னதாக பல்டி அடிக்கவும் தயங்கவில்லை.

தமிழ் தொலைகாட்சிகளின் விவாதங்களைப் போன்ற தண்டம் எதுவும் இல்லை. யாரையும் பேசவிடக்கூடாது என்பது மட்டுமே முதல் குறிக்கோள். அதிலும் அவர்கள் ஹிந்துத்துவத் தரப்பாக இருந்தால் அசிங்கப்படுத்த வேண்டும் என்ற முடிவோடுதான் விவாதங்கள் ஒருங்கிணைப்படுகின்றன. அதில் இப்போது மாலைமுரசு-வும் சேர்ந்துகொண்டிருக்கிறது போல.

Share

திருநெல்வேலி எஃப் எம்

எங்க இருந்து கூப்படறீங்க, உங்க பேரைச் சொல்லுங்க.

நா கிருஷ்ணாபுரத்துல கூப்புடுதென் மேடம். பேரு ..

என்ன ஜோக் சொல்லப் போறீங்க?

ரெண்டு ஜோக் மேடம்.

சொல்லுங்க.

மாமியாக்காரி மாடில இருந்து விழுந்துட்டா. ஏட்டி தூக்குட்டின்னு சொல்லுதா. ஆனா மருமவ தூக்கமாட்டெங்கா. ஏன்?

ஏன்? தெரியலையே..

என்ன வெய்ட் தூக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்கன்னு சொல்லுதா.

ஓ.. எம்மாடி..

இன்னொரு ஜோக் சொல்லுதென். ஒரு வாத்தியாரும் ப்ரொசரும் ஒரு ஸ்கூலுக்கு செக் செய்ய போறாங்க.

ரெண்டும் ஒருத்தர்தானே..

இல்ல மேடம்.. ஒருத்தர் அட்மினு..

போம்போதெ சொல்லுதாங்க எல்லாரும். ஸ்கூல் ரொம்ப விவகாரமானதுன்னு. அங்க போய் பையனுவ கிட்ட பேர கேக்காரு ப்ரொபாச்ரு.. உம் பேர் என்னல? பளனி. அப்பா பேரு? பளனியப்பன். எலேய், உம் பேரு? காசி. உங்கப்பா பேரு? காசியப்பன். ஆத்தாடின்னு ஓடி வந்துட்டாங்க மேடம்.

ஓ! எப்படி இருக்காங்க பாருங்க நம்ம ஆளுங்க.

ஆமா மேடம்.

சரி, நேயர்களே அடுத்த பாடல் அருள் படத்தில் இருந்து ஒட்டியாணம் செஞ்சி தாரேன் வாரியா பாடல் ஒலிபரப்பாகிறது.

பாட்டு ஒலிபரப்பாகிறது.

அடுத்த நேயர்.

வணக்கம் மேடம். நல்லா இருக்கீங்கலா?

நலமா இருக்கேன் சொல்லுங்க. என்ன ஜோக் சொல்லப் போறீங்க?

ஒருத்தன் டாக்டர பாக்க போறான். நூறு வயசு வாளனும் சார். என்ன செய்யணும்னு கேக்கான். டாக்டர் கேக்காரு.. கல்யாணம் ஆயிட்டான்னு.. அடுத்த வாரம் கல்யாணங்கான். கல்யாணம் ஆன பின்னாடி வாடேன்னு சொல்லி அனுப்பிடுதாரு. ஏன்?

ஏன்?

டாக்டர் சொல்லுதாரு, அப்புறம் நீ வந்து நூறு வயசு வாழணும்னு கேக்கமாட்டங்காரு..

ஓ.. விவரமான டாக்டரா இருக்காரே.

நேயர்களே உங்களுக்கான அடுத்த பாடல் மதுர படத்தில் இருந்து. பம்பரக் கண்ணு பச்ச மொளகாய் பாட்டு ஒலிபரப்பாகிறது.

அடுத்த நேயர்.

மேடம்.. ஜோக் சொல்லட்டா.. ஒருத்தர் டாக்டர்கிட்ட போறான். (இவரும் இரண்டு டாக்டர் ஜோக்ஸ் சொல்கிறார்! மறந்துவிட்டது)

ஏன் எல்லாரும் டாக்டர் ஜோக்கா சொல்றீங்க இன்னைக்கு? தெறிக்க விடுதாங்களே நம்ம ஆள்கள். நேயர்களே உங்களுக்கான அடுத்த பாடல்..

**

இவையெல்லாம் முந்தாநாள் திருநெல்வேலி பண்பலையில் கேட்ட நிகழ்ச்சியில் காதில் விழுந்தவை. இருபது வருடத்துக்கு முந்தைய திருநெல்வேலியை அங்குலம் கூட மாறாமல் அப்படியே பாதுகாத்து வெச்சிருக்கீங்களேடே! I am blown away!

Share

புகார் நகரத்துப் பெருவணிகன் – முன்னோர் சொல்

சில நாவல்களைப் படிக்கும்போது ஒரு புல்லரிப்பு ஏற்படும். அது சில சமயம் வெகுஜன நாவலாக இருக்கும். சில சமயம் தீவிர இலக்கிய நாவலாக இருக்கும். எதனால் புல்லரிப்பு ஏற்படுகிறது என்பது நாம் என்ன படிக்கிறோம், நம் மனநிலை என்ன, நம் நிலைப்பாடு என்ன என்பதையெல்லாம் பொருத்தது. இன்று சமூக ஊடகங்களில் எந்த ஒரு சீரியஸ் விஷயத்தையும் தொடர்ச்சியாகச் சொல்வதன் மூலம் அதைக் கேலிச் சொல்லாடலாக மாற்றிவிடலாம். எல்லையில் வீரர்கள் என்பதைச் சொல்லலாம். நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதைச் சொல்லலாம். இப்படிச் சொல்வதற்கு ஏற்றமாதிரிதான் சிலர் நடந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் எல்லா நேரங்களிலும் இந்தக் கேலிச் சொல்லாடல் அதன் நிஜமான நோக்கத்துடன் சொல்லப்படுவதில்லை.

ஒரு நாவல் முழுக்க, பக்கத்துக்குப் பக்கம், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? திரைப்படங்களில் பன்ச் வசனம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஒரு படத்தின் வெற்றிக்கு அது உதவும் என்பதற்காகப் படம் முழுக்க பன்ச்சாக இருந்தால்? பிடிக்காது என்றுதானே நினைக்கிறீர்கள்? உண்மைதான். ஒருவேளை, அதாவது ஒருவேளை அப்படிப் படம் முழுக்க பன்ச்சாக இருந்து, அதுவும் மிகவும் நன்றாக இருந்துவிட்டால்? அது ஒரு கற்பனைத் திரைப்படமாக மட்டுமே இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? அப்படி ஒரு கனவு நாவல்தான் புகார் நகரத்துப் பெரு வணிகன்.

உண்மையில் இது ஒரு பழிவாங்கும் படலம் உள்ள நாவல். பழி வாங்கும் படலம் நான்கு வரிகள் என்றால் நாலாயிரம் வரிக்குச் சொல்லப்படுபவை எல்லாம் தமிழனின் பெருமைகளே. கவனியுங்கள். தமிழின் பெருமை அல்ல. அதுவும் இருக்கிறது. ஆனால் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை சொல்லப்படுவது தமிழனின் பெருமைதான். அதுவும் ஆதாரத்தோடு. அதுவும் விளக்கமாக. மிக முக்கியமாக எந்த ஒரு இனத்தின் மீதும் எந்த ஒரு பகுதியின் மீதும் வெறுப்பைத் தூவாமல் சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் இது கனவு நாவல் என்று புரிகிறதா?

எந்த ஒன்றைப் பற்றியும் விரிவான, மிக மிக மிக விரிவான செய்திகளைப் பட்டியலிட்டே தீருவது என்ற முடிவோடு நாவலை எழுதி இருக்கிறார் பா.பிரபாகரன். இவர் எழுதிய முதல் நூலான ‘குமரிக் கண்டமும் சுமேரியமும்’ ஒரு சூப்பர் ஹிட் புத்தகம். இந்த நூலில் பிரபாகரன் திகைக்க வைக்கிறார். ஒரு கட்டத்தில், ‘சாமி போதும்’ என்று அவரை அழைத்து வந்து காலில் விழுந்துவிடலாமா என்று கூடத் தோன்றுகிறது. படிக்கும் நமக்கு மூச்சு வாங்குகிறது. ஆனால் பிரபாகரன் அசருவதே இல்லை. விட்டால் இன்னும் ஆயிரம் பக்கங்களுக்குத் தமிழர்களின் பெருமைகளை அள்ளித் தெளித்துப் போய்க்கொண்டே இருப்பார் போல.

வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை என்று சொன்னேன் இல்லையா? அது மிகைப்படுத்திச் சொன்னது அல்ல. சும்மா நானாக என் கற்பனையில் ஒரு உதாரணம் சொல்கிறேன். கப்பலில் பயணித்தார்கள். காற்று அடித்தது. திசையைப் பார்த்தார்கள். கப்பலோடி யோசித்தான். இந்த நான்கு வரிகளைச் சொல்ல வேண்டும் என்றால் பிரபாகரன் என்ன செய்கிறார் தெரியுமா? கப்பல் என்றால் அதில் எத்தனை வகை, என்ன என்ன வகை, ஒவ்வொன்றின் பெயர் என்ன என்று சொல்கிறார். பயணம் என்றால் எப்படிப்பட்ட பயணம் என்று ஒரு விளக்கம். காற்று என்றால் எத்தனை வகையான காற்று, எத்தனை வகையான திசை என்றெல்லாம் ஒரு பட்டியல். திசை என்றால் எத்தனை திசை என்று பட்டியல். கப்பலோடி என்றால், எத்தனை வகையான கப்பலோடிகள், ஒவ்வொருவரின் பெயர் என்ன, அவர்களுக்கு என்ன என்ன வேலை இப்படியான பட்டியல். நான் சொன்னது 1% கூட இல்லை! இப்போது யோசித்துப் பாருங்கள். நானூறு பக்க நாவலில் எத்தனை விளக்கங்கள் இருக்கும் என்று. எத்தனை பட்டியல் இருக்கும் என்று. கிட்டத்தட்ட ஒரு என்சைக்ளோபீடியாவையே கையில் தந்துவிட்டார் பிரபாகரன். சேலை என்றாலும் பட்டியல், உணவு என்றாலும் பட்டியல், முலைக்கச்சை என்றால்கூட பட்டியல்தான். அவர் என்ன என்ன பட்டியல் இட்டிருக்கிறார் என்பதைத் தனியே தொகுத்தால் அவையே இருநூறு பக்கங்கள் வரும்.

ஈழம், சீனா என்றெல்லாம் செல்லும் நாவல், சீனாவைக் கொஞ்சம் நெருக்கமாகவே காட்டுகிறது. அதுவும் அந்தக் கால சீனா, அவர்களின் வணிகம், அவர்களின் வாழ்க்கை முறை என்று கொஞ்சம் விரிவாகவே சொல்கிறது. பட்டியலும் விளக்கமும் தமிழர்களுக்கு மட்டும் அல்ல, சீனர்களுக்கும் உண்டு!

தவறவிட்டுவிடக் கூடாத நாவல். தமிழர்களின் பெருமைக்கு மகுடம் தந்திருக்கிறார் பிரபாகரன். அதிலும் எந்த ஒரு மொழியையும் இகழாமல், இந்தியாவை வெறுக்காமல், நிஜமான தமிழ் உணர்வுடன் கூடிய நாவல் இது. இதற்காகவே இந்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது தரப்படவேண்டும். அத்தனை முக்கியமான நாவல் இது. Dont miss it.

ஆன்லைனில் அச்சுப் புத்தகமும், இபுத்தகமும் கிடைக்கும். அமேஸான், ஃப்ளிப்கார்ட், டயல் ஃபார் புக்ஸில் தேடிப் பாருங்கள்.

Share

Section 375

Section 375 (Hindi) 18+ பதிவு. Spoilers ahead.

மீ டூ விவகாரம் வந்தபோதே மிகப் பரவலாக அலசப்பட்ட ஒரு விஷயம், பரஸ்பர ஒப்புதலுடன் நடக்கும் உறவு பின்னர் எப்படி பாலியல் அத்துமீறலாகக் கருதப்படலாம் என்பது. சில வழக்குகளில் ‘ஐந்து வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்தார்’ என்றெல்லாம் வாசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். எத்தனை முறை பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டாலும், ஒரு தடவை சம்மதம் இல்லாமல் உறவு கொண்டால் கூட அது பாலியல் பலாத்காரமே என்பதுதான் இதிலுள்ள செய்தி.

நோ மீன்ஸ் நோ என்று சொன்ன பின்க் திரைப்படம் போல, இந்தத் திரைப்படமும் பாலியல் அத்துமீறலைப் பற்றிச் சொல்கிறது. ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், இங்கே ஒரு பெண் பொய்யாக வழக்கைப் புனைகிறாள். டிஃபன்ஸ் தரப்பு எத்தனையோ ஆதாரங்களை வலுவாகக் காட்டியும், குற்றம் நடக்கவில்லை என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபிக்க முடியாமல் போகிறது. எத்தனை முறை பரஸ்பர ஒப்புதலுடன் உறவு கொண்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றதுக்கு வந்து பாலியல் பலாத்காரம் என்று சொன்னால், அதற்கு ஆதாரம் இல்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள சட்டம் அறிவுறுத்துகிறது. அதன் அடிப்படையில் தீர்ப்பு வருகிறது.

சட்டம் சார்ந்த படங்களைச் செய்வதில் ஹிந்தி திரை உலகம் நிபுணத்துவம் பெற்றுவிட்டது என்று நினைக்கிறேன். மிக முக்கியமான படம் தல்வார் என்று சொல்லலாம். இன்னொரு முக்கியமான படம் ஆர்ட்டிகிள் 15. ஜாலி எல் எல் பி கொஞ்சம் கமர்ஷியலாக இருந்தாலும், மிக சுவாரஸ்யமான படம். பின்க்கும் அப்படியே. இந்தப் படமும். பின்க் மற்றும் செக்‌ஷன் 375ல் நமக்குப் புலம்ப பல விஷயங்கள் இருந்தாலும், பாலியல் ரீதியான பிரச்சினையில் சட்டத்தின் பார்வையை இந்தியா முழுக்க கொண்டு சென்றதில், இந்தப் படங்கள் மிக முக்கியமான பங்கை வகித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. A must watch movie.

முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை எங்கேயும் படம் அலைபாயவில்லை. நூல் பிடித்தாற்போல் செல்கிறது. ஒரு காட்சி கூட போரடிக்கவில்லை. படத்தை மக்களுக்குக் கொண்டு செல்கிறேன் என்று, நேர் கொண்ட பார்வை செய்த அநியாய அக்கிரமங்களைச் செய்யவில்லை. தான் வக்கீல் மட்டுமே என்று உணர்ந்து நடிக்கும் நடிகர்கள். மிக முக்கியமான படம் இது.

Share

செவிக்குணவு கேட்டல்

பொதுவாக யூடியூப் பார்ப்பது என்பது எனக்கு எரிச்சல் தரும் விஷயம். வீடியோக்களை தேவை ஏற்பட்டால் ஒழிய பார்க்கவே மாட்டேன். சில வீடியோக்களை பார்த்தால் மட்டும்தான் புரியும். தமிழ் ஹெரிடேஜ் வீடியோக்கள் போல. இப்படி இல்லாமல் கேட்டாலே புரியும் வீடியோக்கள் யூ டியூப்பில் கொட்டிக் கிடக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாக்கிங் போக ஆரம்பித்தபோது முதலில் இளையராஜா பாடல்களைக் கேட்டேன். பின்பு ஊத்துக்காடு பாடல்கள். பின்பு பித்துக்குளி முருகதாஸ். பின்பு சகஸரநாமம். ஒரு கட்டத்தில் இவை எல்லாமே சலிப்பேற்படுத்த, யூ டியூப் வீடியோக்களை ஆடியோ ஃபைல்களாக டவுன்லோட் செய்து கேட்க ஆரம்பித்தேன். மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஏன்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகக் கேட்கலாம். ஒரே விஷயம் தரும் சலிப்பு இதில் இருக்காது. முதலிலேயே தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வதால் இணையம் கிடைக்குமா என்கிற பிரச்சினை கிடையாது. பின்பு சில நாள் பாட்காஸ்ட் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இந்த சமயத்தில்தான் புத்தகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். ஆடியோ புக்கில் வருவது போல நின்று நிதானித்து துக்கப்பட்டு சிரித்து உணர்வுடன் வாசிப்பதைக் கேட்பது எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. முன்பெல்லாம் ரேடியோவில் வரும் உரைச் சித்திரங்களை, நாடகங்களைக் கூடக் கேட்கமாட்டேன். எனவே என் தேவை ஆடியோ புத்தகம் அல்ல. புத்தகத்தை சாதாரணமாக வாசிப்பது போன்ற ஆடியோ மட்டுமே. எளிதாகக் கிடைத்தது பொன்னியின் செல்வன். யார் யாரெல்லாமோ அப்படியே பொன்னியின் செல்வனை வாசித்து வைத்திருந்தார்கள். லகர ளகர ழகர ரகர றகரக் கொலைகளுடன்! ஆனாலும் விடாமல் கேட்டேன். ஐம்பது அத்தியாயங்கள் கேட்டிருப்பேன். யூட்யூப்பின் சிக்கல் என்ன? ஆன்லைனில் கேட்கவேண்டும் என்றால், யூட்யூப் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கவேண்டும். வேறு விண்டோவுக்குப் போக முடியாது. இணைய இணைப்பு வேண்டும். முதலிலெயே டவுன்லோட் வைத்துக்கொண்டால் நல்லது. இல்லையென்றால் சிக்கல். தினமும் டவுன்லோட் செய்வது எரிச்சலான விஷயம். அப்போதுதான் யூட்யூப்வான்ஸ்ட் என்றொரு செயலி அறிமுகம் கிடைத்தது. அட்டகாசமான ஆப். இன்றுவரை இதையே பயன்படுத்துகிறேன். ப்ளே செய்துவிட்டு, மொபைலை தூக்கத்தில் (ஸ்லீப் மோடில்) போட்டுவிடலாம். யூட்யூப் போலப் படுத்தாது. இதில்தான் அத்தனை டிவி விவாதங்களையும் கேட்பேன். கேட்கிறேன். நேர்காணல் உட்பட. இதில்தான் அல்கெமிஸ்ட் (தமிழில்) புத்தகம் கேட்டேன்.

தற்செயலாக கூகிள் ப்ளே புக்ஸில் மேய்ந்துகொண்டிருந்தபோது ஆங்கிலப் புத்தகத்தை இப்படிக் கேட்கும் வசதி இருப்பதைக் கவனித்தேன். இந்திய ஆங்கில உச்சரிப்பில் கேட்கலாம். ஆங்கிலப் புத்தகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு 40 நிமிடம் நடையில் 40 பக்கங்கள் கேட்டால், ஒரு வாரத்தில் ஒரு புத்தகத்தைக் கேட்டு முடித்துவிடலாம். முக்கியமான மூன்று புத்தகங்களை இரண்டு மாதங்களில் கேட்டு முடித்தேன். ஆங்கிலத்தில் இருக்கிறது, தமிழில் இருக்காதா என்று தேடியதில், அப்டேப் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் வெர்ஷனில் தமிழிலும் அது பேச ஆரம்பித்தது. தமிழ்ப் புத்தகங்கள் கேட்க ஆரம்பித்தேன். நமக்குத் தேவையான அளவுக்கு வேகத்தையும் pitchஐயும் வைத்துக்கொள்ளும் வசதி ஆண்ட்ராய்டில் இருக்கிறது. யூ ட்யூப்பிலும் இந்த வசதி உண்டு. எனவே எளிதாகக் கேட்க முடிந்தது. சில உச்சரிப்புப் பிரச்சினைகள் நிச்சயம் இருக்கும். — என்று இருந்தால் அடிக்கோடு அடிக்கோடு அடிக்கோடு என்று வாசிக்கும். 🙂 புள்ளி வந்தால் ஒரு நொடி நிறுத்தி வாசிக்கும். இனிஷியலுக்குப் பிறகு வரும் புள்ளியாக இருந்தாலும்! சூப்பர்ஸ்க்ரிப்ட்டில் எண் கொடுக்கப்பட்டிருந்தால், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் அந்த எண்ணையும் வாசிக்கும்! இத்தனையையும் மீறி 90% அட்டகாசமாக இருக்கும். நிறைய கேட்க ஆரம்பித்தேன்.

கூகிள் ப்ளே புக்ஸில் மட்டுமே இந்த வசதி இருக்கிறது. கிண்டிலில் ஐபேடில் உள்ளது, ஆண்ட்ராய்டில் இல்லை. ஆண்ட்ராய்டில் கிண்டில் புத்தகங்களைக் கேட்க சுற்றி வளைத்து ஒரு வழி உள்ளது. ஆக்ஸெஸபிளிட்டி மூலம். அதையும் செய்து பார்த்தேன். ஆனால் அது தொல்லை பிடித்ததாக இருக்கிறது. கூகிள் ப்ளே புக்ஸ் போல் வசதியாக இல்லை. சீக்கிரமே கிண்டிலில் read aloud வரும். அப்போது இது அடுத்த கட்டத்துக்குப் போகும்.

இதில் என்னவெல்லாம் நடக்கலாம்? இப்போதைக்கு பிடிஎஃப் தமிழை எந்தச் செயலியும் வாசிப்பதில்லை. இது நடந்தால் அடுத்த பாய்ச்சல் நிகழும். இப்போதைகு ஒவ்வொரு வரியாக வாசித்து வாசித்துச் சொல்கிறது. இது கொஞ்சம் அடுத்த கட்டத்துக்குப் போய், ஒரு புத்தகத்தையே உள்ளிட்டுவிட்டால், அதுவே வாய்ஸ் ஃபைலாக மாற்றித் தந்துவிடும் தொழில்நுட்பம் எந்த நேரத்திலும் வரலாம். இப்போது கூட வந்திருக்கலாம். இது நிகழ்ந்தால் அடுத்த பாய்ச்சல். எந்த ஒரு புத்தகத்தையும் கேட்டுவிட முடியும். இன்னொரு பக்கம் கூகிள் text to voiceஐ இன்னும் மெருகேற்றினால் போதும். எந்த ஒரு புத்தகத்தையும், அது வேர்ட் ஃபைலாக இருந்தாலும், இபப் அல்லது மொபி ஃபைலாக இருந்தாலும், பிடிஎஃபாக இருந்தலாலும் கேட்க முடியும். இது கூடிய விரைவில் நடக்கத்தான் போகிறது. வண்டி ஓட்டிக்கொண்டே கேட்கலாம். படுத்துக்கொண்டு கேட்கலாம். ஆடியோ புக் என்கிற செயற்கைத்தனத்தை விரும்பாதவர்களுக்கு இந்த இயல்பான வாசிப்பு ஆடியோ புக் ஒரு வரப்பிரசாதம். தினமும் இரண்டு மணி நேரம் வேலைக்கு வண்டியில் பயணப்படுபவர்கள் ஒரு வருடத்தில் நாற்பது புத்தகங்களையாவது கேட்டு முடித்திருக்கலாம். ஆண்ட்ராய்ட் வாசிப்பில் கேட்கும் பெண் குரலும் ஆண்குரலும் என் நண்பர்களாகிவிட்டார்கள். இன்னும் சிறிது நாளில் அவர்கள் என்னுடன் பேச ஆரம்பித்துவிடுவார்களோ என்று நினைக்கும் அளவுக்கு!

இதன் பிரச்சினைகள் என்ன? பைரஸி இன்னும் உச்சத்துக்குப் போகும். இப்போதே மின்னூல் போலிப் பதிப்புகளையே பதிப்பகங்களால் எதுவும் செய்யமுடியாது என்ற நிலை வந்துவிட்டது. அதோடு இதுவும் சேர்ந்து கொள்ளும். கிண்டிலில் ஒரு புத்தகத்தைப் போட்ட மறுநாள் அதே புத்தகத்தை எதோ ஒரு யுவதியோ யுவனோ வாசித்து அது யூட்யூப்பில் கிடைக்கும். 🙂

பின்குறிப்பு: தலைப்பை ஏன் இப்படி வைத்திருக்கிறேன் என்றால், சொல்வனம் வலைத்தளத்தை சிறிது நேரம் வாசித்துக் கொண்டிருந்தேன்.

Share

ஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்

சென்ற ஞாயிற்றுக் கிழமை இரவு. சென்னை மழையில் குளிர்ந்துகொண்டிருந்த வேளையில் என்ன செய்வது என்று தெரியாமல், மூளைக்கு வேலையே வைக்காத படம் எதாவது பார்ப்போம் என்று அமேஸான் ப்ரைமில் தேடினேன். கிட்டத்தட்ட 40 நாள்களாக எந்தப் படமும் பார்த்திருக்கவில்லை. தேடுதலில் கண்ணில் பட்டது, ஆயுஷ்மான்பவ என்ற கன்னடப் படம். ஷிவராஜ்குமார் நடித்தது. இயக்கம் பி.வாசு என்று கண்ணில் படவும், இதுதான் நான் தேடிய படம் என்று பார்க்கத் துவங்கினேன்.

வாசுவுக்கு இசையின் மீது என்னவோ அடங்காத வெறுப்பு இருக்கிறது. அதை இசையின் மீதான காதல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். இசை எல்லாவற்றையும் சரி செய்கிறது. குடும்பத்துக்குள் இருக்கும் சண்டையை, பைத்தியத்தைக் கூட குணம் செய்கிறது. ஏன் ஷிவ்ராஜ்குமார் இதையெல்லாம் செய்கிறார் என்றால், அவர் டாக்டர், மனோதத்துவ நிபுணர், பாட வரும், ஆட வரும், சண்டை போட வரும், சமைக்க வரும், அன்பு பொழிய வரும். சந்திரமுகி ரஜினிக்கும் அண்ணன்! பைத்தியக்காரப் பெண்ணை அழைத்துக் கொண்டு போய், காடெல்லாம் சுற்றி, கிராஃபிக்ஸ் புலி துரத்த, குத்துப் பாட்டு ஆட, போலிஸ் தேட, இசையாலே அந்தப் பெண்ணைக் குணப்படுத்துகிறார். உதவுவது எப்போதும் நெற்றியைச் சுருக்கியபடியே பேசும் சுஹாசினி அக்கா! பத்தாததற்கு ஷிவராஜ் குமாரின் அப்பா நம்ம ஊர் பிரபு. அவரால் உட்காரவோ எழுந்திருக்கவோ முடியவில்லை. பாவமாக இருந்தது. சின்னதம்பி நினைவுக்கு வந்தது! கடைசியில் ஷிவ்ராஜ் குமார் அந்தப் பெண்ணையே கைப் பிடிக்கிறார். ஆனந்த் நாக்தான் தாத்தா.

இடைவேளை வரை கொஞ்சம் அறுவையாக இருந்த படம், இடைவேளைக்குப் பிறகு தாங்கவே முடியாத அறுவையாகிவிட்டது. இரண்டே இரண்டு விஷயங்கள் கொஞ்சம் பரவாயில்லை, ஒன்று பாடல்கள். இன்னொன்று, காமெடி. காமெடி என்றால் சாது கோகிலாவின் இரட்டை அர்த்த காமெடி அல்ல. அது சந்திரமுகியின் வடிவேலு-ரஜினி காமெடியின் நகல். இங்கே நன்றாக இருந்தது, ரங்காயன ரகுவின் காமெடி. கலக்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும். ஷிவராஜ்குமார் மிக நன்றாகவே நடித்தார். படம் நொந்து நூலாகி முடிந்தபோது ஞாயிறு முடிந்துவிட்டிருந்தது. மூளையைக் கழற்றி வைத்துவிட்டுப் பார்த்து நம்மை நாமே திட்டிக் கொள்ள ஏற்ற படம். தேவைப்படுபவர்கள் பார்க்கவும்.

Share