Tag Archive for ரஜினி

அன்புள்ள ரஜினிகாந்த்

அன்புள்ள ரஜினிகாந்த்

இவை ஒரு சாமானியனின் கருத்துகள். நீங்கள் வெல்வீர்கள் என்று நம்பும் ஒரு சாமானியன். உங்களால், ‘ஈவெரா மண்’ என்று திராவிடக்காரர்களால் சொல்லிக்கொள்ளப்படும் ஆன்மிக தமிழ் மண்ணில், திராவிடச் சார்பற்ற, இந்திய தேசிய நம்பிக்கை உடைய, ஹிந்து வெறுப்பற்ற, போலி மதச்சார்பின்மை பேசாத ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கும் ஒருவனின் எண்ணங்கள். பிஜேபி உடனே ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்பதால் கடவுள் உங்கள் மூலம் ஆட்சியைப் பிடிக்கிறார் என்றுகூட யோசிக்கும் ஒருவரின் கருத்துகள். 🙂 (இனிமே படிக்கத் தேவையில்லை என்பவர்கள் ஓடிப்போய்விடலாம் என்பதற்காகவே இவ்வரி எழுதப்பட்டது.)

அரசியல் மேடை அல்ல, அரசியல் பேச விரும்பவில்லை என்று சொன்னாலும் மிகத் தெளிவான செய்திகளை அரசியல் அரங்கில் உலவ விட்டிருக்கிறீர்கள். மிகத் தெளிவாகவே, அரசியல் பேசும் தேவை ஏற்படலாம் என்கிற தயாரிப்போடு வந்திருக்கிறீர்கள்.

எம்ஜியாரை அளவுக்கு மீறிப் புகழ்ந்தது ஒரு நல்ல அரசியல் தேர்வாக இருக்கலாம். அதிமுக கூடாரத்தைக் கலைக்கப் பயன்படலாம். ஓட்டு விழலாம். எல்லாம் சரி. ஆனால் மாற்று வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது எம்ஜியாரின் ஆட்சியை அல்ல. அதற்கும் மேலே. எம்ஜியாரைப் புகழ்வது ஓட்டுக்காக மட்டும் என்ற தெளிவு உங்களிடம் இருந்தால் நல்லதுதான். கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் புகழ்வதெல்லாம் ரொம்பவே ஓவர். இதில் நேர விரயம் செய்யாமல் இருப்பது நல்லது. மேலும் இதையெல்லாம் சகித்துக் கொள்ளவும் முடியவில்லை. அதே சமயம் அவர்கள் கட்சியைக் காப்பாற்றினார்கள் என்று சொன்னதில் உண்மையிலேயே தெளிவான உள்குத்து இருந்திருக்குமானால் அதைப் பாராட்டவே வேண்டும்.

ஊடகங்கள் உங்களுக்கு எதிராக எதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லும் தேவையோ அவசியமோ இல்லை. பொதுவாகவே ரஜினி ஏன் கருத்தே சொல்வதில்லை என்று ஊடகங்கள் கதறும் வகையிலேயே அவர்களை வைத்திருங்கள். ஒவ்வொன்றுக்கும் கருத்து சொல்வதால் உங்களுக்குப் பிரச்சினைகளும் மீம்ஸுகளும்தான் வந்து சேரும். எதாவது ஒரு பிரச்சினைக்கு விளக்கம் சொல்வதாக இருந்தாலும், இப்படி கேக்கறாங்க என்றெல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்லும் நிலையிலும் ஊடகங்கள் நீங்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் நிலையிலும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருங்கள். உங்கள் எளிமை நேரடியாக மக்களிடம் இருக்கட்டும். மக்களிடம் மட்டும் இருக்கட்டும்.

இனியும் சினிமா உலகம் என்று உணர்ச்சி வசப்படாதீர்கள். அதைவிடப் பெரிய உலகம் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. திரை உலகத்துக்கு நீங்கள் செய்யவேண்டியதை, அப்படி நீங்கள் நினைப்பதைப் பின்னர் செய்யுங்கள். மூன்றாவதாகத் திரைப்படம் அறிவித்ததையே இன்னும் ஜீரணித்துக்கொள்ளாத பலர் இருக்கிறார்கள். எனவே திரையுலகம் பற்றிய கருத்துகளை அரசியல் மேடைகளில் விலக்கி வையுங்கள்.

தமிழ் – தமிழன் குறித்த உங்கள் கருத்து தைரியமானது. ஆனால் இதெல்லாம் இங்கே காலம் காலமாக எதிர்கொள்ளப்பட்டுவிட்டது. இதெற்கெல்லாம் தூக்கத்தில் கூடப் பதில் சொல்லும் அளவுக்குத் தமிழ்த் தேசியவாதிகள் தயாராக இருக்கிறார்கள். அதையெல்லாம் தெரிந்தே இதைப் பேசுங்கள். ஒரு மேடையில் ஆங்கிலம் பேசுங்கள் என்று சமீபக் காலங்களில் எந்தத் தமிழ்நாட்டு அரசியல்வாதியும் இவ்வளவு பகிரங்கமாக மேடையில் சொன்னதில்லை. ரகசியமாகச் சொல்லிக்கொள்வார்கள் போல. அந்தத் தைரியத்தை நிச்சயம் பாராட்டவேண்டும். நீங்கள் தமிழ் பற்றியோ தமிழன் பற்றியோ ஒரு வரி பேசினால் இவர்கள் ஒரு மாதத்துக்கு அதற்கு விதம் விதமாகப் பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். தமிழ் என்பதையும் தமிழன் என்பதையும் ஒட்டுமொத்தமாகப் பிரிப்பதில் எவ்விதப் பொருளும் இல்லை. தமிழ் வளர்ச்சியும் தமிழன் வளர்ச்சியும் ஒரு சேரவே முக்கியமானதுதான். அதேபோல் இப்படி எதாவது சொல்லி தமிழ்த் தேசியவாதிகளையும் திமுகவினரையும் அதைப் பற்றி மட்டுமே பேசவிடுவதும் நல்லதுதான். 🙂

நேரடியாக மக்களுடன் பேசுவது போன்ற எளிதான மொழி உங்களது பலமாக இருக்கும். ஆனாலும் கூட அதில் ஒரு கோர்வையைக் கொண்டு வருவது நல்லது. மிக முக்கியமாக, ஆங்கில வார்த்தைகளைக் குறைத்துக்கொண்டு தமிழில் மட்டுமே பேசுவது மிக நல்லது, முக்கியமானது. டெஃபனட்லி சொல்றேன் போன்றவை தவிர்க்கப்படவேண்டும். உங்கள் பின்னால் உள்ள அணி திறமையாகவே காய் நகர்த்துகிறது. இன்னும் கவனம் கூடட்டும்.

எம்ஜியார் சிலை திறப்பு விழாவில் திமுகவினருக்கு ஊமைக்குத்தும் அதிமுகவினருக்கு மரணக்குத்தும் விழுந்திருக்கிறது. ரஜினி மற்றும் கமல் என்று ஊடகங்கள் பரபரப்பாகிவிட்ட நிலையில் ஸ்டாலின் பற்றி மக்கள் மறந்துவிட்டார்கள் என்பது போன்ற தோற்றம் கிட்டத்தட்ட வந்துவிட்டது. காத்திருந்தவன் பொண்டாட்டியை இரண்டு பேர் தூக்கிக்கொண்டு போக முயன்று, நீங்கள் வெல்லப் போகிறீர்கள். எனவே அத்தரப்பிலிருந்து கடுமையான கருத்துகள் பிரவாகமெடுக்கும். அதிகம் பயப்படத் தேவையில்லை. இவர்களது அரசியலே இப்படிப் புலம்புவதுதான். எம்ஜியார் இருந்தபோதும் ஜெயலலிதா இருந்தபோதும், ஜெயலலிதா இறந்த பின்பும். இன்றுவரை,கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டவர்களை அவர்கள் சபிப்பதைக் காணலாம். தமிழ்நாட்டின் நிலைக்காக மட்டும் அவர்கள் பொங்கவில்லை, இனி ஆட்சி வருமா என்ற நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்ததற்காகவும் புலம்புகிறார்கள். அதேசமயம் தேர்தல் அரசியலில் ரஜினிகாந்த் எதிர்கொள்ளவேண்டியது நிச்சயம் திமுகவாகவே இருக்கும். அதிமுக இப்போதே தங்கள் எதிர்காலத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது.

ஊடகங்கள் அனைத்தும் பேனர்கள் பிரச்சினை பற்றிப் பேசிக்கொண்டிருக்க, எடுத்த எடுப்பில் பேனர் பற்றிப் பேசியது, மக்களிடம் மன்னிப்பு கேட்டதெல்லாம் சிக்ஸர். ஆனால் இது வாய்ப்பேச்சாக நின்றுவிடக்கூடாது. இந்த பேனர் கலாசாரத்தை நிஜமாகவே ஒழிக்கவேண்டும். பேனரே வைக்காமல் இருக்கமுடியாது என்றால், எத்தனை பேனர்கள் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று வைக்கப்படுகிறது என்பதை ஒழுங்காகப் பின்பற்றவாவது செய்யவேண்டும். இதை நடைமுறையிலும் சாத்தியப்படுத்தவேண்டும். வழி முழுக்க பேனர் வைப்பதால் எரிச்சலே மிஞ்சுகிறது. இப்படி பேனர் வைக்காவிட்டால் எழுச்சியே இல்லை என்று ஊடகங்கள் சொல்லும் என கராத்தே தியாகராஜன் நேற்று ஒரு தொலைக்காட்சியில் பேசினார். இதுவும் உண்மைதான். ஊடகங்களே இத்தகைய கருத்துகளைப் பரப்பவே செய்கின்றன. வழிநெடுக பேனர்களே இல்லை என்பதைப் பாராட்டாகச் சொல்லாத வரை பேனர் மோகம் ஒழியாது. மாற்று அரசியலிலாவது பேனர்கள் ஒழிந்த அல்லது பேனர்கள் குறைந்த தமிழகம் வருவது நல்லது. (யாராவது ஒருவர் பேனர் தொழிலில் புரளும் பணம், அதில் பயன்பெறும் தொழிலாளர்கல், அவர்களது வாழ்வாதாரம் என்று வருவார். அதையும் எதிர்கொள்ளவேண்டும்!)

சாதாரண ஒரு நிகழ்ச்சியில் பேசியதற்கே இத்தனை பரபரப்பு. கட்சி தொடங்கி அறிவித்து முதல் கூட்டம் போடும் நாளில் தமிழ்நாடே அதிரும் என்று நிச்சயம் நம்புகிறேன். ஹிந்து எதிர்ப்பற்ற போலி மதச்சார்பின்மை நடிப்பற்ற ஒரு கட்சியை நடத்தி வெல்ல வாழ்த்துகள்.

Share

ரஜினியின் அரசியல் பிரவேசம்? (2017)

ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்றும் அதற்கு ஆலோசனை நடத்தினார் என்றும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. ரஜினி வருவாரா மாட்டாரா என்பது தெரியவில்லை.
 
ரஜினி அரசியலுக்கு வர நினைத்தால், இதைவிட நல்ல தருணம் கிடைக்காது. 96ல் மிக எளிதாக முதல்வராகும் வாய்ப்பை வேண்டாம் என்று விட்டுவிட்டார். இப்போதுவரை அரசியலுக்கு வரும் எண்ணம் ரஜினிக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன். சோ மறைவுக்கு ரஜினி எழுதிய சிறந்த அஞ்சலியில், 96 சமயத்தில் அரசியலுக்கு வராததற்குக் காரணம் சோ என்ற ரீதியில் ரஜினி எழுதி இருந்தார். அதை கொஞ்சம் யோசித்ததில், அப்போது அரசியலுக்கு வரும் எண்ணம் ரஜினிக்கு இருந்திருக்கும் என்பதாகவே நான் புரிந்துகொண்டேன். அந்த எண்ணத்த்தின் மிச்சம் மீதி இருக்குமானால், இந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.
 
ஜெயலலிதாவின் மறைவு, சசிகலா மீது மக்களுக்கு இருக்கும் ஒவ்வாமை, கருணாநிதியின் அரசியல் மௌனம், ஸ்டாலினின் உத்வேகமின்மை, மற்ற கட்சிகளின் மீது மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கை எனப் பல வகைகளில் இது நல்ல சமயம். ஸ்டாலினின் வளர்ச்சி உறுதியானாலும் ஸ்டாலின் எதிர் ரஜினி என்று மாறவும் நல்ல வாய்ப்புள்ளது. அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளுவது இந்நிலையில் ஓரளவு எளிதானதுதான். ஓபிஎஸ் நல்ல பெயர் எடுக்குமுன் ரஜினி முடிவெடுக்கவேண்டும். இது ஒன்றுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே நெருக்கடி.
 
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தால் எதிர்ப்பு மிகக் கடுமையாக இருக்கும். அந்த எதிர்ப்பின் உள்ளர்த்தம், அவருக்கு வெற்றி கிடைக்க சகல வாய்ப்புகளும் உள்ளது என்பதுதான். ஏனென்றால் அதிகம் எதிர்க்கப்பட்டவர்களே வென்றிருக்கிறார்கள். இவர்கள் ஒட்டுமொத்த அரசியலையும் ரஜினி எதிர் மற்றவர்கள் என்று மாற்றும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள். இதன் மூலம் மிக எளிதாக வெற்றியை நோக்கிச் செல்ல முடியும்.
 
இத்தனையையும் மீறி ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றே என் உள்ளுணர்வு சொல்கிறது. வந்தால் நிச்சயம் முதல்வராவார் என்றும் அதே உள்ளுணர்வு சொல்கிறது.
 
பின்குறிப்பு: போட்டி போடாமல் வரிசையாக என்னையும் ரஜினியையும் திட்டவும். அனைவருக்கும் திட்ட சமமான வாய்ப்பு வழங்கப்படும்.
Share

அன்புள்ள பா. ரஞ்சித்

அன்புள்ள பா.ரஞ்சித்

அன்புடன் ஒரு கடிதம். 🙂

நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்க வாய்ப்பில்லை என்பது தெரியும். தெரிந்தும் செத்துப்போன தன் மனைவிக்கு பாசவலையில் கமல்ஹாசன் கடிதம் எழுதிக் கொன்றெடுத்தது போல என் பங்குக்கு நானும் எழுதிக்கொல்கிறேன்.

நீங்கள் மீண்டும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அப்படமும் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.

கபாலி, ரஜினியின் திரை வரலாற்றில் மிகச் சிறந்த படமாக அமைந்துவிட்டது. நீங்கள் இயக்கப்போகும் அடுத்த படமும் அப்படியே ஆகட்டும். ஆனால் கபாலி திரைப்படத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித்தின் திரை வரலாற்றில் என்ன இடம் நீங்கள் யோசிக்கவேண்டும். ரஜினி என்ற ஒரு உச்ச நடிகராக அப்படம் அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தாலும், ஒரு முக்கியமான வளர்ந்து வரும் இளம் இயக்குநராக அப்படம் உங்களுக்கு பெருமை தரக்கூடிய, காலாகாலம் உங்கள் பெயரைச் சொல்லக்கூடிய ஒரு படமாக இருக்காது. சுருக்கமாக மெட்ராஸ் போன்ற ஒரு படமாக இருக்காது.

உண்மையில் உங்கள் கைக்கு வந்து அமர்ந்த மிகப்பெரிய வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. இடைவேளைக்குப் பிறகு ரஜினி வில்லனை வெல்லும் காட்சிகளில் திரைக்கதை என்பதோ புத்திசாலித்தனம் என்பதோ மருந்துக்கும் இல்லை. இங்கே நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் உங்கள் திரை வரலாற்றிலும், கபாலி திரைப்படம் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். இன்று கபாலி ரஜினியின் திரைப்படமாகவும் வசூலில் சாதனை செய்த படமாகவுமே அறியப்படுகிறது. இனியும் அப்படித்தான் அறியப்படும்.

அதிர்ஷ்டம் இரண்டாவது முறை கதவைத் தட்டாது என்பது இன்று பொய்யாகி இருக்கிறது. இந்த முறையாவது வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்த நடிகர்களைத் தவிரவும் நல்ல நடிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்ற எளிய உண்மையை நம்புங்கள். பாலு மகேந்திரா செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். ஒரே நடிகர்கள் தொடர்ச்சியாக நடிப்பது தரும் அலுப்பை ஓர் இயக்குநராக நீங்கள் கடந்தே ஆகவேண்டும்.

ரஜினி படம் என்பதால் எதைச் சொன்னாலும் செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது உண்மைதான். ஆனால் ரசிகர்களுக்கான படம் என்பது முதல் இரண்டு நாள்களில் முடிந்துவிடும். நீங்கள் படம் செய்வது ரசிகர்களுக்காக மட்டுமே அல்ல. எனவே திரைக்கதையில் சின்ன சமரசம் கூட ரஜினிக்காகச் செய்யாதீர்கள்.

வசனத்தை மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பாடலாகப் போடும் சந்தோஷ் நாராயணனிம் கொஞ்சம் மெனக்கெட்டு நல்ல பாடலாகக் கேட்டு வாங்குங்கள். ரஜினிக்கு ஓப்பனிங் சாங் வேண்டாம். அல்லது உலகம் ஒருவனுக்கே போல் வேண்டவே வேண்டாம். கபாலி திரைப்படத்தில் தனியே அதிகம் பாடல்கள் வராததுதான் நல்லதாகப் போனது. சந்தோஷ் நாராயண்தான் இசை என்றால் அப்படியே இப்படத்துக்கும் செய்துவிடுங்கள். ஒரு மாற்றத்துக்கு, இளையராஜாவை அல்லது ஏ.ஆர். ரஹ்மானை யோசிப்பது நல்லது என் எண்ணம்.

ஒன்று, தீவிரமான அரசியல் படமாகவே எடுங்கள். அல்லது அரசியலற்ற படமாகவே இயக்குங்கள். அரசியலற்ற ஒரு கேளிக்கைத் திரைப்படமாக எடுத்துவிட்டு அதை அரசியல் படமாக முன்வைக்கப் பார்க்காதீர்கள். நீங்கள் முன்வைக்காவிட்டாலும் உங்கள் ‘நண்பர்கள்’ அதை, கபாலிக்குச் செய்தது போல, அப்படி முன் வைப்பார்கள். அப்போது அதை ஆதரிக்காதீர்கள். அமைதியாகக் கடந்து செல்லுங்கள்.

உங்களுக்கு இருக்கும் தீவிரமான அரசியல் உணர்வு வரவேற்கத்தக்கது. ஆனால் அதையே மேடைதோறும் பேசுவது திரையுலகில் உங்களுக்கு நல்லவற்றைத் தராது என்றே நான் நிச்சயம் நம்புகிறேன். இன்று உங்களை ஏற்றிப் பேசும் உங்கள் நண்பர்கள், உங்களது தோல்விக் காலத்திலும் உங்களிடமிருந்து அரசியல் ஆதாயம் பெற மட்டுமே உங்களுடன் இருப்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் உங்கள் தேடல் சினிமாவில் வெற்றி என்பதாக இருக்கும். அது இல்லாதபோது நீங்கள் அரசியல் என்ற வெளிக்குள் வேறு வழியின்றி நுழையவேண்டியிருக்கும். இருபது படங்கள் செய்வது வரை உங்கள் அரசியல் உங்களுக்குள்ளே இருக்கட்டும். உங்கள் தொடர்பு மொழி சினிமா. அதை உங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துங்கள். மணிரத்னத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளுங்கள். இது உங்கள் திரைவாழ்க்கைக்கு நல்லது. இல்லையென்றால் விளக்கம், விளக்கத்துக்கு விளக்கம் கொடுத்தே, சேரன், தங்கர்பச்சான், அமீர் வரிசையில் போய்ச்சேரவேண்டி இருக்கும்.

கடைசியாக ரகசியமாக ஒன்று. வழக்கம்போல் திரைப்படத்தின் பின்னணியில் ஈவெராவின் படத்தை எங்கேயும் வைக்காதீர்கள். கவின்மலர்களின் பேட்டியில் வழக்கம்போல் ஈவெராவின் பெண் விடுதலையை ரசிப்பவன் என்றும், கபாலியில் குமுதவல்லி போல இப்படத்தில் வரும் விகடவல்லி ஈவெராவின் பாதிப்பில் வந்ததுதான் என்று எதாவது சொல்லி நழுவிவிடுங்கள். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டது போல காட்டிவிடுவார்கள். நம் வேலை நமக்கு. அது வெற்றிகரமாகத் தொடரட்டும்.

ரஜினியை மீண்டும் இயக்கப் போகும் நீங்கள் தமிழ்த் திரை வரலாற்றில் மிகச் சிறந்த இயக்குநராக வலம் வர வாழ்த்துகள்.

Share

ரஜினியின் கழுகுப் பார்வை

யாருக்கு நேரம் சரியில்லை எனத் தெரியவில்லை. கடந்த ஞாயிறன்று நன்றாக உண்டுவிட்டு நன்றாக உறங்கிவிட்டு எழுந்து தொலைக்காட்சியை மேய்ந்தேன். தொலைக்காட்சியில் திரைப்படங்கள், செய்திகள், விவாதங்கள் என்ற பெயரில் வரும் காட்டுக்கத்தல் சண்டைகள், கிரிக்கெட்டைத் தவிர எதையும் பார்ப்பதில்லை. இப்போது தொலைக்காட்சியில் திரைப்படங்களும் பார்ப்பதில்லை. ஏனென்றால் எல்லாத் திரைப்படங்களுமே பெரும்பாலும் ஏற்கெனவே பார்த்த திரைப்படங்கள்தான் என்பதால். அன்று என்னதான் இருக்கிறதென்று பார்ப்போமே என்று மேய்ந்தபோது கண்ணில் பட்டது ரஜினி நடித்த ‘கழுகு.’ அப்போதுதான் படம் தொடங்கி இருந்தது. கழுகு என்ற பெயரைப் பார்த்ததும் மனசுக்குள் இரண்டு அலைகளாக ‘பொன்னோவியம்’ பாடலும் ‘காதலென்னும் கோவில்’ பாடலும் ஓடியது. இப்படத்தில் வரும் திகிலூட்டும் இசை ஒன்றைப் பற்றி போகன் சங்கர் தற்சமயம்தான் எழுதியிருந்தார். எனவே கொஞ்சம் நேரம் பார்ப்போம் என்று பார்க்கத் தொடங்கினேன்.

இப்போதும்கூட உட்கார்ந்த பார்க்கமுடிகிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் ரஜினியின் பழங்காலப் படங்கள் பலவற்றை ஒரு நிமிடம் கூடப் பார்க்கமுடியாது என்ற கொடும் ரகசியம் ரஜினி ரசிகர்களுக்கத்தான் தெரியும். அதையும் மீறி ரஜினிக்காக மட்டுமே பார்ப்போம். ஆனால் இப்படம் அத்தனை மோசமல்ல. முதல் ஒரு மணி நேரம் கொஞ்சம் ஜாலியாகவே போனது. இளையராஜாவின் இசைதான் எல்லாவற்றையும் பின்னிக்குத் தள்ளி முன்னுக்கு வந்து நின்றது. நரபலி கொடுக்கப்படும் இசையும் வந்தது. அதற்குப் பின் படம் பாதாளத்தில் விழுந்தது. (கருத்தியில்ரீதியாக படம் விழுந்தது ஒரு பக்கம். படமும் செம மொக்கையாகிவிட்டது!)

t0001653

நரபலியைக் கொடுப்பது ஒரு சாமியார். கார்ப்பரேட் சாமியார். அவர் காவி உடை உடுத்தித்தான் வலம் வருகிறார். அவருக்கு சிஷ்யப்பிள்ளை இன்னொரு காவி சாமியார். இவர்கள் திட்டம்போட்டு நரபலி கொடுக்கிறார்கள். இவர்கள் மடத்தில் யாருக்கும் தெரியாத அறையில் விஸ்கி பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. நிர்வாணப் பெண் சிலை உள்ளது. அமுத பானம் (பெயர் சரியாக நினைவில்லை) என்ற பெயரில் எதோ ஒரு பானத்தைக் கொடுக்கிறார்கள். இதில் போதைப்பொருள் உள்ளது. இதைக் குடித்துவிட்டு அனைவரும் செக்ஸி நடனம் ஆடுகிறார்கள். சாமியார் சொற்பொழிவாற்றும்போதெல்லாம் பின்பக்கத்தில் சிவன் சிலை உள்ளது. ஒரு நல்ல சாமியார்கூட இல்லை. அத்தனை பேரும் கேடுகெட்டவர்கள். இப்படி ஒரு படம்! இன்றெல்லாம் இத்தனை எளிதாக இப்படியெல்லாம் எடுத்துவிடமுடியாது. பெரிய மாற்றம்தான். இதுவரை ஒரு பாதிரியார் இப்படியெல்லாம் செய்ததாக எதாவது படம் வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. யாருக்கேனும் தெரிந்தால் பட்டியல் கொடுங்கள். மலையாளப் படப் பட்டியலுடன் வராதீர்கள். தமிழ்ப்படப் பட்டியல் வேண்டும்.

தமிழ்ப்படங்களில் ஹிந்து சாமியார்கள் எப்படியெல்லாம் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் கண்ணில் ரத்தமே வரும். அந்த அளவுக்கு அசிங்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஈவெராவின் மண்ணல்லவா, ஈவெராவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டவர்களின் படங்களில் வேறெப்படியும் இருந்துவிடமுடியாது. ஆனால் மிகச் சரியாக இதை ஹிந்து சாமியார்களோடு நிறுத்திக்கொள்வார்கள். ஈவெராவின் வலு அப்படி.

இப்படத்தில் இன்னொரு கொடுமையும் உள்ளது. இந்த சாமியார் விவகாரத்தைவிடக் கொடுமையானது அது. நரபலி தர சாமியாருக்கு உதவுபவர்கள் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் இந்த நரபலியில் நம்பிக்கை உள்ளது போலக் காட்டப்பட்டுள்ளது. பழங்குடி நடனம் என்ற பெயரில் காபரே டான்ஸை சாமர்த்தியமாக ஆடவிட்டிருக்கிறார் இயக்குநர். தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறாள் என்று ஒரு பழங்குடியினர் கூடக் கோபப்படவில்லை என்று மிகத் தெளிவாக இயக்கி இருக்கிறார். அதுமட்டுமல்ல, நரபலி தந்தவர்களையும் அவர்களுக்கு உதவுபவர்களையும் காப்பாற்ற ஒட்டுமொத்தப் பழங்குடிக் கூட்டமும் ரஜினியையும் அவரது நண்பர்களையும் பந்தாட தீப்பந்தத்துடன் புறப்பட்டு வருகிறது. ரஜினி அத்தனை பேரையும், யெஸ், கிட்டத்தட்ட அத்தனை பேரையும் தன் பஸ்ஸைக் கொண்டே நசுக்கித் தள்ளுகிறார். கெட்டவர்கள் போலிஸில் மாட்டிக்கொள்ள, சுபம்.

நரபலி சாமியாருக்கு உதவியாளராக சோ. சோவுமாய்யா என்று நொந்து போய் இருந்த நேரத்தில்தான் தெரிகிறது, சோ அங்கே வந்திருக்கும் ஒரு துப்பறியும் செய்தியாளர் என்று. சோவின் குட்டு வெளிப்பட, போலிச் சாமியாரிடம் மாட்டிக்கொள்கிறார். அவர்கள் சோவை மிரட்டி, சாமியாரைப் பற்றி ஒரு வருடம் தொடர்ச்சியாக அவரது பத்திரிகையில் புகழ்ச்சியாக எழுதச் சொல்கிறார்கள். சோ மறுக்கிறார். சவுக்கடி தரப்படுகிறது. வலி தாங்காமல் துடிக்கிறார். உடன் இருக்கும் இன்னொரு நல்ல பெண் பத்திரிகையாளர் (இவர்தான் சாமியாராக நடிக்கும்போது செக்ஸி டான்ஸெல்லாம் ஆடுகிறார்!) சொல்கிறார், “இப்ப அப்படி எழுதிட்டு, தப்பிச்சு போன பிறகு, உண்மையை எழுதிடலாம்” என்கிறார். அதற்கு சோ, “நம்பமாட்டானுங்க. காசு கொடுத்தப்ப காசை வாங்கிட்டு பாராட்டி எழுதினான், இப்ப காசு பெயரலை, மாத்தி எழுதறாம்பானுங்க. எனக்கு ஜனங்களை பத்தி நல்லா தெரியும்” என்கிறார். சும்மா பதிவுக்காக பதிந்து வைத்தேன்.

கழுகு படம் ஹிந்துக்களுக்கு எதிராக எடுக்கப்படவேண்டும் என்று திட்டமிட்டு எடுக்கப்பட்டதல்ல. இதுதான் பிரச்சினையே. திட்டமிட்டு எடுக்காமலேயே, நினைவிலி கட்டமைப்பில்கூட இப்படித்தான் சாமியார்களைச் சித்திரிக்கவேண்டும் என்று அவர்களுக்கு புகட்டப்பட்டுள்ளது என்பதுதான் நாம் அறிந்துக்கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம். இப்படி ஹிந்துக்களை ஆன்மிகம் சார்ந்தும் சாதி சார்ந்தும் இழிவுபடுத்தி எடுக்கப்படும் படங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டிய அவசியம் உள்ளது. அது மிக முக்கியமான ஆவணமாக இருக்கும்.

இதற்கு என்ன அவசியம்? சில வருடங்கள் முன்பு வரை கூட திரைப்படங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் எப்படி சித்திரிக்கப்பட்டனர் என்பது நமக்குத் தெரியும். இன்று அப்படி அத்தனை எளிதாக போகிற போக்கில் ஒரு இயக்குநர் மூன்றாம் பாலினத்தவரை இழிவுபடுத்திவிடமுடியாது. அவர்களுக்கான குரல் என்ற ஒன்று உருவாகி வலுப்பெற்றதே இதன் காரணம். இதுவேதான் ஹிந்து மதத்தினர் இழிவுபடுத்தப்படும்போதும் நிகழவேண்டும். மெட்ராஸ் போல, Fandry போல சாதியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் ஒரு படத்துக்கு இது பொருந்தாது. அதற்கான காரணங்களோடு பின்னணியோடு ஒரு திரைப்படம் உருவாகி வருமானால், எச்சாதியைப் பற்றியும் எம்மதத்தைப் பற்றியும் வலுவான விமர்சனத்தோடு வரும் அந்தப் படம் முக்கியத்துவம் பெறவேண்டும். அது எல்லா மதங்களுக்கும் நிகழக்கூடிய சாத்தியத்தோடும் இருக்கவேண்டும். நோக்கம் படைப்புச் சுதந்திரத்தை அச்சுறுத்துவதோ குறுக்குவதோ அல்ல. மாறாக படைப்புச் சுதந்திரத்துக்கு இருக்கவேண்டிய ஒரு பொறுப்பைப் பற்றி அறிவுரைப்பது மட்டுமே. அதற்கு, இப்படி ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் திரைப்படங்களைப் பற்றிய ஒரு புத்தகம் உதவலாம். உதவும்.

பின்குறிப்புகள்:

* இயக்குநர் எஸ் பி முத்துராமன். திரைக்கதை பஞ்சு அருணாச்சலம்.

* ஹீரோயின் ரதி செம அழகு. 🙂

Share

புலி என்னும் கிட்டத்தட்ட அம்புலிமாமா

புலியும் தமிழ்நாட்டு சிறுவர் திரைப்படங்களும் – ‘மாஸ்’ திரைப்படம் பார்த்தபோது இதுபோன்ற கட்டுரை (!) ஒன்றை எழுத நினைத்தேன். ‘புலி’ திரைப்படம் பார்த்ததும்தான் எழுத முடிந்தது. ஒன்றோடு ஒன்று மிக லேசாகத் தொடர்புடைய எண்ணங்களை (கொஞ்சம் தொடர்பற்ற எண்ணங்களையும்கூட) ஒன்று கோர்ப்பதே நோக்கம்.

Puli_vijay

முதலில் ‘புலி’ திரைப்படம் பற்றிச் சொல்லிவிடுவோம். முதல் முக்கால் மணி நேரம் உட்கார்ந்து பார்க்கமுடியவில்லை. சகிக்கமுடியாத திரைக்கதை, கொஞ்சம் கூட ஒட்டாத விஜய்யின் நடிப்பு. பின்பு ஒரு கட்டத்தில் எப்படியோ ‘கதை’ நம்மைத் தொற்றிக்கொள்கிறது. இதிலும் எந்தப் புதுமைகளும் இல்லை. ஏழு கடல் தாண்டி ஏழு மலைதாண்டிய நம் மரபில் வந்த சிறுவர் கதைகளின் இன்னொரு வடிவம். எத்தனையோ முறை அரைக்கப்பட்டுவிட்ட அதே விடுகதை வடிவங்கள். இவையெல்லாம் நிச்சயம் ஒரு மாஸ் ஹீரோவின் திரைப்படம் ஆகமுடியாது. இந்த மாஸ் ஹீரோ என்ற பதத்தை எழுதும்போதே கொஞ்சம் எரிச்சலாகத்தான் வருகிறது. ஆனால் அதைச் சொல்லித்தானே ஆகவேண்டும். அதிலும் சிம்புதேவனின் திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். 23ம் புலிகேசியே கொஞ்சம் சுமாரான திரைப்படம்தான். பல்லாண்டுகளாக அப்படி ஒரு திரைப்படம் வராமல் போனதாலும், வடிவேலு என்றொரு சரியான நடிகர் அந்தப் படத்தில் அமைந்ததாலும் அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் பார்க்கும்போது தோன்றிய உணர்வு, தொலைக்காட்சிகளில் வரும் நகைச்சுவைத் துணுக்குகளை ஒன்றாக்கிய ஒரு படம் என்பதே. அந்த அபத்தத்தை மட்டும் ‘புலி’ எப்படியோ தாண்டி, முழுநீளத் திரைப்படம் என்று இதைப் பார்க்கமுடிகிறது.

இந்தப் படத்தைக் கெடுத்ததில் முக்கியப் பங்கு தம்பி ராமையாவுக்கே. அவர் வரும் காமெடிக் காட்சிகள் நாலாந்தரக் காட்சிகள். சிம்புதேவன் செய்த மிகப்பெரிய தவறு, தொடக்கக் காட்சிகளில் தேவையின்றி வைத்த தம்பி ராமையாவின் காட்சிகளும் விஜய்-ஸ்ருதிஹாசன் காதல் காட்சிகளும். உண்மையில் நான் என் மகனுடன் சென்றிருக்காவிட்டால் இக்காட்சிகளிலேயே எழுந்து வெளியே வந்திருப்பேன்.

அதன் பின்னர் ஓர் இந்திய சிறுவர் திரைப்படத்துக்கான அத்தனை காட்சிகளையும் இப்படத்தில் பார்ப்பேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எதுவும் புதுமையில்லை என்றாலும் இப்படியெல்லாம் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. நாற்பது வருடங்கள்கூட இருக்கலாமோ? இருக்கலாம்.

இது போன்ற சிறுவர் திரைப்படங்களுக்குத் தேவையானது கொஞ்சம்கூட லாஜிக் பார்க்காத கற்பனை. அதை செயல்படுத்த ஒரு சூப்பர் ஹீரோ. சிறுவர்களைக் கட்டிப்போடும் அரங்க அமைப்புகள், ஒளிப்பதிவு, இசை. இத்தனையும் இப்படத்தில் எல்லா கச்சிதங்களுடனும் அமைந்துள்ளது. கிராபிக்ஸ் சில இடங்களில் சொதப்பினாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தேறிவிட்டது என்றே சொல்லவேண்டும். தேவையற்ற பாடல்கள் நாராசமாய் ஒலித்து சிறுவர்களை சோதிக்கின்றன என்றே சொல்லவேண்டும். இன்னொரு கோணத்தில் பார்த்தால் இந்தப் பாடல்களை இதே சிறுவர்கள் மனப்பாடமாகச் சொல்லக்கூடும். எனவே அவர்களுக்கு இந்தப் பாடல்கள்கூட தடையாக இருக்க வாய்ப்பில்லை.

இப்படத்தைப் பார்க்கும் நாம்தான் சிறுவர் உலகத்துக்கும் முழுமையாகச் செல்லமுடியாமல் வயதுவந்தவர்களுக்கான மெச்சூர்ட் திரைப்படமாக ஏற்றுக்கொள்ளவும்முடியாமல் தத்தளிக்கிறோம். இதற்கான காரணம் பார்வையாளர்களான நம்மிடம் மட்டும் இல்லை. இயக்குநரில் தொடங்கி நடிகர்கள்வரை அனைவருக்கும் பங்குள்ளது.

இந்தப் படத்தைப் பார்க்கத் துவங்கிய சில நிமிடங்களில், மந்திர சக்தி கொண்ட நீர்மத்தைப் பற்றிய காட்சியின்போது நினைத்துக்கொண்டேன். முழுமையான சிறுவர் படத்தில் குள்ளர்கள் வருவார்களே என்று. பாலகிருஷ்ணாவும் ரோஜாவும் நடித்த ஒரு தெலுங்கு மொழிமாற்றப் படத்தைப் பார்த்திருக்கிறேன். (தெலுங்கில் பைரவ த்வீபம் தமிழில் விஜயராகவன் என்ற எதோ ஒரு பெயரில் வந்தது.) அதில் குள்ளர்கள் வருவார்கள். அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட் என்று அப்போது கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி நினைத்துக்கொண்டிருந்தபோதே அடுத்த காட்சியில் குள்ளர்கள் வந்தார்கள். சரி, இது முழுமையான சிறுவர் படம்தான் என்று எனக்கு அப்போதுதான் உரைத்தது. இந்தியத் திரைப்படங்களில் குள்ளர்கள் வரும் திரைப்படங்களில் என்ன என்ன காட்சிகள் வருமோ அவையே வந்தன என்பதுதான் இடைஞ்சல். ஆனாலும் குள்ளர்கள், பறக்கும் மனிதர்கள், ராட்சத வீரன், இறவா வரத்துக்கான அரசியின் யாகம், பேசும் பறவைகள், கொலைகாரத் தளபதி என எதையும் விட்டுவைக்காமல் சிறுவர்களுக்கு ஒரு விருந்தையே படைத்திருக்கிறார் இயக்குநர்.

ஆனால் இப்படம் வருவதற்கு முன்பு யாரும் வாய் திறந்துகூட இது சிறுவர்கள் படம் என்று சொல்லிவிடவில்லை. சிறுவர்கள் படமெடுக்க உலகெங்கும் பில்லியன் கணக்கில் செலவு செய்துகொண்டிருக்க, இங்கே சிறுவர் படம் என்று சொல்லவே கூச்சம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சிறுவர் படங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் சென்று காண்பிக்கும் வழக்கமே இல்லை. வயது வந்தவர்கள் என்ன படம் பார்க்க விரும்புகிறார்களோ அதையேதான் குழந்தைகளும் பார்க்கிறார்கள். அப்படியே அதை மட்டுமே விரும்பத் தொடங்குகிறார்கள். அதோடு உலகத்தில் வெளியாகும் அத்தனை சிறுவர் படங்களையும் நம் சிறுவர்கள் எப்படியோ பார்த்துவிடுகிறார்கள். எனவே தமிழ்த் திரைப்படங்களின் போதாமையே இவர்களின் முகத்தில் முதலில் அறைகிறது. அதுவே அப்படத்தின் தோல்விக்கான முக்கியமான காரணமாக அமைந்தும்விடுகிறது. எனவேதான் சிறுவர்கள் படம் என்று சொல்வதில் யாருக்கும் விருப்பம் இல்லை. சிறுவர்களுக்கான ஒன்றைச் செய்யும் பொறுமையோ வழக்கமோ நம் பெற்றோர்களுக்கும் இல்லை.

ஒரு இயக்குநர் சொன்னாராம், தான் நல்ல கலைப்படம் எடுத்தபோது அதை வெற்றிபெற வைக்காத தமிழர்களுக்கு நல்ல படம் பார்க்கவோ கேட்கவோ தகுதியில்லை என்று. இதில் கூடுதல் குறைவாக இருந்தாலும், கொஞ்சம் உண்மையும் உள்ளது.

ரேவதியும் அரவிந்த் சாமியும் நடித்து ‘பாச மலர்கள்’ என்றொரு திரைப்படம் வந்தது. படம் வந்த ஒரு வாரத்தில் ரேவதி ஒரு தொலைக்காட்சியில் புலம்பிக்கொண்டிருந்தார். ‘இது குழந்தைகள் திரைப்படம். அவர்களை நம்பித்தான் வெளியிட்டோம். ஆனால் எந்தக் குழந்தைகளும் பார்க்க வரவில்லை’ என்று. அதுவரை அது குழந்தைகள் படம் என்று யாருமே சொல்லததால் யாருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது அது குழந்தைகள் படம் என்று. படம் ஓடவில்லை என்றாகவும் மெல்ல சிறுவர் படம் என்று சொல்லத் தொடங்குகிறார்கள்.

இம்சை அரசனை விட ‘புலி’ மிக முழுமையான சிறுவர் திரைப்படம். அந்தக் காலம் என்றால் வரிவிலக்கெல்லாம் கொடுத்திருப்பார்கள். இன்று படம் வருவதே வரிவிலக்கு கொடுத்ததற்கு ஒப்பானதாகிவிட்டது. அதிலும் இப்படத்தில் அரசியல் வசனங்கள் உண்டு. தன்னைத்தான் சொல்கிறார்கள் என்று ஜெயலலிதா நினைக்காமல் இருந்ததே விஜய் செய்த பூர்வஜென்ம புண்ணியம். திரையரங்கில் ரஜினியின் அந்தக் காலஅரசியல் வசனங்களுக்கு எப்படி ஆர்ப்பரித்தார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். இதில் வரும் அரசியல் வசனங்கள் பலருக்கும் அவை அரசியல் வசனங்கள் என்றே தோன்றவில்லை. விஜய் இந்த அரசியல் எண்ணத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு நல்லது.

விஜய் நடித்ததின் ஒரு ப்ளஸ் அவரது புகழ் என்றால், மிகப்பெரிய மைனஸ், படம் முழுக்க அவரை பெரிய ஹீரோவாகக் காட்டிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம். தேவையற்ற காட்சிகளிலும் ஸ்லோ மோஷனில் நடந்து பின்னணி இசை ஒலிக்க அவர் வருவதைப் பார்க்கும்போது, இப்படத்தை வயது வந்தவர்களுக்கான திரைப்படமாகவே அவரும் எடுத்துக்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பல காட்சிகளில் நடிக்கத் திணறுகிறார். இதுபோன்ற திரைப்படங்களில் நடிக்கவும் ஒரு திறமை வேண்டும். மிகவும் மோசம் என்று விஜயைச் சொல்லமுடியாது என்றாலும், என்னவோ ஒட்டவில்லை.

இப்படம் வருவதற்குமுன்பே நினைத்தேன், ஒன்று இப்படம் பெரிய வெற்றியடையும் அல்லது ஊத்திக்கொள்ளும் என்று. இன்று நான் பார்த்தபோது திரையரங்கில் என்னுடன் முப்பது பேர் பார்த்திருந்தால் அதிகம். நமக்கு சிறுவர் படங்கள் இனியும் வாய்க்காமல் போவதற்கு இப்படமும் ஒரு காரணமாக இருக்கும். இதில் வரும் காதல் காட்சிகள், பாடல்கள், கேவலமான காமெடிக் காட்சிகள் என பலவற்றைச் சுட்டிக்காட்டி, இவையெல்லாம் உள்ள ஒரு படம் எப்படி குழந்தைகள் படமாக முடியும் என்று யாரேனும் கேட்டால், அக்கேள்வியைப் புறந்தள்ளவும் முடியாது.

எப்படி இருந்தாலும் இப்படி ஒரு படத்தை நடிக்க முன்வந்ததற்காக விஜய்யைப் பாராட்டவேண்டும். முதலில் உள்ள ஒரு மணி நேரத்தில் பல காட்சிகளை வெட்டி நீக்கி, பின்னர் கடைசியில் வரும் ப்ளாஷ்பேக் காட்சியை கொஞ்சம் முன்னகர்த்தி நகாசு வேலை செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் பிழைத்திருக்கலாம்.

சிம்புதேவனின் பல மொக்கைத் திரைப்படங்களுக்கு மத்தியில் இது ‘சிறுவர் திரைப்படம்’ என்ற அளவில் கொஞ்சம் தேறுகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இதன் வணிகத் தோல்வி தவிர்க்க முடியாததுதான். ஐந்து வயது முதல் பத்து வயது சிறுவர்களுக்கான முழுமையான சிறுவர் படம் கடந்த முப்பது நாற்பது வருடங்களில் வந்தது எது என்று யோசித்தால் நமக்கு பதிலே கிடைக்காது.  தங்கமலை ரகசியம், வேதாள உலகம் அளவுக்கு, அதைவிட அட்டகாசமான ஒரு தரத்தில் இப்படம் வந்திருக்கிறது. இன்னும் ஒரு ஐம்பது வருடம் கழித்து இப்படம் வெறும் ஓர் உதாரணமாக மட்டும் தேங்கும் என நினைக்கிறேன்.

ஒரு பொறுப்பற்ற அவசரத்தாலும் வணிக வெற்றியை நினைத்தே செயல்பட்டதாலும் திரைக்கதைக்கு மெனக்கெடுவது அநாவசிய வேலை என்ற தமிழ்த்திரைப்பட முடிவுகளாலும் இத்திரைப்படம் கண்டிக்கும் வணிகத்தோல்வி, சிறுவர் திரைப்படங்கள் மீண்டும் தமிழில் இல்லாமல் போவதற்கு காரணமாக அமையும். நம் தொழில்நுட்ப வசதி உயரும்வரை, சிறுவர் திரைப்படங்களுக்கான தேவையை வயது வந்தவர்கள் அறியும்வரை தமிழில் சிறுவர் திரைப்படங்கள் வந்து என்னதான ஆகப்போகிறது?

அறிவுரையே சொல்லாத, லாஜிக்கே இல்லாத, கற்பனையின் உச்சத்துடன் இயக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை உங்கள் குழந்தைகள் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? நிச்சயம் இப்படத்துக்குக் கூட்டிச் செல்லுங்கள். படம் பார்க்க சகிக்காமல் நெளியும் காட்சிகளில் நீங்கள் மொபைலை நோண்டிக்கொண்டிருக்கலாம். அல்லது உங்கள் குழந்தை எப்படி வாயை பிளந்து ரசிக்கிறது என்று பார்த்து அதை நீங்கள் ரசிக்கலாம்.

குறிப்புகள்:

* விட்டலாச்சாரியாவின் கேவலமான (டப்பிங்) திரைப்படங்களை நான் கணக்கிலேயெ எடுக்கவில்லை.

* பாகுபலி வந்தபோது புலி டீம் ஏன் பதறியது என்பதற்கான காரணம் கிராஃபிக்ஸ் பிரம்மாண்டம் மட்டுமல்ல, கதையும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பதுதான். இந்த இரண்டின் கதையும் கோச்சடையானின் கதையும்கூட ஓரளவுக்கு ஒன்றுதான். கோச்சடையான் தமிழின் மிக முக்கியமான மேலான முயற்சி. அப்படத்தின் தோல்வியும் ‘புலி’ படத்தின் விமர்சனத்துடன் ஒப்பிடத்தக்கதே.

* சொல்லி வைத்தாற்போல் இப்படத்தில் வரும் எந்த முக்கிய நடிகையும் நெற்றிப் பொட்டு வைத்துக்கொள்வதில்லை. நடிகரும் வைத்துக்கொள்வதில்லை. அதெப்படி?

* மாஸ் திரைப்படமும் நல்ல குழந்தைகள் திரைப்படமும். என்ன பிரச்சினை என்றால் வெங்கட் பிரபுவுக்கோ சூர்யாவுக்கோ அதைப் பார்த்த பெற்றோர்களுக்கோ அது வழக்கம்போல தெரியாது என்பதுதான்.

Share

இங்கே எதற்காக – புத்தக விமர்சனம்

ஒரு திரைப்படத்தை இயக்கி வெளியிடுவது எத்தனை கடினமானது என்பது எல்லாருக்குமே தெரியும். அதுவும் மாற்றுத் திரைப்படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இங்கே வணிகத் திரைப்படங்கள் வெளிவருவதே அத்தனை கடினம் என்னும் நிலையில், மாற்றுத் திரைப்படங்கள் மட்டுமே எடுப்பேன் என்றொரு இயக்குநர் உறுதியாக இருந்தால் அவர் என்ன பாடுபடவேண்டியிருக்கும் என்பதை இயக்குநர் ஜெயபாரதியின் ‘இங்கே எதற்காக’ நூலைப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.

inge etharkaakaஇங்கே எதற்காக, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், ரூ 150

முன்பு தூர்தர்ஷனில் மதியம் மாநில மொழித் திரைப்படங்கள் வரிசையில் ஜெயபாரதியின் ‘உச்சிவெயில்’ திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்று அறிவித்தார்கள். அப்போது எனக்கு 13 அல்லது 14 வயதிருக்கலாம். அப்போதே இதுபோன்ற ‘மெல்ல நகரும் இருட்டுக்குள் யாரோ ஒருவர் சத்தம் குறைவாகப் பேசும் படங்களை’ (படமெடுக்க பணம் கேட்டு ஜெயபாரதி செல்லும்போது இப்படித்தான் நடிகை ராதிகா சொல்கிறார்) விரும்பிப் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. மொழி தெரியாமல் சப்-டைட்டில்களை மெல்ல கூட்டி வாசித்து அரைகுறையாகப் புரிந்துகொண்டு மலையாள, கன்னடப் படங்களெல்லாம் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் கருப்பு வெள்ளை படம். (இதுதான் தமிழின் கடைசி கருப்பு வெள்ளை படமாம்.) ஜெயபாரதி என்ற பெயரைக் கேட்கவும் ஜெயபாரதி என்ற நடிகை நடித்தது என்றுதான் அதைப் பார்க்கத் தொடங்கினேன்.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம் என் வீட்டில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். நான் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். மிக மங்கலாக சில காட்சிகள் நினைவிலுள்ளன. தலைவாசல் விஜய் (அப்போது அவர் வெறும் விஜய் மட்டுமே. தலைவாசல் வெளியாகியிருக்கவில்லை) ராணுவத்திலிருந்து திரும்ப வந்தவர் போன்ற நினைவு. அந்த ராணுவ உடையில் க்ளோஸப் காட்சியில் என்னவோ பேசுவார். யாரோ ஒரு முதியவர் காணாமல் போய்விடுவார். அவரை காரில் தேடுதேடென்று தேடுவார்கள்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது இந்தப் படத்தைப் பார்த்திருந்த ஒரே ஜீவன் நானாகத்தான் இருந்தேன். ‘இதுக்கெல்லாம் அவார்ட்னு கொடுத்து… நம்ம டிடிக்குன்னு படம் கிடைக்குதே’ என்பதுதான் ஒட்டுமொத்த கருத்தாக இருந்தது. இந்தப் படம் ஏன் முக்கியமான படம் என்றெல்லாம் அன்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இன்றும் நான் இது மிக முக்கியமான படம் என்றெல்லாம் நினைக்கவில்லை. மாற்றுத் திரைப்படங்களின் இலக்கணமாக ஜெயபாரதியின் திரைப்படங்களைச் சொல்லவும் இல்லை. நிச்சயம் ஜெயபாரதியின் படங்களில் அவற்றுக்கே உரிய குறைகள் உள்ளன. ஆனால் இந்த இயக்குநர் ஏன் எதற்காக இது போன்ற படங்களை எடுக்கிறார், எப்படி இத்தனை கஷ்டத்துக்குள்ளாகி ஒரு படத்தை எடுக்கத் தோன்றுகிறது என்று நிச்சயம் யோசிக்கிறேன். மாற்றுத் திரைப்படங்களின் உச்சம் இல்லை என்றாலும், ஜெயபாரதியின் திரைப்படங்கள் நிச்சயம் மாற்றுத் திரைப்படங்கள்தான். மகேந்திரனின் திரைப்படங்கள்கூட இந்த அளவு மாற்றுத் திரைப்படங்கள் அல்ல என்றுகூடச் சொல்லலாம். மகேந்திரன் மாற்றுத் திரைப்படங்களுக்கும் வணிகத் திரைப்படங்களுக்கும் இடையே ஒரு பாதையைக் கண்டுகொண்டார். கொஞ்சம் முயன்றால் ஜெயபாரதியும் அந்தப் பாதையைக் கண்டுகொண்டிருக்கலாம். ஏனென்றால் சில குறைந்தபட்ச சமசரங்களுக்கு மகேந்திரன் போலவே ஜெயபாரதியும் ஆயத்தமாகவே இருந்திருக்கவேண்டும். அதற்கான தடயங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. ஆனாலும் ஏனோ ஜெயபாரதி அதைச் செய்யவில்லை.

ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். எடிட்டிங், தொடர்ச்சி, ஒளிப்பதிவு, ஒலிக்கோர்ப்பு என எல்லாவற்றிலும் ஏனோதானோவென்று இருந்தது. ஜெயபாரதியின் திரைப்படமும் அப்படித்தான் இருந்ததாக நினைவு. குடிசை திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ருத்ரையாவின் அவள் அப்படித்தான், ஜெயபாரதியின் குடிசை, உச்சிவெயில், ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் – இவை எல்லாமே ஒரே ரகம். பணம் இல்லாமல் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை.

எவ்வித ஈகோவுமின்றி யார் பணம் தந்தாலும் வாங்கிக்கொண்டு படம் தயாரித்திருக்கிறார் ஜெயபாரதி. ஆனால் பணம் தந்தவர் நேர்மையற்றவர் என்று தெரிந்தால் அத்தோடு விலகிவிடுகிறார். (என்று புத்தகத்தில் சொல்கிறார்.) அப்படித்தான் 24சி வேதபுரம் முதல்வீதி திரைப்படத்தை இவர் நிறுத்துகிறார். கம்யூனிஸ்ட்டுகளுக்காக இவர் எடுக்கும் படம் தேநீர், அந்த கம்யூனிஸ்ட் தயாரிப்பாளர் செம்மலர்ச்செல்வனின் லீலைகளில் நின்றுபோகிறது. பணம் வந்தால் கம்யூனிஸ்ட்டுகள் கள்குடித்த குரங்கைப் போல் ஆடுவார்கள் என்று தோழர் வி.பி. சிந்தன் சொன்னதை அனுபவத்தில் புரிந்துகொண்டு அப்படத்தைக் கைவிடுகிறார். பின்னர் அதுவரை எடுத்த படம் சண்முகம் என்பவரால் (பிற்பாடு இவர் தராசு ஷ்யாம் என்று புகழ்பெறுகிறார்) ஊமை ஜனங்கள் என்று பெயர்மாற்றப்பட்டு வேறு கதையில் இது நுழைக்கப்பட்டு வெளிவந்து படுதோல்வி அடைகிறது.

மேற்கொண்டு படம் எடுக்க பணம் இல்லாமல், நடிக்க வந்த நடிகை போட்டிருந்த நகைகளையெல்லாம் விற்று உடன் நடிக்க வந்த அனைவரையும் பத்திரமாக அனுப்பி வைக்கும் அனுபவமெல்லாம் இவருக்கு ஏற்படுகிறது. ஆனாலும் ஏதோ ஒன்று இவரைச் செலுத்துகிறது. எப்படியோ அடுத்த அடுத்த படங்களை எடுக்கிறார். ஒவ்வொரு படத்துக்கும் இடையே சில சமயங்களில் பத்துவருடங்கள்கூட கடக்கின்றன. ஆனாலும் யாரேனும் ஒருவர் வந்து படம் எடுக்கவேண்டும் என்றால் படம் எடுக்கிறார்.

இதற்கிடையில் கே.பாலசந்தர் நடிக்கவும் அழைக்கிறார்.  படம் இயக்கிக்கொண்டிருப்பதால் இவரால் நடிக்கச் செல்லமுடியவில்லை. ருத்ரையா இயக்கத்தில் நடிக்கச் சென்று அவமானப்பட்டு திரும்புகிறார். இதற்கெல்லாம் பிற்பாடு ‘கிராமத்து அத்தியாயம் படத்தில் நன்றாக நடித்ததால், ’அந்த’ நடிகருக்கு இவர் போட்டியாகிவிடுவாரோ என்று அஞ்சியே இவர் தூக்கப்பட்டார்’ என்று இவருக்குச் சொல்லப்படுகிறது. அதை இவர் ஏற்கவில்லை. ஆனால் அந்த ஒரு படத்துக்குப் பிறகு ருத்ரையாவும் ஓரம்கட்டப்படுகிறார். இதுதான் சினிமா உலகம் என்று இவருக்கு இவர் நண்பர் சொல்கிறார். முற்போக்களரான ருத்ரையா தனது அடுத்த படம் வராததற்கு ஜெயபாரதியின் வயிற்றெரிச்சலே காரணம் என்று சொன்னதாகவும் இவர் கேள்விப்படுகிறார்.

இப்படி புத்தகம் முழுக்க பல சிதறல்கள். இதன்வழியே நாம் திரையுலகின் ஜொலிக்கும் வெள்ளித்திரைக்குப் பின்னே நடக்கும் அவலங்களை ஏமாற்றங்களை துரோகங்களை துல்லியமாகக் காணமுடியும். சில நண்பர்கள் இதுபோன்ற துரோகங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இப்படியெல்லாமா செய்வார்கள், இவர் ஏமாற்றத்தில் பேசுகிறார் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் ஜெயபாரதியின் புத்தகம் முகத்தில் அறைந்து உண்மையைச் சொல்கிறது. எடுத்தவுடனேயே தான் சொல்வதெல்லாம் உண்மை என்று இறைவன் மீது சத்தியம் செய்துவிட்டுத்தான் ஜெயபாரதி தொடங்குகிறார். ஜெயபாரதி பொய் சொல்லவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாகவும் தோன்றவில்லை.

* ஒரு நடிகையிடம் பேட்டி எடுக்கச் சென்று அவர் ஷூட்டிங்கில் ஓய்வில் இருக்கும்போது ‘நான் தினமணிக் கதிரில் இருந்து வருகிறேன்’ என்று சொல்லவும் அவர் பதிலுக்கு ‘ஸோ வாட்’ என்று கேட்க, இவருக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. அந்த நடிகை – ஜெயலலிதா.

* சிவாஜி கணேசன் நடித்த ‘இளைய தலைமுறைகள்’ பட ஷூட்டிங்கில் கஷ்டப்படும் மகனுக்கு தாய் பணம் கொடுத்தனுப்பும் காட்சி. கை நிறைய சில்லறைகளாக அந்தத் தாய் (பண்டரிபாய்) கொண்டு வந்து மகனாக நடிக்கும் சிவாஜியிடம் கொடுக்க, சிவாஜி சில்லறைகளையெல்லாம் தொட்டு நடிக்கமாட்டேன், பணமாகக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

* குடிசை திரைப்படத்துக்கு இசையமைக்க விரும்பி இளையராஜாவே முன்வருகிறார். ஆனால் ஏற்கெனவே காமேஷ் (கமலா காமேஷின் கணவர்) இசையமைக்க ஜெயபாரதி ஒப்புக்கொண்டுவிட்டதால் இது நிறைவேறாமல் போகிறது.

* குடிசை திரைப்படத்தை எடுப்பதற்குள் ஜெயபாரதி படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. மாயாஜாலக் காட்சி நடத்தி பணம் சேகரித்து ஷூட்டிங் நடத்துகிறார். ’சுராங்கனி’ புகழ் மனோகர் கச்சேரி நடத்தி பணம் திரட்டிக் கொடுக்கிறார். சிவகுமார் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லி 2,000 ரூ தருகிறார். மிருணாள் சென்னை வைத்து தமிழில் படம் எடுக்க விரும்பும் விநியோகஸ்தரை, அப்பணத்தை குடிசை திரைப்படத்துக்குத் தரும்படி மிருணாள் சென்னே சொல்கிறார்.

* ஜெயபாரதியின் முதல் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. பாடல்களைச் சேர்ப்பதால் கோபப்பட்ட கமல் அதிலிருந்து விலகுகிறார். பிற்காலத்தில் ரஜினியை நடிக்கவும் ஜெயபாரதி கேட்கிறார். ‘சலிப்படையும்போது உங்களிடம் வருகிறேன்’ என்று சொல்கிறார் ரஜினி.

*Crowd funding மூலம் பணம் சேர்த்தே திரைப்படம் எடுக்கிறார் ஜெயபாரதி. சிலர் தருகிறார்கள். பலர் தருவதில்லை. ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் உச்சிவெயில் படத்துக்கு பத்தாயிரம் நன்கொடை தருகிறார்.

நான் சில விஷயங்களையே சொல்லியிருக்கிறேன். இப்படி புத்தகமெங்கும் அறிந்த மனிதர்களின் அறியாத முகங்களும் அறியாத முகங்களின் அசரடிக்கும் குணங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அம்பிகா நடித்தால் இயக்குகிறேன் என்று சொன்ன மனிதரையும், உச்சிவெயில் படத்தில் ஹீரோவான தனக்கு எத்தனை பாடல்கள் என்று கேட்ட குப்புசாமித் தாத்தாவையும் மறக்கமுடியாது நம்மால்.

கமலையும் ரஜினியையும் நடிக்க கேட்ட இவர் ஏன் இவர் மம்முட்டியையோ மோகன்லாலையோ கேட்கவில்லை என்ற கேள்வி இப்புத்தகம் முழுவதும் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. அதிலும் ஸ்ரீவித்யா ‘நீங்கள் எப்போது அழைத்தாலும் வந்து நடித்துக்கொடுப்பேன்’ என்று சொன்னதைப் படித்தபோது இந்நினைவு அதிகமாகியது. அதைத்தான் வைரமுத்து ஜெயபாரதியிடம் ‘இங்கே எதற்காக?’ என்று கேட்டிருக்கிறார் போலும்.

உண்மையில் தமிழ்த் திரையுலகில் வரும் திரைப்படங்களைப் பார்த்தும் யாருக்காக இன்னும் இதுபோன்ற திரைப்படங்களை ஜெயபாரதி இயக்குகிறார் என்று எனக்கு இன்னும் பிடிபட்டபாடில்லை. நண்பா நண்பா, புத்ரன், குருக்ஷேத்திரமெல்லாம் வந்ததும்கூட யாருக்கும் தெரியாது. சி.சு.செல்லப்பா புத்தகக் கட்டுகளை தலையில் சுமந்துகொண்டு வீதி வீதியாக விற்றதாகச் சொல்வார்கள். படத்தை முடிக்க ஒவ்வொரு கல்லூரியாக பணம் கேட்டு ஜெயபாரதி ஏறி இறங்கும்போது அதுதான் நினைவுக்கு வந்தது

குருக்ஷேத்திரம் படம் வெளிவருவது போர்க்களமான குருக்ஷேத்திரத்தில் பட்டபாட்டைவிட பெரியதாக இருக்கிறது. திடீரென வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் சேர்த்தால்தான் படத்தை விற்கமுடியும் என்று தயாரிப்பாளர் சொல்லிவிட (இவர் ஏற்கெனவே ஷூட்டிங்கின்போது கோபத்தில் தேவடியா பசங்களா என்று கத்தியவர்) வேறுவழியின்றி அதற்கும் ஒப்புக்கொள்கிறார். முதலில் இவர்தான் ஜெயபாரதி தெரியாத வடிவேலு, இவர் யாரென்று தெரிந்துகொள்ளவும் மிகவும் மரியாதையாக நடந்துகொள்கிறார். ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது ‘சந்திரசேகருக்கே தேசிய விருது வாங்கிக் கொடுத்திருக்கீங்க, எனக்கும் ஒரு படத்துல வாங்கிக் கொடுங்கண்ணே’ என்று கேட்கிறார். விவேக்கும் இவரை அழைத்து ‘மாற்றுத் திரைப்படம்’ வேண்டுமென்று கேட்டு ஒரு படம் நடிக்க முயல்கிறார். அந்த முயற்சி வெற்றியடையாமல் அது பிற்பாடு ஒய்.ஜி. மகேந்திரா நடித்து ‘புத்ரன்’ என்ற திரைப்படமாக வெளிவருகிறது. (இப்படி ஒரு படம் வந்ததே எனக்குத் தெரியாது!) விவேக், வடிவேலு போன்ற நடிகர்களுக்குள்ளேயும்தான் எத்தனை கனவுகள்!

நூல் முழுக்க தினுசு தினுசான தயாரிப்பாளர்கள். ஹோட்டல் தொழில் நடத்தும் ஒருவர். தன்னைவிட இயக்குநருக்குப் புகழா என்று மருகும் ஒருவர். அம்பிகா ஹீரோயின் என்றால் படம் தயாரிக்கத் தயாராக இருக்கும் ஒருவர். படம் தயாரிக்க இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது என்பதால் கிடைத்ததையெல்லாம் தின்று பெண்களுடன் ஆட்டம்போடும் ஒருவர். இதற்கிடையில்தான் நாம் நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கிறோம். நினைக்கவே அயற்சியாகத்தான் உள்ளது.

திரைப்படம் பற்றி தெரிந்துகொள்ள இந்நூலை வாசிப்பது மிக முக்கியம். இது மாற்றுத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களின் பிரச்சினை மட்டுமல்ல. வணிகத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களும் இதேபோலவோ இதைவிட அவமானப்பட்டு நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டு அவமானப்படுத்தி நம்பிக்கைதுரோகம் செய்துதான் மேலே வரவேண்டியுள்ளது. அத்தகைய ஒரு நிலையைக் காலம் காலமாகவே நம் திரையுலக அமைப்பு கைக்கொண்டுள்ளது. இந்நிலை அத்தனை சீக்கிரத்தில் மாறாது. ஒரு புகழ்முகம் தனக்குப் பின்னே ஒளித்துக்கொண்டிருக்கும் பல்வேறு முகங்களை நாம் தரிசிக்க நேரும்போது ஏற்படும் மனவலியை எப்படிச் சொல்வது? அந்த மனவலியை இப்புத்தகம் எனக்குக் காட்டியது.

இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000023800.html

Share

Facebook Notes – 2

புவியிலோரிடம் – பாதி (1-ஜூலை-2011)

பாராவின் புவியிலோரிடம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் இது போன்ற ஒரு கதையை (நாவல் என்று சொல்ல இயலவில்லை) நான் வாசித்ததில்லை. முதல் பாகம் வரை படித்திருக்கிறேன். பாராவின் வழக்கமான வரிகள் தந்த தடையை மீறி நாவலுக்குள் நுழைவது ஒரு சவாலாகவே இருந்தது. மேலும் வாசுவாக பாராவையே நினைக்கத் தோன்றுவதையும் மீற முடியவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் மீறியதும் நாவல் சட்டெனத் திறந்துகொண்டது. வெளிப்படையான ஒரு அரசியல் பிராமணக் கதையை  இதுவரை யாரும் எழுதவில்லை என நினைக்கிறேன். ஒரு இடத்தில் மணிரத்னத்தை நினைவுபடுத்தும் காதல் காட்சிகள். இந்த பாரா எனக்கு புதுசு. ஆயிரம் அபுனைவுகள் எழுதியிருந்தாலும் ஒரு எழுத்தாளன் ஒரு தடமாகப் பதிவு செய்யப்படுவது புனைவில்தான் என்ற எண்ணம் ஒரு அனுபவமாக எழுகிறது. முதல் பாகத்தில் பாரா ராக்ஸ். குறிப்பாக ஆசாரியார் வரும் காட்சிகளில் அவரது மனைவி பேசும் வசனங்கள். ஒரு நாவலுக்குண்டான அழகை சில இடங்களில் பார்க்கமுடிகிறது என்றாலும், அரசியலை சொல்ல நினைக்கும் அவசரமும் கதை சொல்ல நினைக்கும் வேகமும் அதனை உடைக்கின்றன. இரண்டாம் பாகம் நாளை படிக்கப் போகிறேன். சிறிய புத்தகம்தான். வசதி கருதி இரண்டு பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பாதி இன்று, மீதி நாளை.

 

மாவீரன்-லு (30-ஜூன்-2011)

தெலுகு டப்பிங் மாவீரன் படம் பார்த்தேன். எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் ஒரு படம் வந்தால் தமிழ்நாட்டைப் போலவே அதனை தெலுகு சகோதரர்களும் விழுந்து விழுந்து வரவேற்பது கண்டு பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. எத்தனை மொக்கையாக இருந்தாலும் ஹைப் கூட்டப்பட்ட ஃப்ளாஷ் பேக்குக்க்கு தெலுகு சகோதரர்கள் அடிமையாகிவிடுவது கண்டு ‘ஆஹா நம் ரத்தமல்லவா’ என்ற மகிழ்ச்சி ஓங்கியது. 50 ஆண்டுகளாக ஒரே காதல் காட்சியை திரும்ப திரும்ப எடுத்தும் அதை விடாமல் ரசிக்கும் தெலுகு மக்களை நினைக்கும்போது நெக்குருகி நிற்கவேண்டியிருக்கிறது. விறுவிறுப்பு என்னும் பேரில் அடுத்தடுத்த காட்சிகளிலேயே அடுத்தடுத்த சம்பவங்கள் தடால் தடால் என நடப்பது கண்டு, நம் உற்ற தோழன் தெலுகு திரைப்படமே என்ற நினைப்பு வந்து நம் நெஞ்சை மயிலிறகால் வருடுகிறது. மறக்காமல் பாருங்கள் மாவீரன். இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை டப்பிங் திரைப்படம். வசனம் படு பிரமாதம். ப்ராணன் என்ற வார்த்தை எத்தனை தடவை வருகிறது என்று கண்டுபிடித்துச் சொன்னால் மாவீரன் படத்துக்கே 10 டிக்கெட் இலவசம். இதுபோக சென்னைத் தமிழும் உண்டு. ஆஹா. அட்டகாசம். அதிலும் ஹீரோ போட்டிருக்கும் செயின் பல இடங்களில் பூணூலை ஞாபகப்படுத்துகிறது. சிரஞ்சீவிகாருவின் மகன்காரு நடித்து படம்காரு வந்திருக்கிறது. தெலுகுகாருகள் இப்படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டார்களாம். தமிழ்காருகளை நம்பி டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நாமும் தமிழ்காருகள் ஆவோம். ஆல் தெலுகு வணிக சினிமா ரசிகர்காருகளுக்கு நம் வந்தனமுலு.


ஜூன் 26, 2011

விடுதலைப் புலிகள் இருந்தபோதுகூட இலங்கையில் உள்ள தமிழர்கள் படும் துயரங்கள் குறித்து வருத்தம் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் இலங்கைத் தமிழர் ஆதரவு என்பதே புலிகள் ஆதரவுதான் என்னும் ஒரு மாயை நிலவியதால், அதிலிருந்து விலகி நிற்க விரும்பிய தமிழகத்தமிழர்களே அதிகம். இன்று புலிகள் தோற்கடிப்பட்டுவிட்ட நிலையில், தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களைப் பற்றிப் பேசவும் அவர்களுக்காக குற்றவுணர்ச்சியுடன் வருந்தவும் ஆயத்தமாகும்போது, மீண்டும் புலி ஆதரவு கோஷம் தலை தூக்குகிறது. இது நிச்சயம் தமிழகத் தமிழர்களை பின்னடைவு கொள்ள வைக்கும். தமிழகத் தமிழர்களின் ஆதரவே தேவையில்லை என்று எண்ணுபவர்கள் இதனை எளிதாக எடுத்துக் கொள்ளலாம். தமிழக தமிழர்களின் ஆதரவும் முக்கியம் என்று எண்ணுபவர்கள், இந்த புலி ஆதரவு இல்லாமல், தமிழகத் தமிழர்களின், இந்தியர்களின் ஆதரவைக் கோரும் வகையில் செயல்படுவது நல்லது. புலி ஆதரவு என்பது இன்று வரையில் தமிழகத் தமிழர்களுக்கு ஆகாத ஒன்று. இதனை மனத்தில் கொண்டு ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் செயல்படுவதே புத்திசாலித்தனம். புலி ஆதரவு இல்லாமல், அதே சமயம் ஈழத் தமிழர்களுக்காக, அவர்களின் இன்னல்களுக்காக மெழுகுவத்தி ஏற்றிய அனைவருக்கும் நன்றிகள். இனி தமிழுணர்வாளர்கள் முன்னெடுக்கப் போவது புலி ஆதரவையா அல்லது ஈழத் தமிழருக்கான ஒருமித்த ஆதரவையா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

 

ரஜினி பத்தி நெண்டே நெண்டு வரி (17-ஜூன்-2011)

ரஜினி டிஸ்சார்ஜ் ஆனதும் முதன்முதலாக ஜெயலலிதாவிடம் பேசியதைத் தொடர்ந்து நடுநிலையாளர்களும் முற்போக்காளர்களும் கலைஞர்களும் கட்டுரையாளர்களும் கடும் மனநெருக்கடி அடைந்து ரஜினியின் மனநிலை தொடங்கி நம்பகத்தன்மை வரை அலசி எதற்குமே ரஜினி லாயக்கில்லை என்ற உண்மையை உடைத்துப் போட்டு வடிவேலு போன்ற மன உறுதி கூட இல்லாதவர் என்றெல்லாம் பேசி தங்கள் கறாரான பார்வையையும் அறச்சீற்றத்தையும் வெளிப்படுத்தி எங்கே நாம் பேசியது ரஜினி ரசிகர்களுக்குத் தெரியாமல் போய்விடுமோ என்று அவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்து முடிந்த அளவு அவர்களுக்குத் தெரியுமாறு தனது மீது வெளிச்சம் அடித்து குட்டிக்கரணம் அடித்து முடித்து ஏன் கருணாநிதி கூடவே இருந்து ஜால்ரா அடிக்கும்போதே உனக்கு தெரியலையா என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அட அப்பவே ஏன்யா நீ கேக்கலை என்ற பதில் கேள்வியையெல்லாம் மறந்துவிட்டு ரஜினியை முடிந்த அளவு திட்டி ஓய்ந்த ஒரு காலையில் பார்த்தால்

 இந்த ’மூளைகெட்ட பிஸினஸ்மேன்’ ரஜினிப்பய இன்று காலை கருணாநிதியையும் அழைத்து பேசியிருக்கிறார். இப்போதே அதே நடுநிலையாளர்களும் முற்போக்காளர்களும் கலைஞர்களும் கட்டுரையாளர்களும் மீண்டும் முதல் இடத்தில் தொடங்கப் போகிறார்கள் என்ற செய்தி கேட்டு நான் கலவரப்பட்டு நிற்கும் வேளையில் சொல்வதெல்லாம், உங்க மேல டார்ச் அடிச்சுக்குங்க, அது உங்க உரிமை, ஆனா என் முன்னாடி ஆடாதீங்க என்பதுதான்!

Share