Tag Archive for கமல்ஹாசன்

Sleepless night – தமிழில் ஏன் எப்படி எதற்கு

இது சுரேஷ்கண்ணசுபகுணராஜன்கள் எழுதுவதுபோன்ற முக்கியமான திரைக்கட்டுரை அல்ல. எனவே ரத்தம் கொதிக்க காது மடல்கள் சிவக்க படிக்காமல் சாதா‘ரணமாக’ப் படித்துவிட்டு சிரித்துவிட்டு அப்புறம் யோசித்துக்கொள்ளவும். அதேபோல், ரஜினி படம் வருவதற்கு முன்பாக ‘இந்தப் படம் ஒழியணும், நாசமாப் போகணும்’ என்று நான்கைந்து பக்கத்துக்கு வசவிவிட்டு கடைசியாக ஒரு வரியில் அதன் காரணம் ‘வணிகப் படங்களில்கூட மோசமான படம் வெல்லக்கூடாது என்பதுதான்’ ரகக் கட்டுரையும் அல்ல. கமல்ஹாசனை எனக்கு பிடிக்குமா பிடிக்காதா என்றே எனக்கே இன்னும் சரியாகத் தெரியாத நிலையில் (இப்படித்தான் ஆரம்பிப்போம்), கமல்ஹாசன் உள்ளிட்ட யாரொருவரின் படமும் வணிக வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் ஒரு குப்பைப் படமாக இருந்தாலும் அதன் வணிக வெற்றியை ஒரு தொழிலின் வெற்றியாகவும் அத்தொழிலை நம்பியிருக்கும் கணிசமானவர்களின் பிழைப்பாகவும் நான் பார்க்கிறேன். அதேசமயம் ஒரு நல்ல படம் தோற்றுவிட்டால் பெரிய அளவில் அறச்சீற்றப்பொங்கலெல்லாம் எனக்குள் பொங்காவிட்டாலும் வருத்தம் ஏற்படுவது உண்டு. இத்தனை விளக்கமும் சொல்வதற்கான காரணம், இந்தப் படம் வெற்றி பெறக்கூடாது என்பது என் நோக்கமே அல்ல என்பதற்காகவும், ‘கமல் ரசிகர்களே, இத்துடன் நீங்கள் வெளியேறிவிடுங்கள்’ என்று சொல்வதற்காகவும் மட்டுமே.

கதை தெரியாமல் ‘தூங்காவனம்’ படத்தைப் பார்த்தால்தான் பிடிக்கும் என்று நினைப்பவர்கள் மேற்கொண்டு இதைப் படிக்கவேண்டாம். ஸ்பாய்லர்ஸ் அஹெட்.

ஸ்லீப்லெஸ் நைட் படம் ஒரே இரவில் நடக்கும் ஒரு படம். மிகச் சாதாரணமான கதை. திரைக்கதையும் ஆஹோ ஒஹோவெல்லாம் இல்லை. பல இடங்களில் கொட்டாவி. பார்வையாளர்களை சீட்டு நுனிக்குக் கொண்டுவரும் பரபரப்பும் இல்லை. சுமாரான படம்தான். கமல்ஹாசன் தமிழில் நடிக்கிறாரே என்பதற்காக மட்டுமே நான் இதைப் பார்த்தேன். இல்லையென்றால் நிச்சயம் பார்த்திருக்கவே மாட்டேன்.

மகனைக் கடத்திக்கொண்டு போகும் போதை மருந்து கேங்கிலிருந்து தன் மகனை தந்தை மீட்கும் கதை. இது போதை மருந்து கொடிகட்டிப் பறந்த கொலம்பியா போன்ற ஊர்களில் எடுக்கப்பட்டிருந்தால் அந்த மக்கள் உறைந்துபோய் பார்ப்பார்கள். தமிழில் எப்படிப் பார்ப்பார்கள்? ஏன் இதனைக் கமல் எடுத்தார்? தமிழ்த்தன்மையோ இந்தியத் தன்மையோ இல்லாத இப்படத்தை தமிழில் கமல்ஹாசன் எடுக்க என்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்று முழுக்க முழுக்க யூகத்தில் எழுதப்படுவதே இக்கட்டுரை. இக்கட்டுரையில் வரும் அத்தனையும் தவறு என்று படம் வரும்போது நிரூபிக்கப்படலாம். அல்லது அத்தனையும் சரி என்றும் அமைந்து தொலைக்கலாம். ‘ஹேராம்’ படம் வந்தபோது கமல்ஹாசன் சொன்னது, ‘காந்தியைக் கொன்றது கோட்ஸே என்று எல்லோருக்கும் தெரியும். அதை படத்தில் மாற்றமுடியாது. ஆனால் அதுவரை நடப்பதை வைத்து புனைவில் என்னவெல்லாமோ செய்யலாம்’ என்று. அதையேதான் இப்போது நான் சொல்கிறேன், ‘தமிழில் தூங்காவனம் வரும்வரை என்னவேண்டுமானாலும் செய்யலாம்.’ எனவே இது ஒரு புனைவு.

கமல்ஹாசன் இப்படத்தை எடுக்க முதல் காரணம் இப்படத்தில் இருக்கும் கமல்தன்மை என்பதே என் எண்ணம். வயதுக்கேற்றவாறு உத்தமவில்லனில் அப்பாவாக வந்தார். இதிலும் ஒரு வளர்ந்த பையனுக்கு அப்பா. எனவே அதிக விமர்சனங்கள் எழ வாய்ப்பில்லை. ஆனால் இந்த அப்பா-மகன் உறவில் காட்டப்படும் அன்பு குறித்து சொல்லவேண்டும். நம் ஊரில் அப்பா-மகன் உறவென்பது, அப்பா இறந்தபிறகு மகன் அவன் அன்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அல்லது அப்பாவும் மகனும் நல்ல நண்பர்களாக, ஆனால் அதை சொற்களில் வெளிப்படுத்தாதவர்களாக இருந்துவிடுகிறார்கள். இப்படி இல்லாமல் அப்பாவும் மகனும் விலகி இருப்பதும், அப்பாவின் அன்பைக் கண்டு மகன் நெகிழ்ந்து அப்பாவிடம் அப்படியே வெளிப்படையாகச் சொல்வதும் சமீபகாலமாக இறக்குமதி ஆகிக்கொண்டிருக்கிறது. உத்தமவில்லனில் இது எடுபட்டதற்குக் காரணம், அதில் ஹீரோ மரணத்தை நோக்கிச் செல்கிறார் என்பதுதான். மற்றபடி அப்பா மகன் அன்பென்பது வெளியில் சொல்லப்படாத உணர்வுகளால் நிரம்பியது என்பதுதான் நம் இந்தியத்தன்மை என்று நான் நினைக்கிறேன். அப்படி இல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் அப்பா மகன் உறவை நாம் நகலெடுத்தால் அது அந்நியத்தன்மையுடனேயே வந்து நிற்கும். ‘தூங்காவனம்’ இதை எப்படி கையாளப்போகிறது என்று தெரியவில்லை.

ஸ்லீப்லெஸ் நைட்டின் பெரிய ப்ளஸ் அந்த ஹீரோ சாதாரண ஆள் என்பது (குறைந்தபட்சம் படத்தைப் பார்க்கும் தமிழர்களுக்கு). நமக்கோ தமிழில் கமல். இது தரப்போகும் அழுத்தத்தை கமல் படம் தொடங்கிய சில நிமிடங்களுக்குள் உடைக்கவேண்டும். பாபநாசத்தைப் போல. பாபநாசத்துக்கே சொக்கலிங்கத்தைக் காணாமல் கமலைக் கண்டு பொங்கி எழுந்த தமிழர்கள் உள்ள ஊர் இது!

ஸ்லீப்லெஸ் நைட்டில் ஹீரோ வில்லனிடம் போதைமருந்து என்று சொல்லி மாவைக்கொடுத்துவிட்டு வெளியேறும் காட்சியில் வில்லன் சொல்கிறான், ‘இனிமே உன் முகத்தை நான் பார்க்கக்கூடாது’ என்று. ஹீரோவும் அமைதியாக ஒன்றும் சொல்லாமல் வெளியேறுகிறான். தமிழில் ட்ரைலரில் பார்த்தேன். கமல் அப்படி வெளியேற முடியாதல்லவா? எனவே வில்லன் பிரகாஷ்ராஜிடம் ‘நானும் அதையே சொல்லிக்கிறேன்’ என்று என்னவோ சொல்கிறார். இப்படித்தான் இந்திய தமிழ்த்தன்மையைக் கொண்டுவரப் பாடுபடுகிறார்கள். (பாடுபடுத்துகிறார்கள் என்று எழுதிவிடவில்லையே!)

கமலின் க்ளிஷேவாக நான் பார்ப்பது, தொடர்ந்து ஒன்றை படம் முழுக்க செய்துகொண்டிருப்பது. இன்னொன்று, கையில் அடிபட்டிருக்கும்போது கோபத்தில் அதை மறந்து தரையில் அடித்துவிட்டு கையை வலியில் உதறிக்கொள்வது. இதுபோன்ற காட்சிகளை யார் நடித்தாலும் எனக்குப் பிடிக்காது. அதுவும் கமல் நடித்தால் தாங்கவே முடியாது. ஆனால் இந்தப் படம் கமலுக்கு சரியான தீனி போடுகிறது. ஆம், இந்த ஸ்லீப்லெஸ் நைட்டின் ஹீரோ முதல் காட்சியிலேயே குண்டடிபட்டு காயத்தை மறைத்தபடி கோட் அணிந்துகொண்டு வலியைத் தாங்கிக்கொண்டு ஓடுகிறான். அவ்வப்போது வலிக்கிறது. கமல் இதைச் செய்யப்போகிறார் என்பதே எனக்கு பீதியைத் தருகிறது. துர்ப்பிணி அதிலும் கர்ப்பிணி என்பார்களே, அப்படி.

அதிலும் ஒரு காட்சியில் அந்த காயத்துக்கு மருந்து அடித்துக்கொண்டு நம் பிரெஞ்சு ஹீரோ அலறுகிறார். அப்போது சப்தங்கள் அனைத்தும் மறைகின்றன. இசை இல்லை. ஹீரோ அலறுவதும் கேட்பதில்லை. அத்தனை சத்தங்களும் மறைய, ஹீரோ கத்துவதை பார்க்க மட்டும் செய்கிறோம். தமிழில் கமல் இதை என்ன செய்திருப்பார் என்று என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பின்னணிக் காட்சியில் ஜிப்ரான் அமைதியாக இருந்துவிட்டால் பெருமாளுக்கு மொட்டை போடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். கமலும் ‘நடித்து’ ஜிப்ரானும் கதறிவிட்டால் என்ன செய்வது? இது நடக்கும் என்று சொல்லவில்லை. நடக்காது என்றும் சொல்லமுடியவில்லை. நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மட்டுமே சொல்கிறேன்.

கமலின் புகழ்பாடுபவர்கள் ஒன்றை அடிக்கடி சொல்வார்கள். காட்சியின் பிரசன்ஸைக் கூட்டுவது என்று என்னவோ சொல்வார்கள். அதாவது ஒரு சாப்பாட்டுக் கடைக் காட்சி என்றால் அங்கிருக்கும் டப்ளர் டபரா என எல்லாவற்றையும் பயன்படுத்துவதாம். இப்படத்தில் பிரெஞ்சு ஹீரோ ஒரு உணவகத்தையே ஒட்டுமொத்தமாகக் கபளீகரம் செய்கிறான். இந்த பிரெஞ்சு ஹீரோ சாதாரண ஹீரோ. நம் கமலோ கமல்சார். என்னவெல்லாம் செய்வார் என்று யோசித்துப் பாருங்கள்.

இன்னொரு காட்சி பிரெஞ்சு திரைப்படத்தில் வருகிறது. அந்தக் காட்சியை பிரெஞ்சு திரைப்படத்தில் எழுதியவர்கூட கமல்தானோ என்ற சந்தேகமே வந்துவிட்டது. ஹோட்டலில் மாமிசம் வெட்டும் இடத்தில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் ஒரு போலிஸ் சொல்கிறார், ‘சீக்கிரம் காப்பாத்துங்க. மாமிச நாத்தம். நான் வெஜிட்டேரியன்’ என்று. தமிழில் இதையே ஒரு பிராமணப் பெண் கேரக்டராக்கி யாரைவாது பாப்பாத்தி என்றுகூடச் சொல்ல வைத்து, ‘சீக்கிரம் காப்பாத்துங்கோ, நார்றது, சைவமாக்கும்’ என்று சொல்ல வைக்கலாம். இப்படி ஒரு காட்சி லட்டுபோல பிரெஞ்சுத் திரைப்படத்தில் வந்ததே ஆச்சரியதான்.

கமல் என்றால் முத்தம் பற்றிப் பேசாமல் எப்படி இருக்கமுடியும்? தமிழர்களுக்கு முத்தம் கொடுக்க கற்றுத் தந்ததே கமல்தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே! இந்தப் படத்தில் கன்னாபின்னாவென்று முத்தக்காட்சிகள். தமிழில் இத்தனை முத்தக்காட்சிகள் வருமா என்றெல்லாம் தெரியவில்லை. பாபநாசத்துக்கே ‘மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறது, வன்முறையை நியாயப்படுத்துகிறது’ என்றெல்லாம் சொல்லி வரிவிலக்கு மறுக்கப்பட்டது. இத்தனை முத்தக் காட்சிகள் இருந்தால் நிச்சயம் வரிவிலக்கை மறுத்துவிடுவார்கள். வரிவிலக்கு இல்லையென்றால் ஒரு படத்தின் லாபம் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே கமல் எப்படி இதைக் கையாள்கிறார் என்று தெரியவில்லை. இல்லையென்றால், ஹீரோ தன் முகத்தைப் பார்க்கக்கூடாது என்பதற்காகவே தொடர்ந்து ஒரு பெண்ணை முத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டிய ‘அவசியக்காட்சி’யெல்லாம் ‘காதல் இளவரசனுக்கு’ அல்வா மாதிரி அல்லவா. அதுபோக இப்படம் நடப்பது நைட் கிளப்பில். அங்கங்கே யார் யாரோ கட்டித் தழுவிக்கொண்டும் முத்தமிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். குணா படத்தில் ‘ஹொய்லாலோ’ பாட்டை நினைத்துக்கொள்ளவும். தமிழிலும் அடித்து தூள் பண்ணவேண்டியதுதான். வரிவிலக்குத்தான் பாடாய்ப் படுத்துகிறது. பிரெஞ்சுப் படத்தில் வில்லனுக்கும் ஒரு முத்தக்காட்சி உண்டு. தமிழில் அப்புரட்சி பிரகாஷ்ராஜால் சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. சாத்தியப்படாது என்றே தோன்றுகிறது.

ஒரு காட்சியில் சாதாரண ஒருவன் ஹீரோவை அடிக்கிறான். அப்போது அமைதியாகச் சென்றுவிடும் ஹீரோ, பின்னால் நேரம் கிடைக்கும்போது அவனை மீண்டும் அறைந்து தான் ஹீரோ என்று நிரூபிக்கிறார். தமிழில் இதைக் கைவைக்கத் தேவையிருக்காது. அப்படியே எடுக்கவேண்டியதுதான்.

போதை மருந்தை ஒரு கழிப்பறைக்குள் ஒளித்துவைக்கிறார்கள். அதுவும் பெண்கள் கழிப்பறை. எனவே ஆண்கள் பெண்கள்கழிப்பறைக்குள் வருவதும் போவதுமான காட்சிகள் உண்டு. அதிலும் இரண்டு மூன்று ஆண்கள் ஒரே கழிப்பறைக்குள்ளே இருப்பதும், வெளியிலிருந்து பெண்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பதும் கே என்று கிண்டல் அடிப்பதும் அதற்கொப்ப கழிப்பறைக்குள்ளே இருந்து சத்தம் வருவதும் தமிழில் என்னவாகிறது என்று பார்க்க ஆர்வமாக உள்ளேன். தமிழ்த்திரையை உலகத்திரைக்கு உயர்த்த நல்ல ஒரு சந்தர்ப்பம் வீணடிக்கப்படுமா பயன்படுத்தப்படுமா?

மதம் சம்பந்தப்பட்ட நேரடிக் காட்சியை இத்திரைப்படத்தில் பார்த்ததுபோல் நினைவில்லை. இப்படம் ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடுகிறது. தமிழில் இரண்டரை மணி நேரம் ஓட்டலாம். நான்கைந்து பாடல்கள் போட்டு, மீதி நேரத்தில் மதத்தைக் கிண்டல் செய்தால் சரியாகத்தான் வரும். ஆனால் கமல் இப்படித்தான் செய்வார் என்று நம்மால் சொல்லமுடியாது. பாபநாசத்தில் கடவுளைக் கையெடுத்தே கும்பிட்டுவிட்டார். படமும் ஓடியிருக்கிறது. அந்த நன்றியை மறந்திருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்.

கடைசியாக ஒன்று. கமல்சார்ஆதரவுசுபகுணராஜசுரேஷ்கண்ணன்கள் இப்படத்தின் ஜானரில் இருந்து துவங்குவார்கள். தமிழுக்கு புதுசு என்று தொடர்வார்கள் கமல்சார்ரசிகர்கள். அதிலும் சிலர் மிக நிச்சயம் சொல்லப்போவது ‘பத்து வருடம் கழித்து வந்திருக்கவேண்டிய படம்’ என்று. எத்தனை பார்த்திருக்கிறோம்.

பின்குறிப்புகள்:

* இந்தப் படம் வணிக ரீதியாக வெல்ல கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள். 🙂

* டீஸரில் ‘நான் சொன்னா செஞ்சிருவேன்’ என்றொரு வசனத்தைக் கமல் சொல்லக் கேட்டேன். மிக நல்ல பன்ச் இது. கமல் சொல்லுபோது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் முழுமையான ரீச்சுக்கு இதை ரஜினிக்கே வைத்திருக்கவேண்டும். 🙂 ரஜினியில்தான் முடிப்போம்.

Share

இங்கே எதற்காக – புத்தக விமர்சனம்

ஒரு திரைப்படத்தை இயக்கி வெளியிடுவது எத்தனை கடினமானது என்பது எல்லாருக்குமே தெரியும். அதுவும் மாற்றுத் திரைப்படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இங்கே வணிகத் திரைப்படங்கள் வெளிவருவதே அத்தனை கடினம் என்னும் நிலையில், மாற்றுத் திரைப்படங்கள் மட்டுமே எடுப்பேன் என்றொரு இயக்குநர் உறுதியாக இருந்தால் அவர் என்ன பாடுபடவேண்டியிருக்கும் என்பதை இயக்குநர் ஜெயபாரதியின் ‘இங்கே எதற்காக’ நூலைப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.

inge etharkaakaஇங்கே எதற்காக, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், ரூ 150

முன்பு தூர்தர்ஷனில் மதியம் மாநில மொழித் திரைப்படங்கள் வரிசையில் ஜெயபாரதியின் ‘உச்சிவெயில்’ திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்று அறிவித்தார்கள். அப்போது எனக்கு 13 அல்லது 14 வயதிருக்கலாம். அப்போதே இதுபோன்ற ‘மெல்ல நகரும் இருட்டுக்குள் யாரோ ஒருவர் சத்தம் குறைவாகப் பேசும் படங்களை’ (படமெடுக்க பணம் கேட்டு ஜெயபாரதி செல்லும்போது இப்படித்தான் நடிகை ராதிகா சொல்கிறார்) விரும்பிப் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. மொழி தெரியாமல் சப்-டைட்டில்களை மெல்ல கூட்டி வாசித்து அரைகுறையாகப் புரிந்துகொண்டு மலையாள, கன்னடப் படங்களெல்லாம் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் கருப்பு வெள்ளை படம். (இதுதான் தமிழின் கடைசி கருப்பு வெள்ளை படமாம்.) ஜெயபாரதி என்ற பெயரைக் கேட்கவும் ஜெயபாரதி என்ற நடிகை நடித்தது என்றுதான் அதைப் பார்க்கத் தொடங்கினேன்.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம் என் வீட்டில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். நான் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். மிக மங்கலாக சில காட்சிகள் நினைவிலுள்ளன. தலைவாசல் விஜய் (அப்போது அவர் வெறும் விஜய் மட்டுமே. தலைவாசல் வெளியாகியிருக்கவில்லை) ராணுவத்திலிருந்து திரும்ப வந்தவர் போன்ற நினைவு. அந்த ராணுவ உடையில் க்ளோஸப் காட்சியில் என்னவோ பேசுவார். யாரோ ஒரு முதியவர் காணாமல் போய்விடுவார். அவரை காரில் தேடுதேடென்று தேடுவார்கள்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது இந்தப் படத்தைப் பார்த்திருந்த ஒரே ஜீவன் நானாகத்தான் இருந்தேன். ‘இதுக்கெல்லாம் அவார்ட்னு கொடுத்து… நம்ம டிடிக்குன்னு படம் கிடைக்குதே’ என்பதுதான் ஒட்டுமொத்த கருத்தாக இருந்தது. இந்தப் படம் ஏன் முக்கியமான படம் என்றெல்லாம் அன்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இன்றும் நான் இது மிக முக்கியமான படம் என்றெல்லாம் நினைக்கவில்லை. மாற்றுத் திரைப்படங்களின் இலக்கணமாக ஜெயபாரதியின் திரைப்படங்களைச் சொல்லவும் இல்லை. நிச்சயம் ஜெயபாரதியின் படங்களில் அவற்றுக்கே உரிய குறைகள் உள்ளன. ஆனால் இந்த இயக்குநர் ஏன் எதற்காக இது போன்ற படங்களை எடுக்கிறார், எப்படி இத்தனை கஷ்டத்துக்குள்ளாகி ஒரு படத்தை எடுக்கத் தோன்றுகிறது என்று நிச்சயம் யோசிக்கிறேன். மாற்றுத் திரைப்படங்களின் உச்சம் இல்லை என்றாலும், ஜெயபாரதியின் திரைப்படங்கள் நிச்சயம் மாற்றுத் திரைப்படங்கள்தான். மகேந்திரனின் திரைப்படங்கள்கூட இந்த அளவு மாற்றுத் திரைப்படங்கள் அல்ல என்றுகூடச் சொல்லலாம். மகேந்திரன் மாற்றுத் திரைப்படங்களுக்கும் வணிகத் திரைப்படங்களுக்கும் இடையே ஒரு பாதையைக் கண்டுகொண்டார். கொஞ்சம் முயன்றால் ஜெயபாரதியும் அந்தப் பாதையைக் கண்டுகொண்டிருக்கலாம். ஏனென்றால் சில குறைந்தபட்ச சமசரங்களுக்கு மகேந்திரன் போலவே ஜெயபாரதியும் ஆயத்தமாகவே இருந்திருக்கவேண்டும். அதற்கான தடயங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. ஆனாலும் ஏனோ ஜெயபாரதி அதைச் செய்யவில்லை.

ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். எடிட்டிங், தொடர்ச்சி, ஒளிப்பதிவு, ஒலிக்கோர்ப்பு என எல்லாவற்றிலும் ஏனோதானோவென்று இருந்தது. ஜெயபாரதியின் திரைப்படமும் அப்படித்தான் இருந்ததாக நினைவு. குடிசை திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ருத்ரையாவின் அவள் அப்படித்தான், ஜெயபாரதியின் குடிசை, உச்சிவெயில், ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் – இவை எல்லாமே ஒரே ரகம். பணம் இல்லாமல் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை.

எவ்வித ஈகோவுமின்றி யார் பணம் தந்தாலும் வாங்கிக்கொண்டு படம் தயாரித்திருக்கிறார் ஜெயபாரதி. ஆனால் பணம் தந்தவர் நேர்மையற்றவர் என்று தெரிந்தால் அத்தோடு விலகிவிடுகிறார். (என்று புத்தகத்தில் சொல்கிறார்.) அப்படித்தான் 24சி வேதபுரம் முதல்வீதி திரைப்படத்தை இவர் நிறுத்துகிறார். கம்யூனிஸ்ட்டுகளுக்காக இவர் எடுக்கும் படம் தேநீர், அந்த கம்யூனிஸ்ட் தயாரிப்பாளர் செம்மலர்ச்செல்வனின் லீலைகளில் நின்றுபோகிறது. பணம் வந்தால் கம்யூனிஸ்ட்டுகள் கள்குடித்த குரங்கைப் போல் ஆடுவார்கள் என்று தோழர் வி.பி. சிந்தன் சொன்னதை அனுபவத்தில் புரிந்துகொண்டு அப்படத்தைக் கைவிடுகிறார். பின்னர் அதுவரை எடுத்த படம் சண்முகம் என்பவரால் (பிற்பாடு இவர் தராசு ஷ்யாம் என்று புகழ்பெறுகிறார்) ஊமை ஜனங்கள் என்று பெயர்மாற்றப்பட்டு வேறு கதையில் இது நுழைக்கப்பட்டு வெளிவந்து படுதோல்வி அடைகிறது.

மேற்கொண்டு படம் எடுக்க பணம் இல்லாமல், நடிக்க வந்த நடிகை போட்டிருந்த நகைகளையெல்லாம் விற்று உடன் நடிக்க வந்த அனைவரையும் பத்திரமாக அனுப்பி வைக்கும் அனுபவமெல்லாம் இவருக்கு ஏற்படுகிறது. ஆனாலும் ஏதோ ஒன்று இவரைச் செலுத்துகிறது. எப்படியோ அடுத்த அடுத்த படங்களை எடுக்கிறார். ஒவ்வொரு படத்துக்கும் இடையே சில சமயங்களில் பத்துவருடங்கள்கூட கடக்கின்றன. ஆனாலும் யாரேனும் ஒருவர் வந்து படம் எடுக்கவேண்டும் என்றால் படம் எடுக்கிறார்.

இதற்கிடையில் கே.பாலசந்தர் நடிக்கவும் அழைக்கிறார்.  படம் இயக்கிக்கொண்டிருப்பதால் இவரால் நடிக்கச் செல்லமுடியவில்லை. ருத்ரையா இயக்கத்தில் நடிக்கச் சென்று அவமானப்பட்டு திரும்புகிறார். இதற்கெல்லாம் பிற்பாடு ‘கிராமத்து அத்தியாயம் படத்தில் நன்றாக நடித்ததால், ’அந்த’ நடிகருக்கு இவர் போட்டியாகிவிடுவாரோ என்று அஞ்சியே இவர் தூக்கப்பட்டார்’ என்று இவருக்குச் சொல்லப்படுகிறது. அதை இவர் ஏற்கவில்லை. ஆனால் அந்த ஒரு படத்துக்குப் பிறகு ருத்ரையாவும் ஓரம்கட்டப்படுகிறார். இதுதான் சினிமா உலகம் என்று இவருக்கு இவர் நண்பர் சொல்கிறார். முற்போக்களரான ருத்ரையா தனது அடுத்த படம் வராததற்கு ஜெயபாரதியின் வயிற்றெரிச்சலே காரணம் என்று சொன்னதாகவும் இவர் கேள்விப்படுகிறார்.

இப்படி புத்தகம் முழுக்க பல சிதறல்கள். இதன்வழியே நாம் திரையுலகின் ஜொலிக்கும் வெள்ளித்திரைக்குப் பின்னே நடக்கும் அவலங்களை ஏமாற்றங்களை துரோகங்களை துல்லியமாகக் காணமுடியும். சில நண்பர்கள் இதுபோன்ற துரோகங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இப்படியெல்லாமா செய்வார்கள், இவர் ஏமாற்றத்தில் பேசுகிறார் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் ஜெயபாரதியின் புத்தகம் முகத்தில் அறைந்து உண்மையைச் சொல்கிறது. எடுத்தவுடனேயே தான் சொல்வதெல்லாம் உண்மை என்று இறைவன் மீது சத்தியம் செய்துவிட்டுத்தான் ஜெயபாரதி தொடங்குகிறார். ஜெயபாரதி பொய் சொல்லவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாகவும் தோன்றவில்லை.

* ஒரு நடிகையிடம் பேட்டி எடுக்கச் சென்று அவர் ஷூட்டிங்கில் ஓய்வில் இருக்கும்போது ‘நான் தினமணிக் கதிரில் இருந்து வருகிறேன்’ என்று சொல்லவும் அவர் பதிலுக்கு ‘ஸோ வாட்’ என்று கேட்க, இவருக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. அந்த நடிகை – ஜெயலலிதா.

* சிவாஜி கணேசன் நடித்த ‘இளைய தலைமுறைகள்’ பட ஷூட்டிங்கில் கஷ்டப்படும் மகனுக்கு தாய் பணம் கொடுத்தனுப்பும் காட்சி. கை நிறைய சில்லறைகளாக அந்தத் தாய் (பண்டரிபாய்) கொண்டு வந்து மகனாக நடிக்கும் சிவாஜியிடம் கொடுக்க, சிவாஜி சில்லறைகளையெல்லாம் தொட்டு நடிக்கமாட்டேன், பணமாகக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

* குடிசை திரைப்படத்துக்கு இசையமைக்க விரும்பி இளையராஜாவே முன்வருகிறார். ஆனால் ஏற்கெனவே காமேஷ் (கமலா காமேஷின் கணவர்) இசையமைக்க ஜெயபாரதி ஒப்புக்கொண்டுவிட்டதால் இது நிறைவேறாமல் போகிறது.

* குடிசை திரைப்படத்தை எடுப்பதற்குள் ஜெயபாரதி படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. மாயாஜாலக் காட்சி நடத்தி பணம் சேகரித்து ஷூட்டிங் நடத்துகிறார். ’சுராங்கனி’ புகழ் மனோகர் கச்சேரி நடத்தி பணம் திரட்டிக் கொடுக்கிறார். சிவகுமார் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லி 2,000 ரூ தருகிறார். மிருணாள் சென்னை வைத்து தமிழில் படம் எடுக்க விரும்பும் விநியோகஸ்தரை, அப்பணத்தை குடிசை திரைப்படத்துக்குத் தரும்படி மிருணாள் சென்னே சொல்கிறார்.

* ஜெயபாரதியின் முதல் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. பாடல்களைச் சேர்ப்பதால் கோபப்பட்ட கமல் அதிலிருந்து விலகுகிறார். பிற்காலத்தில் ரஜினியை நடிக்கவும் ஜெயபாரதி கேட்கிறார். ‘சலிப்படையும்போது உங்களிடம் வருகிறேன்’ என்று சொல்கிறார் ரஜினி.

*Crowd funding மூலம் பணம் சேர்த்தே திரைப்படம் எடுக்கிறார் ஜெயபாரதி. சிலர் தருகிறார்கள். பலர் தருவதில்லை. ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் உச்சிவெயில் படத்துக்கு பத்தாயிரம் நன்கொடை தருகிறார்.

நான் சில விஷயங்களையே சொல்லியிருக்கிறேன். இப்படி புத்தகமெங்கும் அறிந்த மனிதர்களின் அறியாத முகங்களும் அறியாத முகங்களின் அசரடிக்கும் குணங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அம்பிகா நடித்தால் இயக்குகிறேன் என்று சொன்ன மனிதரையும், உச்சிவெயில் படத்தில் ஹீரோவான தனக்கு எத்தனை பாடல்கள் என்று கேட்ட குப்புசாமித் தாத்தாவையும் மறக்கமுடியாது நம்மால்.

கமலையும் ரஜினியையும் நடிக்க கேட்ட இவர் ஏன் இவர் மம்முட்டியையோ மோகன்லாலையோ கேட்கவில்லை என்ற கேள்வி இப்புத்தகம் முழுவதும் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. அதிலும் ஸ்ரீவித்யா ‘நீங்கள் எப்போது அழைத்தாலும் வந்து நடித்துக்கொடுப்பேன்’ என்று சொன்னதைப் படித்தபோது இந்நினைவு அதிகமாகியது. அதைத்தான் வைரமுத்து ஜெயபாரதியிடம் ‘இங்கே எதற்காக?’ என்று கேட்டிருக்கிறார் போலும்.

உண்மையில் தமிழ்த் திரையுலகில் வரும் திரைப்படங்களைப் பார்த்தும் யாருக்காக இன்னும் இதுபோன்ற திரைப்படங்களை ஜெயபாரதி இயக்குகிறார் என்று எனக்கு இன்னும் பிடிபட்டபாடில்லை. நண்பா நண்பா, புத்ரன், குருக்ஷேத்திரமெல்லாம் வந்ததும்கூட யாருக்கும் தெரியாது. சி.சு.செல்லப்பா புத்தகக் கட்டுகளை தலையில் சுமந்துகொண்டு வீதி வீதியாக விற்றதாகச் சொல்வார்கள். படத்தை முடிக்க ஒவ்வொரு கல்லூரியாக பணம் கேட்டு ஜெயபாரதி ஏறி இறங்கும்போது அதுதான் நினைவுக்கு வந்தது

குருக்ஷேத்திரம் படம் வெளிவருவது போர்க்களமான குருக்ஷேத்திரத்தில் பட்டபாட்டைவிட பெரியதாக இருக்கிறது. திடீரென வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் சேர்த்தால்தான் படத்தை விற்கமுடியும் என்று தயாரிப்பாளர் சொல்லிவிட (இவர் ஏற்கெனவே ஷூட்டிங்கின்போது கோபத்தில் தேவடியா பசங்களா என்று கத்தியவர்) வேறுவழியின்றி அதற்கும் ஒப்புக்கொள்கிறார். முதலில் இவர்தான் ஜெயபாரதி தெரியாத வடிவேலு, இவர் யாரென்று தெரிந்துகொள்ளவும் மிகவும் மரியாதையாக நடந்துகொள்கிறார். ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது ‘சந்திரசேகருக்கே தேசிய விருது வாங்கிக் கொடுத்திருக்கீங்க, எனக்கும் ஒரு படத்துல வாங்கிக் கொடுங்கண்ணே’ என்று கேட்கிறார். விவேக்கும் இவரை அழைத்து ‘மாற்றுத் திரைப்படம்’ வேண்டுமென்று கேட்டு ஒரு படம் நடிக்க முயல்கிறார். அந்த முயற்சி வெற்றியடையாமல் அது பிற்பாடு ஒய்.ஜி. மகேந்திரா நடித்து ‘புத்ரன்’ என்ற திரைப்படமாக வெளிவருகிறது. (இப்படி ஒரு படம் வந்ததே எனக்குத் தெரியாது!) விவேக், வடிவேலு போன்ற நடிகர்களுக்குள்ளேயும்தான் எத்தனை கனவுகள்!

நூல் முழுக்க தினுசு தினுசான தயாரிப்பாளர்கள். ஹோட்டல் தொழில் நடத்தும் ஒருவர். தன்னைவிட இயக்குநருக்குப் புகழா என்று மருகும் ஒருவர். அம்பிகா ஹீரோயின் என்றால் படம் தயாரிக்கத் தயாராக இருக்கும் ஒருவர். படம் தயாரிக்க இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது என்பதால் கிடைத்ததையெல்லாம் தின்று பெண்களுடன் ஆட்டம்போடும் ஒருவர். இதற்கிடையில்தான் நாம் நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கிறோம். நினைக்கவே அயற்சியாகத்தான் உள்ளது.

திரைப்படம் பற்றி தெரிந்துகொள்ள இந்நூலை வாசிப்பது மிக முக்கியம். இது மாற்றுத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களின் பிரச்சினை மட்டுமல்ல. வணிகத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களும் இதேபோலவோ இதைவிட அவமானப்பட்டு நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டு அவமானப்படுத்தி நம்பிக்கைதுரோகம் செய்துதான் மேலே வரவேண்டியுள்ளது. அத்தகைய ஒரு நிலையைக் காலம் காலமாகவே நம் திரையுலக அமைப்பு கைக்கொண்டுள்ளது. இந்நிலை அத்தனை சீக்கிரத்தில் மாறாது. ஒரு புகழ்முகம் தனக்குப் பின்னே ஒளித்துக்கொண்டிருக்கும் பல்வேறு முகங்களை நாம் தரிசிக்க நேரும்போது ஏற்படும் மனவலியை எப்படிச் சொல்வது? அந்த மனவலியை இப்புத்தகம் எனக்குக் காட்டியது.

இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000023800.html

Share