Tag Archive for காலா

காலா விமர்சனம்

காலா

பொதுவாக ரஜினியின் திரைப்படத்துக்குப் பெரிய அளவில் யோசித்து விமர்சனம் எழுதும் வேலையெல்லாம் செய்ததில்லை. ரஜினியின் படம் என்றாலே அது கொண்டாட்டத்துக்குரியது. முதல் நாள் முதல் காட்சி தரும் கொண்டாட்ட மனநிலையைப் புரிந்துகொள்ள நீங்கள் தொடர்ந்து இருபது வருடங்களாக ரஜினியின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியில் திரையில் பார்த்திருந்தால்தான் புரியும். திடீரெனப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு அபத்தம். பொதுவாகவே இது அபத்தம் என்பது சரிதான். ஆனால் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு ஒரு நாள் மட்டும் போய்வரும் இந்த அபத்தம் எனக்குப் பிடித்தமானது. ரஜினி எனக்குத் தலைவரோ சூப்பர் ஸ்டாரோ இல்லை. எனக்கும் ரஜினிக்குமான ஈர்ப்பு உற்சாகம் சார்ந்தது. கொண்டாட்ட மனநிலை சார்ந்தது. தமிழின் மிகச் சிறந்த நடிகர் ஒருவரின் திறமை சார்ந்தது. ஆனால் கடந்த சில ரஜினியின் படங்கள் வெற்றுக் கொண்டாட்டங்களை மீறியவையாக அமைந்திருக்கின்றன. சிவாஜி திரைப்படத்திலேயே இப்போக்கு துவங்கினாலும் ஷங்கர் அதை ஒருவிதமாகக் கையாண்டார். கபாலியில் இது துலக்கம் பெற்றது. காலாவில் அரசியல் படமாகவே மையம் கொண்டிருக்கிறது. எனவே ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்.

ஒரு திரைப்படமாக காலா மிக நன்றாகவே உள்ளது. முதல் 30 நிமிடங்களில் நெளிய வைத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட கதறும் அளவுக்கு. பின்னர் படம் வேகம் கொள்கிறது. இறுதி நிமிடம் வரை வேகம் குறையவே இல்லை. இனியும் வயதான மனைவிக்கும் கணவனுக்குமான காதலைச் சொல்வதை ரஞ்சித் நிறுத்திக்கொள்வது நல்லது. சில ரசனையான காட்சிகள் இருந்தாலும் மொத்தத்தில் இவை கழுத்தறுக்கின்றன. இக்காட்சிகள் எல்லாம் மறைந்து காலாவின் அரசியலுக்குள் படம் செல்லும் நொடியில்தான் உண்மையான திரைப்படம் தொடங்குகிறது. நானே படேகர் அறிமுகாகும் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை வேகம் குறைவதே இல்லை.

படத்தில் மிக முக்கியமான காட்சிகள் நான்கைந்தாவது இருக்கின்றன. இடைவேளை அரும் காட்சி அட்டகாசம். அந்தக் காட்சியில் நிகல் நிகல் சல்தேரே பாடலை முழுமையாக ஓடவிட்டிருக்கவேண்டும். சட்டென முடித்தது, அட்டகாசமான அந்தப் பாடலுக்கும் அந்தப்பாடல் மிகக் கச்சிதமாகப் பொருந்தி வந்த அந்தக் காட்சிக்கும் அநியாயம் செய்வதைப் போலத் தோன்றியது. இடைவேளைக்குப் பிறகு ரஜினியும் நானாபடேகரும் சந்திக்கும் இரண்டு காட்சிகளுமே அபாரம். வசனங்கள் மிகக் கூர்மை. நானா படேகர் இந்தப் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு போகிறார்.

ரஜினியின் நடிப்பைத் தனியே சொல்லவேண்டியதில்லை. தனக்கான இடம் இனி என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் உடல் ஒத்துழைப்பதில்லை என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். கதையற்ற திரைப்படங்கள் இனி வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை எவ்விதக் குறையுமின்றி மிக நன்றாக நடித்திருக்கிறார். அதீத நடிப்பு என்கிற குழிக்குள் என்றுமே ரஜினி விழுவதில்லை. இப்படத்திலும் அப்படியே. எங்கே அதீதமாக நடிக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டிருப்பதே ரஜினியின் நிஜமான பலம்.

ஈஸ்வரி ராவின் கதாபாத்திரம் ஆரம்பக் காட்சிகளில் அலட்டுவது போலத் தோன்றினாலும், என்னையும் லவ் பண்ணாங்க என்று தியேட்டரையே அதிர வைத்த காட்சியில் மனசுக்குள் நுழைகிறார். சமுத்திரக்கனிக்கு வித்தியாசமான வேடம். செவ்வனே செய்கிறார்.

இப்படத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய நடிகர் – மணிகண்டன். அட்டகாசம், ஆசம். இவருக்கு மிக பிரகாசமான எதிர்காலம் நிச்சயம். படத்தில் மனத்தைக் கொள்ளை கொண்ட நடிகர் இவரே.

படத்தின் செட்டிங்க்ஸ் அபாரம். அப்படியே கண்ணுக்குள்ளே தாராவியைக் கொண்டு வந்துவிட்டார்கள். பின்னணி இசையில் காதைக் கிழிக்காமல் அதேசமயம் பிரம்மாண்டமான இசையைத் தந்த சந்தோஷ் நாராயண் பாராட்டப்படவேண்டியவர். இந்தப் படத்துக்கென அவர் இசையமைத்த பல பாடல்கள் இப்படத்தில் வரவில்லை. யார் வெச்சது யார் வெச்சது பாடல் காட்சிகளூடாகக் கடந்து சென்றதையெல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை. படத்துக்கு இது நல்லதுதான் என்றாலும், அந்தப் பாடலின் தன்மையை இப்படி வீணடித்துவிட்டாரே ரஞ்சித் என்ற வருத்தம் இப்போதும் இருக்கிறது. அதேபோல் பாடலுக்கு நடனம் என்றாலே யாராவது தரையில் கிடந்து சுற்றுவது என்கிற எண்ணத்தை ரஞ்சித் கைவிடுவது நல்லது.

இனி…

இப்படத்தில் தமிழர்களை ராவணனாக மாற்றுகிறார் ரஞ்சித். ராமனை எதிரியாக்குகிறார். வெளிப்படையாகவே. நானே படேகர் ஒரு ஹிந்துக் கட்சியின் தலைவர். பாஜகவாகவோ சிவசேனையாகவோ அல்லது இரண்டுமோ அல்லது கொள்கையாகவோ இருக்கலாம். ராமனே நானா படேகரின் நாயகன். ஒருவகையில் ராவணனான காலாவை அழிக்கப் போகும் ராமன் நானா படேகரே. தலித் அரசியல்வாதிகளின் ஹிந்து மத எதிர்ப்பும் காழ்ப்பும் உலகறிந்த ஒன்றே. ராவணன் உண்மையில் தீமையின் வடிவம். சிவபக்தனாக இருந்தும் அவன் தீமையின் வடிவமே. ராவணன் பிராமணன் என்பதை மறந்து (அல்லது தங்கள் தேவைக்காக மறைத்து) அவனைத் தமிழனின் அடையாளமாக மாற்றி நெடுநாளாகிறது. இந்தக் குழப்பத்துக்கே இவர்களிடம் விடை இல்லை. இந்நிலையில் ஹிந்து மதத்தின் புராணங்களின் ஆழம் தெரியாமல் அதன் வீச்சும் புரியாமல் ராவணனை, தீமையின் வடிவத்தை, திரைப்படத்தில் காலாவுக்கு இணை வைத்துவிட்டார்கள். இதனால் ராவணை ஒழிக்க நினைக்கும் நானா படேகர் என்ற மோசமான அரசியல்வாதியை, உண்மையில் அறத்தின் வடிவான ராமனுக்கு இணை வைத்துவிட்டார்கள். ராமாயணத்தின் கதாகாலக்ஷேபத்தின் வரிகளுக்கு இணையாக ராவணன் ஒழிக்கப்படும் காட்சி மிக பிரமாண்டமாக மனதைப் பதற வைக்கும் அளவுக்குப் படமாக்கப்பட்டுள்ளது. (படத்தில் அசரடிக்கும் காட்சி இதுதான்.) நல்லவன் ராவணன் காலா தீய ராமனால் அழிக்கப்படுகிறான். ஆனால் ராவணன் என்னும் மாயன் மீண்டும் ராமனை அழிக்கிறான்.

மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான். இயக்குநரைத் தீர்மானித்துவிட்டால் அவர் என்ன சொன்னாலும் செய்வார். செய்திருக்கிறார்.

இங்கே நாம் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. தனது எந்த ஒரு திரைப்படமும் வெளி வருவதற்கு முன்பாக அத்திரைப்படத்துக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யாதவர் ரஜினி என்ற பிம்பம் இங்கே இருக்கிறது. ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தை ஒட்டி ரஜினி பேசியது, இத்திரைப்படத்தில் தான் செய்திருக்கும் கதாபாத்திரத்தை மனத்தில் வைத்துத்தான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார். காவல்துறை போட்டிருக்கும் சீருடை என்பது மரியாதைக்குரியது என்ற ஒரு அரசு சார்ந்த கருத்தை வெளிப்படையாக முன் வைத்தார். தான் வேறு தன் திரைப்படம் வேறு என்பதை உணர்த்தவே ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் என்று இப்போது புரிகிறது.

இத்திரைப்படத்தில் சட்டத்தை எரிக்கலாம் என்றொரு வாசகம் வருகிறது. ஆனால் அது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான ரஜினி இப்படிப்பட்டவர்களைச் சமூக விரோதிகள் என்றும் விஷக் கிருமிகள் என்று சொல்லிவிட்டார். அதாவது திரைப்படத்தில் ரஜினி நடித்திருப்பது, ராவணனாக சித்திரிக்கப்பட்டிருப்பது, உண்மையான ரஜினியின் கருத்தின்படி ஒரு விஷக்கிருமியின் பாத்திரமே, ஒரு சமூக விரோதியின் பாத்திரமே. அத்தனை நியாயங்கள் காலாவின் பக்கம் இருந்தாலும் உண்மையான ரஜினியின் கருத்தின்படி சட்டத்துக்கு எதிராக வன்முறைக்குத் துணை போகும் எந்த ஒரு போட்டாரமும் சமூக விரோதியின் செயலே. இதைப் புரிய வைக்கவே ரஜினி அப்படிப் பேசி இருக்கிறார். இதனால்தான் ரஞ்சித்தின் ஆதரவாளர்கள் எந்நிலை எடுப்பது என்று புரியாமல் தத்தளித்திருக்கிறார்கள். ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஹிந்தி பேசும் ராமனே தமிழ் ராவணர்களின் எதிரி என்று மிகத் திறமையாக, வெளிப்படையாக இத்திரைப்படம் முன்வைக்கிறது. படம் தாராவியின் பிரச்சினை என்றாலும் உள்ளூர இப்படம் சொல்ல விரும்புவது இதையே. அதாவது தாராவி பற்றி எப்புரிதலும் இல்லாத தமிழர்கள் இப்படத்தை இப்படியே சென்று அடைவார்கள். (இதில் பாதி பேர் எந்த அரசியல் புரிதலும் இன்றி நன்மைக்கும் தீமைக்குமான சண்டை என்று கருப்பு வெள்ளையாகக் காண்பார்கள், அந்த அப்பாவிகளை விட்டுவிடலாம்.) நானா படேகர் ஷெரினாவைக் காலில் விழச் சொல்லும் காட்சியில் ஒரு நொடி ராமர் சிலை காண்பிக்கப்படுகிறது. நானா படேகர் வரும் இன்னும் சில காட்சிகளிலும் ராமர் சிலை வருகிறது. நானா படேகர் வரும் காட்சிகள் எல்லாமே காவி வண்ண மயம். இறுதிக் காட்சியில் திரையில் வரும் கதாபாத்திரங்களின் உடல் கருமை நிறத்துக்கு மாறுகிறது. கருமை நிறம் வீறுகொண்டு எதிரியைக் கொல்கிறது. திரையின் நிறம் சிவப்பாகிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. எங்கும் காலாவின் முகமாகிறது. திரையின் நிறம் நீலமாகிறது. இந்த நிற விளையாட்டு இனியும் எத்தனை படங்களுக்குத் தொடரும் எனத் தெரியவில்லை. கருமை சிவப்பு நீலம் என்ற நிறங்களை காவிக்கு எதிராக நிறுத்துகிறது இத்திரைப்படம். அந்தக் காவி கொடிய அரசியல்வாதியின் முகம். கருமையும் சிவப்பும் நீலமும் (ஏன் திடீரென்று நீலம் வருகிறது என்பதற்கு ஒரே காரணம் இது ரஞ்சிதி படம் என்பதால்தான்) உண்மைக்கும் ஏழ்மைக்கும் புரட்சிக்குமான முகமாகிறது.

ஏழைகளுக்கான நிலம் என்பதை மையமாக வைத்து அதன் அரசியல் கருத்துகளை முன் வைத்திருக்கிறார் ரஞ்சித். அதையும் பிறப்பால் மராட்டியரான ஒருவரைக் கொண்டே பேச வைத்திருக்கிறார். அதிலும் தேவையே இல்லாமல் ஒருவர் தன் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்று சொல்லிக் குண்டடி பட்டுச் சாகிறார். ரஜினியின் மகன் பெயரை லெனின் என்று வைத்து சிவப்பின் ஈர்ப்பைக் காண்பிக்கிறார். (ஆனால் ரஜினி லெனினை நன்றாகத் திட்டித் தீர்க்கிறார்.) இத்தனைக்கும் நடுவில் தொடரும் ரஞ்சித்தின் முக்கியமான விஷயம் – புத்தரும் அம்பேத்கரும் வருகிறார்கள், ஈவெரா எங்கும் வரவில்லை. ஒரு காட்சியின் பின்னணியில் ஈவெரா சிலை ஒன்றின் தாடி போலத் தெரிந்தது. ஆனால் ஈவெராவின் முகம்தானா என்று காண்பிக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த பேட்டிகளில் ஈவெரா எப்படித் தன்னை மெருகேற்றினார் என்று ரஞ்சித் உருகக்கூடும். திரைப்படங்களில் மட்டும் அம்பேத்கரோடு நின்றுவிடுகிறார். திரைப்படங்களில் மட்டும் தொடர்கிறது ரஞ்சித்தின் ஈவெராவை மறைக்கும் அரசியல். இதற்காகவே ரஞ்சித்தைப் பாராட்டலாம்.

இத்திரைப்படத்தின் சாதனை என்ன? ஒரு ரஜினி படத்துக்கு இப்படி மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு இரண்டாம் முறையாகவும் யோசிக்க வைத்ததுதான் ரஞ்சித்தின் சாதனை. ரஜினி தூத்துக்குடி கலவரத்தை ஒட்டித் தன் கருத்துகளை வெளிப்படையாகக் கூறாத நிலையில் இப்படம் வந்திருந்தால் ரஜினியின் அரசியலில் பெரிய கேள்விகள் எழுந்திருக்கும். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இதைத் தவிடுபொடியாக்கி இருக்கிறார் ரஜினி. தலித் கட்சிகளின் தேவைகள் மிக முக்கியமானவை. இக்கட்சிகள் இல்லாவிட்டால் ஒரு பொதுக்கட்சியால் இக்கருத்துகளை இத்தனை தீவிரமாக முன்னெடுக்கவோ மாற்றங்களைக் கொண்டு வரவோ முடியாது. ஒவ்வொரு ஜாதிக்கட்சிக்கும் இது பொருந்தும் என்றாலும் தலித் கட்சிகளின் தேவைக்கு இவை அதிகம் பொருந்தும். அதேசமயம் யதார்த்தத்தில் ஒரு தலித் கட்சியே (அல்லது எந்த ஒரு ஜாதிக்கட்சியும்) பொதுவான பிரதானமான அரசியல் கட்சியாகிவிடமுடியாது. ரஜினியின் அரசியல் தலித் கட்சிகளின் தேவைகளை ஏற்றுக்கொண்ட ஒரு பொதுக்கட்சியாகவே இருக்கமுடியும் என்பதை ரஜினி உணர்ந்திருக்கிறார். அதனால்தான் திரைப்படத்தில் தன்னை அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டவர்களுக்கு, அத்திரைப்படம் வருவதற்கு முன்பாகவே, தன் கருத்துக்களைச் சொல்வதன் மூலம் தான் யார் என்பதை புரியவைத்திருக்கிறார். இது பெரிய திட்டம்தான் என்றாலும் இத்தகைய விஷப் பரிட்சைகளில் இனி ரஜினி சிக்காமல் இருப்பது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது.

ஒரே வரியில், ஒரு திரைப்படமாக (மட்டும்) அட்டகாசம்.

Share

காலா பாடல்கள்

கபாலி படத்தில் – மாய நதி பாடலும் உலகம் ஒருவனுக்கா பாடலும் எனக்குப் பிடிக்காதவை. பிடித்தவை – நெருங்குடா பாடலும் வீரத் துரந்தரா பாடலும்தான். இதை மனத்தில் கொண்டு மற்றவற்றைப் படிக்கவும்.
 
காலாவில் முதல் பாடல் செம வெயிட்டுடா வெளியிடப்பட்ட போது ரொம்ப டிப்ரஸிங்காகவே இருந்தது. பிடிக்கவே இல்லை. நேற்று எல்லாப் பாடல்களும் வெளியிடப்பட்டன. அவற்றைக் கேட்டதில் (3 முறை கேட்டிருக்கிறேன்) –
 
நிக்கல் நிக்கல் – கிளம்பு கிளம்பு பாடல் மிக அட்டகாசம். இதுவே பெஸ்ட் இப்போதைக்கு. யார் வெச்சது யார் வெச்சது உங்க சட்டமடா அடுத்த கலக்கல். கிளம்பு பெஸ்ட்டா யார் வெச்சது பெஸ்ட்டா என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே அட்டகாசம். நிலமே என் உரிமையின் பின்னணியில் வரும் (இஸ்லாமியப் பாடல்களின் சாயலுடன் வரும்) ஆலாபனை இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
 
இன்னொரு பாட்டில், ஒத்தையில நிக்கிற வேங்கடா தில்லிருந்தா மொத்தமா வாங்கடா என்பதைப் பாடலிலேயே வைத்தவிதம் அழகு.
 
சந்தோஷ் நாராயண் ரஜினியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போயிருக்கிறார். பாடல்கள், படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தைப் பெரிய அளவில் தூண்டுகின்றன. இந்த இசையமைப்பாளரை நேற்றைய விழாவில் ரஜினி மறந்தது ஆச்சரியம். (மறந்தாரா? கடைசியில் ரஜினி பேசுவதை மட்டுமே கேட்டேன்.) கடைசியில் அவரை அழைத்து மேடையில் சொல்லி சமாதானம் செய்தார். உண்மையில் சந்தோஷ் நொந்திருப்பார் என்றே நினைக்கிறேன். பிரச்சினையில்லை, இது வரலாற்றில் இடம் பெறும். 🙂
 
மாய நதி போலவே, கண்ணம்மா பாடலும் பிடிக்கவில்லை. ஆனால் மாயநதியைவிட இது பெட்டர்தான்.
 
போராடுவோம் மற்றும் தெருவிளக்கு பாடல்கள் – பல பாடல்களின் சாயலுடன் உள்ளன! குறிப்பாக ஹிப் ஹாப் தமிழாவின் பாடலைப் போன்று உள்ளது.
 
சட்டென்று எல்லாப் பாடல்களுமே ஒரே போல் தோன்றும். மெல்ல மெல்ல இது மாறும் – சிலருக்காவது.
 
பாடல்களில் என்னவோ 80களின் சாயல் தெரிவது போல் உள்ளது. என் பிரமையா எனத் தெரியவில்லை. சிறியதும் பெரியதுமாக 9 பாடல்கள் என்பது தரும் யூகமா என்றும் புரியவில்லை. படம் நாயகன் திரைப்படம் போன்ற ஒன்றாக இருக்க வாய்ப்பிருப்பதாக இன்னொரு பக்கம் தோன்றுகிறது.
 
ரஜினியின் அரசியல் வருகைக்கு ஏற்ப வரிகள் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருக்கின்றன. படத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் என்பது நிச்சயம். ஆனால் அது எனக்குப் பொருட்டே அல்ல. 🙂 அண்ணாமலை திரைப்படம் வந்த சமயத்தில் ரஜினியின் ஒரு வரி பன்ச்சுக்காக தியேட்டரே அதிர்ந்தது நினைவுக்கு வருகிறது. இப்போது அப்படி அதிர வாய்ப்பு (ரசிகர்கள் ஷோ தவிர மற்ற ஷோக்களில்) குறைவுதான். ஆனால் இது அதிகம் பலன் தரும் என்றே யூகிக்கிறேன். வெற்றி நிச்சயம்.
 
ரஜினி திரைப்படம் எதிர்பார்ப்புக்கு நடுவேயும், தோற்றுப் போகவேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கும் இடையேதான் வெளிவந்துள்ளது. முதல் முறையாக, ரஜினியின் அரசியல் அறிவிப்படை அடுத்து, வெறுப்புக்கு நடுவில் வெளியாகிறது. இந்த வெறுப்பும் ஃபேஸ்புக் அறிவாளிகளின் வெறுப்புதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இத்திரைப்படம் வென்றால், உடனே இது திரைப்படத்துக்கான வெற்றி மட்டுமே என்று சொல்வார்கள். தோற்றால், அரசியலிலும் தோல்வி என்பார்கள். நான் இரண்டையுமே நம்பவில்லை. இந்த வெற்றியும் அரசியல் வெற்றியும் வேறு வேறானவை. இரண்டிலும் ரஜினி வெல்வார் என்றே நினைக்கிறேன்.
 
அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நீங்கிய நிலையில் ரஜினி திரைப்படம் வெளியாவது, எனக்கு மிக முக்கியமானதாகவும் சந்தோஷம் தருவதாகவும் உள்ளது. எவ்விதப் படபடப்பும் இன்றிப் படம் பார்க்கலாம்.
 
ஒரே பிரச்சினை, இந்தப் படத்தில் ரஞ்சித் முன்வைக்கப்போகும் அரசியல். அது தலித் அரசியல் மட்டும் என்றால், நிச்சயம் வரவேற்கப்படவேண்டியது, பாராட்டப்படவேண்டியது. அதன் பின்னணியில் ஹிந்துத்துவ / ஹிந்து மத எதிர்ப்பு இல்லாமல் இருக்கவேண்டும் என்பதுதான் என் ஒரே எதிர்பார்ப்பு. மற்ற மதங்களைத் தூக்கிப் பிடிப்பதில் பெரிய பிரச்சினையோ கேள்வியோ இல்லை – ஹிந்து மதத்தைத் தூற்றாத வரை. காலா அறிவிப்பு வந்த தினம் முதல் இந்த ஐயம் கடுமையாக எழுந்துள்ளது. கபாலி வந்தபோது இந்த அச்சம் வரவில்லை. ஏனென்று தெரியவில்லை. ரஜினிக்கு இருக்கும் ஒரு அரசியல் பெரிய வட்டத்தை இப்படம் குறுக்காமல் இருந்தாலே, இப்படம் ரஜினிக்கு செய்திருக்கும் பெரிய நன்மையாக இருக்கும். பார்க்கலாம்.
 
காலா – காத்திருக்கிறேன்.
Share