Tag Archive for ஜெயமோகன்

வெண்முகில் நகரம்

ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு நாவல்களின் ஒட்டுமொத்த சித்திரம் எவ்வகையிலும் எதனுடனும் நிகரற்றது. என்னால் இதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. இதை ஒரு மனிதன் எழுதினான் என்பதே காலத்தில் மிகப்பெரிய ஆச்சரியமாக நிச்சயம் நிலைகொள்ளும். எழுதிச் செல்லும் இறையின் கைகளே கருவியைத் தேர்ந்தெடுக்கின்றன என்று தத்துவத்தின் வழியே ஜெயமோகன் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுவார்.

இதை எத்தனை பேர் உணர்ந்துகொண்டு படிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், அனைவரும் படிக்கவேண்டுமே என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்நாவலைப் படித்துமுடித்த இந்நேரத்தில் இந்நாவல் தந்த நிறைவும் ஆச்சரியமும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. உள்ளமெல்லாம் வெண்முகில் நகரத்தில் பாத்திரங்கள் நிறைத்திருக்கின்றன.

சாத்யகியும் பூர்சிவரஸ்ஸும் கொண்ட எழுச்சி மிக்க சித்திரம் நான் கொஞ்சம் எதிர்பார்க்காதது. அதுவும் இறுதியில் அவர்களை சந்திக்க வைத்ததெல்லாம் நான் கொஞ்சம் கூட யோசிக்காதது. களத்தில் இரண்டு பேரும் முட்டிக்கொண்டு சாத்யகியால் கொல்லப்படப்போகும் பூர்சிவரஸ், முன்னர் ஒருமுறை சாத்யகியைக் கட்டித் தழுவியிருக்கிறான் என்பதே, சந்தேகமே அன்றி அசையச்செய்யும் உருவாக்கமே. இவையேதான் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே மிக ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்றாலும், யாரென்றே தெரியாமல் போயிருக்கவேண்டிய இருவர் வரலாற்றின் சித்திரத்தில் இப்படி நிற்கும் காட்சி தரும் நிறைவை, ஒரு வகை அதிர்ச்சியை என்னால் சொல்ல முடியவில்லை.

திருதராஷ்டிரன் முன்னர் பாண்டவ கௌரவர்கள் கிருஷ்ணன் முன்னிலையில் சந்தித்துக் கொள்ளும் காட்சி, உணர்ச்சிமயத்தின் உச்சம்.

முதற்கனல் தொடங்கி மழைப்பாடல் பிரயாகை எனப் பல்வேறு நாவல்களில் வரும் காட்சிகள் இந்நாவலில் சிறிய நீட்சியென பேசப்படுவதும், அன்றைய நிகழ்வுகள் இன்றைய புராணமாக எப்படி மையத்தைத் தாண்டிய அல்லது மையத்தை முற்றிலுமே இழந்துவிட்ட காவியமாக நிலைபெறுகிறது என்றெல்லாம் தொடர்ச்சியாகப் பார்ப்பதும் மிகவும் அற்புதமாகவே இருக்கிறது. ஏதோ நாம் காலத்தில் மகாபாரதத்தில் வாழ்ந்துகொண்டிருப்பது போல.

என்னளவில் பிரயாகையில் கொஞ்சம் நலிந்திருந்த நகைச்சுவை சார்ந்த பகுதிகள் இந்நாவலில் – மிக்குறைந்த அளவே வந்தாலும் – மிகக் கச்சிதமாக உள்ளன. அதிலும் த்ரௌபதி ‘ஆறாவது இளவரசனைப் பார்க்கிறேன் எனக்குத்தான்’ என்று சொல்லும் இடத்தில் – ஜெயமோகன் எழுதுவது போல – வெடித்துச் சிரித்துவிட்டேன்.

கிருஷ்ணரும் பலராமரும் வருவதற்காக ஏற்பாடு செய்யும் நூற்றுவனின் அத்தியாயம் முழுக்க நல்ல நகைச்சுவை. இதுவும் ஒரு காவியத்தின் முக்கியமான சுவையே என்று ஜெயமோகன் முன்பிருந்தே சொல்லி வருவதை நினைத்துக்கொண்டேன்.

பல வகைகளில் அடுத்து வரப்போகும் களங்களுக்கான காட்சிகளை மிக ஆழமாகத் திறந்து வைத்திருக்கிறது வெண்முகில் நகரம். பால்ஹிக நாட்டையும், சிபி நாட்டையும் விவிரித்த விதமெல்லாம் அட்டகாசம். படைப்பூக்கத்தில் உச்சத்தில் இப்படி ஒருவரால் தொடர்ந்து நிற்கமுடியும் என்பதே அசரடிக்கிறது. ஏதோ ஒரு கணத்தில் ஜெயமோகனை இளையராஜாவோடு ஒப்பிட்டுக்கொள்கிறேன். ஏனென்றே தெரியவில்லை. ஆனால் இப்படி அடிக்கடி ஆகிவிடுகிறது.

ஜெயமோகன் இதை எழுதும் காலத்தில் நான் அதை வாசிக்க நேர்ந்த அந்த இறைக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. வேறென்ன என்று சொல்லத் தெரியவில்லை.

Share

பாலகுமாரனை நினைத்து

நவம்பர் அந்திமழை மாத இதழ் தொடர்கதை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. (கமல் 60 சிறப்பிதழும்கூட!) அதில் மெர்க்குரிப்பூக்களை முன்வைத்து நான் எழுதிய கட்டுரை ஒன்றும் வந்துள்ளது. ஓர் இதழின் விலை 20 ரூபாய் மட்டுமே. வாங்கிப் படித்துவிட்டுக் கருத்துச் சொல்லவும்.

நீண்ட நாள் கழித்து பாலகுமாரனின் ஒரு நாவலை வாசித்தபோது, மனத்தில் பல்வேறு பழம்நினைவுகள் என்னை அலைக்கழித்தன. அன்று பாலகுமாரனே எழுத்தின் எல்லை என்று நினைத்த நிமிடங்கள் இன்று அப்படி இல்லை என்றாகிப்போன மாற்றமே அதன் முக்கியப் புள்ளியாக இருந்தது. அதை ஒட்டி எழுந்த எண்ணங்களில் சிதறல்களை எழுதி வைத்தேன். அவை:

பாலகுமாரனின் பிரச்சினைகள் – எதையும் அதன் ஆழத்துக்குள் சென்று பரிசீலனைக்குட்படுத்தாதது. எல்லா ஆண் பெண் உறவுகளிலும் ஒரு செக்ஸ் எலிமெண்ட் எப்படியாவது இருந்துவிடுவது. அதிலிருந்து வெளிவர பெண்ணை தெய்வமாக்க முயல்வது. பெண்கள் ஆண்கள் என எல்லோரும் தத்துவார்த்தப் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்வது. மெல்ல எப்படியாவது ஜாதிய சிந்தனை இருந்தே தீரும் என்று தொடர்ந்து பின் நின்று சொல்வது. இவை எல்லாவற்றிலும் அவர் ஆழம் போயிருந்தால் ஒவ்வொன்றும் ஒரு கேஸ் ஸ்டடியாகி இருக்கும். ஆனால் எல்லாவற்றிலும் மூன்று மேலோட்டமான முடிவுகளுக்கு அவர் வந்தார். ஆண் பெண் உறவுகளில் செக்ஸ் அதற்குப் பின்னான வருத்தம், தத்துவார்த்தப் பிரச்சினைகளில் மிகவும் மேலோட்டமான எரிச்சலான தன்னிரக்கம், ஜாதிய சிந்தனைகளில் அவரது பிற்போக்குத்தனம் இவையே அவரை தேங்க வைத்தன. இதே மேலோட்டமான வேகத்தில் அவர் ஆன்மிகத்துக்குப் போனார். எனக்கு ஆன்மிகம் பற்றி அதிகம் பரிச்சயமில்லை. ஆனால் ஆன்மிகத்தை இவர் எழுதியதை வாசித்தபோது அவற்றிலும் ஒரு அவசரத்த்னமையும் தனது வாசகர்களைத் தான் செல்லும் திசைக்குத் திருப்பிக்காட்டவேண்டும் என்கிற வேகமும் முடியும் என்கிற மமதையும் மட்டுமே தென்பட்டன.

ஆனால் என் பால்யம் முழுக்க பாலகுமாரனே நிறைத்துக் கிடந்தார். அதில் காமத்தை பெரும்பாலும் தன் எழுத்துகள்மூலம் அவரே கட்டமைத்தார். ஒவ்வொரு இளைஞனும் வெறும் காமம் பற்றியே பேசும்போது அவர் எனக்குள் ஒரு விஸ்வரூபம் எடுத்தார். பல நாள்களில் பல நேரங்களில் நான் பாலகுமாரனுடன் மானசீகமாகப் பேசினேன். எனக்கு குருக்கள் என்று யாரும் இன்றுவரை இல்லை. ஆனால் மானசீகமாக என் வாழ்க்கையை பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ, சுஜாதா, ஜெயமோகன் போன்றவர்களே வடிவமைத்தார்கள். அந்தவகையில் பாலகுமாரனிடன் எனக்கு எப்போதும் ஒரு மென்மை உண்டு. எப்போதும் நான் அவரை நோக்கிக் கைக்கூப்புவேன்.

பாலகுமாரனின் மயக்கத்தை சுஜாதா போக்கடித்தார். சுஜாதாவிடமிருந்து ஜெயகாந்தன் என்னைக் கொண்டு போனார். இவர்கள் அத்தனை பேரையும் ஒரு சேரக் கடாச வைத்தார் ஜெயமோகன். ஆனால் இன்று நோக்கும்போது இவர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு வகையில் எத்தனை முக்கியமானவர்கள் என்று தெரிகிறது. அதிலும் சுஜாதாவின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. ஜெயமோகன் எங்கேயோ போய்விட்டார். 

பாலகுமாரனின் பெண்களை மிகக் கறாராக வரையறுத்தால், உணவாலும் உடலாலும் ஒரு ஆணைக் கட்டிப்போட முடியும், முடியவேண்டும் என்று சொல்பவர்களாகவே இருந்தார்கள். ஆணிடம் ஒரு பெண் தோற்கும்போது அவர்கள் காமத்தை அனுபவமாக்கியே க்டந்தார்கள். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு நொடியில் வீட்டுப் பெண்ணே என்று காண்பிக்க பாலகுமாரன் தவறுவதில்லை. அதேபோல் எந்த ஒரு நொடியிலும் ஒரு வீட்டுப் பெண் பல தளங்கள் உயர்ந்து வெற்றிப் பெண்ணாக வலம்வர வைக்கவும் அவர் தவறுவதில்லை. என்ன, இவை இரண்டுமே நொடிநேர மின்னல்களாக நிகழ்ந்துவிடுவதுதான் சோகம். இதற்கேற்ற ஆழமான காரணங்களோ சம்பவங்களோ இருப்பதில்லை. அப்படி ஒரு பெண்ணால் மாறமுடியும் என்ற ஒற்றைக் காரணம் எல்லா நாவல்களிலும் பாலகுமாரனுக்குப் போதுமானதாக இருந்துவிடுகிறது.

அனல்காற்று ஜெயமோகன் எழுதியது. பாலகுமாரனின் கதை போன்ற ஒன்றுதான். ஆனால் அதில் ஜெயமோகன் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அனுபவங்கள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவர்கள் மனத்தில் அப்படியே நிர்வாணமாக்கி நிற்கவைப்பவை. ஆணின் எல்லையையும் பெண்ணின் எல்லையையும் அவர் தொட்டிருக்கும் அற்புதம் வாசித்தால்தான் புரியும். அனல்காற்று நாவலில் பல இடங்களில் நாம் பாலகுமாரனை நினைவுகூர்வோம். ஆனால் பாலகுமாரனால் செல்லவே முடியாத அலசல்களை ஜெயமோகன் நிகழ்த்திக்கொண்டிருப்பார்.

அனல்காற்று ஜெயமோகனின் நாவல்களில் ஒன்றாக வைக்கத் தக்கதல்ல. அத்தனை ஆழமான அலசல்களை மீறியும் அது ஒரு சுமாரான நாவலே. ஆனால் அது ஒரு திரைக்கதையாக எழுதப்பட்டது என்பதை மனத்தில் வைத்தே படிக்கப்படவேண்டும். சட்டென தெளியும் நிலையில் வரும் உறவு விவரணைகளில் உண்மையில் நான் மிரண்டுவிட்டேன்.

Share

புதியவர்களின் கதைகள்

ஜெயமோகனின் வலைத்தளத்தில் புதியவர்களின் கதைகள் வெளியிடப்பட்டு, பதினோரு சிறுகதை எழுத்தாளர்கள் ஜெயமோகனால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் போன்ற ஒரு மூத்த, முக்கியமான எழுத்தாளரால் இவர்கள் அறிமுகப்படுத்தப்படுவது மிக முக்கியமானது. இதனால் இவர்கள் நிச்சயம் நல்ல கவனம் பெறுவார்கள். ஜெயமோகன் இப்படிச் செய்ய நினைத்ததே, வரும் தலைமுறை மீது அவர் வைத்திருக்கும் ஆர்வத்தினால்தான். இப்படி ஏற்கெனவே பல மூத்தாளர்கள் செய்திருந்தாலும், அவற்றுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இந்தப் பதினோரு எழுத்தாளர்களும் இணையத்தின் மூலம் எழுத வந்தவர்கள் என்பதே. இணையத்தின் வழியே ஒரு சிறுகதை எழுத்தாளர்கள் தலைமுறை உருவாகிவந்தால், தொடர்ந்து சபிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இணைய உலகம் கொஞ்சம் தலை நிமிரலாம்.

மேலும் வாசிக்க இங்கே செல்லவும்.

Share

அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்

நான் எழுதிய ‘அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்’ புத்தகத்தின் விமர்சனம் தமிழோவியம் தளத்தில் வெளியாகியுள்ளது.

Share