Tag Archive for நேரு

மறக்கப்பட்ட 1949 வாக்குறுதி கட்டுரையை முன்வைத்து

இன்றைய (15-அக்டோபர்-2013) தமிழ் தி ஹிந்துவில் வித்யா சுப்ரமணியம் எழுதிய ஆர் எஸ் எஸ் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது. மோசமான கட்டுரை. படேலிடம் ஆர் எஸ் எஸ் வாக்குக் கொடுத்ததாம். என்னவென்று? அரசியலில் பங்கேற்காது என்று. அதனால்தான் ஆர் எஸ் எஸ்ஸின் தடை நீக்கப்பட்டதாம். அப்படி இருக்கும்போது இப்போது எப்படி அரசியலில் பங்கேற்கலாம் என்று கேட்கிறது கட்டுரை. இப்போது ஆர் எஸ் எஸ் என்ன பங்கெடுத்தது? மோதியின் பிரதம வேட்பாளர் அறிவிப்பில் ஆர் எஸ் எஸ்ஸின் பங்கு இருக்கிறதாம்.

* இத்தனை நாளாக ஆர் எஸ் எஸ் பிஜேபியின் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்று வித்யா சுப்பிரமணியம் நம்புவது வேடிக்கை. இப்போதைப் போலவே எப்போதும், நேரடியாகவா மறைமுகமாகவா என்று சொல்லமுடியாத வண்ணம், ஆர் எஸ் எஸ் பாஜகவில் தன் அதிகாரத்தைச் செலுத்தியே வந்திருக்கிறது.

* ஆர் எஸ் எஸ் தன் அதிகாரத்தை பாஜகவிலிருந்து விலக்குமானால் நான் பாஜகவை மற்றுமொரு சாதாரணக் கட்சியாகவே பார்ப்பேன். அத்தனையையும் மீறி பாஜவை ஓரளவு நான் நம்பக் காரணம் இந்த ஆர் எஸ் எஸ் அதிகாரமே. பாஜகவில் இருக்கும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களே கட்சியின் தூண்கள். 

* படேலிடம் வாக்குக் கொடுத்துவிட்டார் என்று பலமுறை வித்யா சுப்ரமணியம் கிட்டத்தட்ட கதறியிருக்கிறார். படேல் மேல் அத்தனை மதிப்பா? சரி ஒழியட்டும். அன்று வாக்குக் கொடுத்துவிட்டால், அதன் பின்பு ஆர் எஸ் எஸ் தன் நிலையிலிருந்து மாறவே கூடாதா என்ன? 

* படேலிடம் வாக்குக் கொடுத்ததைச் சொல்லும் வித்யா சுப்ரமணியம், ஆர் எஸ் எஸ் தன் தொண்டர்களை கட்சிகளில் இணைந்து பணியாற்ற அனுமதித்தது என்றும் சொல்கிறார். அப்புறம் என்ன? கட்சிகளில் சேர்ந்து பணியாற்ற அனுமதிப்பது என்பது கைதட்டிக்கொண்டிருக்கவா? அதிகாரத்தைச் செலுத்தத்தானே!

* கோல்வல்கர் அதிகாரத்தின் மேல் வெறுப்பு உள்ளவராக இருந்தார். எனவே அவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் அப்போதே அரசியலில் நேரடியாகப் பங்குபெறவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத்தான் செய்தன. தேவரஸ் இதனை முக்கியமான விஷயமாகவே பார்த்தார். எனவே இது புதிய கண்டுபிடிப்பல்ல.

* கோல்வல்கர் மன்றாடினார் என்றொரு எள்ளல். உண்மையில் அவர் மன்றாட மட்டும் செய்யவில்லை. மிகக் கடினமான காலகட்டத்தில் ஆர் எஸ் எஸ் என்ற இந்தியாவின் உன்னத அமைப்பை வழி நடத்தும் அவருக்கு தன் காரியம் ஒவ்வொன்றும் எத்தனை முக்கியமானது என்று தெரிந்திருந்தது. எனவே அரசுக்கு உகந்தமொழியில் சொல்லிப் பார்த்தார். பின்பு வேறு வழியில்லை என்றால் ஆர் எஸ் எஸ் அரசியலில் நேரடியாகப் பங்குபெற வேண்டியிருக்கும் என்ற முடிவை நோக்கி ஆர் எஸ் எஸ் செல்வதைப் பார்த்து பயந்த நேரு அரசு தடையை நீக்கியது. ஏன் இந்தப் பயம்? அன்றைய காங்கிரஸில் ஹிந்துமதத்தைப் போற்றிய, தேசியத்தை உயிராக மதித்த பலர் இருந்தனர். எனவே ஆர் எஸ் எஸ் நேரடியாக அரசியல் களத்துக்கு வந்தால் காங்கிரஸை உட்கொண்டுவிடும் என்று நேருவுக்குப் புரிந்திருந்தது. இதைவைத்து விளையாடித்தான் ஆர் எஸ் எஸ் தடையை நேருவிய அரசு நீக்கியது. எனவே மன்றாடுதல் என்னும் வார்த்தை எள்ளலோடு வரலாறு முடிந்துவிடவில்லை. தன் கட்சியைக் காப்பாற்றவே நேருவிய அரசு தடையை நீக்கியது. காந்தி கொலையில் ஆர் எஸ் எஸுக்குப் பங்கிருக்க வாய்ப்பில்லை என்று படேலும் நேருவிய அரசும் உறுதியாக நம்பியபின்பும் ஏன் ஆர் எஸ் எஸைத் தடை செய்யவேண்டும்? இந்த உறுதிமொழியைப் பெறத்தான்.

இத்தனை உண்மைகளைப் புதைத்துவிட்டு ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இதேபோல் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் வால் பிடித்த கம்யூனிஸ்ட்டுகளின் கணக்குகளுக்குப் பணம் வந்த கதையையும் தமிழ் தி ஹிந்து எழுதவேண்டும்.

இதைப் பற்றிய ஃபேஸ்புக் குறிப்பு இங்கே.

Share

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் என்ற புத்தகத்தின் பெயர் மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் இப்புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன். 2005ம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில் அலைகள் வெளியீட்டகம் புத்தக அரங்கில் இப்புத்தகத்தைப் பார்த்தேன். அலைகள் வெளியீட்டகத்தின் மற்ற புத்தகங்கள் எல்லாம் எனக்கு பயத்தை ஊட்டுவனவாக இருந்தன. எனவே இப்புத்தகமும் இப்படி இடதுசாரி புகழ்ச்சியைத் தூக்கிப் பிடிக்கும் புத்தகமாக இருக்கும் என்று நினைத்து வாங்காமல் விட்டுவிட்டேன். அடுத்தடுத்த புத்தகக் கண்காட்சிகளிலும் இப்படியே.

wrapper_sathi_vazhakkugal

ஒரு புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் ஸ்டாலில் இந்தப் புத்தகத்தைக் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருந்தார்கள். அப்போதெல்லாம் விஜயபாரதம் அரங்கில் யாரையுமே எனக்குத் தெரியாது. எப்படி இந்தப் புத்தகத்தை இங்கே வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கவும் எனக்குக் கூச்சமாக இருந்தது. உடனே அலைகள் வெளியீட்டகம் ஸ்டாலுக்குப் போனேன். அங்கேயும் இதே புத்தகம் இருந்தது. அப்படியானால் இது இடதுசாரி உயர்வுநவிற்சிப் புத்தகமா, ஆமென்றால் அதை ஏன் விஜயபாரதம் விற்கிறது என்றெல்லாம் எனக்குக் குழப்பம். உள்ளே புரட்டிப் பார்த்ததில் பல சுவாரஸ்யமான வழக்குகளும், காந்தியைப் பற்றி விமர்சனங்களும் கண்ணில் பட்டன. அப்போதும் வாங்காமல் வந்துவிட்டேன்.

பின்பு ஒருமுறை அரவிந்தன் நீலகண்டன் இந்தப் புத்தகத்தை சிலாகித்துப் பேசினார். இனிமேல் தைரியமாக இந்தப் புத்தகத்தை வாங்கலாம் என்று முடிவு கட்டி, அன்றே அப்புத்தகத்தை வாங்கினேன்.

இப்போது கிழக்கு வெளியீடாக பிரபல கொலை வழக்குகள் என்றொரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. இப்படி ஒரு புத்தகம் வரவேண்டும் என்று உழைத்ததன் முழுப் பங்கும் மருதனையே சாரும். தமிழ்பேப்பரில் நானும் அவரும் எடிட்டர்களாக இருந்தபோது, கொலை வழக்குகள் பற்றி வக்கீல் ஒருவர் எழுதப்போகிறார் என்று மருதன் சொல்லவும், எனக்கு மீண்டும் சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் புத்தகம் நினைவுக்கு வந்தது. அப்போதும் அதை வாசித்தேன்.

கடந்த சில தினங்களாக மீண்டும் இந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

பிரபல கொலை வழக்குகள் புத்தகம் போல, சரித்தரத்தை மாற்றிய சதி வழக்குகள் புத்தகம் எவ்விதமான சட்டப் பார்வையையும் கொண்டிருக்கவில்லை. மேலும் சுதந்திரத்துக்கு முற்பட்ட சதி வழக்குகளை மட்டுமே ‘சரித்திரத்தை மாற்றிய சதிவழக்குகள்’ புத்தகம் பேசுகிறது. எனவே எல்லா சதி வழக்குகளும் இந்திய சுதந்திரத்தோடு பிணைந்துகொண்டுள்ளது. இது புத்தகத்துக்கு ஒரு பொதுப்பார்வையையும் தந்துவிடுகிறது.’1961முதல் 1977 வரை பாரதம் இதழில் சில பகுதிகளும், பின்னர் 40 வாரங்களுக்கு சுதந்திரம் இதழிலும் இக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. விடுதலைப் போரில் தமிழகச் சதி வழக்குகள் என்ற பெயரில் வெளிவந்த புத்தகத்தில் இதிலிருந்த சில கட்டுரைகள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன். அலைகள் வெளியீடாக 2001ல் சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் என்ற பெயரில் புத்தகம் வெளிவந்திருக்கிறது. இப்போதும் கிடைக்கிறது.

இந்திய சுதந்திரம் என்றாலே காந்தி என்ற பெயர் மட்டுமே தெரியும் என்பவர்கள் நிச்சயம் வாசிக்கவேண்டிய நூல் இது. பெயர் தெரியாத எண்ணிலடங்கா தியாகிகளுக்கு இந்த நூல் அர்ப்பணம் என்று நூலாசிரியர் சமர்ப்பணத்தில் சொல்லியிருக்கிறார். இந்நூல் முழுமைக்கும் அப்படிப் பெயர் தெரியாத பல சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நாம் பார்க்கலாம். கூடவே காந்தியின் முக்கியத்துவத்தையும் நாமே உணர்ந்துகொள்ளமுடியும். இந்நூலில் காந்தியைத் தவிர்க்கமுடியாமலும் அதே சமயம் புகழமுடியாமலும் உள்ள தவிப்பை நாம் மிக எளிதாகக் கடந்துவிடமுடியும்.

index_sathi_vazakkugalபடிக்கும்போதே ஒருவித வீராவேசத்தைக் கொண்டு வரும் எழுத்து நடையில் இப்புத்தகம் உள்ளது. அதேசமயம் அது தறிகெட்டு மேலெழும்பி வெற்று உயர்வுநவிற்சி வாக்கியங்களாகவும் ஆகிவிடவில்லை. பல்வேறு சிறிய சிறிய ஆனால் அரிய குறிப்புகள் நூல் முழுவதும் உள்ளது. ஒருவித இடதுசாரி நோக்கில் எழுதப்பட்டிருப்பதால், காந்தியைப் பற்றிய கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம் காந்தியின் முக்கியத்துவத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார் ஆசிரியர். காந்தியைப் பற்றி பல்வேறு தலைவர்கள் சொன்ன எதிர்க்கருத்துக்களையெல்லாம் மிக முக்கிய ஆவணங்களாகக் கருதி அவற்றை மொழிபெயர்த்து இந்நூலில் சரியான இடத்தில் சேர்த்திருக்கிறார்கள். அதில் ஒன்று இங்கே:

சௌரி சௌரா சம்பவத்தை அடுத்து காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டபின்பு, நேரு எழுதுவது இது. (காக்கோரி சதி வழக்கில் இது கொடுக்கப்பட்டிருக்கிறது.)

“இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில், மக்கள் அடக்குமுறை தாளாமல் பலாத்காரத்தை உபயோகித்து விட்டார்கள் என்பதற்காக, இந்திய சுதந்திரப் போராட்டத்தையே ஒத்திவைப்பதா? ஆம் என்றால், காந்திஜி கூறும் அகிம்சைக் கொள்கையில் எங்கோ ஒரு பெரிய கோளாறு இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.

இந்த மகத்தான தேசத்தின் கோடிக்கணக்கான மக்களுக்கும், அகிம்சைக் கோட்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்து உதறி பாடம் நடத்தி, ஒவ்வொருவரையும் அகிம்சாவாதியாக மாற்றிய பின்னர்தான் போராட்டத்தைத் தொடரவேண்டும் என்றால், இம்மாதிரி பலாத்காரச் சம்பவங்கள் இனி ஒரு போதும் நடக்காது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டுதான் போராட்டம் நடத்தவேண்டும் என்றால் அது ஒரு காலத்திலும் சாத்தியப்படாது.

அப்படியே சாத்தியப்பட்டாலும் அதற்குப் பிரிட்டிஷ் போலிசார் நம்மோடு ஒத்துழைப்பார்களா? சாத்வீகமாகப் போராடும் தொண்டர்கள் மீது ஆத்திரத்தைக் கிளறிவிடும் அடக்குமுறைகளை ஏவாமல் இருப்பார்களா? இதற்கான உத்தரவாதத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தரமுடியுமா? அதுவும் கைக்கூலிகள் தாங்கலே இம்மாதிரி வன்முறைச் செயல்களைச் செய்துவிட்டுப் பழியை நமது இயக்கத்தின் மீது போடுவதை நம்மால் தடுக்க இயலுமா? ஒருக்காலும் முடியாது.

இந்தியா முழுவதிலும் எந்த ஒரு இடத்திலும் வன்முறைச் சம்பவமே நடக்காது என்ற உத்தரவாதம் ஏற்பட்டால்தான் இயக்கத்தைத் தொடரமுடியும் என்று காந்திஜி கருதுவாரானால் அவரது இயக்கமும் சரி; அகிம்சைப் போராட்டமும் சரி, ஆயிரம் ஆண்டுகளானாலும் வெற்றி பெறப் போவதில்லை. ஒரு அடிமை நாட்டு மக்களிடமிருந்து, அடச்க்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அப்படிப்பட்ட உத்தரவாதத்தைப் பெற எவராலும் முடியாது.”

 

இதுபோன்ற பல குறிப்புகள் இந்நூல் முழுவதும் குவிந்து கிடக்கின்றன. இதில் வரும் வழக்குகளின் விவரங்களையெல்லாம் மனத்தில் இருத்திக் கொள்ளவே முடியாது என்றே நினைக்கிறேன். அத்தனை வழக்குகள் கையாளப்பட்டுள்ளன. 32 வழக்குகள் பற்றி மிக விவரமாக 432 பக்கங்களுக்கு விரிகிறது இந்த நூல். ஆய்வு செய்து எழுதப்பட்டிருந்தாலும், மிக அடிப்படையான தேசப்பற்றை முதன்மையாக வைத்தே இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது. நாம் அறிந்துகொள்ளவேண்டிய, ஆனால் பெயர் கூடத் தெரியாத, தூக்குக் கயிற்றில் தன் உயிரைவிட்ட பல தலைவர்களைப் பற்றிப் படிக்கும்போது மயிர்க்கூச்செறிவதைத் தவிர்க்கமுடியவில்லை. புத்தகத்தின் நடைகூட மயிர்க்கூச்செறியும் விதமாகவே உள்ளது. நிச்சயம் வாசிக்கவேண்டிய புத்தகம்.

15 வயதில் இருக்கும் ஒரு பையனுக்கு இந்நூலில் உள்ள சில தேர்ந்தெடுத்த வழக்குகளை அறிமுகப்படுத்தினால் அவன் நிச்சயம் இந்திய தேசியத்தின் பக்கம் வர வாய்ப்புள்ளது. இந்தியாவா, இன்னும் இருக்கிறதா, இன்னும் இருக்கணுமா என்ற ஃபேஸ்புக் புரட்சியாளர்களுக்கு மத்தியில் இது போன்ற புத்தகங்களைப் படிப்பது மட்டுமே இந்திய தேசியத்தை மாணவர்கள் மனத்தில் பிடித்துவைக்கும். நாட்டுப்பற்று என்பது பிற்போக்குத்தனமானது அல்ல, இந்திய தேசியம் என்பது வாய்ப்பந்தல் வழியே எதிர்கொள்ளமுடிந்துவிடும் சிறுமைகொண்ட கற்பிதம் அல்ல, அது உயர்வானது என்பது புரிய வழிவகுக்கும். நம் மாணவர்கள் திடீர் குபீர் இடதுசாரிக் கருத்துகள் வழியே (நாசமாகப்) போகாமல் இருக்க நாம்தான் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். கூடவே நூலில் தெரியும் சில செக்யூலர்த்தனமான வாசகங்களையும் பொறுத்துக்கொள்ளவேண்டும்.

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள், அலைகள் வெளியீடு, சிவலை இளமதி, 240 ரூ.

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-814-1.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

Share

பசுவதை பற்றிய ஆவணப்படம்

பசுவதை தடையைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இன்று பார்த்தேன். ஆலயம் தொழுவோர் சங்கம் சார்பாக எடுக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படத்தை இயக்கியவர்கள் பத்ரி (பத்ரி சேஷாத்ரி அல்ல) மற்றும் ராதா ராஜன்.

ஆலயம் தொழுவோர் சங்கத்தின் சார்பாக முதலில் பலர் பேசினார்கள். ஆலயத்தின் பல்வேறு சொத்துகள் இன்று அரசால் எப்படி கபளீகரம் செய்யப்படுகின்றன என்றெல்லாம் எடுத்துரைத்தார்கள். ஹிந்து ஆலயங்களை அரசிடமிருந்து மீட்டு அவற்றை ஹிந்து அமைப்புகளிடம் கொடுப்பதே ஒரே வழி என்றெல்லாம் சொன்னார்கள். ஹிந்து ஆலயங்களில் நடைபெறும் எல்லாமே தர்மத்துக்கு எதிரானதாக இருப்பதாகவும் அதனை சரியான முறையில் செய்ய ஹிந்து அமைப்புகளால் மட்டுமே முடியும் என்றார்கள். அரசு செய்யும் தவறுகளைத் திருத்துவதைவிட ஹிந்து அமைப்புகளிடம் ஹிந்து ஆலயங்கள் வருவதே முக்கியமானது என்பதே இச்சங்கத்தின் நோக்கம் என்பது புரிந்தது. இதில் தவறு காண இடமில்லை. ஏனென்றால் எல்லா அரசுகளுமே ஆலயங்களின் சொத்துக்களைத் தங்கள் பினாமி சொத்துகளாகத்தான் பாவிக்கின்றன. ஆனால் ஹிந்து அமைப்புகள் வசம் வரும் ஆலயங்களில் பராமரிக்கப்படும் முறைகள் எவ்வகையிலும் சாதி ஏற்றத்தாழ்வு சாராததாக இருக்கும் உறுதியை ஹிந்து அமைப்புகள் வழங்கவேண்டும். அரசு தரப்பில் நடக்கும் குறைகளை எதிர்கொள்ளவாவது முடியும். தனிப்பட்ட நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகளின் கைகளில் வரும் ஆலயங்களில் நடக்கும் அத்துமீறல்களை எதிர்கொள்வது நிச்சயம் சவாலான ஒன்றே.

பின்னர் பசுவதை பற்றிய, கேரளாவுக்கு இறைச்சிக்காகக் கடத்தப்படும் மாடுகளைப் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பானது. பசு என்றாலே அது எருமை எல்லாவற்றையும் சேர்த்தே குறிக்கும் என்று சொல்லப்பட்டது. இதிலிருந்தே எனது குழப்பம் தொடங்கிவிட்டது. பசுவதை பற்றிய ஒரு தெளிவின்மை எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு ஆன்மிக ஹிந்துவாக என்னால் நிச்சயம் பசுவதையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஓர் சக ஹிந்துவாக, மாட்டிறைச்சி சாப்பிடுவர்களைக் கேவலமாக நினைக்கவும் என்னால் முடியாது. எனவே இதுகுறித்த குழப்பம் எப்போதும் எனக்கு உண்டு. இந்த ஆவணப்படம் அந்தக் குழப்பத்தைப் பன்மடங்கு கூட்டிவிட்டது என்றே சொல்லவேண்டும்.

பசுவதைத் தடை என்பதை ஹிந்து அமைப்புகள் இன்னும் தெளிவாக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஒட்டுமொத்த பசுக்கொலை தடை என்று தொடங்கினால் அது வெற்றி பெறும் வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இருக்காது என்றே உறுதியாகத் தோன்றுகிறது. ஒட்டுமொத்த பசுவதைத் தடை என்பது, பல்வேறு சாதிகளின் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக ஆகிவிடும் என்பதால் இதனை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது. தலித்துகள், பழங்குடிகள் உள்ளிட்ட, மாட்டிறைச்சியை உண்ணும் உணவுப் பழக்கம் உடைய சாதிகளின் பங்கேற்பில்லாமல் இப்பசுவதை எதிர்ப்பை மேலே கொண்டு போகவே முடியாது. எத்தனையோ தலித்துகள் இன்றும் பசுவதையை ஏற்பதில்லை. உண்மையில் பசுவதை எதிர்ப்பு அவர்கள் மூலம் அவர்களில் இருந்தே தொடங்கவேண்டும். அம்பேத்கர், தலித்துகள் இறந்த பசுக்களின் தோலை உரிப்பதிலிருந்தும், அவற்றின் இறைச்சியை உண்பதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என நண்பர் ஒருவர் சொன்னார். இங்கிருந்தே நாம் தொடங்கவேண்டும். பசுவதை (அதாவது பசுவைக் கொல்லுதல்) என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பதை அம்பேத்கர் ஏற்காததன் சூட்சுமம், தலித்துகள் மற்றும் பழங்குடிகள் பற்றிய அவரது பார்வையில் உள்ளது. இதே பார்வையே நேருவுக்கும் இருந்திருக்கவேண்டும்.

ஆவணப்படத்தைப் பற்றிய ராதா ராஜன் நேரு மீது குற்றம் சாட்டும் தொனியில்தான் பேசினார். அவரது குற்றம் சாட்டுதல் அவரது பார்வையிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் ஒரு பெரிய இயக்க முன்னெடுப்பு ஒருவரது அல்லது சிலரது தனிப்பட்ட பார்வையில் ஏற்படும் புரிதலை அடிப்படையாகக் கொண்டு நடக்கமுடியாது என்பதே உண்மை. எனவேதான் காந்தி பசுவதைத் தடை என்பது தனிப்பட்ட மனிதரின் மனங்களில் நிகழும் மாற்றமாக இருக்கவேண்டும் என்றார் போல. சட்டத்தின் மூலமாக இதனைச் செய்யமுடியாது. செய்தால் அது ஹிந்து மதத்தில் சாதி ரீதியான பிளவை இன்னும் ஆழமாக்கும். 

அது மட்டுமல்ல. நேரம் பார்த்துக் காத்திருக்கும் கிறித்துவ மதம் பரப்பும் குழுக்களுக்கு பந்தி விரிப்பது போல் ஆகிவிடும். நேரு அரசின் போது பசுவதைத் தடைச் சட்டம் வருவதை அரசில் இருந்த அத்தனை முஸ்லிம்களும் வரவேற்றார்கள். ஆனால் நேரு பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவில்லை. மாறாக ஒரு குழுவை நியமித்து அதன் கருத்துகளைக் கேட்டார். அக்கருத்துகளையும் செயல்படுத்தவில்லை. இந்திராவின் ஆட்சிகாலத்திலும் பசுவதைத் தடைச் சட்டம் குறித்து ஒரு குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் கோல்வல்கரும் இருந்தார். இது பற்றிய மேலதிகத் தகவல்களைப் படிக்கவேண்டும். இந்த ஆவணப்படத்தின்படி, இக்குழுவின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. வாஜ்பாய் அரசிலும் இன்னொரு குழுவிடம் கருத்துக் கேட்கப்பட்டதாம். அக்குழுவின் கருத்துகளும் வெளியிடப்படவில்லை போல. வாஜ்பாயும் நேரு போல் அம்பேத்கர் போல் சிந்தித்திருக்கவேண்டும். 

பசுவதைத் தடைச் சட்டம் என்பது, உயிர்க்கொல்லாமை என்பதை ஒட்டி சிந்திக்கக்கூடிய ஆளவுக்கு மேம்போக்கானதல்ல. நிச்சயம் ஆழமானது. இந்தியாவில் சிறிய சிறிய குழுக்களாக இருந்தாலும் பல்வேறு நுண்மைகளுடன் வேர்கொண்டிருக்கும் பல்வேறு சாதிகளின் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் ஒட்டியது. அதைக் கணக்கில் கொள்ளாமல் நாம் பேசமுடியாது. அந்த சாதிகளின் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஒரு மக்கள் இயக்கமாக பசுவதைத் தடையை மேலே கொண்டு போகவும் முடியாது. இந்த ஆவணப்படம் வெளியீட்டின்போதே இச்சாதிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் பசுவதை தடை பற்றிய மன மாற்றத்தை நோக்கி நாம் முன்னேற முடியும். பசுவதை எக்காரணம் கொண்டும் ஏற்காத என்னைப் போன்றவர்கள்கூட, ஹிந்து தர்மத்துக்குள் இருக்கும் பல சாதிகளின் கண்ணோட்டங்களைப் பார்க்க யோசிக்கும்போது, அந்த அந்த சாதிகளின், அதுவும் பசுக்கொலை ஒரு பெரிய தவறல்ல என்று நினைக்கும் சாதிகளின் ஆதரவைப் பெறுவது எத்தனை சிக்கலானது என்று புரிந்துகொள்ளலாம். இவர்களை நோக்கியே நாம் பசுக்கொலையைப் பேசவேண்டும்.

முஸ்லிமகள் சில இடங்களில் பசுக்கொலையை ஹிந்துக்களுக்கு எதிரான சிம்பலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பதிலுக்கு பன்றி இறைச்சி நல்லது என்பதுபோன்ற ஹிந்துக்குரலையும் கேட்டிருக்கிறேன். இவற்றையெல்லாம் விட, பசுவதை என்பது ஹிந்துக்களுக்குள்ளான பெரிய பிரச்சினையே அன்றி ஹிந்து முஸ்லிம் பிரச்சினை அல்ல என்று ராதா ராஜன் சொன்னார். இது சரியானதே. எப்போது அது ஹிந்துக்களின் தோல்வியாகிறதோ, அப்போது நாம் அனைத்து ஹிந்துக்களிடமும் அதாவது அனைத்து சாதிகளிடமும் இருந்து நம் பேச்சைத் தொடங்கவேண்டும். அதற்கு முதலில் நாம் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதன் பெயரில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிப் பேசவேண்டும். இல்லையென்றால், ‘எங்களைக் காப்பாத்தவே நாதியில்லை. இதில் மாடுகளைக் காப்பாத்துறது அதைவிட முக்கியமா போச்சா?’ என்ற குமுறலுக்கு பதில் இல்லாமல் ஓடி ஒளியவேண்டியிருக்கும்.

ஆவணப் படம் தொடர்பாகச் சொல்லவேண்டுமானால், இந்த ஆவணப்படம் மனதை உலுக்கக்கூடியதாக, உயிரை அறுக்கக்கூடியதாக இல்லை. சாதாரணமாக நாம் பார்த்து பார்த்து மரத்துப் போய்விட்ட, வண்டிகளில் கூட்டம் கூட்டமாக அள்ளிச் செல்லப்படும் மாடுகளையே காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய அரங்கத்தில் பலர் இதனைப் பற்றிப் பேசி, அதற்குப் பிறகு பார்க்கும்போதுகூட ஒரு மெல்லிய பாவம் மட்டுமே தோன்றுகிறது. நாம் மனமும் மூளையும் மழுங்கடிக்கப்பட்டுவிட்ட என்னைப் போன்ற மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியானால் அதை உடைக்கிற உளியின் சக்தியும் அதற்கு இணையான, அதைவிட அதிகமான வலு கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வலு இந்த ஆவணப்படத்தில் இல்லை. ப்ரீச்சிங் டூ தி கன்வர்டட் வகைக்கு மட்டுமே சில உச் உச் த்ஸொ த்ஸொ வரும். மற்றவர்கள் இதனை எளிதாகப் பத்தோடு பதினொன்றாகக் கடப்பார்கள். இப்படிச் சொல்வதால், இந்த ஆவணப் படத்தின் பின்னாலுள்ள உழைப்பை, தியாகத்தை நான் கண்டுகொள்ளவில்லை என்பது அர்த்தமல்ல. இதில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் என் கோடி வணக்கங்கள். ஆனால் உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று மட்டுமே சொல்லவருகிறேன். 

மற்ற சாதிகளின் கருத்துக்களோடு, இது மக்களுக்கான இயக்கம் என்று சொல்ல வைக்கிற வகையிலான ஆவணப்படமே பசுவதைத் தடை குறித்த முக்கியமான ஆவணப்படமாகத் திகழமுடியும். அதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும் என்று நம்புவோம். ஆவணப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

Share