Tag Archive for ரங்கராஜ் பாண்டே

Pink Vs நேர்கொண்ட பார்வை

(ஸ்பாய்லர்ஸ் அஹெட்)

பின்க் திரைப்படத்தின் கருவைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஒரு பெண்ணின் சம்மதத்துடன் மட்டுமே உறவு கொள்ளவேண்டும். பார்க்க இது மிக எளிமையான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பின்க் திரைப்படம் இதில் சில பல நிபந்தனைகளைச் சேர்த்துக்கொண்டே போகிறது. அது காதலியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் உறவு கூடாது என்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், பாலியல் தொழிலாளி கை நீட்டி காசு வாங்கிவிட்டு பின்னர் வேண்டாம் என்று மறுத்தாலும் உறவு கொள்ளக்கூடாது என்கிறது. இந்தக் கடைசி நிபந்தனையை ஒட்டி பின்க் திரைப்படம் வெளியானபோது இந்தியா முழுக்க விவாதம் நடந்தது.

இன்று பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை ஒட்டி இத்திரைப்படம் தமிழிலும் வருவது நல்லது என்று அஜித் நினைத்திருக்கிறார். அஜித் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இப்படி நினைப்பதும் அதை செயல்படுத்துவதும் மிக முக்கியமான விஷயம். ஆனால் எப்போதும் குறுக்கே வந்து நிற்கும் தமிழின் துரதிர்ஷ்டம் இந்தத் திரைப்படத்தையும் விட்டு வைக்கவில்லை. எந்த அளவுக்கு இந்தத் துரதிர்ஷ்டம் அமைத்திருக்கிறது என்றால், ஏன் அஜித்தை பின்க்கைப் பார்த்தார் அல்லது ஏன் பின்க்கை நாம் முன்பே பார்த்தோம் என்ற அளவுக்கு!

ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது என்னவெல்லாம் செய்துவிடக்கூடாது என்பதற்குத் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்கள் உதாரணமாக உள்ளன. சமீபத்திய உதாரணம் இது. அதிலும் ஒரு பெரிய நட்சத்திரம் நடிக்கும்போது சின்ன சின்ன காட்சி முதல் பெரிய காட்சி வரை என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஒப்பிட பின்க் திரைப்படமும் நேர்கொண்ட பார்வையும் மிகச் சிறந்த உதாரணம்.

பின்க் திரைப்படத்தில் அமிதாப் மிகச் சாதாரண வக்கீல். ஆனால் தமிழில் அஜித்தோ அஜித்! எனவே அவர் தோன்றும் காட்சி பின்னால் இருந்து கொஞ்சம் ஸ்டார்-சஸ்பென்ஸுடன் காண்பிக்கப்படுகிறது. மற்ற பெரிய நட்சத்திரங்களின் படத்துடனும் அஜித்தின் மற்ற படங்களுடனும் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை என்பது உண்மைதான். ஆனால் பின்க்-க்கு இது ஒத்துவராது. அதைவிட அடுத்த காட்சியில் அஜித் மருத்துவரைப் பார்க்க காத்திருக்கும்போது அவரை அழைக்கும் உதவியாளர் மிரள்வதெல்லாம் தாங்க முடியாத காட்சி.

அஜித்துக்கு ஒரு காதல் காட்சியும் பாட்டும் பைக் சீனும் சண்டையும் வேண்டும் என்பதற்காக ஜஸ்ட் லைக் தட் சேர்த்திருக்கிறார்கள். இவை மட்டுமே மொத்தம் 20 நிமிடங்களுக்கு மேல் வரும்! பின்க் படத்தில் அமிதாப் உடல் நிலை சரி இல்லாதவர். அவர் மனைவியும் உடல் நிலை சரி இல்லாதவர். ஆனால் நேர்கொண்ட பார்வையில் என்னவெல்லாமோ காண்பித்து அஜித் ‘நான் வாழ வைப்பேன்’ சிவாஜி ரேஞ்சுக்கு தலையைப் பிடித்துக்கொண்டு உடலைக் குலுக்குகிறார். உண்மையில் நல்ல திரைப்படத்தின் ரசிகன் அந்தக் காட்சியோடு தலை தெறிக்க தியேட்டரை விட்டு வெளியே ஓடி இருக்கவேண்டும். ஆனால் நான் சிவாஜி, ரஜினி, கமல், விஜய் எனப் பலரின் இதுபோன்ற திரைப்படங்களைப் பார்த்த தமிழன் என்பதால், என்னதான் ஆகிவிடும் பார்க்கலாம் என்று தொடர்ந்து பார்த்தேன்.

பின்க் திரைப்படத்தின் காட்சிகளை ஒன்றுவிடாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் மழை பின்க் படத்தில் பெய்தால் அதே காட்சியில் நேர்கொண்ட பார்வையிலும் மழை. அந்த அளவுக்கு டிட்டோ. அத்தோடு விட்டிருந்தால் படம் கொஞ்சம் சுமாராகவாவது இருந்திருக்கும். சில காட்சிகளை இவர்களாக யோசித்துச் சேர்த்தும் இருக்கிறார்கள். எங்கெல்லாம் காப்பியோ அங்கெல்லாம் படம் நன்றாக இருப்பது போல ஒரு பிரமை (பிரமைதான்!), இவர்கள் சேர்த்த காட்சிகளில் படம் பல்லிளிக்கிறது.

பின்க் திரைப்படத்தின் வசனங்களை அப்படியே தமிழாக்கி இருக்கிறார்கள். கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். ஹிந்தியில் சப் டைட்டிலுடன் பார்க்கும்போது சரியாகத் தோன்றும் வசனமெல்லாம் தமிழில் கேட்கும்போது இரண்டு மூன்று விதமாகப் புரிந்து தொலைக்கிறது! We should save our boys, not our girls, becuase if we save our boys, then our girls will be safe என்ற உயிர்நாடியான வசனத்தை இவர்கள் மொழிபெயர்த்திருக்கும் விதத்தில் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன். நம் பெண்களை ஆண்களிடமிருந்து காக்கவேண்டும் என்று வருகிறது (என நினைக்கிறேன்!). எப்போதுமே அப்படித்தானே. இந்தப் படம் எதற்கு இதைச் சொல்ல? இப்படி சில நுணுக்கமான விஷயங்களை எல்லாம் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

பின்க் படத்தில் 22 கிமீ தூரத்தை எப்படி 10 நிமிடத்தில் கடக்கமுடியும், வண்டியை 125 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று வரும் வசனத்தை, தமிழுக்கேற்றவாரு மாற்றவேண்டும் என்பதற்காக, 40 கிமீ தூரத்தை 10 நிமிடத்தில் எப்படி கடக்க முடியும், 425 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று கேட்கிறார்கள். எல்லாவற்றிலும் தமிழனுக்கு எக்ஸ்ட்ரா தேவை என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்திருக்கிறார். (தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் தான் இந்தப் படத்தின் இயக்குநர் என்பதை நம்பவே முடியவில்லை!)

அஜித்தைப் பார்த்து வில்லன் நீதிமன்றத்தில் ஒரு கட்டத்தில் நீ என்று பேசுகிறார். அஜித்தும் பதிலுக்கு அவரை நீ என்கிறார். ஆனால் பின்க்கில் அமிதாப் தன் குரல் உயராமல் தொடர்ந்து மரியாதையுடனேயே பேசுகிறார். பின்க் படத்தில் அமிதாப் கதாநாயகியைப் பார்த்து Be careful என்கிறார். அர்த்தம் பொதிந்த வசனம் அது. ஆனால் அஜித்தோ ‘யோசிச்சி நட, யோசிச்சிக்கிட்டே நடக்காத’ என்ற பன்ச்சுடன் அறிமுகமாகிறார்.

ஒரு நல்ல திரைப்படத்தை, முக்கியமான திரைப்படத்தை, கமர்ஷியலாகவும் வெற்றி பெற வைத்துக் காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எத்தனை தடவை மூக்குடைபடுவார்கள் எனத் தெரியவில்லை. கழுதையாகவும் இல்லாமல் புலியாகவும் இல்லாமல் இவர்கள் நம்மைப் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.

நீதிமன்றக் காட்சிக்கு முன்னர் ரங்கராஜ் பாண்டே தன் கட்சிக்காரருக்கு அறிவுரை சொல்வது போலவும் அஜித்தை ரேக்கச் சொல்வது போலவும் வருகிறது. ஹிந்தியில் இந்தக் கண்றாவியெல்லாம் கிடையாது.

வித்யா பாலன் ஏன் வந்தார் என்று இன்னும் யாருக்கும் புரியவில்லை. எத்தனை வருடம் ஆனாலும் யாருக்கும் புரியப் போவதுமில்லை. அதிலும் அஜித் பொதுசேவகராக நீதிமன்றத்துக்குள் நுழையும்போது ஒருவர் போன் செய்கிறார். ஏன் செய்கிறார் என்று தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், இரண்டாம் பாகத்தில் சொல்வார்கள் என்று சொல்லிவிட்டால் என்னாவது என்ற அச்சத்தில் கமுக்கமாக இருந்துவிட்டேன்.

ரங்கராஜ் பாண்டே இங்கேயும் கேள்வியாகக் கேட்கிறார். ஒரே ஒரு வேண்டுகோள்தான் அவரிடம், ப்ளீஸ், வேண்டாம் இந்த விஷப் பரிட்சை. தாங்க முடியவில்லை. பின்க் படத்தில் இதே பாத்திரத்தில் வரும் அந்த நடிகரின் நடிப்பு எத்தனை யதார்த்தமாக இருக்கும்! ரங்கராஜ் பாண்டேவோ என் கேள்விக்கு என்ன பதில் ரேஞ்சிலேயே பேசுகிறார்.

அமிதாப்பின் நடிப்பையும் அஜித்தின் ‘நடிப்பையும்’ பற்றிப் பேசப்போவதில்லை. அது பாவக்கணக்கில் சேர்ந்துவிடும்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிக நன்றாக நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் தப்ஸீ – வாய்ப்பே இல்லை. வேற லெவல் அது.

இதே போல் ஒவ்வொன்றையும் ஒப்பிடலாம். பெண் போலிஸ் தமிழில் பரவாயில்லாமல் நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் அவர் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். வில்லனாக வரும் நடிகர்கள் இரண்டு மொழிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் தமிழ்த் திரையுலகம் இந்தத் திரைப்படத்தைக் கையாளும் அளவுக்கு வயதுக்கு வரவில்லை. எதையுமே உரக்கவும் ஒரு நிலைப்பாடு எடுத்தும் கருப்பு வெள்ளையாகவும் மட்டுமே இவர்களுக்கு (நமக்கு!) அணுகத் தெரியும். இடைப்பட்ட நுணுக்கங்கள், கதாபாத்திரத்தின் தன்மையே முக்கியம் என்பதெல்லாம் இன்னும் இவர்களுக்குப் பழக்கப்படவில்லை. அதுவரை பின்க் படத்தைப் பார்த்துவிட்டு, பாராட்டிவிட்டு, அதை நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டும் என்று அஜித் போன்றவர்கள் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டால் புண்ணியமாகப் போகும். அஜித் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது, நல்ல ரசனையாளராக மட்டும் இருந்தாலும் போதாது, அதை அப்படியே எப்படித் தமிழில் கொண்டு வருவது என்றும் யோசித்திருக்கவேண்டும். அங்கே ஒட்டுமொத்தமாக அஜித் சறுக்கி இருக்கிறார்.

நன்றி: ஒரே இந்தியா நியூஸ் வலைத்தளம்

Share

கௌதமி – ரங்கராஜ் பாண்டே நேர்காணல்

ரங்கராஜ் பாண்டே கௌதமியுடன் நிகழ்த்திய நேர்காணல் (கேள்விக்கு என்ன பதில், தந்தி டிவி) படு திராபையாக இருந்தது. நேர விரயம். கௌதமிக்குப் பேச எந்த விஷயமும் இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது. கமல் மீது வைத்த பெரிய குற்றச்சாட்டைப் பற்றிப் பேசாமல் தவிர்த்தார் கௌதமி. 40 நிமிட நேர்காணலில் கௌதமி சொன்னதில் எதுவுமே முக்கியமானதாக இல்லை. மார்பகப் புற்றுநோயை எதிர்கொண்டு வென்றவர் என்ற ஒற்றை (முக்கியமான) விஷயத்தைத் தாண்டி கௌதமி எதையும் சொல்லவில்லை. ஏன் இந்தப் பேட்டி என்பது புரியவில்லை.

இந்தக் கொடுமைகளையெல்லாம் விடப் பெரிய கொடுமை, ரங்கராஜ் பாண்டே கௌதமியை அறிமுகம் செய்தபோது சொன்னது – போராளி. கௌதமி ஏன் போராளி ஆனார் என்பது பாண்டேவுக்கு மட்டுமே தெரியும் என நினைக்கிறேன். புற்றுநோயை எதிர்கொண்டு வென்றதால் போராளி என்று சொன்னாரா எனத் தெரியவில்லை. நம் ஊரில் போராளி என்பதற்கு நிகழ்கால அர்த்தம் ஒன்று உள்ளது. அப்படி இருக்கும்போது கௌதமியை சர்வ சாதாரணமாக போராளி என்றால் அநியாயம்.

40 நிமிடம் கேட்டது (எம்பி3) பெரிய நேர விரயம்.

இன்னும் நான் கேட்கவேண்டிய பேட்டிகள்: நிர்மலா சீதாராமன் – பாண்டே நேர்காணல், சந்திரலேகா ஐஏஎஸ் – ஹரிஹரன் நேர்காணல்

Share

சாரு ஹாஸன்: கமல் ஹாசனின் அனுகூலச் சத்ரு

சாருஹாசனின் ‘கேள்விக்கு என்ன பதில்’ பேட்டியைப் பார்த்தேன். அனுகூலச் சத்ரு என்று கமல் ரசிகைகள் அலறியதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 🙂

சாருஹாஸன் ஃபேஸ்புக்கில் எழுத ஆரம்பித்ததும் முதல் சில இடுகைகளைப் பார்த்து, இவர் கொஞ்சம் நல்லா எழுதுறாரே என்று மதி மயங்கி அவரைப் பின்தொடர்ந்தேன். பெரிய தவறுதான், ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பு என்பதால் அப்போது வயது இரண்டு எனக்குக் குறைவு என்பதால் நேர்ந்துவிட்ட பிழை என யூகிக்கிறேன். போகப் போகத்தான் புரிந்தது, கமல் எழுதும் பத்து வார்த்தைகளில் பத்து புரியாது என்றால், சாருஹாசன் எழுதும் பத்து வார்த்தைகளில் பதினொன்று புரியாதென்பது. அப்படியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு அவரைப் பின்தொடர்வதை நிறுத்தினேன். பின்னர் ஒரு வார இதழில் (குங்குமமா குமுதமா?!) சாரு ஹாஸன் தொடர் எழுதினார். கொஞ்சம் மிரண்டு போய் சில வாரங்கள் படித்தேன். எடிட்டர்களின் கைவண்ணத்தில் அப்பத்திகள் மிக அழகாகவே வெளிவந்தன. ஹாசன்களின்தமிழ்த்தனம் அதில் இல்லை. சட்டெனப் புரிந்தது.

இந்தப் பின்னணியில் சாரு ஹாஸன் பேட்டி அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் பார்த்தேன், மிக எளிமையாக தன் மனதுக்குப் பட்டதை மிக நேரடியாகப் பேசினார். சில அதிர்ச்சி தந்தார். மோடியைப் பற்றி அவர் சொன்னவை, நான் கொஞ்சமும் எதிர்பாராதவை. திராவிடக் கட்சிகளுக்கு அவர் தந்த அறை, மோடியைப் பற்றி அவர் சொன்னதுக்கும் மேலே! பிராமணர் என்பதால் கமல் முதல்வராக முடியாது என்றதும், கமலும் ரஜினியும் சேர்ந்தாலே 10% வாக்குதான் கிடைக்கும் என்றதும் இன்னொரு அதிர்ச்சி. ரஜினி தனியாக வந்தால் முதல்வர் ஆகிவிடுவார், கமலுடன் சேர்ந்தால் 10% வாக்கு மட்டுமே மொத்தமாகக் கிடைக்கும் என்று அவர் சொல்வதாக எனக்குத் தோதாகப் புரிந்துகொண்டேன். 🙂 விஜய்காந்த் அதிமுகவில் சேர்ந்து அதிமுகவைக் கைப்பற்றவேண்டும் என்றதெல்லாம் அரசியல் திரைப்பட வகை.

ரஜினி எதிர் கமல் என்ற கேள்விக்கு, ரஜினியை வணங்குகிறார்கள் மக்கள் என்றார். மிகத் தெளிவாக இரண்டு மூன்று முறை சொன்னார். இதற்கு யாரும் எதிர்பார்க்காத அர்த்தம் ஒன்றை பாண்டே உருவாக்கி, “கமல் அரசியலுக்கு வரணும்னு மக்கள் நினைக்கிறாங்கன்னு நீங்க சொல்றதா புரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டார். இந்த அர்த்தம் எப்படி பாண்டேவுக்கு வந்தது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.

கமலா ரஜினியா என்ற கேள்விக்கு கமலின் அண்ணனால் கூட உறுதியாக கமல் என்று சொல்லமுடியவில்லை. இத்தனைக்கும் ஒரே கொள்கை, ஒரே நோக்கம். அப்படியானால் கமலுக்குக் கிடைக்கப்போகும் ஓட்டுகளை எண்ணிக்கொள்ளலாம். 🙂

ரஜினிக்கான ஆதரவு என்பது, ‘திரைப்படம் பார்க்கும் முப்பது சதவீதப் பெண்கள் கமலை விரும்புவதால் அதில் எரிச்சல் படும் 70% ஆண்கள் தந்த ஆதரவு’ என்பது கொஞ்சம் புதிய கருத்துதான் என்றாலும், என்னமோ ரஜினியை நேரடியாக யாருக்கும் பிடிக்காது என்பதாகவும், கமலை விரும்பும் பெண்களை வெறுக்கும் ஆண்களுக்கு மட்டுமே பிடிக்கும் என்ற எண்ணத்தைத் தருவதாகவும் இருந்தது. இதெல்லாம் கமல் இளைஞனாக மேலே எழுந்த காலத்தில் கொஞ்சூண்டுகொஞ்சம் உண்மையாக இருந்திருக்கலாம். கமல் பெரிய நடிகர் என்ற பெயர் பெற்ற காலத்தில் அவரைப் பிடிக்காத, அவர் திரைப்படத்தைக் கண்டாலே அலறி ஓடிய பெண்களே அதிகம். அருகிருந்து கண்ட உண்மை இது. #வெரிஃபைட். 🙂

பிராமணக் குலத்தில் பிறந்ததால் கமலுக்கு வாய்ப்புக் கிடைக்காது என்று சாரு ஹாஸன் சொன்னது உண்மைதான். இதுவும் கமலின் பின்னடைவுக்கு ஒரு காரணம், ஆனால் மிகச்சிறிய காரணம் மட்டுமே. கருணாநிதி ஒருவேளை மோடியை ஆதரித்தால் சகித்துக்கொள்பவர்கள், கமல் மோடியை ஒருவேளை ஆதரித்தால் சரியாக நூலுக்குப் போய்த்தான் நிற்பார்கள். தமிழ்நாட்டின் மரபு அப்படி. அதையே சாரு ஹாஸன் சொன்னார்.

சுவாரஸ்யமான பேட்டி. கமல் அரசியலுக்கு வந்தால் வெல்வார் என்பதை அவர் குடும்பமும் நம்பவில்லை என்பது நல்ல விஷயம். அப்படியே ஆகட்டும்.

பின்குறிப்பு 1: திமுக போராளிகள் இன்னுமா சாரு ஹாஸனை விட்டு வைத்திருக்கிறார்கள்?

பின்குறிப்பு 2: முதல் வாரத்திலேயே தான் எழுத நினைத்திருக்கும் அத்தனையையும் சொல்ல முயன்று, கமல் ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கியிருக்கும் தொடரை தொடர்ச்சியாக வாசகர்கள் வாசித்தால், கமலுக்குக் கிடைக்கப்போகும் பத்து சதவீத வாக்குகளிலும் பத்து சதவீதம் மட்டுமே கமலுக்குக் கிடைக்கும் என்று யாராவது அவருக்கு எடுத்துச் சொல்வது நல்லது.

Share

நீட்: திருமாவளனுடனான பாண்டேவின் நேர்காணல்

பாண்டே உடனான திருமாவளவனின் பேட்டி பார்த்தேன். (MP3 கேட்டேன்!) நீட் பிரச்சினை தொடர்பான பேட்டி. ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்த பாண்டேவின் குரல் ஏற்படுத்திய ஒரு சலிப்பைத் தொடர்ந்து அவரது குரலையே கொஞ்சம் நாளாகக் கேட்கவில்லை. அச்சலிப்பைத் தாண்டிவர எனக்கு இத்தனை மாதங்கள் ஆகி இருக்கின்றன.

இப்பேட்டி மிக அட்டகாசமான பேட்டி என்றே சொல்லவேண்டும். தெளிவான கேள்விகளை முன்வைத்தார் பாண்டே. சுற்றிச் சுற்றி தன் முடிவுகளுக்கே திருமாவளவனைக் கொண்டு வந்தார். நீட்டை நான்கே கேள்விகளுக்குள் அடக்கினார்.

புள்ளிவிவரங்களின்படி,

1. நீட் தேர்வால் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எவ்விதப் பங்கமும் வரவில்லை.

2. நீட் தேர்வினால் மாநிலப் பாடத்திட்டத்தின்படிப் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்படவில்லை. அதாவது 62% பேர் வென்றிருக்கிறார்கள்.

3. நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் இடம் கிடைக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க குற்றச்சாட்டு அல்ல, ஏனென்றால் கடந்த பத்து வருடங்களில் அரசுப் பள்ளியில் படித்துவிட்டு மருத்துவம் சேர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கையே 312 பேர் மட்டுமே.

4. நீட் தேர்வில் பாவப்பட்ட அனிதாவின் இடம் இன்னொரு தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கே சென்றுள்ளது.

இவை அனைத்தையும் திருமாவளவன் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் திருமாவளவன், சமூக நீதிப் பிரச்சினைக்காக நீட்டை எதிர்க்கவே இல்லை என்றொரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். 🙂

நேற்று வந்த புள்ளிவிவரத்தின்படி (உண்மையாக இருக்கும்பட்சத்தில்) நீட் தேர்வால் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதும் பொய்யாகி இருக்கிறது.

இப்போதைக்கு நீட் எதிர்ப்பாளர்களிடம் இருக்கும் அவர்கள்தரப்பு நியாயங்கள் இவையே:

1. மாநில அரசின் உரிமை பறிபோகிறது. (இதற்கு பாண்டே, கடந்த 20 வருடங்களாகவே கல்வி பொதுப்பட்டியலில்தானே உள்ளது என்றார்.)

2. கோச்சிங் மூலம் சேர்வார்கள். எனவே பணம் உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கும். (ப்ளஸ் டூவிலும் இதுதான் நடக்கிறது. எதிர்காலத்தில் நீட் தேர்விலும் நாமக்கல் வகையறா மாணவர்கள் இதேபோல் கோச்சிங் மூலம் நிச்சயம் அதிகம் வெல்வார்கள் என்பதும் உண்மைதான். இது ஒரு பிரச்சினைதான். ஆனால் இதை ஒன்றும் செய்யமுடியாது என்றே தோன்றுகிறது.)

3. நீட் தேர்வை ஒட்டியே மாநிலத்தின் பாடத்திட்டம் அமைக்கப்படும். இதனால் தமிழ்நாட்டின் பண்பாட்டோடு ஒட்டிய பாடப்பகுதிகள் புறக்கணிக்கப்படும். (தமிழ்ப்பண்பாடு புறக்கணிக்கப்படும் என்பதை நான் நிச்சயம் ஏற்கமாட்டேன். இது ஒருக்காலும் நடக்காது என்றே நினைக்கிறேன்.)

இது போக திருமாவளவன் குறிப்பிட்ட ஒரு விஷயம், சி பி எஸ் சி பாடத்திட்டத்தை ஒட்டியே இனி மாநிலப் பாடத்திட்டமும் உருவாக்கப்படும் என்று சொன்னது. நீட் தேர்வால் இந்நிலை வரும் என்றார். ஆனால் உண்மையில் இப்போதே அப்படித்தான் உள்ளது. இதற்கு முன்பும் அப்படித்தான் இருந்தது. எப்போதுமே மாநிலப் பாடத்திட்டம் மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை பாடத்திட்டத்தை மேம்படுத்தும்போதும் மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டிக் கொஞ்சம் சேர்த்தும் கொஞ்சம் நீக்கியும் ஒரு பாடத்திட்டத்தை வரையறுப்பார்கள். மாநிலப் பாடத்திட்டத்தைப் பொருத்தவரை பாடத்திட்டத்தின் தரம் உயர்த்த, ஒரு வகுப்புப் பாடத்தை அதற்கு முந்தைய வகுப்புக்குக் கொண்டுபோவார்கள். அதாவது 8ம் வகுப்பில் உள்ள பாடத்தில் சிலவற்றை 7ம் வகுப்புக்குக் கொண்டு போவார்கள். இப்படித்தான் இவர்களது பாடத்திட்ட வரையறை – என் பார்வையில் – இருந்துள்ளது. எனவே இனி மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டிச் செல்வார்கள் என்பது ஒரு கற்பனையே. ஏனென்றால் ஏற்கெனவே அப்படித்தான் உள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்திலும் புத்தகத்திலும் பெரிய குறைகள் எல்லாம் இல்லை. (இந்த சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது வந்த முதல் புத்தகத்தில் குறைகள் இருந்தன, அவை பின்னர் களையப்பட்டன.) பாடங்களை+ நடத்தும் விதத்தில்தான் பள்ளிகள் மேம்படவேண்டும். 9ம் வகுப்பை ஏறக்கட்டிவிட்டு பத்தாம் வகுப்பு நடத்துவது, பதினோராம் வகுப்புப் பாடத்தை தூக்கி எறிந்துவிட்டு பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை நடத்துவது, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பள்ளி நடத்துவது, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை என்கிற ஒன்றை ஒழித்துக்கட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, ஒழுங்காகப் பாடத்தை நடத்தி, புரிய வைத்து அதன்படிக் கேள்விகள் கேட்டுத் தேர்வு நடத்தினாலே போதும்.

அத்துடன் வெறும் நீட் தேர்வு மூலம் வரும் மதிப்பெண்கள் மட்டுமே என்றில்லாமல், பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களையும் கட் ஆஃபில் சேர்ப்பதும் நல்லது. என்னுடைய தனிப்பட்ட விருப்பம், இந்த கட் ஆஃபில் குறைந்த அளவிலாவது ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களைச் சேர்ப்பது. இல்லையென்றால் ஆங்கிலம் மற்றும் தமிழைக் கடனுக்கெனப் படிப்பார்கள். இப்படித்தான் நான் படிக்கும் காலத்திலேயே இருந்தது. இதையும் மாற்றவேண்டும்.

திருமாவளவன் தன் நிலைக்கேற்ற பதிலைப் பொறுமையாகச் சொன்னார். பொய், தேவையற்ற காட்டுக்கத்தல், எதையாவது சொல்லிவிட்டுப் போவது போன்ற வீரமணித்தனங்கள் எல்லாம் இல்லாமல் கேள்விகளின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு கையாண்டது பாராட்டத்தக்கது. நிச்சயம் பார்க்கவேண்டிய நேர்காணல்.

Share