Tag Archive for ரஜினி

துபாய் பாபா

பாபா 2002 ஆகஸ்ட் 15ல் இந்தியாவில் வெளியானது. அந்த மே மாதத்தில் நான் துபாயில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்திருந்தேன். பாபா பாடல்கள் வெளியானதும் பாபாவின் பாடல்களை மனப்பாடம் ஆகும் அளவுக்குக் கேட்டேன். அப்போதுதான் எனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் மாதிரி செய்து வைத்திருந்தார்கள். அங்கே இருந்த ஐம்பது நாள்களும் ஒரு நாள் விடாமல் அவளுடதான் ஊர் சுற்றல். மீண்டும் துபாய் திரும்ப வேண்டும். திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குக் காரில் போனோம். ரிபீட் மோடில் பாபா பாடல்கள். மாயா மாயா பாடலும், பாபா ஒரு கிச்சு தா பாடலும் ராஜ்யமா பாடலும் எனக்கு மிகவும் பிடித்துப் போயின.

துபாயில் ஆகஸ்ட் 22 வாக்கில்தான் பாபா வெளியானது. திருவோணத்துக்கு. முதல் நாள் முதல் ஷோ பார்க்க வாய்ப்பில்லை. வேலைக்குப் போயாக வேண்டும். மாலைக் காட்சிக்குப் போக வேண்டும் என்றால் கொஞ்சம் சீக்கிரமே கிளம்பினால்தான் டிக்கட் கிடைக்கும். எப்போதும் என்னுடன் படம் பார்க்க வரும் மலையாளி நண்பன் சந்தோஷ் திருவோணம் என்பதால் படத்துக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டான். எப்படியாவது சரியான நேரத்துக்குப் போகவேண்டும், டிக்கட் கிடைக்கவேண்டும் என்கிற என் பரிதவிப்பைப் பார்த்த டாக்டர் கருண் (தமிழர்) என்னை சரியான நேரத்தில் அவரது காரிலேயே தியேட்டரில் டிராப் செய்வதாக வாக்களித்தார். செய்யவும் செய்தார்.

டிக்கட் கிடைத்தது. படம் பார்க்க தியேட்டருக்குள் நுழைந்தால் பாதிக்கு மேல் மலையாளிகள். திருவோணம் என்பதால் கொண்டாட்டத்திற்கு வேறு படங்கள் இல்லை என்பதால் இப்படத்துக்கு வந்ததாகப் புலம்பினார்கள் சிலர். படத்தில் சினிமா சினிமா பாடலுக்கு தியேட்டரே அதிர்ந்தது. பல மலையாளிகள் எரிச்சலுடன் அமர்ந்திருந்தார்கள். நான் இந்தியாவில் வாழ முடியாத ஏக்கத்தை இந்தப் படத்தில் வந்த கை தட்டல்கள் கொஞ்சம் குறைத்தன. எங்கேயோ ரத்னா அல்லது பார்வதி தியேட்டரில் பார்க்கும் ஒரு உணர்வு. இப்போது நினைத்தாலும் இந்த நினைவு ஒரு சுக அனுபவம்தான்.

இடைவேளை வரை படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இடைவேளைக்குப் பிறகு அலை பாய்ந்தது. படம் முடிந்து போகும்போது பல இஸ்லாமியர்கள் மிகவும் ஆச்சரியமாக, இத்தனை மாய தந்திரம் உள்ள ஒரு படத்தை எப்படி வளைகுடாவில் அனுமதித்தார்கள் என்று பேசியபடி போனார்கள்.

படம் ஓடவில்லை. இந்தியாவிலும் ஃப்ளாப் என்றே நண்பர்கள் சொன்னார்கள். இருக்கலாம். பாபாவில் ரஜினியின் கெட்டப் பலருக்குப் பிடிக்காது. எனக்குப் பிடித்திருந்தது. பாடல்கள் பலருக்குப் பிடிக்கவில்லை, எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை முன்னேறியது போலத் தோன்றியது இந்தப் படத்தில்தான். காதலி எல்லாம் தேவையில்லை என்று ரஜினி நடித்தது அந்த நேரத்தில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இடைவேளைக்குப் பிறகு வந்த தந்த்ரா காட்சிகளில் இயக்குநர் செய்த பெரிய தவறு, ரஜினி படம்னா என்ன வேணா பாப்பாங்க என்கிற திமிர்தான். ஓம்புரியை ஹிந்தியில் பேச விட்டு அதற்குத் தமிழில் வசனம் பேசி டப்பிங் தெலுங்கு படம் போல ஆக்கி இருந்தார்கள். ஆனாலும் ஒரு நாஸ்டாஜியாவாக துபாய் பாபா எப்போதும் எனக்கு மணக்கத்தான் செய்கிறது. கூடவே, பேசி வைத்த பெண்ணுடன் ஊர் சுற்றிய நினைவுகளும்.

பின்குறிப்பு: இதில் இன்னொரு வரலாற்றுக் குறிப்பும் இருக்கிறது. பாபா திரைப்படம் வருவதற்கு முன்பே இதில் வரும் அசாத்திய ஜாதகம் சம்பந்தப்பட்ட ஒரு கதையை நான் என் கைப்பட அப்போதைய டைரி ஒன்றில் எழுதி இருந்தேன். இதைப் பற்றி நான் மரத்தடி யாஹூ குழுமத்தில் சொன்ன போது, செகண்ட் ஷோ பாத்துட்டு தூக்க கலக்கத்துல அதையே நீ எழுதி வெச்சிருப்ப என்று கேஸை முடித்து வைத்துவிட்டார்கள்!

Share

ஆர்.கே.நகர் திரைப்படம்

ஆர்.கே.நகர் – பொருட்படுத்தத் தகாத ஒரு படம். முழுமையாகப் பார்ப்பதே பெரிய கொடுமை. இப்படிப் படம் எடுக்கும் லட்சணத்தில் நம் இயக்குநர்களுக்குத் தங்கள் திரைப்படங்களில் குறியீட்டை வைக்கவும், அரசியலைக் கிண்டல் செய்யவும் மட்டும் ஆசை வந்துவிடுகிறது. மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டுக் கதை வசனம் எழுதுகிறார்கள்.

ஆர்.கே. நகர் என்ற பெயரே நமக்குச் சொல்லும், இது அரசியல் படமாக இருந்தால் எதைப் பற்றிப் பேசவேண்டும், எந்தக் கட்சிகளைப் பற்றிப் பேசவேண்டும் என்று. இந்தப் படத்தில் அதைப் பற்றிய மூச்சே இல்லை. பின்னணியாகப் பள்ளி சிறுவர்களின் சீரழிவே கதை. ஆனால் காட்டப்படும் காட்சிகள் எல்லாம் அரசியல் தொடர்பானவை. சந்தான பாரதி ஒரு கவுன்சிலர். செல்வாக்கு மிக்க கவுன்சிலர். தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க கவுசின்லர், அடிதடி கவுன்சிலர், ரௌடி கவுன்சிலர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கமுடியும்? அதைக்கூட விடுங்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக நிச்சயம் இருக்க முடியாது? பாஜக காரராக இருக்க வாய்ப்பில்லைதானே? இந்தப் படத்தில் வரும் சந்தான பாரதி நெற்றியில் குங்குமத் திலகமிட்டு வருகிறார். காவி வேட்டி கட்டி வருகிறார். எந்தக் கழக அரசியல்வாதி காவி வேட்டி கட்டிக் கொண்டு திரிகிறார்? இவர்களுக்குக் கழக அரசியல்வாதிகளைக் காண்பிக்க பயம்.

அத்தோடு நிற்கவில்லை. சந்தான பாரதியும் வாஜ்பேயியும் இருக்கும் ஒரு புகைப்படம் ஒரு காட்சியில் பின்னணியில் வருகிறது. குறியீடாம்! இதிலும் திருப்தி அடையவில்லை இயக்குநர் சரவணன் ராஜன். இந்த சந்தான பாரதி கோவில் நிலத்தை ஆட்டையைப் போடுகிறார். தமிழ்நாட்டில் யார் கோவில் இடத்தை ஆட்டையைப் போட்டிருப்பவர்கள்? யார் தொடர்ந்து 50 வருடங்களாக ஆட்சியில் இருப்பவர்கள்? இயக்குநர் பச்சைக் குழந்தை என்பதால் இதெல்லாம் தெரியாது. கைச்சூப்பிக்கொண்டு, அப்படியே மக்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்திருக்கிறார். அப்படியும் திருப்தி வரவில்லை குழந்தை இயக்குநருக்கு. கோவில் சொத்தை ஆட்டையைப் போடுவதைத் தடுக்கும் ஒரு கட்சியின் உதவிக்குப் போகிறார் கோவில் பட்டர். அவருக்கு உதவுபவர்கள் பக்தியில் நம்பிக்கையில்லாத ஆனால் நல்லவர்களாம்!

இந்த இயக்குநருக்கும் இதன் தயாரிப்பாளரான வெங்கட் பிரபுவுக்கும் ஏன் ரஜினி மேல் இத்தனை காண்டு, வெறுப்பு எனத் தெரியவில்லை. சந்தான பாரதியை ரஜினியின் கதாபாத்திரமாக்கி திட்டித் தீர்க்கிறார்கள். போர் வரும்போது வருவேன் என்ற வசனத்தை சந்தான பாரதி சொல்கிறார். சந்தான பாரதி கவுன்சிலர் என்றால் ரஜினியை எப்படித் திட்டுவது என்பதற்காகவே சந்தான பாரதியை ஒரு நடிகர் என்று காட்டி இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்று காட்டினால் கவுன்சிலராகக் காட்ட முடியாதே என்பதற்காக சின்ன நடிகர் என்று காட்டிவிட்டார்கள். எவ்வளவு கற்பனைப் பஞ்சம் பாருங்கள். அதாவது வசனமும் காட்சிகளும் மட்டும் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கானவை! அவரோ ஒரு கவுன்சிலர்! ஒரு காட்சியில் சந்தான பாரதி ரஜினியுடன் இருக்கும் படம் வருகிறது. அதாவது சந்தான பாரதியும் வாஜ்பேயியும் புகைப்படத்தில் வரும் அதே காட்சியில் இந்த சந்தானபாரதி – ரஜினி படமும் அதற்கு இணையாக வருகிறது. குறியீட்டுக்குள் குறியீட்டுக்குள் குறியீடாம். இதில் சந்தான பாரதியை எந்திரன் போல கிராஃபிக்ஸ் செய்து ஃப்ளக்ஸ் எல்லாம் பின்னணியில் குறியீடாக வருகிறது. இரண்டு முறை ‘நீ என்ன எம்ஜியாரா?’ என்ற வசனம் வருகிறது.

ஒழுங்காக ஒரு படம் எடுக்க முடியவில்லை. ஆக்ரோஷமான அரசியல் சட்டையர் எடுக்க வக்கில்லை. தமிழ்நாட்டில் கோலோச்சும் கட்சிகளை விமர்சித்து, தாக்கி, தீவிரமான அரசியல் படம் எடுக்க துணிவில்லை. ஆனால் வாய் மட்டும் இருக்கிறது இவர்களுக்கு.

Share

தர்பார் – திரை விமர்சனம்

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி ஒரு வருடம் கழிந்த நிலையில், அவர் மீதிருந்த தீவிரமான ஆதரவும் வெறுப்பும் கடந்த ஒரு வருட கால இடைவெளியில் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுவிட்ட நிலையில் வந்திருக்கிறது தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் பொதுவாக நல்ல கமர்ஷியல் படங்களை எடுப்பதில் பெயர்பெற்றவர். இன்றைய நிலையில் வெளிப்படையாக ரசிக்கத்தக்க, எவ்வித அரசியலும் அற்ற கமர்ஷியல் படங்கள் வருவது அரிதாகிவிட்ட சூழலில், ரஜினியும் ஏ.ஆர். முருகதாஸும் இணைவது கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தத்தான் செய்திருந்தது. திரைப்படத்தை தங்கள் அரசியல் கருத்துகளுக்குப் பயன்படுத்தும் வெளிப்படையான இயக்குநர்களின் படத்தில் ரஜினி நடிக்கும்போது வெளிப்படும் அரசியல் கருத்துகளை ரஜினியின் அரசியல் கருத்துகாகக் கொள்ளக்கூடாது என்பது ஒருவித சமாளிப்பு மட்டுமே. உண்மையில் இது கொஞ்சம் விவரமான சமாளிப்பு என்றே சொல்லவேண்டும். ரஜினி வெறும் நடிகராக மட்டுமே இருந்து, இயக்குநர்களும் வெறும் இயக்குநர்களாக மட்டுமே இருந்தால் இக்கருத்தை ஒட்டுமொத்தமாகவே ஏற்றுக்கொண்டு விடலாம். ஆனால் அப்படி இல்லாத ஒரு நிலையில் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினியின் காலா வருவதற்கு முன்பு ரஜினி தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாகப் பேசிய பேச்சு கொடுத்த எதிர்வினை, அனைத்து ‘முற்போக்காளர்களையும்’ ரஜினிக்கு எதிராகப் பேச வைத்தது. ஆனால் படமோ அப்பட்டமான ஹிந்துத்துவ எதிர்ப்புத் திரைப்படம். உடனே தங்கள் நிலைப்பாட்டை ரஞ்சித்தை முன்வைத்து காலா திரைப்படத்துக்காக மட்டும் மாற்றிக்கொண்டார்கள் ‘முற்போக்காளர்கள்.’ அதாவது தங்கள் வசதிப்படி இருந்தார்கள்.

இன்று ஒட்டுமொத்த திரைப்பட உலகமும் ஹிந்து மற்றும் ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்கள் கையில் சிக்கிக்கொண்டிருக்கிறது. முதலில் இரண்டு திரைப்படங்களை அப்பாவிப் பூனைகளாக எடுக்கும் இயக்குநர்கள் திடீரென்று ஒரு அரசியல் கருத்தோடு ஒரு படத்தை எடுக்கிறார்கள். அல்லது அரசியல் கருத்து சொல்கிறார்கள். இவர்கள் இப்படிச் செய்யக்கூடாது என்பதல்ல. ஆனால் இவர்கள் செய்யும் விஷயங்கள் எல்லாம் ஹிந்து மதத்துக்கு எதிரான அரசியல் என்பதாக மட்டுமே இருக்கிறது. மறந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியோ மதமாற்ற விஷயங்கள் குறித்தோ ஒரு மாற்றுக் கருத்தைக் கூட வைத்துவிடமாட்டார்கள். இந்தச் சூழலுக்கு ரஜினியும் பலியானார். காலாவைத் தொடர்ந்து வெளிவந்த பேட்ட படத்திலும் இந்த ஹிந்துத்துவ எதிர்ப்பு வெளிப்படையாகவே முன் வைக்கப்பட்டது. அதன் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் முதலிரண்டு படங்களை நல்ல இயக்குநராகத் தந்தவர், பேட்ட படத்தை ரஜினியின் ரசிகராகத் தந்தவர், இன்று சி ஏ ஏ (தேசியக் குடியுரிமை சட்டத் திருத்தம்) தொடர்பாக திடீரென்று ஒரு கருத்தை முன்வைக்கிறார். இப்போது அவரது படங்களை நாம் வெறும் திரைப்படங்களாக அணுக முடியாது. அணுகக் கூடாது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

இதை ஏன் தர்பார் திரைப்படத்தின் போது பேசவேண்டும்? ஏனென்றால் ஒரு திரைப்படத்தை வைத்து அந்தத் திரைப்படத்தை மட்டுமே அணுகமுடியும் என்று சொல்வதற்கும், இனி வரும் திரைப்படங்களில் இந்தத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் யார் வசம் சிக்குவார்கள் என்பதைக் கணிக்க முடியாது என்று சொல்வதற்கும்தான். அப்படி இருக்கிறது நிலைமை.

தர்பார் திரைப்படம் வெளிப்படையாக மத அரசியலைப் பேசவில்லை. ஆனால் நுணுக்கமாக ஒரு விஷயத்தை மெல்லத் தாண்டிப் போகிறது. தாண்டி போவதன் நோக்கம், பயம் மட்டுமே. வேறு எந்த வகையிலும் ஹிந்து மத அரசியலைப் பழிக்கவேண்டும் என்பதற்காகவோ, பிற அரசியல் இயக்குநர்கள் செய்வது போல ஹிந்துக்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்ல. வெளிப்படையாக மத அரசியலைப் பேசவில்லை என்பது தரும் நிம்மதியுடன், நுணுக்கமாக அது தாண்டிப் போகும் விஷயத்தையும் நாம் பேசத்தான் வேண்டும். அதே சமயம் தர்பார் திரைப்படம் மிக தைரியமாக வெளிப்படையாக காவல்துறையை அங்குலம் அங்குலமாக ஆதரிக்கிறது. இன்றைய நிலையில் ஹைதராபாத் என்கவுண்டரைப் பொருத்து மக்களின் மனநிலையில் என்கவுண்ட்டர்களுக்கு ஆதரவான மனநிலை இருப்பதால் தப்பித்தது. இல்லையென்றால் இப்படம் வேறு மாதிரியான எதிர்வினைகளைப் பெற்றிருக்கக்கூடும். எவ்வித விசாரணையும் இல்லாத என்கவுண்ட்டர்களை, ஹைதராபாத் என்கவுண்ட்டர்கள் உட்பட, நான் ஆதரிக்கவில்லை. சட்டரீதியாகத் தரப்படும் தண்டனையே சரியானது அது மரண தண்டனையாக இருந்தாலும் சரிதான். ஆனால் ஹைதரபாத் என்கவுண்ட்டரின்போது இருந்த பொதுமக்களின் கொதிநிலையின் முன்பு இக்கருத்துச் சொல்லப்பட்டபோது மிகத் துச்சமாகவே அது எதிர்கொள்ளப்பட்டது. ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள் என்பது நிச்சயம் கேட்ட நொடியில் ஒரு மகிழ்ச்சியைத் தரவே செய்கிறது. குரூர மகிழ்ச்சி. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றே அறிவு சொல்கிறது. பொதுமக்களோ சட்டென கிடைக்கும் மகிழ்ச்சியிலேயே தங்கிக்கொள்கிறார்கள். இப்படமும் என்கவுன்ட்டரின் இன்னொரு‌ பக்கத்தைத் தொட்டுப் பார்க்கக்கூட முனையவில்லை. நல்ல கிறுக்குத்தமான போலீசின் என்கவுன்ட்டர் என்பதே போதும் என்று நினைத்துவிட்டார்கள்.

இப்படம் வன்புணர்வுக்குத் தரப்பட்டும் என்கவுண்ட்டரை மட்டும் சொல்லும் படமல்ல. மாறாக எந்த ஒரு கொடூர குற்றத்துக்கும் என்கவுண்ட்டர் செய்யும் ஒரு போலிஸை ஹீரோவாகக் காண்பிக்கிறது. தொடர் என்கவுண்ட்டர்கள். கொல்லப்படுபவர்கள் அனைவருமே கெட்டவர்கள். எனவே மக்கள் இந்த என்கவுண்ட்டருக்கு மிக நெருக்கமாகிப் போகிறார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது வெடித்த ரஜினியின் உண்மைக்குரலும் இப்படத்தின் கருத்தும் அப்படியே ஒன்றிப் போகிறது. இதை ஒட்டித்தான் இனி ரஜினிக்கும் இப்படத்துக்கும் முருகதாசுக்கும் வேப்பிலை அடிப்பார்கள். அடிக்கட்டும், நல்லதுதான். அதுமட்டுமல்ல, மிக வெளிப்படையாகவே மனித உரிமைக் கழகத்தின் போலித் தனத்தை விமர்சிக்கிறார்கள். ரஜினியின் வசனம் ஒன்று ஒரு மனித உரிமைக் கழக அலுவலரைப் பார்த்து இப்படி வருகிறது, ‘எவனாவது செத்தா மனித உரிமைக் கழம் வரும், நீங்களே செத்தா எந்த கழகம் வரும்?’ என்று. அதேபோல் தொலைக்காட்சியில் நடக்கும் விவாதங்களைக் காட்டி, பணம் கொடுத்தா யாருக்கு வேணா பேசுவாங்க என்று வசனம் வருகிறது. சசிகலாவைக் குறிப்பிடும் ஒரு வசனமும் போகிற போக்கில் வருகிறது.

ரஜினி இதுபோல தன் கருத்துக்கு ஒத்துவரும் படங்களை எடுத்துக்கொண்டு நடிப்பது அவருக்கு நல்லது. ஹிந்துக்களுக்கு எதிராக மட்டும் நடித்துவிட்டு, அது வெறும் படம் என்று சொல்லும் சமாளிப்பையெல்லாம் நிறுத்திக்கொள்வது அவரது அரசியலுக்கும் நாட்டுக்கும் நல்லது. ஏனென்றால் நமக்குப் பழக்கப்பட்ட ரஜினி இப்படிப்பட்டவர் அல்ல! ஆன்மிக வாதி! அதை திடீரென்று மாற்றும் தேவையற்ற விஷச் சுழலில் ரஜினி சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. இல்லையென்றால் அரசியலில் கமலுக்கும் ரஜினிக்கும் வித்தியாசம் நூலிழை அளவு மட்டுமே இருக்கும்.

இப்படம் வெளிப்படையாக ஹிந்துக்களுக்கு எதிராக எதையும் பேசவில்லை. ஆனால் மும்பையில் போதை மாஃபியா, ரவுடியிஸம் என எல்லாவற்றையும் செய்து குவித்தது தாவூத் இப்ராஹிம். அதைச் சொல்லக்கூட தைரியம் இன்றி, இயக்குநர் அதை ஹரி சோப்ரா என்று வைத்துக்கொண்டு விட்டார். இன்னுமா அச்சம்? இது வன்முறை தொடர்பான அச்சமல்ல. தனக்கும் இத்திரைப்படத்துக்கும் முத்திரை குத்தப்பட்டுவிடும் என்று எழும் அச்சம். அதனால் ஏற்படும் பொருளாதார ரீதியான பின்னடைவு ஏற்படுத்தும் பயம். இதையே ஹிந்துக்களும் திருப்பிச் செய்யாதவரை இந்தத் தமிழ்த் திரையுலகம் ஹிந்துக்களை துரத்துவதை நிறுத்தப்போவதில்லை.

ஒரு படமாகப் பார்த்தால் – முதல் பகுதி போவதே தெரியவில்லை. மிரட்டல். கார்த்தி சுப்புராஜ் தம்பட்டம் அடித்துக்கொண்டு காண்பித்த பழைய ரஜினியை ஏ.ஆர். முருகதாஸ் அலட்டலே இல்லாமல் சாதித்துக்காட்டிவிட்டார். கடந்த நான்கு படங்களில் ரஜினிக்கு இல்லாத சுறுசுறுப்பும் வேகமும் இப்படத்தில் வந்திருக்கிறது. ஆச்சரியம். காலா, கபாலி படங்களில் ரஜினி ஓடும் காட்சியெல்லாம் கிடையாது. இப்படத்தில் பல காட்சிகள் ரஜினி படு எனர்ஜட்டிக்காக இருக்கிறார். முதல் பத்து நிமிடங்கள் கொஞ்சம் மெல்ல இழுக்கும் படம், மும்பையின் விபசார விடுதிகளின் ரெய்டுகளின் போது வேகம் பிடிக்கிறது. இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது. இதற்குக் காரணம், எவ்வித திருப்பமும் இன்றிப் படம் செல்வதுதான். ரஜினியின் மகள் கதாபாத்திரத்தின் முடிவு மிக உருக்கமானது, முக்கியமானது என்றாலும், அது தரும் சிறிய அலுப்பு படத்துக்கு பெரிய தடையைக் கொண்டு வருகிறது. அதிலிருந்து படம் மீளவே இல்லை. ரஜினி தனியாளாகப் போராடுகிறார். இன்னமும் கடைசிக் காட்சியில் கதாநாயகன் தனியாளாகத்தான் வில்லனிடம் மோதவேண்டும் என்ற நிலை வரும்போது, ரஜினியின் தனியாள் போராட்டமும் வீணாகப் போகிறது.

ஒட்டுமொத்தமாக ஒரு படமாக நிச்சயம் படம் நன்றாகவே உள்ளது. காலா, கபாலி, பேட்ட திரைப்படங்களில் இல்லாத நகைச்சுவையான கலகலப்பான காட்சிகள் நன்றாக வந்துள்ளன. இது பெரிய ப்ளஸ். ரஜினியின் மகளாக நடிக்கும் நிவேதா அட்டகாசமாக நடிக்கிறார். எந்த ஒரு வேலையும் இல்லாமல் வெட்டியாக நடிக்கும் நடிகைக்கு தமிழ்த் திரையுலகில் கதாநாயகி என்று பெயர். இப்படத்தில் நயந்தாரா. இசையும் ஒளிப்பதிவும் கச்சிதம். இடைவேளைக்குப்‌ பின்னர் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால் எங்கேயோ‌ போயிருக்கும்.

ரஜினிக்கு 70 வயது. இந்த மாதிரி கமர்ஷியல் படத்தில் இந்த அளவுக்கு உழைப்பதெல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. என் அப்பாவின் 70வது வயதில் அவர் கையைப் பிடித்து பாத்ரூமுக்குக் கூட்டிச் செல்வேன்!

இனி ‘முற்போக்காளர்களிடம்” ரஜினியை விட்டுவிட்டு நாம் ஸ்வீட் சாப்பிடலாம்!

Thanks: OreIndiaNews.com

Share

ரஜினி கமல் அரசியல்

ரஜினி கட்சி ஆரம்பித்தபோது இருந்த நம்பிக்கையும் ஆர்வமும் எனக்கு பின்னர் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. சில சமயம் மீண்டும் ஒரு ஆர்வம் வரும். ரஜினி எதாவது என் கருத்துகளுக்கு எதிராக சொல்வார். அதுவும் அவர் இத்தனை நாள் தன்னை எப்படி முன்னிறுத்திக்கொண்டாரோ அதிலிருந்து முற்றிலும் விலகிப் போவதான கருத்தாகவும் இருக்கும். இப்போது அவர், தேவைப்பட்டால் கமலுடன் இணைந்து செயலாற்றுவேன் என்று சொல்லி இருக்கிறார். கொடுமை. (நான் வீடியோவைப் பார்க்கவில்லை, தமிழ் தி ஹிந்துவில் வந்திருக்கும் செய்தியைப் பார்த்தே சொல்கிறேன்.) ரஜினி அரசியலுக்கு வந்தால் வெல்வார் என்பதே என் கணிப்பு. ஆனால் இப்படி கமலுடன் எல்லாம் இணைந்து வந்தால் உள்ள ஓட்டும் போய்விடும். அதுமட்டுமல்ல. கமலின் அரசியலை ஏற்றுக்கொள்வது ரஜினி தனக்கும் தன் ரசிகர்களுக்கும் அவரை நம்பியவர்களுக்கும் செய்யும் துரோகம். நட்பு என்ற ஒரு வஸ்து எப்படி வேண்டுமானால் இருந்துத் தொலைக்கட்டும். ஆனால் இதெல்லாம் ஓவர். ஓவர் என்பதோடு, அவர் சொல்லி வந்த கருத்துகளுக்கும் நம்பிக்கைக்கும் செய்யும் துரோகம். தொடர்ந்து தவறுகளை மட்டுமே செய்வதில் ரஜினி ஏன் இப்படி மும்முரமாக இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கமலுடன் கூட்டணி என்றால், ‘மாநிலத்தில் ரஜினி மத்தியில் மோடி’ என்று, ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொன்ன நாளில் நான் சொன்ன கருத்தை பின் வாங்கிக்கொள்கிறேன். 🙂 ரஜினி மூலம் எப்படியோ ஐந்து வருடங்களுக்குப் பிறகாவது ஹிந்து உணர்வுடன் மக்கள் வாக்களித்து பாஜக 2ம் இடத்துக்காவது வரும் என்ற, மலையைக் கெல்லி எலியைப் பிடிக்கும் ஆசையும் இந்த அறிவிப்போடு நாசமாகப் போவதை நினைத்தால் வேதனையாகவே இருக்கிறது. எப்படியோ, நாரோ சேர்ந்த பூவும் நாறும் என்பதை ரஜினிக்குச் சொல்லுங்கள்.

பிகு: தரக்குறைவான விமர்சனங்கள் நீக்கப்படும்.

Share

பேட்ட

* ரஜினியின் ருத்ர தாண்டவம். முதலில் பத்து நிமிடம் தடுமாறினாலும் பின்னர் விஸ்வரூபம் எடுக்கிறது படம்.

* சிம்ரன் கிட்டத்தட்ட கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பார்ப்பது போல் இருக்கிறார். மற்றபடி ரோல் எதுவுமில்லை. த்ரிஷா அழகாக வருகிறார், சாகிறார்.

* விஜய் சேதுபதி – ஐயோ பாவம். ஏற்றுக்கொண்டு நடித்ததே பெரிய விஷயம். ஹிந்துத்துவ எதிர்ப்பு அரசியல் வேடம் என்பதால் நடித்தாரோ என்னவோ.

* ரஜினியின் பல பழைய ஸ்டைல்களைப் பார்க்க முடிகிறது. நடிப்பில் பின்னுகிறார்.

* இனி ரஹ்மான் வேண்டாம் ரஜினி படத்துக்கு. அநிருத் கச்சிதம். கலக்கல்.

* பாட்ஷா படத்தையே கவனமாக மாற்றி விவரமாக எடுத்திருக்கிறார்கள்.

* கொலை செய்வதை ரஜினி சாவாதானமாகப் பேசிக்கொண்டே செய்வதைப் பார்க்க கதக் என்றிருக்கிறது.

* முஸ்லிம் நண்பன், ஹிந்துத்துவ அரசியல் வில்லன். எரிச்சல். ஆனால் ரஜினியை நம்பிக்கையுள்ள ஹிந்துவாகக் காட்டி, முஸ்லிமை ஹிந்து மரபிலும் நம்பிக்கையுள்ளவராகக் காட்டி, ராமாயணக் கதை பேசி, என்னவோ சமாளிக்கிறார்கள். ஆனாலும் இது அநாவசியம்.

* அதேசமயம், காதலிப்பவர்கள் வேலன்டைஸ் டே தினம் வெளியே வந்தால் அவர்கள் கட்டாயத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. இது ஹிந்துத்துவக் கருத்தியல் என்று நான் நம்பவில்லை. ஆனால் படத்தில் காவி நிறத்துடன் காட்டப்படுகிறது.

* அப்பா மகன் காட்சியின் தமிழ் சினிமாத்தனத்தை ஸ்பூஃப் ஆக்கியது அட்டகாசம். அதிலும் மிக எளிதாக யூகித்தக்க ட்விஸ்ட்டுகளுக்கு தரப்பட்டிருக்கும் இந்த ட்ரீட்மெண்ட் அருமை.

” ரஜினிக்காக ஒரு படத்தை கார்த்தி சுப்புராஜ் எடுத்திருக்கிறார்.

இனி அரசியல்:

விஜய் சேதுபதி தொடர்ந்து ஹிந்துத்துவக் கருத்தியலை எதிர்க்கும் அரசியலையே படங்களிலும் நிஜத்திலும் செய்துவருகிறார். புதிய அலை இயக்குநர்கள் அனைவருக்குமே இந்த ஹிந்து வெறுப்பு இருக்கிறது. அதில் கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்திருக்கிறார்.

விஜய் சேதுபதியின் தொடக்கக் காட்சியே, இந்தியா முழுவதும் ஹிந்து அமைப்புகள் காதலர் தினத்தன்று காதலர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. எங்கோ ஒரு சிறிய அடையாளமற்ற அமைப்பு ஒன்று ஹிந்துத்துவ அமைப்பு என்ற பெயரில் செய்யும் அட்டகாசங்களை ஒட்டுமொத்த ஹிந்துத்துவ அமைப்புகளின் செயல்களாக மாற்றிக் காட்டுவது ஹிந்து வெறுப்பாளர்களின் பாணி. இந்தியா முழுக்க வியாபாத்திருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்போ, இந்தியா முழுக்க பெரும்பாலும் ஆட்சியைப் பிடித்த பாஜகவோ காதலர் தினத்தன்று இப்படிச் செய்ய ஆரம்பித்திருந்தால் யாரும் இந்தியாவில் நிம்மதியாகக் காதலித்திருக்கவே முடியாது. எதோ உதிரி அமைப்புகள் செய்வதை பெரும்பான்மையான ஹிந்துத்துவர்களே ஏற்பதில்லை. ஆனால் அதை ஹிந்துத்துவக் கருத்தியலாகக் காண்பிக்கிறார்கள்.

ரஜினி முதலில் காலா படத்தில்நடித்தபோது அது அவருக்குத் தெரியாமல் நிகழ்ந்தது என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தையும் அதே கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது. பேட்ட திரைப்படம் ஒரு வகையில் இன்னும் மோசமான அரசியல் கருத்தைச் சொல்கிறது என்றே கொள்ளவேண்டும். ஏனென்றால் காலா திரைப்படத்தைவிட பேட்ட என்னும் திரைப்படம் ஒரு கமர்ஷியல் உருவோடு வந்திருக்கிறது. எனவே இதன் வீச்சும் அதிகமாக இருக்கும்.

இத்திரைப்படத்தில் ஒரு மென் ஜிகாதி காதல் ஒன்றும் காண்பிக்கப்படுகிறது. இஸ்லாம் இளைஞன் ஹிந்துப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு விட, ஹிந்துக் குடும்பம் அவளைக் கொடூரமாகக் கொலை செய்கிறது. இதையே மாற்றி எடுத்தால் என்ன ஆகும் என்பது இயக்குநருக்குத் தெரியும்.

தமிழ் சினிமா இந்த ஹிந்து வெறுப்பில் மிகத் தீவிரமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. அதில் ரஜினியும் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். இது நல்லதற்கல்ல.

Share

காலா விமர்சனம்

காலா

பொதுவாக ரஜினியின் திரைப்படத்துக்குப் பெரிய அளவில் யோசித்து விமர்சனம் எழுதும் வேலையெல்லாம் செய்ததில்லை. ரஜினியின் படம் என்றாலே அது கொண்டாட்டத்துக்குரியது. முதல் நாள் முதல் காட்சி தரும் கொண்டாட்ட மனநிலையைப் புரிந்துகொள்ள நீங்கள் தொடர்ந்து இருபது வருடங்களாக ரஜினியின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியில் திரையில் பார்த்திருந்தால்தான் புரியும். திடீரெனப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு அபத்தம். பொதுவாகவே இது அபத்தம் என்பது சரிதான். ஆனால் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு ஒரு நாள் மட்டும் போய்வரும் இந்த அபத்தம் எனக்குப் பிடித்தமானது. ரஜினி எனக்குத் தலைவரோ சூப்பர் ஸ்டாரோ இல்லை. எனக்கும் ரஜினிக்குமான ஈர்ப்பு உற்சாகம் சார்ந்தது. கொண்டாட்ட மனநிலை சார்ந்தது. தமிழின் மிகச் சிறந்த நடிகர் ஒருவரின் திறமை சார்ந்தது. ஆனால் கடந்த சில ரஜினியின் படங்கள் வெற்றுக் கொண்டாட்டங்களை மீறியவையாக அமைந்திருக்கின்றன. சிவாஜி திரைப்படத்திலேயே இப்போக்கு துவங்கினாலும் ஷங்கர் அதை ஒருவிதமாகக் கையாண்டார். கபாலியில் இது துலக்கம் பெற்றது. காலாவில் அரசியல் படமாகவே மையம் கொண்டிருக்கிறது. எனவே ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்.

ஒரு திரைப்படமாக காலா மிக நன்றாகவே உள்ளது. முதல் 30 நிமிடங்களில் நெளிய வைத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட கதறும் அளவுக்கு. பின்னர் படம் வேகம் கொள்கிறது. இறுதி நிமிடம் வரை வேகம் குறையவே இல்லை. இனியும் வயதான மனைவிக்கும் கணவனுக்குமான காதலைச் சொல்வதை ரஞ்சித் நிறுத்திக்கொள்வது நல்லது. சில ரசனையான காட்சிகள் இருந்தாலும் மொத்தத்தில் இவை கழுத்தறுக்கின்றன. இக்காட்சிகள் எல்லாம் மறைந்து காலாவின் அரசியலுக்குள் படம் செல்லும் நொடியில்தான் உண்மையான திரைப்படம் தொடங்குகிறது. நானே படேகர் அறிமுகாகும் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை வேகம் குறைவதே இல்லை.

படத்தில் மிக முக்கியமான காட்சிகள் நான்கைந்தாவது இருக்கின்றன. இடைவேளை அரும் காட்சி அட்டகாசம். அந்தக் காட்சியில் நிகல் நிகல் சல்தேரே பாடலை முழுமையாக ஓடவிட்டிருக்கவேண்டும். சட்டென முடித்தது, அட்டகாசமான அந்தப் பாடலுக்கும் அந்தப்பாடல் மிகக் கச்சிதமாகப் பொருந்தி வந்த அந்தக் காட்சிக்கும் அநியாயம் செய்வதைப் போலத் தோன்றியது. இடைவேளைக்குப் பிறகு ரஜினியும் நானாபடேகரும் சந்திக்கும் இரண்டு காட்சிகளுமே அபாரம். வசனங்கள் மிகக் கூர்மை. நானா படேகர் இந்தப் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு போகிறார்.

ரஜினியின் நடிப்பைத் தனியே சொல்லவேண்டியதில்லை. தனக்கான இடம் இனி என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் உடல் ஒத்துழைப்பதில்லை என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். கதையற்ற திரைப்படங்கள் இனி வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை எவ்விதக் குறையுமின்றி மிக நன்றாக நடித்திருக்கிறார். அதீத நடிப்பு என்கிற குழிக்குள் என்றுமே ரஜினி விழுவதில்லை. இப்படத்திலும் அப்படியே. எங்கே அதீதமாக நடிக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டிருப்பதே ரஜினியின் நிஜமான பலம்.

ஈஸ்வரி ராவின் கதாபாத்திரம் ஆரம்பக் காட்சிகளில் அலட்டுவது போலத் தோன்றினாலும், என்னையும் லவ் பண்ணாங்க என்று தியேட்டரையே அதிர வைத்த காட்சியில் மனசுக்குள் நுழைகிறார். சமுத்திரக்கனிக்கு வித்தியாசமான வேடம். செவ்வனே செய்கிறார்.

இப்படத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய நடிகர் – மணிகண்டன். அட்டகாசம், ஆசம். இவருக்கு மிக பிரகாசமான எதிர்காலம் நிச்சயம். படத்தில் மனத்தைக் கொள்ளை கொண்ட நடிகர் இவரே.

படத்தின் செட்டிங்க்ஸ் அபாரம். அப்படியே கண்ணுக்குள்ளே தாராவியைக் கொண்டு வந்துவிட்டார்கள். பின்னணி இசையில் காதைக் கிழிக்காமல் அதேசமயம் பிரம்மாண்டமான இசையைத் தந்த சந்தோஷ் நாராயண் பாராட்டப்படவேண்டியவர். இந்தப் படத்துக்கென அவர் இசையமைத்த பல பாடல்கள் இப்படத்தில் வரவில்லை. யார் வெச்சது யார் வெச்சது பாடல் காட்சிகளூடாகக் கடந்து சென்றதையெல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை. படத்துக்கு இது நல்லதுதான் என்றாலும், அந்தப் பாடலின் தன்மையை இப்படி வீணடித்துவிட்டாரே ரஞ்சித் என்ற வருத்தம் இப்போதும் இருக்கிறது. அதேபோல் பாடலுக்கு நடனம் என்றாலே யாராவது தரையில் கிடந்து சுற்றுவது என்கிற எண்ணத்தை ரஞ்சித் கைவிடுவது நல்லது.

இனி…

இப்படத்தில் தமிழர்களை ராவணனாக மாற்றுகிறார் ரஞ்சித். ராமனை எதிரியாக்குகிறார். வெளிப்படையாகவே. நானே படேகர் ஒரு ஹிந்துக் கட்சியின் தலைவர். பாஜகவாகவோ சிவசேனையாகவோ அல்லது இரண்டுமோ அல்லது கொள்கையாகவோ இருக்கலாம். ராமனே நானா படேகரின் நாயகன். ஒருவகையில் ராவணனான காலாவை அழிக்கப் போகும் ராமன் நானா படேகரே. தலித் அரசியல்வாதிகளின் ஹிந்து மத எதிர்ப்பும் காழ்ப்பும் உலகறிந்த ஒன்றே. ராவணன் உண்மையில் தீமையின் வடிவம். சிவபக்தனாக இருந்தும் அவன் தீமையின் வடிவமே. ராவணன் பிராமணன் என்பதை மறந்து (அல்லது தங்கள் தேவைக்காக மறைத்து) அவனைத் தமிழனின் அடையாளமாக மாற்றி நெடுநாளாகிறது. இந்தக் குழப்பத்துக்கே இவர்களிடம் விடை இல்லை. இந்நிலையில் ஹிந்து மதத்தின் புராணங்களின் ஆழம் தெரியாமல் அதன் வீச்சும் புரியாமல் ராவணனை, தீமையின் வடிவத்தை, திரைப்படத்தில் காலாவுக்கு இணை வைத்துவிட்டார்கள். இதனால் ராவணை ஒழிக்க நினைக்கும் நானா படேகர் என்ற மோசமான அரசியல்வாதியை, உண்மையில் அறத்தின் வடிவான ராமனுக்கு இணை வைத்துவிட்டார்கள். ராமாயணத்தின் கதாகாலக்ஷேபத்தின் வரிகளுக்கு இணையாக ராவணன் ஒழிக்கப்படும் காட்சி மிக பிரமாண்டமாக மனதைப் பதற வைக்கும் அளவுக்குப் படமாக்கப்பட்டுள்ளது. (படத்தில் அசரடிக்கும் காட்சி இதுதான்.) நல்லவன் ராவணன் காலா தீய ராமனால் அழிக்கப்படுகிறான். ஆனால் ராவணன் என்னும் மாயன் மீண்டும் ராமனை அழிக்கிறான்.

மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான். இயக்குநரைத் தீர்மானித்துவிட்டால் அவர் என்ன சொன்னாலும் செய்வார். செய்திருக்கிறார்.

இங்கே நாம் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. தனது எந்த ஒரு திரைப்படமும் வெளி வருவதற்கு முன்பாக அத்திரைப்படத்துக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யாதவர் ரஜினி என்ற பிம்பம் இங்கே இருக்கிறது. ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தை ஒட்டி ரஜினி பேசியது, இத்திரைப்படத்தில் தான் செய்திருக்கும் கதாபாத்திரத்தை மனத்தில் வைத்துத்தான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார். காவல்துறை போட்டிருக்கும் சீருடை என்பது மரியாதைக்குரியது என்ற ஒரு அரசு சார்ந்த கருத்தை வெளிப்படையாக முன் வைத்தார். தான் வேறு தன் திரைப்படம் வேறு என்பதை உணர்த்தவே ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் என்று இப்போது புரிகிறது.

இத்திரைப்படத்தில் சட்டத்தை எரிக்கலாம் என்றொரு வாசகம் வருகிறது. ஆனால் அது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான ரஜினி இப்படிப்பட்டவர்களைச் சமூக விரோதிகள் என்றும் விஷக் கிருமிகள் என்று சொல்லிவிட்டார். அதாவது திரைப்படத்தில் ரஜினி நடித்திருப்பது, ராவணனாக சித்திரிக்கப்பட்டிருப்பது, உண்மையான ரஜினியின் கருத்தின்படி ஒரு விஷக்கிருமியின் பாத்திரமே, ஒரு சமூக விரோதியின் பாத்திரமே. அத்தனை நியாயங்கள் காலாவின் பக்கம் இருந்தாலும் உண்மையான ரஜினியின் கருத்தின்படி சட்டத்துக்கு எதிராக வன்முறைக்குத் துணை போகும் எந்த ஒரு போட்டாரமும் சமூக விரோதியின் செயலே. இதைப் புரிய வைக்கவே ரஜினி அப்படிப் பேசி இருக்கிறார். இதனால்தான் ரஞ்சித்தின் ஆதரவாளர்கள் எந்நிலை எடுப்பது என்று புரியாமல் தத்தளித்திருக்கிறார்கள். ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஹிந்தி பேசும் ராமனே தமிழ் ராவணர்களின் எதிரி என்று மிகத் திறமையாக, வெளிப்படையாக இத்திரைப்படம் முன்வைக்கிறது. படம் தாராவியின் பிரச்சினை என்றாலும் உள்ளூர இப்படம் சொல்ல விரும்புவது இதையே. அதாவது தாராவி பற்றி எப்புரிதலும் இல்லாத தமிழர்கள் இப்படத்தை இப்படியே சென்று அடைவார்கள். (இதில் பாதி பேர் எந்த அரசியல் புரிதலும் இன்றி நன்மைக்கும் தீமைக்குமான சண்டை என்று கருப்பு வெள்ளையாகக் காண்பார்கள், அந்த அப்பாவிகளை விட்டுவிடலாம்.) நானா படேகர் ஷெரினாவைக் காலில் விழச் சொல்லும் காட்சியில் ஒரு நொடி ராமர் சிலை காண்பிக்கப்படுகிறது. நானா படேகர் வரும் இன்னும் சில காட்சிகளிலும் ராமர் சிலை வருகிறது. நானா படேகர் வரும் காட்சிகள் எல்லாமே காவி வண்ண மயம். இறுதிக் காட்சியில் திரையில் வரும் கதாபாத்திரங்களின் உடல் கருமை நிறத்துக்கு மாறுகிறது. கருமை நிறம் வீறுகொண்டு எதிரியைக் கொல்கிறது. திரையின் நிறம் சிவப்பாகிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. எங்கும் காலாவின் முகமாகிறது. திரையின் நிறம் நீலமாகிறது. இந்த நிற விளையாட்டு இனியும் எத்தனை படங்களுக்குத் தொடரும் எனத் தெரியவில்லை. கருமை சிவப்பு நீலம் என்ற நிறங்களை காவிக்கு எதிராக நிறுத்துகிறது இத்திரைப்படம். அந்தக் காவி கொடிய அரசியல்வாதியின் முகம். கருமையும் சிவப்பும் நீலமும் (ஏன் திடீரென்று நீலம் வருகிறது என்பதற்கு ஒரே காரணம் இது ரஞ்சிதி படம் என்பதால்தான்) உண்மைக்கும் ஏழ்மைக்கும் புரட்சிக்குமான முகமாகிறது.

ஏழைகளுக்கான நிலம் என்பதை மையமாக வைத்து அதன் அரசியல் கருத்துகளை முன் வைத்திருக்கிறார் ரஞ்சித். அதையும் பிறப்பால் மராட்டியரான ஒருவரைக் கொண்டே பேச வைத்திருக்கிறார். அதிலும் தேவையே இல்லாமல் ஒருவர் தன் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்று சொல்லிக் குண்டடி பட்டுச் சாகிறார். ரஜினியின் மகன் பெயரை லெனின் என்று வைத்து சிவப்பின் ஈர்ப்பைக் காண்பிக்கிறார். (ஆனால் ரஜினி லெனினை நன்றாகத் திட்டித் தீர்க்கிறார்.) இத்தனைக்கும் நடுவில் தொடரும் ரஞ்சித்தின் முக்கியமான விஷயம் – புத்தரும் அம்பேத்கரும் வருகிறார்கள், ஈவெரா எங்கும் வரவில்லை. ஒரு காட்சியின் பின்னணியில் ஈவெரா சிலை ஒன்றின் தாடி போலத் தெரிந்தது. ஆனால் ஈவெராவின் முகம்தானா என்று காண்பிக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த பேட்டிகளில் ஈவெரா எப்படித் தன்னை மெருகேற்றினார் என்று ரஞ்சித் உருகக்கூடும். திரைப்படங்களில் மட்டும் அம்பேத்கரோடு நின்றுவிடுகிறார். திரைப்படங்களில் மட்டும் தொடர்கிறது ரஞ்சித்தின் ஈவெராவை மறைக்கும் அரசியல். இதற்காகவே ரஞ்சித்தைப் பாராட்டலாம்.

இத்திரைப்படத்தின் சாதனை என்ன? ஒரு ரஜினி படத்துக்கு இப்படி மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு இரண்டாம் முறையாகவும் யோசிக்க வைத்ததுதான் ரஞ்சித்தின் சாதனை. ரஜினி தூத்துக்குடி கலவரத்தை ஒட்டித் தன் கருத்துகளை வெளிப்படையாகக் கூறாத நிலையில் இப்படம் வந்திருந்தால் ரஜினியின் அரசியலில் பெரிய கேள்விகள் எழுந்திருக்கும். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இதைத் தவிடுபொடியாக்கி இருக்கிறார் ரஜினி. தலித் கட்சிகளின் தேவைகள் மிக முக்கியமானவை. இக்கட்சிகள் இல்லாவிட்டால் ஒரு பொதுக்கட்சியால் இக்கருத்துகளை இத்தனை தீவிரமாக முன்னெடுக்கவோ மாற்றங்களைக் கொண்டு வரவோ முடியாது. ஒவ்வொரு ஜாதிக்கட்சிக்கும் இது பொருந்தும் என்றாலும் தலித் கட்சிகளின் தேவைக்கு இவை அதிகம் பொருந்தும். அதேசமயம் யதார்த்தத்தில் ஒரு தலித் கட்சியே (அல்லது எந்த ஒரு ஜாதிக்கட்சியும்) பொதுவான பிரதானமான அரசியல் கட்சியாகிவிடமுடியாது. ரஜினியின் அரசியல் தலித் கட்சிகளின் தேவைகளை ஏற்றுக்கொண்ட ஒரு பொதுக்கட்சியாகவே இருக்கமுடியும் என்பதை ரஜினி உணர்ந்திருக்கிறார். அதனால்தான் திரைப்படத்தில் தன்னை அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டவர்களுக்கு, அத்திரைப்படம் வருவதற்கு முன்பாகவே, தன் கருத்துக்களைச் சொல்வதன் மூலம் தான் யார் என்பதை புரியவைத்திருக்கிறார். இது பெரிய திட்டம்தான் என்றாலும் இத்தகைய விஷப் பரிட்சைகளில் இனி ரஜினி சிக்காமல் இருப்பது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது.

ஒரே வரியில், ஒரு திரைப்படமாக (மட்டும்) அட்டகாசம்.

Share

ரஜினியின் தூத்துக்குடி பயணம்

ரஜினி என்ற பெயர் மட்டும் போதுமானது என்பது இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை ரஜினி, நடிகரைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று சொன்னது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இது உண்மை என்றாலும் இந்நேரத்தில் இதைச் சொல்லக்கூடாது. ஆனால் ரஜினிக்கு இதெல்லாம் புதியது. மெல்ல மெல்லப் பழகுவார். பழக்குவார்கள். ஆனால் ரஜினியை மருத்துவமனையில் பார்த்தவர்கள் அவர் சொன்னதை உண்மை என்று நிரூபித்தார்கள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும் கொஞ்சம் எரிச்சலாகவும் கூட இருந்தது. ரஜினி என்ற பெயர் மட்டும் போதுமானது என்பது இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை ரஜினி, நடிகரைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று சொன்னது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இது உண்மை என்றாலும் இந்நேரத்தில் இதைச் சொல்லக்கூடாது. ஆனால் ரஜினிக்கு இதெல்லாம் புதியது. மெல்ல மெல்லப் பழகுவார். பழக்குவார்கள். ஆனால் ரஜினியை மருத்துவமனையில் பார்த்தவர்கள் அவர் சொன்னதை உண்மை என்று நிரூபித்தார்கள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும் கொஞ்சம் எரிச்சலாகவும் கூட இருந்தது.
ரஜினி தூத்துக்குடிக்குப் போகிறார் என்ற செய்தி வந்ததும், அங்கே அவருக்கு எவ்விதமான வரவேற்பு இருக்குமோ என்று ஒரு கணம் யோசிக்கவே செய்தேன். ஆனால் ஃபேஸ்புக் வேறு, நிஜ உலகம் வேறு என்பதை மீண்டும் உணர்த்தியது இன்றைய ரஜினியின் தூத்துக்குடி பயணம். அங்கே முற்போக்காளர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது நடக்கவில்லை என்பதாலும், அங்கே ரஜினியை வருங்கால முதல்வர் என்றெல்லாம் அவர்கள் புகழ்ந்ததைப் பார்த்ததாலும், அடுத்த நான்கைந்து நாளைக்கு இன்னும் தீவிரமாக ரஜினியைத் திட்டித் தீர்ப்பார்கள் என்பது உறுதி.
மோதியைப் பிரதமராக்கியது போல ரஜினியையும் இவர்களே முதல்வராக்குவார்கள். யார் சென்றால் கூட்டம் வருகிறது, அது எந்த மாதிரியான கூட்டம், அது சொல்லும் செய்தி என்ன என்று புரிந்துகொள்பவர்களுக்கு ரஜினிக்கு இன்று கிடைத்த வரவேற்பின் உள்ளர்த்தம் புரியும். புரியாதவர்கள் அல்லது புரிந்துகொள்ள விரும்பாதவர்கள் அல்லது புரிந்தும் புரியாதது போல நடிப்பவர்கள், நயந்தாரா வந்தாலும் இதே கூட்டம் வரும் என்று சொல்லிவிட்டு தப்பிப்பார்கள். தப்பிக்கட்டும்.

Share

காலா பாடல்கள்

கபாலி படத்தில் – மாய நதி பாடலும் உலகம் ஒருவனுக்கா பாடலும் எனக்குப் பிடிக்காதவை. பிடித்தவை – நெருங்குடா பாடலும் வீரத் துரந்தரா பாடலும்தான். இதை மனத்தில் கொண்டு மற்றவற்றைப் படிக்கவும்.
 
காலாவில் முதல் பாடல் செம வெயிட்டுடா வெளியிடப்பட்ட போது ரொம்ப டிப்ரஸிங்காகவே இருந்தது. பிடிக்கவே இல்லை. நேற்று எல்லாப் பாடல்களும் வெளியிடப்பட்டன. அவற்றைக் கேட்டதில் (3 முறை கேட்டிருக்கிறேன்) –
 
நிக்கல் நிக்கல் – கிளம்பு கிளம்பு பாடல் மிக அட்டகாசம். இதுவே பெஸ்ட் இப்போதைக்கு. யார் வெச்சது யார் வெச்சது உங்க சட்டமடா அடுத்த கலக்கல். கிளம்பு பெஸ்ட்டா யார் வெச்சது பெஸ்ட்டா என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே அட்டகாசம். நிலமே என் உரிமையின் பின்னணியில் வரும் (இஸ்லாமியப் பாடல்களின் சாயலுடன் வரும்) ஆலாபனை இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
 
இன்னொரு பாட்டில், ஒத்தையில நிக்கிற வேங்கடா தில்லிருந்தா மொத்தமா வாங்கடா என்பதைப் பாடலிலேயே வைத்தவிதம் அழகு.
 
சந்தோஷ் நாராயண் ரஜினியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போயிருக்கிறார். பாடல்கள், படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தைப் பெரிய அளவில் தூண்டுகின்றன. இந்த இசையமைப்பாளரை நேற்றைய விழாவில் ரஜினி மறந்தது ஆச்சரியம். (மறந்தாரா? கடைசியில் ரஜினி பேசுவதை மட்டுமே கேட்டேன்.) கடைசியில் அவரை அழைத்து மேடையில் சொல்லி சமாதானம் செய்தார். உண்மையில் சந்தோஷ் நொந்திருப்பார் என்றே நினைக்கிறேன். பிரச்சினையில்லை, இது வரலாற்றில் இடம் பெறும். 🙂
 
மாய நதி போலவே, கண்ணம்மா பாடலும் பிடிக்கவில்லை. ஆனால் மாயநதியைவிட இது பெட்டர்தான்.
 
போராடுவோம் மற்றும் தெருவிளக்கு பாடல்கள் – பல பாடல்களின் சாயலுடன் உள்ளன! குறிப்பாக ஹிப் ஹாப் தமிழாவின் பாடலைப் போன்று உள்ளது.
 
சட்டென்று எல்லாப் பாடல்களுமே ஒரே போல் தோன்றும். மெல்ல மெல்ல இது மாறும் – சிலருக்காவது.
 
பாடல்களில் என்னவோ 80களின் சாயல் தெரிவது போல் உள்ளது. என் பிரமையா எனத் தெரியவில்லை. சிறியதும் பெரியதுமாக 9 பாடல்கள் என்பது தரும் யூகமா என்றும் புரியவில்லை. படம் நாயகன் திரைப்படம் போன்ற ஒன்றாக இருக்க வாய்ப்பிருப்பதாக இன்னொரு பக்கம் தோன்றுகிறது.
 
ரஜினியின் அரசியல் வருகைக்கு ஏற்ப வரிகள் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருக்கின்றன. படத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் என்பது நிச்சயம். ஆனால் அது எனக்குப் பொருட்டே அல்ல. 🙂 அண்ணாமலை திரைப்படம் வந்த சமயத்தில் ரஜினியின் ஒரு வரி பன்ச்சுக்காக தியேட்டரே அதிர்ந்தது நினைவுக்கு வருகிறது. இப்போது அப்படி அதிர வாய்ப்பு (ரசிகர்கள் ஷோ தவிர மற்ற ஷோக்களில்) குறைவுதான். ஆனால் இது அதிகம் பலன் தரும் என்றே யூகிக்கிறேன். வெற்றி நிச்சயம்.
 
ரஜினி திரைப்படம் எதிர்பார்ப்புக்கு நடுவேயும், தோற்றுப் போகவேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கும் இடையேதான் வெளிவந்துள்ளது. முதல் முறையாக, ரஜினியின் அரசியல் அறிவிப்படை அடுத்து, வெறுப்புக்கு நடுவில் வெளியாகிறது. இந்த வெறுப்பும் ஃபேஸ்புக் அறிவாளிகளின் வெறுப்புதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இத்திரைப்படம் வென்றால், உடனே இது திரைப்படத்துக்கான வெற்றி மட்டுமே என்று சொல்வார்கள். தோற்றால், அரசியலிலும் தோல்வி என்பார்கள். நான் இரண்டையுமே நம்பவில்லை. இந்த வெற்றியும் அரசியல் வெற்றியும் வேறு வேறானவை. இரண்டிலும் ரஜினி வெல்வார் என்றே நினைக்கிறேன்.
 
அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நீங்கிய நிலையில் ரஜினி திரைப்படம் வெளியாவது, எனக்கு மிக முக்கியமானதாகவும் சந்தோஷம் தருவதாகவும் உள்ளது. எவ்விதப் படபடப்பும் இன்றிப் படம் பார்க்கலாம்.
 
ஒரே பிரச்சினை, இந்தப் படத்தில் ரஞ்சித் முன்வைக்கப்போகும் அரசியல். அது தலித் அரசியல் மட்டும் என்றால், நிச்சயம் வரவேற்கப்படவேண்டியது, பாராட்டப்படவேண்டியது. அதன் பின்னணியில் ஹிந்துத்துவ / ஹிந்து மத எதிர்ப்பு இல்லாமல் இருக்கவேண்டும் என்பதுதான் என் ஒரே எதிர்பார்ப்பு. மற்ற மதங்களைத் தூக்கிப் பிடிப்பதில் பெரிய பிரச்சினையோ கேள்வியோ இல்லை – ஹிந்து மதத்தைத் தூற்றாத வரை. காலா அறிவிப்பு வந்த தினம் முதல் இந்த ஐயம் கடுமையாக எழுந்துள்ளது. கபாலி வந்தபோது இந்த அச்சம் வரவில்லை. ஏனென்று தெரியவில்லை. ரஜினிக்கு இருக்கும் ஒரு அரசியல் பெரிய வட்டத்தை இப்படம் குறுக்காமல் இருந்தாலே, இப்படம் ரஜினிக்கு செய்திருக்கும் பெரிய நன்மையாக இருக்கும். பார்க்கலாம்.
 
காலா – காத்திருக்கிறேன்.
Share